Friday, April 30, 2010

லிவிங்க்-டு-கெதர், குஷ்பு, திருமணம் - ஒரு பார்வை!!

"திருமண வயதை அடைந்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் (லிவிங்க் டுகெதர்) என்ன தவறு இருக்கிறது?" என்று உச்ச நீதி மன்றம் குஷ்பு மீது தொடுத்த வழக்குகளைத் தள்ளுபடி செய்துள்ளது.

"படித்த எந்த ஆணும் தன் மனைவி கற்புடையவளாக இருக்க வேண்டும் என எண்ண மாட்டான். பெண்கள் திருமணத்திற்கு முன்பான உறவுகளில் ஈடுபடும் பொழுது பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்று இந்தியா டுடே பத்திரிகைக்கு பேட்டியளித்தது வழக்குகளுக்கும், குஷ்புவின் வீட்டின் முன்பு போராட்டங்களுக்கும் காரணம்.

o

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியா? குஷ்புவின் கருத்து சரியானதா? திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதில் உள்ள பல நிலைகள் என்ன? இந்த விசயம் தொடர்பாக பல எண்ணங்கள் மனதில் எழுகின்றன. அதைப் "பொதுப்புத்தி"யுடன் பதிவு செய்யவே இந்தப் பதிவு.

திருமண வயதை அடைந்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை என்பது தீர்ப்பு. இங்கே கவனிக்க வேண்டிய விசயம்.. திருமண வயதை அடைந்தவர்கள் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. ஆண், பெண் என்ற பாகுபாட்டையெல்லாம் கூறவில்லை இந்தத் தீர்ப்பு. ஒருவர் யாருடன் சேர்ந்து வாழ்வதும் அவரவரின் விருப்பம். ஆக..  உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரிவதில்லை.

திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வதில் உள்ள பல நிலைகள் என்ன? இங்கே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை மட்டும் பார்ப்போம். ( ஓர் ஆண் ஆணுடனோ, ஒரு பெண் பெண்ணுடனோ சேர்ந்துவாழ்வது இங்கே விவாதிக்கவில்லை.)

o

"எனக்கு இந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது, எனக்கும் இந்த ஆணைப் பிடித்திருக்கிறது. நாங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளோம்" என்பது மாநகரங்களில் இன்று பரவலாகி வருகிறது. "நானும் நீயும் ஒரு கூரையின் கீழ் வாழ திருமணம் என்ற "சடங்கு" தேவையா?" என்பதே இவர்களின் மனதில் எழும் கேள்வி. அவர்கள் நிலையில் இருந்து யோசித்தால் சேர்ந்து வாழத் திருமணம் தேவையில்லை தான்.  

இந்த முடிவை எடுப்பவர்கள் இருபதுகள், முப்பதுகளில் இருப்பவர்கள் தான் அதிகம். இவர்கள் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்?

முதலில் வாழ்விடம்..

தாங்கள் சேர்ந்துவாழ, ஒரு குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுப்பதில் இருந்து, வெளியூரிற்குச் செல்லும் பொழுது விடுதியில் அறை எடுப்பது வரை சிக்கல் தான். தாங்கள் கணவன் மனைவி தான் என்று நிரூபித்தால் தான் இன்றும் ஹோட்டல்களில் அறை எடுக்க முடியும். கமலஹாசன் முன்பொரு பேட்டியில், "ஹோட்டலில் அறை எடுப்பதற்காகத் தான் திருமணம் செய்தேன்" கூறியிருந்தது நினைவிருக்கலாம். ஹோட்டல் நிர்வாகத்தினர் இது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையிலேயே இருக்கிறது நாட்டு நடப்பு!! சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள், நட்சத்திர விடுதிகளில் தங்கும் வசதி படைத்தவர்கள் இதில் அடங்க மாட்டர்.

அடுத்து குழந்தை..

சேர்ந்து வாழும் இருவர்.. தங்களுக்குக் குழந்தை வேண்டுமென்று முடிவெடுத்தால் வருவது அடுத்த சிக்கல். கற்பமான தன்னவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால்.. உறவுமுறையைக் கூற வேண்டிய இடத்தில் ஆரம்பிக்கிறது சிக்கல். சேர்ந்து வாழ்பவர் என்ற உறவுமுறையை நட்சத்திர அந்தஸ்துள்ள மருத்துவமனைகள் ஏற்கலாம். சிறு நகரங்களிலோ, கிராமங்களிலோ.. சிக்கல் தான். ஆனால், பிறந்த குழந்தையை வளர்ப்பதில் எந்த குறையும் இன்றி கண்டிப்பாக வளர்க்க முடியும்.  திருமணமாகாத பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முடியும் போது.. சேர்ந்து வாழும் பெற்றோரால் கண்டிப்பாக நன்றாகவே வளர்க்க முடியும். 

வெளிநாட்டு வாழ்க்கை.. விசா.

சேர்ந்து வாழும் இருவருள் ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல நேர்ந்தால்.. தன்னைச் சார்ந்தவர் (Dependent) என்ற முறையில் "மனைவியையோ/ கணவரையோ" மட்டுமே அழைக்க முடியுமே தவிர.. சேர்ந்து வாழ்பவரை அல்ல. மேலும்.. துபாய் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில்.. நீங்கள் திருமணமாகத ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது சட்டப்படி குற்றம். "One should not live with a person out of their marriage"

சேர்ந்துவாழ்பவர்களுக்கு ஏற்படும் சிக்கலை விவரித்த அதே நேரத்தில்.. தேவையற்ற சடங்குகள், கணவன் மனைவிக்கென்று சமூகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள், பிடிக்கவில்லை என்றால் எளிதில் பிரிந்து செல்ல முடிவது போன்றவையை நன்மையாகக் கூறலாம். சேர்ந்து வாழ ஆரம்பித்த பிறகு திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழும் நண்பர்களும் எனக்கிருக்கிறார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


இத்தனை காலமாக காதல் திருமணத்திற்கு "ஜங்கு புங்கென்று" ஆர்பாட்டம் செய்த பெற்றோர்கள்.. இப்பொழுது தான் கொஞ்சம் அனுமதியளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் சேர்ந்து வாழ்தலை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

சேர்ந்து வாழ்ந்த இருவர் பிரிய நேர்ந்தால் என்ன நிலை ஏற்படும்? அந்த ஆண் அல்லது பெண் வேறொருவரைத் திருமணம் செய்து கொள்வதை எப்படி அனுகுவது? இங்கே தான் வருகிறது குஷ்புவின் கருத்து!!

சேர்ந்து வாழ்ந்த ஆணோ பெண்ணோ பெற்றோரின் நிர்பந்தத்தால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டால், அவர்கள் எவ்வாறு அறிமுகப்படுத்தப் படுவர்? விவாகரத்து ஆனவர் என்பதைப் போல சேர்ந்து வாழ்ந்தவர் என்றா? 

நண்பர்கள் மத்தியில் திருமணம், தான் திருமணம் செய்யப் போகும் பெண் பற்றியெல்லாம் பேச்சு வரும்பொழுது, "மாப்ளே, கல்யாணத்துக்கு முன்னாடி எப்படியோ.. கல்யாணத்துக்கு அப்புறம் ஒழுங்கா இருந்தாப் போதும்டா" என்றோ, "நான் எந்த பெண்ணுடனும் தொடர்பில்லாம இருக்கேன், என் மனைவியும் அப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிருப்பதில் என்ன தவறிருக்கிறது" என்றோ தான் பேச்சு அடிபடும். 

ஆக குஷ்பு கூறியது போல "படித்த ஆண் மகன் எவரும் தன் மனைவியாக வருபவர் கற்புடையவராக இருக்க வேண்டும் என்று எதிர்பாக்க மாட்டார்" என்ற கருத்தை ஏற்க முடிவதில்லை. திருமணத்திற்கு முன்பு உறவில் இருந்தவர்கள் சில சதவிதத்தினர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும், பெருவாரியான மக்கள் இப்படித்தான் என்பது ஏற்புடையதில்லை.

இந்த நபர் இன்னாருடன் சேர்ந்துவாழ்ந்தவர் என்று அறிமுகப்படுத்தினால் எத்தனை சதவிதத்தினர் திருமணத்திற்கோ சேர்ந்து வாழவோ ஏற்றுக் கொள்வர்?

-பிடிக்காத நபருடன் சேர்ந்து வாழ்வதை விட பிரிந்து வாழ்வதே சரி என்று கூறும் வேளையில் வாழ்க்கையின் அடுத்த நிலை என்ன என்பதை யோசிப்பது மிகவும் தேவையான ஒன்று. வாழ்க்கையின் அடுத்த நிலையில், திருமணம் பற்றி யோசிக்க நேர்ந்தால் தன்னைப் பற்றிக் கூறிவிடுவதே ஏற்புடையது.

o

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, (இந்திப் படங்களில் தொடர்ச்சியாக வருவதைப் பார்த்து) லிவிங்க்-டு-கெதர் உறவுமுறை மீது ஆர்வம், ஏதோ நவீனத்துவ சிந்தனையாளன் என்ற எண்ணம் போன்றவையால் சேர்ந்து வாழ முடிவெடுக்கும் முன்பு வாழ்வின் அடுத்த நிலை பற்றி சிந்திப்பது நல்லது. "இன்றைய பொழுதை இனிமையாக்கு, நாளையை நாளை பார்க்கலாம்" என்பதெல்லாம் சரிதான். ஆனால், நேற்று ஏற்பட்ட காயங்கள் சில சமயம் நீங்கா வடுக்களாக மாறுவிடும்!!

o

Wednesday, April 28, 2010

அமீரகத் தமிழ் மன்றம், ரோகினி மற்றும் துபாய் தூதரச் சேவைகள்..

கடந்த வெள்ளியன்று அமீரகத் தமிழ் மன்றத்தினர் "இனியொரு விதி செய்வோம்" என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினர். மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் மகளிர்க்கான சிறப்பு நிகழ்ச்சி அது. 

சுவையரசி - 2010 என்ற பெயரில் பெண்களுக்கான சமையல் போட்டி, சவாலே சமாளி, சிறந்த தாய் - மகள் என பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட போட்டிகளை மிகவும் சுவாரஸ்யமாக அமைத்திருந்தனர் மன்றத்தின் மகளிர் உறுப்பினர்கள்.



மருத்துவர் சுப்புலக்ஷ்மி பாலா அவர்களை அமீரகத்தின் சிறந்த தமிழ்ப்பெண்மணியாகத் தேர்வு செய்தனர். இவரை வாக்கெடுப்பு முறையில் தேர்வு செய்தது சிறப்பு. சமூகத்திற்கு இவரது பங்களிப்பைப் பற்றிக் கீழே உள்ள படத்தில் காணலாம்.





மருத்துவர். முகம்மது பர்வீன் பானு, திருமதி சந்திரா ரவி, திருமதி சுஜாதா வேணுகோபால் ஆகியோர் இவ்வாக்கெடுப்பில் அறிவிக்கப்பட்ட மற்ற மூன்று பேர். அமீரகம் மற்றும் இந்தியாவில் சிறந்த சேவையாற்றி வரும் இம்மூவரும் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர். தாய் நாட்டில் இருந்து வெளியே வாழ்ந்தாலும் மக்களுக்குச் சேவை செய்து வரும் இவர்களை வாழ்த்துவதற்கு ஒரு வழியை ஏற்படுத்திய அமீரகத் தமிழ் மன்றத்தினருக்கு சிறப்பான வாழ்த்துகள்!!

இந்நிகழ்ச்சியின் சிறப்புகளில் ஒன்று நிகழ்ச்சியைத் தலைமை தாங்கிய சிறப்பு விருந்தினர்: நடிகை ரோகினி!!

"ஏன் நடிகைகளையே கூப்பிடறாங்க.. வேற ஆட்களே கிடைக்கலையா?" என்று நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்தது நிகழ்ச்சியில் ரோகினி அவர்களைப் பற்றி அறிமுக உரையில்!!

எய்ட்ஸ் நோய் தடுப்பு பற்றி விழிப்புணர்பு, பி.டி. கத்திரிக்காய், விவசாயம் போன்ற இயற்கை சார்ந்த விழிப்புணர்வு, பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள் பற்றிய ஆவணப் படங்கள் என சமூகத்திற்கு இவரது பங்களிப்பு வியக்க வைக்கிறது. பாடலாசிரியர், குறும்பட இயக்குனர், விளம்பரப் பட இயக்குனர் என திரையுலகம் சார்ந்த மற்ற வேடங்கள் நமக்கு அறிமுகமாகாதவை!! நிகழ்ச்சியில் உரையாற்ற வந்தவர்.. எதுவுமே எழுதி வைக்காமல் தூய தமிழில் 20 நிமிடங்கள் உரையாற்றினார்.



அவரது உரையில்.. இயற்கை பற்றிய அக்கறை அதிகமாக இருந்தது. பி.டி. கத்திரிக்காய் போன்ற மரபணு மாற்றம் ஏன் தவிர்க்கப் பட வேண்டும் என்பதைப் பற்றி தன் கருத்தைத் தெரிவித்த பொழுது நாம் ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது. வேலை தேடி வெளிநாடுகளுக்கு வந்திருப்போர் விவசாயத்திற்கு ஏதாவதொரு வகையில் உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இடையிடையே பாரதியாரின் பாடல்களையும் சேர்த்துக் கொண்டவர், அவரது கவிதையுடன் முடித்துக் கொண்டார்.


அவரது கவிதையுடன் முடிக்கும் முன்பு..

"எல்லாவற்றிற்கும் மேலாக.. எல்லோரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்... ரகு உடல் நலம் குன்றியிருந்த பொழுது நான் கொஞ்சம் கவனித்திருக்கலாமோ? என்ற எண்ணம் வருகிறது. இதை இங்கே அமர்ந்துள்ள என் மகன் முன்பு கூறுகிறேன்" என்ற அவரது வார்த்தையின் உண்மைக்காக அரங்கில் கரகோசம் எழுந்தன.

பச்சைக் கிளி முத்துச்சரம் படத்தில் அவர் எழுதிய "உனக்குள் நானே உருகும் இரவில் "என்று தொடங்கும் பாடலின் வரிகள்... இந்தச் சுட்டியில்...

டமிலில் பேசி வரும் நடிகைகளில் மத்தியில் ரோகினி அவர்கள் விண்மீனாகக் காட்சியளித்தார். ( ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் இல்லாமலே சமூகத்திற்கு உதவிவரும் இவரைப் பார்த்தாலாவது... நம்ம... ஸ்டார்கள், தளபதிகள் திருந்துவார்களா? ஏண்டா செந்திலு.. நடக்கறதப் பத்தி பேசு..)

மகளிர்க்கான நிகழ்ச்சியொன்றை அழகாக நடத்தி முடித்த மன்றத்தின் மகளிர் உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்!!

*****

சென்ற வாரம் துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குச் சென்றிருந்தேன். என் மகனின் கடவுச்சீட்டு தொடர்பான, என் ஒப்புதல் கடிதம் (Affidavit)  ஒன்றில் தூதரகத்தில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது.

ஒன்பது மணிக்குத் திறக்கும் தூதரகத்திற்கு 8:30க்குச் சென்றேன். சாஸ்திரி பவனில் பார்ப்பதை விட கூட்டம் அலைமோதியது. எனக்கு முன்பாக ஏறக்குறைய 250 பேர் இருந்தனர். அலுவலகத்தில் வேறு 12 மணிக்கு வந்து விடுவதாக கூறியிருந்தேன். திரும்பி சென்று விடலாமா இருந்து தான் பார்க்கலாமா? என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே "வந்ததே வந்துட்ட.. பார்த்துட்டுப் போடா செந்திலு" (எவ்வளவோ பண்ணிட்டோம்.. ஸ்டைலில்) என்றது மன சாட்சி.

ஒன்பது மணிக்கு வாயில் திறந்தவுடன், பத்து நிமிடத்தில் நான் வாயிலிற்கு வந்துவிட்டேன். அங்கே இருந்த காவலர் சோதனை செய்துவிட்டு, மேலே உள்ள கலையரங்கத்திற்கு செல்லுமாறு கூறினார்.

மேலே சென்றால்.. எனக்கு முன் சென்ற 250 பேரும்.. கையில் டோக்கனுடன் அமர்ந்திருந்தனர். திருமணச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் மற்றும் இன்னபிற சான்றிதழ்களைத் தூதரக அதிகாரியிடம் ஒப்புதல் கையொப்பம் வாங்கிய பிறகு தான் துபாய் அரசாங்க அமைப்புகளில் ஏற்றுக்கொள்ளப்படும்.

என்ன வியப்பு!!

கடகடவென அனைவரும் அழைக்கப்பட்டு.. என் முறை வர ஒன்றரை மணி நேரம் தான்(!!) ஆகியிருந்தது. என் மகனின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டிற்கான ஒப்புதல் விண்ணப்பத்தையும், இந்திய ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்கிறேன் என்பதற்கான ( இந்தக் கதை அடுத்த பதிவில்.. ) ஒரு சான்றிதழையும் சமர்ப்பித்தேன்.

"எப்பங்க கிடைக்கும்?" என்று கேட்டது தான் தாமதம்.. "ஒரு மணி நேரம் வெயிட் பண்ணுங்க" என்றார் (தமிழில்) சான்றிதழ்களை சரி பார்த்துக் கொண்டிருந்த அதிகாரி ஒருவர். அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு இரண்டு சான்றிதழ்களும் கிடைத்தன. நான் என்னைக் கிள்ளிக் பார்த்துக் கொண்டேன்.

துபாய் தூதரகத்தில், சான்றிதழ்கள், கடவுச்சீட்டு இன்னபிற சேவைகளையும் துரிதமாக வழங்குவது வி.எஃப்.எஸ் என்ற தனியார் அமைப்பினர். விசா சேவைகளில் முன்னோடிகள் இந்த நிறுவனத்தினர்.

தூதரகத்தில் இருந்து வெளியே வரும் பொழுது எனக்கு சாஸ்திரி பவன் நினைவுகள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை!!

****

Saturday, April 17, 2010

ஃபேஸன் (FASHION) - திரைக்குப் பின்னால் ஒரு பார்வை!!


சொனாலி! பிரபலமான சூப்பர் மாடல்! ஒரு ஃபேஸன் ஷோவில் ஒய்யாரமாக (பூனை நடை) நடந்து வரும் பொழுது மேலாடை நழுவி விடுகிறது. ஃபேஸன் உலகின் ராணியின் ஆடை நழுவிய காட்சியைப் புகைப்படக்காரர்கள் குதூகலமாகப் படம் பிடிக்கின்றனர். தன் உடை நழுவியதைச் சிறிதும் முகத்தில் காட்டாமல் தன் வேலையை (நடந்து) முடிக்கிறார் சொனாலி. சொனாலியுடன் நடப்பவர்கள் அனைவரும் முகத்தில் சிறிதும் உணர்ச்சியற்று நிற்கிறார்கள் தங்கள் (நடை) முறைக்காக!!

எப்படி நடந்தது? ஏன் நடந்தது? "சொனாலியின் மேலாடை நழுவிவிட்டது" என்று எங்கும் பரபரப்பு!!

"ஐயோ.. என் ஷோ இப்படிப் பாழாகிவிட்டதே! இனி யார் என் நிறுவனத்திடம் ஃபேஸன் ஷோவை ஒப்பந்தம் செய்வார்கள்?" என்று கதறுகிறார் நிறுவனத் தலைவர். ஊடகங்களுக்கு செமத்தியான தீனி கிடைத்துவிடுகிறது. பெண்களின் உடலை மூலதனமாகக் கொண்டு காட்டப்படும் எந்த நிகழ்ச்சிகளுக்கும், செய்திகளுக்கும் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் தானே அவர்கள்!! சொனாலி என்ன ஆனாள் என்பது முக்கியமல்ல.

கிரீன் ரூம் என்று அழைக்கப்படுகிற மேக்-அப் ரூம் வரும் வரை உறைந்து போனவர், "உனக்கு ஒன்னுமில்லை சொனாலி" என்று சொல்லி பிறகு, "ஓ"வென அழ ஆரம்பிக்கிறார்.

o

சொனாலியின் இடத்தில் மேக்னாவை நியமிக்கிறது "பனாச்" என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம். 

சண்டிகரைச் சார்ந்த மேக்னாவிற்கு சூப்பர் மாடல் ஆக வேண்டும் என்ற ஆசை. தன் ஆசையைப் பெற்றோரிடம் கூறத் தந்தை மறுக்கிறார். வீட்டை விட்டு வெளியேறும் மேக்னா, மும்பைக்கு வந்து ஆரம்பத்தில் துன்பங்களை அனுபவித்து ஃபேஸன் ஷோவில் கலந்து கொள்ள ஆரம்பிக்கிறார். தான் சேரும் நிறுவனத்தில் சொனாலி சூப்பர் மாடலாக இருக்கிறார்.புகழ், புகை, மது மற்றும் போதைப்பழக்கம் தந்த மயக்கமும் சேர்ந்து கொள்ள திமிரின் உச்சத்தில் திளைக்கிறார் சொனாலி!! அவரது திமிரே அவரிற்கு எதிரியாக மாற, சொனாலியின் இடத்தைப் பிடிக்க வேண்டுமென்ற கனவு நனவாகிறது, மேக்னாவிற்கு!!


அதற்காக மேக்னா கொடுக்கும் விலை அதிர வைக்கிறது. தன்னுடன் சேர்ந்து வாழும் (Living Together) ராகுலை விட்டுப் பிரிய நேர்கிறது. "பனாச்" நிறுவனத் தலைவர் அபிஜித்துடன் ஒத்துழைத்ததால் கற்பமாகிறார் மேக்னா. ஆனால், பனாச் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தில் மூன்று வருடத்திற்குக் கற்பமாகவோ, திருமணமோ செய்து கொள்ளக்கூடாது என்றிருக்கிறது. ஒப்பந்தத்தைப் படிக்காமல் கையெழுத்துப்போட்டதை நினைத்துத் தன்னையே வெறுக்கிறார் மேக்னா.

ஒரு கட்டத்தில், சொனாலியைப் போலவே மேக்னாவும் குடிபோதைக்கு அடிமையாகிறார். குடி போதையில் காரை ஓட்டிச் சென்று காவல்துறையினருடன் மாட்டிக்கொள்கிறார். இந்த விசயம், ஊடகங்களில் பரபரப்புச் செய்தியானதில்  இருந்து மேக்னாவின் சரிவு ஆரம்பமாகிறது.விரக்தியின் உச்சியில் தன்னையே மறக்குமளவிற்கு போதையேற்றிவிட்டு டிஸ்கோவிற்குச் செல்கிறார். அங்கே, தனக்கு அறிமுகம் ஆகாத கறுப்பினத்தவர் ஒருவருடன் நடனமாடுகிறார்.

காலையில் போதை தெளிகிறது. ஏதோ ஒரு மூன்றாம் தர ஓட்டலில் இருப்பது புரிகிறது. உடலில் ஆடைகள் இல்லை. அருகில் திரும்பிப்பார்த்தால் தனக்கு அறிமுகமே இல்லாத அந்த மனிதர்!! மேக்னாவுடன் ஆரம்பித்தில் இருந்து பயனிக்கும் நம்மை உறைய வைக்கும் காட்சியிது.

"ஆரம்பத்தில் எல்லாமே நன்றாகத் தான் இருக்கும். போகப் போக எல்லாமே மாறிவிடும்"(Shuru Mein Sab acchaa laga.. dheere dheere sab padhal saktha hey) என்று தன் இடத்திற்கு மேக்னாவை நியமனம் செய்த பொழுது சொனாலி கூறிய வார்த்தைகள் ஒலிக்கிறது.

பனாச் நிறுவனத்தின் ஒப்பந்தத்தைத் ரத்து செய்துவிட்டு ஊருக்குத் திரும்ப, தங்கள் மகளை அரவணைக்கின்றனர் பெற்றோர். பெற்றோரின் கவனிப்பில் மனதில் ஏற்பட்ட காயங்கள் மறைகிறது. இந்த முறை தன் தந்தையின் ஆசிர்வாதத்துடன்.. மும்பை திரும்புகிறார்.

o

"பிரபல மாடல் சொனாலி ரோட்டில் கிடக்கிறார்" என்று சொனாலியைத் தூக்கி வைத்துக் கொண்டாடிய ஊடகங்களில் வந்த செய்தியைப் பார்த்து சொனாலியைக் காப்பாற்றுகிறார் மேக்னா. இருவரும் நல்ல தோழிகளாகின்றனர். பாரிஸ் நகரின் முக்கிய நிறுவனமொன்றின் ஃபேஸன் ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது மேக்னாவிற்கு. ஃபேஸன் ஷோ நடப்பதற்கு முந்தைய நாள் மேக்னா காணாமல் போகிறார். என்ன ஆனார் சொனாலி? மேக்னா சூப்பர் மாடல் ஆனாரா?

o

சொனாலியாக கங்கனா ரவுத். (தாம் தூமில் துக்கடாவென வந்து செல்வார்). புகழின் உச்சியில் இருக்கும் பொழுது இருக்கும் திமிர், அடாவடித்தனம், துயரம், இயலாமை என எல்லா உணர்ச்சிகளையும் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார். மேக்னாவாக பிரியங்கா சோப்ரா. "இதை விட ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்குமா? நடிப்பதற்கு?" அசத்தியிருக்கிறார். இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது சரியானதே!!

o

கல்லூரிக்காலங்களில் தான் "ஃபேஸன் ஷோ"க்கள் அறிமுகமானது எனக்கு. வெவ்வேறு கல்லூரிகளின் பெண்கள் விதவிடமான உடைகளை அணிந்து ஒய்யார நடை நடப்பார்கள். அது போன்ற நிகழ்ச்சிகளில் ஆடைகளை (என்னையும் சேர்த்து) எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்பது சந்தேகமே!! அதே கல்லூரிக் காலத்தில் எஃப்.டி.வி. வர ஆரம்பித்தது. யார் வருகிறார்கள், என்ன உடையணிந்திருக்கிறார்கள் என்றெல்லாம் கவலையே இல்லாமல் எங்கள் டி.வி.ஹாலில் ஓடிக்கொண்டிருக்கும் எஃப்.டி.வி!! அப்பொழுதெல்லாம்.. ஃபேஸன் உலகிற்குப் பின்னால் இப்படி ஒரு கோரமான முகம் இருப்பது தெரியாது. 

ஐஸ்வர்யா ராய் உலக அழகி ஆனதில் இருந்து மாநிலம் வாரியாக, மாவட்டம் வாரியாக, நகரம், தெரு என எங்கும் அழகிகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகள் வர ஆரம்பித்துவிட்டன. இது போன்ற நிகழ்ச்சிகளில் கிடைக்கும் புகழ் சிலரை ஃபேஸன் உலகிற்குச் செல்ல ஊக்குவிக்கலாம். அது போன்றவர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பது நல்லது!! பளபளப்பிற்குப் பின்னால் உள்ள ஒரு உலகம் நம் கண் முன்னே "ஃபேஸன்" திரைப்படத்தில்!!

போட்டி, பொறாமை, கயமை, கற்பைப் பறிக்கக் காத்திருக்கும் பருந்துகள், மன உளைச்சல் என்று எதையும் விட்டுவைக்காமல்.. சிறப்பான படத்தை எடுத்திருக்கிறார் மதுர் பண்டார்கர்!! இவரது படங்கள் உண்மைக்கு மிக அருகில் பயணிப்பவை!!


எந்த ஒரு இடத்திற்கு வருவதற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டியுள்ளது அனைவரும் அறிந்ததே. அதுவே ஃபேஸன், சினிமா போன்ற உலகமென்றால் கொடுக்க வேண்டியிருக்கும் விலை கொஞ்சம் அதிகம் என்பதே சுடும் உண்மை!! ஃபேஸன் உலகைக் கவர்ச்சி என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்த்து வருபவர்கள்... இந்தப் படத்தைப் பார்த்தால் மாற்ற வேண்டியதிருக்கும்!!
o

Friday, April 16, 2010

ஹெலன் கெல்லர் மற்றும் ப்ளாக் - இருளில் ஒளி!!



ஹெலன் கெல்லரைப் பற்றிய பாடத்தை பள்ளி நாட்களில் படித்ததுண்டு.  பிறந்த சில மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கண் பார்வை, கேட்கும் சக்தி, பேசும் சக்தி ஆகியவற்றை இழந்தார் ஹெலன் கெல்லர். தனது உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் இருளில் மூழ்கியிருந்த ஹெலர் கெல்லரிற்கு ஒளி கிடைத்தது ஆன் சல்லிவன் என்ற ஆசிரியரின் உதவியால்!!

பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர் பேசுவதை புரிந்துகொள்ளும் கலையை கெல்லருக்கு சல்லிவன் கற்பித்தார். மேலும், கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பழக்கினார். ஹெலன் கெல்லர், கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்று, பிறகு பட்டமும் பெற்றது வரலாறு. 

o

ஹெலன் கெல்லரின் வாழ்க்கையின் சில பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்ட படம் தான் ப்ளாக் (BLACK).


சஞ்சை லீலா பன்சாலியின் இயக்கத்தில் கண்பார்வை தெரியாத பெண் 'மிச்செல்'லாக ராணி முகர்ஜி, ஆசிரியர் தேப்ராஜ் சஹாயாக அமிதாப் பச்சனும் அருமையாக நடிக்க, ரவி.கே.சந்திரன் வரைந்த ஒளி ஓவியம்!!

மிச்செல், கண் பார்வை, காது கேட்கும் - வாய் பேசும் திறன் இல்லாததை அறியும் தந்தையால் உதாசீனப்படுத்தப்படுகிறார். ஒலி, ஒளி எதையுமே உணரவோ, உணர்ச்சிகளை வெளிப்படுத்தவோ முடியாத மிச்செல் முரட்டுத்தனமாக நடக்கிறார், ஆசிரியர் சஹாயைச் சந்திக்கும் வரை!! அதன் பிறகு சஹாயின் பயிற்சியில் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், படிக்கவும் கற்கிறார் என்பது தான் ப்ளாக் படத்தின் சுருக்கம்!!

மிச்செல் போல மாற்றுத்திறன் கொண்டவர்கள் எப்படி படிப்பார்கள்? அவர்கள் என்னென்ன பிரச்சனைகளைச் சந்திப்பார்கள்? என்றெல்லாம் சில ஆசிரமங்களுக்குச் சென்ற போது யோசித்ததுண்டு. ஆனால், மிச்செல் போன்ற மாற்றுத்திறன் கொண்டவர்களின் பிரச்சனைகளைத் துல்லியமாக ஆய்கிறது இந்தப் படம்!!

"இவ்வளவு சிரமங்கள் எதற்கு? கண்தெரியாத, காதுகேட்காத குழந்தைகளுக்கான ஆசிரமத்தில் சேர்த்துவிடலாம்" என்று பேசப்படும் ஒரு இடத்தில் சஹாய் கேட்கிறார், "அங்கு எதற்கு? கூடையும் பாயும் முடையக் கற்றுக் கொள்ளவா? அங்கு பட்டதாரியாகும் அவளின் கனவை நனவாக்க முடியுமா"?என்று. சஹாயின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை. ப்ளாக் படத்தில் மிச்செலின் பெற்றோர் வசதி படைத்தவர்கள். ஆனால், நம் சமூகத்தில் இது போன்ற திறன் உள்ளவர்களின் பெற்றோர்??

இந்தப் படத்தில் மிச்செலின் கல்லூரியில் பி.ஏ. படிப்பிற்குத் தேவையான பாடங்களை பிரெயில் முறையில் தயார் செய்து தருவார் ஆசிரியர். மிச்செலும் தன் பாடங்களைப் பேசவும் படக்கவும் தெரிந்த மாணவர்களுடன் படிப்பார். கல்லூரியில் விரைவுரையாளர் பாடம் எடுக்கும் பொழுது சஹாய் அருகில் அமர்ந்து மிச்செலிற்கு விளக்குவார். நம் சமூகத்தில்??

பல வருடங்கள் அதே கல்லூரியில் படித்துவிட்டுப் பட்டம் வாங்குமிடத்தில், மிச்செலுடன் நமக்கும் பெரிமிதம் வந்துவிடுகிறது படம் பார்க்கையில். பல வருடங்களாக மிச்செலுடனேயே பயணிக்கும் சஹாய்க்கு அல்ஜெய்மெர் நோய் தாக்குகிறது. ஆரம்பத்தில் தன்னைக் கட்டியது போல சங்கிலியால் சஹாயையும் கட்டியிருப்பதை உணரும் மிச்செல் கதறும் இடத்தில் நம் மனமும் கசிகிறது. தள்ளாத வயதில் நோய்வாய்ப்பட்டிருக்கும் சஹாயிடம் "தான் பட்டம் பெற்றதைத்" தன் மொழியிலேயே காட்டுவது அழகு!!


கடைசியில் சஹாயை அறையில் இருந்து வெளியே அழைத்துச் சென்று மழையில் நனையவிடும் இடத்தில் புல்லரிப்பை உணர முடியும்!!

o

அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் - ப்ளாக் (BLACK),  மாற்றுத் திறன் உள்ளவர்களைப் புரிந்துகொள்ளவும், எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டும் விடக்கூடாது என்பதை உணரவும்!!. இதோ ஹெலன் கெல்லரின் வார்த்தைகள்..


They took away what should have been my eyes
But I remembered Milton's Paradise

They took away what should have been my ears,
Beethoven came and wiped away my tears

They took away what should have been my tongue,
But I had talked with God when I was young

He would not let them take away my soul -
Possessing that, I still possess the whole.

-Helen Keller

o

Tuesday, April 13, 2010

கதறும் பூந்தமல்லி சாலை!!

சென்னையின் சாலைகளுக்கு மட்டும் உயிர் இருந்திருந்தால்.. இந்நேரம் மாண்டிருக்கும். ஆம் நாம் நடத்தும் சீரழிப்பைத் தாங்க முடியாமல்!

சென்னையுடன் என் உறவு 1997 முதல் தான். ஆனால் இந்த 13 ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள்??

1997ல் கல்லூரிக் கல்விக்காகச் சென்னை வந்ததிலிருந்து, நான் பார்த்து வரும் மாநகரச் சாலைகளுள், மாற்றங்கள் நிகழ்ந்ததென்றால் அது சில மேம்பாலங்களும், பல ஒருவழிப்பாதைகளும் தான். சென்னையில் நான் அதிகம் பயன்படுத்திய சாலைகளுள் கோட்டூர்புரத்தை ராஜ்பவனுடன் இணைக்கும் காந்திமண்டபம் சாலையும், சர்தார் பட்டேல் சாலை மற்றும், பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் தான்!! அந்த சாலைகளின் அன்றைய மற்றும் இன்றைய நிலையை நினைக்கும் பொழுது...

கோட்டூர்புரம் சாலை!!

முன்பு, அடையாறு ஆற்றிலிருந்து சர்தார் படேல் சாலை வரை (சில இடங்கள் தவிர்த்து ) சாலையின் இரு புறமும் அடர்ந்த மரங்கள் காணப்படும். சாலைகளில் வாகனங்கள் வருவதே அரிதாக இருக்கும். ஏன் சில சமயம், கார்கள் சாலையோரத்தில் ஒதுங்கி (??) நிற்பதையும் பல முறை பார்த்திருக்கிறோம். அப்படி இருந்த சாலை இன்று "மொட்டையடிக்கப் பட்டுள்ளது" சோகத்தின் உச்சம்.



சர்தார் படேல் சாலை!!

சைதாப்பேட்டையில் இருந்து அடையார் நோக்கி வரும் பொழுது தட்பவெப்பத்தில் சில டிகிரிகள் குறைவதை உணர முடியும். சின்னமலை சந்திப்பில் இருந்து ராஜ்பவன் நோக்கி வரும்பொழுது இருந்த அடர்ந்த மரங்கள் இன்று எங்கே?? ஒருவழிப் பாதையாக மாறியதில் பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. அதே போல அடையாரை நோக்கிச் செல்லும் பொழுது சி.எல்.ஆர்.ஐ.(CLRI), காந்தி நகர் பகுதிகளில் சாலையோரத்தில் இருந்த மரங்கள் இன்று இருந்த இடம் தெரியவில்லை!!

அண்ணாபல்கலைக் கழகத்தில் படிக்கும் பொழுது அடையாரில் இருந்து கல்லூரிக்கு நடந்தே வருவது எங்களுக்கு வாடிக்கையான ஒன்று. சாலையோரமெங்கும் மரங்கள், எங்கும் நிழல்!! ஆனால் இன்று??

பூந்தமல்லி சாலை!!

சென்னையின் பிரதான சாலைகளுள் ஒன்று பூந்தமல்லி சாலை. ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட தரமான சாலைகளுள் ஒன்று. சென்னை நகரின் மக்கள் தொகை சில லட்சங்களாக இருந்த சமயம் போட்ட சாலையை, மாநகரின் மக்கள் தொகை ஒரு கோடியைத் தொடும் பொழுதும் பயன்படுத்தி வருகிறோம். 

பத்து பேர் நிற்க வேண்டிய இடத்தில் 15 பேர் நிற்கலாம். 100 பேர் நின்றால் என்னாகும்?? 

அது தான் நடக்கிறது இன்று சென்னை சாலைகளில். குறிப்பாக பூந்தமல்லை சாலையில்!! தென்சென்னைப் பகுதிகளில் இருந்து வட சென்னைப் பகுதிகளுக்குச் செல்ல பூந்தமல்லி சாலையைக் கடந்தே தீர வேண்டும். மேலும் சென்னை சென்ரல், சென்னை எழுப்பூர் ரயில்நிலையம், கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி, சென்னை மருத்துவக்கல்லூரி சாலையெங்கும் முக்கிய இடங்கள்!! சென்னையில் வாழும் பெரும்பாலானோர் கடக்கும் சாலையென்பதால் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் தான்!!

நாங்கள் ஒன்றரை வருடத்திற்கு முன்பு தான் துபாய் வரும் வரை கீழ்பாக்கம் கார்டன் பகுதியில் தான் குடியிருந்தோம். என் அலுவலகம் இருந்ததோ பூந்தமல்லியைத் தாண்டி. காலையில், ஈகா திரையரங்கில் இருந்து 4 கி.மி. தொலைவில் இருந்த கோயம்பேடு செல்வதற்குக் குறைந்தது 10 நிமிடம் ஆகும். அதுவே மாலையென்றால் 45 நிமிடங்கள் வரை ஆகும். வாரக்கடைசியில் கீழ்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு பேருந்தி நிலையத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்கிறது.  ஒன்றரை வருடத்திற்கு முன்பே அவ்வளவு நெரிசல் என்றால்... இன்று??

ஏற்கனவே விழிபிதுங்கி நின்ற பூந்திமல்லி சாலை குருடாகியிருக்கிறதாம். காரணம் அம்பா மால்!!


நுங்கம்பாக்கம், சூளைமேடு, தி.நகர் போன்ற பகுதிகளை அண்ணா நகர், வில்லிவாக்கத்துடன் இணைக்கும் நெல்சன் மாணிக்கம் சாலை, பூந்தமல்லி சாலையில் சந்திக்குமிடத்தில் அழகிய கூவத்தின் கரையில் அமைந்துள்ளது இந்த மால்!! நெரிசல் நிறைந்த சாலையில், இந்த மால் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. அம்பா மாலின் திரையரங்கங்களின் காட்சி முடியும் நேரமானால் சொல்லவே வேண்டாம்!! இந்த இடத்தில் இப்படி ஒரு கட்டிடம் கட்ட அனுமதி அளித்த மவராசரை நினைத்தால்....ம்ம்ம்.. நல்லாயிருக்கட்டும்!!


"அட.. என்னடா இவன்.. புதுசா, சூப்பரா மால் கட்டி விட்டுருக்காங்க!! அத விட்டுட்டு சாலை, நெரிசல்னு புலம்பீட்டிருக்கான்" என்று நினைப்பவர்களுக்கு ஒரு கேள்வி. இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் ஏதாவது மாற்று வழியில் செல்லலாம். மாநகரப் பேருந்தே கதி என்று இருப்பவர்கள் நிலை என்னவாகும்??

சென்னை சென்ரலில் இருந்து கோயம்பேடு செல்ல முன்பு 45 நிமிடம் ஆகியிருந்தால் இனிமேல், ஒன்றரை மணி நேரமாகும். பேருந்திகளில் செல்வோர் அவதிக்குள்ளாவது எதனால்?? நம்மைப் போன்றோர் ஆடம்பரமாக பொழுதைக் கழிக்க!!

Sunday, April 11, 2010

சபாபதி முதல் நல்லசிவம் வரை! - பத்துக்குப் பத்து!!

பதிவுலகின் சுவாரஸ்யங்களில் தொடர்பதிவுகளும் ஒன்று. இந்த விசயத்தைப் பற்றி எழுதினால் என்ன என்று யோசித்துக் கொண்டிப்போம். அதே சமயம் "இதையெல்லாம் ஒரு பதிவாக எழுத வேண்டுமா?" என்றும் உள்ளுக்குள் தோன்றும். அந்த நேரத்தில் தொடர் பதிவெழுத அழைப்பு வரும் பொழுது "அழைத்தவரிற்காக" என்று சொல்லிக்கொண்டு (காரணம் வேணும்ல??) எழுத ஆரம்பித்துவிடுவோம். அப்படி இந்த முறை "எனக்குப் பிடித்த பத்து படங்களை" எழுதுமாறு நண்பர் பிரபாகர் அழைத்திருக்கிறார்.

விதிகள்: 

1. தமிழ்ப் படங்கள் மட்டுமே பட்டியலில் வரவேண்டும்.

2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.

3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை.

சிறுவயதில் இருந்து பார்த்திருக்கும் நூற்றுக்கணக்கான படங்களில் ஒரு பத்தை மட்டும் பட்டியலிடுவது கடினமான விசயம்!!

படங்களை எப்படிப் பட்டியலிடுவது? 

மிகத் திறமையாக இயக்கப்பட்ட படங்களா? சிறப்பான கதை, திரைக்கதையுள்ள படங்களா?, அதிகமான விருதுகள் வாங்கியவையா?, சமூகத்திற்குத் தேவையான கருத்துகள் கொண்ட படங்களா? அல்லது ஒரு நிகழ்வைப் பற்றி எடுக்கப்பட்ட படங்களா?

இப்படித் தேர்ந்தெடுக்கும் பட்டியலில் வீரபாண்டிய கட்டபொம்மன், அதே கண்கள், எதிர் நீச்சல், ராஜராஜ சோழன், கர்ணன், கந்தன் கருணை, ஆறு முதல் அறுபது வரை, உதிரிப்பூக்கள், 16 வயதினிலே, சேது, கன்னத்தில் முத்தமிட்டால், குணா, மூன்றாம் பிறை, முள்ளும் மலரும், பருத்திவீரன், சேது, பிதாமகன், மகாநதி, தேவர் மகன், சுப்பிரமணியபுரம்,  ஹே ராம், அஞ்சலி, ஹவுஸ்புல், புதிய பாதை, வெற்றிக்கொடிகட்டு, ஆட்டோகிராப், ஒன்பது ரூபாய் நோட்டு, பெரியார், நான் கடவுள் போன்ற படங்கள் கட்டாயம் இடம்பெறும். 

இது போன்ற ப்டங்களைப் பார்க்கும் பொழுது நல்ல படங்கள் என்ற நிறைவும், தமிழ் சினிமா மீதும் பெருமிதமும் ஏற்படுகிறது!! மேலே குறிப்பிட்ட படங்கள் யாவும் என் கலெக்சனிலும் உள்ளன. ஆனால் இது போன்ற படங்களை மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறேனா என்று யோசித்தால் "இல்லை" என்று தான் கூற வேண்டும். 

அப்படி நான் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்த/ரசிக்கும் படங்களைப் பட்டியலிடுகிறேன், பல அக்மார்க் மசாலாப் படங்கள் என்றாலும்!! 

1. சபாபதி - 1941:

ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் தயாரித்து இயக்கியிருக்கும் படம். 1941ல் வெளியாகியிருக்கும் படத்தில் சபாபதி என்ற பெயரிலேயே இரண்டு கதாபாத்திரங்கள். எஜமான் சபாபதியாக டி.ஆர்.ராமசந்திரன் (கதாநாயகர்) வேலையாள் சபாபதியாக சாராங்கபாணி!! இருவரும் சேர்ந்து அடிக்கும் கொட்டம் தாங்க முடியாது. தூர்தர்ஷன் காலத்தில் முதன் முதலில் பார்த்தது. என் இளம் வயதில் அவ்வளவு சிரித்து மகிழ்ந்தது இந்தப் படமாகத் தான் இருக்கும்.
பள்ளிகளில்/ கல்லூரிகளில் ஆசிரியரை கிண்டலடிக்கும் வழக்கம் இந்தப் படத்திலிருந்தே ஆரம்பித்திருக்கிறது. இன்று வரை நாம் பார்க்கும் கிண்டல் காட்சிகள் யாவும் இந்தப் படத்தின் பிரதியே!!

கிளப், சீட்டாட்டம் என்று திரியும் செல்வந்த முதலாளி, படிப்பில் கவனம் இல்லாத மகன், செல்லம் கொடுக்கும் தாயார், முட்டாள் வேலையாள், சபாபதிக்குப் பார்க்கப்படும் பெண், வேலைக்காரி என்று குறைந்த கதாப்பாத்திரங்களைக் கொண்டு அருமையான படத்தைத் தந்திருப்பார் ஏ.வி.எம். செல்வந்தர்களிடம் இருந்த( ஏன் இன்னும் இருக்கும்) ஆங்கில மோகம், சமூகத்தில் இருந்த இன்னல்கள் என்று ஆங்காங்கே சுட்டிக் காட்டியிருந்தாலும் படம் முழுக்க நகைச்சுவை நிரவியிருக்கும். 

படத்தின் அதிகபட்ச நகைச்சுவை சபாபதியின் தேர்வுத்தாள். தெற்கு ரயில்வேயைப் பற்றி எழுதச் சொன்னால்..

"இருப்புப் பாதை என்றால் இருப்புப்பாதை என்று அர்த்தம். தெற்கு ரயில்வே மெட்ராஸில் இருக்கிறது. மெட்ராஸில் இருந்து கிளம்பிய ரயில் குப்..சிப்..
குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப். குப்..சிப்..குப்..சிப்.." என்று எழுதியதை "சபாபதி" படிக்கும் காட்சியைப் பார்ப்பவர்கள் கண்ணில் நீர் வர நான் உத்திரவாதம்.

தேன் நிலவு:(1961)

வழக்கமாக வரலாற்றுப் படங்கள் அல்லது சோகப் படங்களைப் போடும் தூர்தர்ஷனில் பார்த்த பொழுது ஸ்ரீதரின் தேன் நிலவு ஒரு மாறுதல். 

இளமையான ஜெமினி கனேசன், அழகான நம்பியார், காமெடியில் கலக்கும் தங்கவேலு, ஓவியம் போல வைஜெயந்திமாலா என அருமையான கூட்டனியுடன் சிறிது சோகம் இருந்தாலும் மென்மையான படம். "ஓஹோ எந்தன் பேபி.. நீ வாராய் எந்தன் டார்லிங்" என்று ஜெமினியும், வைஜெயிந்திமாலாவும் காஷ்மீர் ஏரியில் டூயட் பாடும் காட்சி போல தமிழ் படங்களில் காட்சி வந்ததில்லை. இப்பொழது, தேன் கின்னம் நிகழ்ச்சியில் இந்தப் பாடலைப் பார்க்கும் பொழுது வைஜெயிந்தி மாலாவைப் பார்த்து ஜொள் விடாமல் இருக்கமுடிவதில்லை :)

பாட்டுப் பாடவா, காலையும் நீயே மாலையும் நீயே, ஊரெங்கும் தேடியே ஒருவரைக் கண்டேன், நிலவும் மலரும் பாடுது என்று படத்தில் உள்ள அத்தனை பாடல்களும் கிளாசிக்கல் ரகம். இசை ஏ.எம்.ராஜா. 

3. காதலிக்க நேரமில்லை (1964)

தமிழ் சினிமாவின் Trend Setterஆக அமைந்த படங்கள் இரண்டு. ஒன்று காதலிக்க நேரமில்லை. இரண்டாவது 16 வயதினிலே. இரண்டாவது செட்டில் இருந்து வெளியே கிராமத்திற்கு கூட்டிச் சென்றதற்கு. முதலாவது முழுக்க முழுக்க நகைச்சுவையாக அமைந்ததற்கு.

ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், காஞ்சனா, ராஜ்ஸ்ரீ, பாலய்யா கூட்டனியில் ஸ்ரீதர் இயக்கிய படம். இந்தப் படத்தில் நாகேஷ் இயக்குனர் ஆகும் எண்ணத்தில் பாலய்யாவிற்குக் கதை சொல்லும் காட்சி இப்பொழுது பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியாது.

எங்க ஊரிற்கு அருகே இருக்கும் ஆளியார் அணையில் தான் படத்தின் பல காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும். 

"அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்" பாடல் என்னுடைய All time Favourite!!

4. தில்லுமுல்லு (1981):

அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் என்ற பாத்திரத்தில் ரஜினி கலக்கியிருக்கும் படம். மீசையை வைத்து நகைச்சுவை செய்ய முடியும் என்பதைக் காட்டியிருக்கும் படம். 

ரஜினி, தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி கூட்டனி அடிக்கும் கூத்திற்கு அளவே கிடையாது. படத்தின் ஹை-லைட் நகைச்சுவை காட்சி தேங்காய் சீனிவாசன் நடத்தும் நேர்முகத்தேர்வு தான்!!

சுப்பிரமணிய பாரதி என்ற பெயரில் ஒருவர் வருவார்..

அவரிடம் தே.சீ., "வணக்கம் மிஸ்டர் சுப்பிரமணிய பாரதி, உங்க பேரக் கேட்டாலே குழந்தைகளுக்கும் சுதந்திர தாகம் எடுக்கும். உங்களுக்கும் கவிதைகள் எழுதத் தெரியுமா?" என்பார்.

அதற்கு அவர், "பல(ழ)க்கம் இல்லீங்க..." என்பார்.

"பலக்கம் இல்லியா? உங்களுக்கு இந்த "ழ"ன்னா வராதா?"
"வரும், ஆனா கொஞ்சம் கஸ்(ஷ்)டப்படும்"
அதற்கு தே.சீ.,"கஸ்டப்படும். அப்ப உங்களுக்கு இந்த "ஷ"னாவும் வராது. சரி, இப்ப நான் சொல்றத திரும்ப சொல்றீங்களா? 'ஒரு கட்டு சுள்ளில ஒரு சுள்ளி கோண சுள்ளி'.. எங்க இத சொல்லுங்க.."
"வேண்டாங்க ரிஸ்க்கு.." என்பார் பாரதி..
" 'ழ'னாவும் வராது, 'ஷ'னாவும் வராது, 'த'னாவும் வராது. பேரு மட்டும் சுப்பிரமணிய பாரதி. இது நாட்டுக்கும் அவருக்கும் பண்ற பெரிய துரோகம்யா.. முதல்ல உங்க பேர மாத்துங்க.." என்பார் தே.சீ.. 
"மாத்தீட்டேன் சார்.. ஷார்டா சுப்பி.."
"பேரப்பாரு சுப்பி கப்பினு.. GET OUT........" :)

5. இன்று போய் நாளை வா (1981)

தமிழ் தொலைக்காட்சிகளைப் பார்த்துவரும் அனைவருக்கும் இந்தப் படத்தைத் தெரியாமல் இருக்காது. 80களில் கோவை நகரின் வீதிகளை கண் முன்னே நிறுத்தியிருப்பார் பாக்கியராஜ். 

"ஏக் காவ் மேன் ஏக் கிஷான் ரஹ தாத்தா" காமெடி இன்றளவும், தமிழக இளைஞர்கள் ஹிந்தி கற்றுக் கொண்ட அனுபவத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தும் வசனம்.

நான் அதிகமாகப் பார்த்திருக்கும் படம் இதுவாகத்தான் இருக்கும்.

6. முதல்மரியாதை (1985)

50 வயது மதிக்கத்தக்க ஊர்ப் பெரியவருக்கும் 20 வயது மதிக்கத்தக்க பரிசல் ஓட்டும் பெண்ணிற்கும் பூக்கும் காதலை மண் வாசனையுடன் கொடுத்திருப்பார் பாரதிராஜா.

சிவாஜி!! 

"உன்னோட தங்கச்சி மவன் முக்கியமா, சாதி முக்கியமாய்யா? உன் வீட்டுல கூடு கட்டியிருக்கே குருவி, அதெல்லாம் சாதியாய்யா பாக்குது? நல்லவேளை தேவர் கொக்கு, நாடார் குருவி, செட்டியார் மைனான்னு அதுக சொல்றதில்லை. உனக்கு உன் சாதி தான் முக்கியம்னா வெட்டுயா பாக்கலாம்" என்று ராதா பேசும் வசனம் இன்றும் நினைவில் நிறுகிறது.

இளையராஜா... ஒரு ராஜாங்கமே நடத்தியிருப்பார். இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது எங்கள் ஊரிற்குப் பக்கத்தில் இருக்கும் கிராம நினைவுகள் வந்துவிடும். ரஞ்சனி இறக்கும் முன்பு ஒரு புல்லாங்குழலில் ஒரு BGM வரும் பாருங்கள்! ராஜா ராஜா தான்!!

7. மைக்கேல் மதன காமராஜன் (1992)

கமல் - கிரேசி மோகன் கூட்டனியில் வந்த நகைச்சுவைப் படங்களில் இந்தப் படத்திற்கு தனி இடம்!!

நான்கு பாத்திரத்தையும் எந்த வித ஒப்பனையும் இல்லாமல், Body Languageயையும், வாட்டார மொழியையும் மட்டுமே வைத்துக்கொண்டு செய்ய முடியும் என்று காட்டியது சிறப்பு!! இந்தப் படத்தில் ஒன்று முடிந்த அளவிற்கு ஏனோ தசாவதாரத்தில் 10 பாத்திரங்களில் வரும் பொழுது ஒன்ற முடியவில்லை.

பாலக்காட்டு ஐயர்-ஊர்வசி கூட்டனியில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சிகள் கலக்கல்!!

"நீங்களும் குக்கா.. உங்க ஊரும் குக்கு...", "ஐ.மீன்.. வாட் யூ மீன்.." என்று படம் முழுக்க நகைச்சுவை வசங்கள் பரவிக்கிடக்கும். 

8. அக்னி நட்சத்திரம் (1988) :

சுத்தமான மசாலாப் படமானாலும் சிறந்த பொழுது போக்குப் படம். ஆண்மையான கார்த்திக், அளவான உடம்புடன் பிரபு, அழகான அமலா, இளமையான நிரோஷா என்று சூப்பர் கூட்டனி.மணிரத்னம் படங்களில் அந்தக் காலகட்ட இளைஞர்கள் பேச்சு வழக்கு இடம்பெறும்.ஆய்த எழுத்து படத்தில் சித்தார்த் வசனங்கள், அலைபாயுதேவில் மாதவன், அக்னி நட்சத்திரத்தில் அமலா, நிரோஷா பேசும் வசனங்கள் "ஆ"வெனப் பார்க்க வைத்தது.

இந்தப் படம் வந்த பிறகு "என் பொண்டாட்டி ஊருக்குப் போயிடுச்சேய்... தங்கமணி ஊருக்குப் போயிடுச்சேய்..." என்ற வசனத்தை பயன்படுத்தான் கணவன்மார்கள் இருப்பார்களா? வி.கே.ராமசாமி, ஜனகராஜ் அடிக்கும் கொட்டம் கலகலப்பு.

இளையராஜ டிஸ்கோ சாந்தி வரும் காட்சிக்குப் போட்டிருக்கும் BGM கலக்கல். பல நாட்கள் என் ரிங்டோன் அது தான்!!

9. பாட்சா (1995)

ஒரு படத்தின் சண்டைக்காட்சிகளைப் பார்க்கும் பொழுது புல்லரிப்பது இந்தப் படத்திற்குத் தான். பல முறை ரஜினியைக் கிண்டல் செய்தாலும் ரஜினியைத் தவிர இது போன்ற பாத்திரத்தை யாரும் செய்ய முடியாது.

தீவிர கமல் ரசிகனாக எனக்கு, "உள்ளே போ..." என்று ரஜினி பேசும் பொழுது விசிலடிக்கத் தோணும்.



10. அன்பே சிவம் (2003):

"யார் யார் சிவம்.. அன்பே சிவம்.. ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும், நாத்திகம் பேசும் நல்லவருக்கு அன்பே சிவமாகும்" என்று வரும் பாடலில் தான் எத்தனை அர்த்தம்?

"தீவிரவாதிக எல்லாம் என்னை மாதிரி கோரமா இருக்க மாட்டங்க. (மாதவனை நோக்கி) உங்களை மாதிரி நல்ல ஸ்மார்ட்டாத் தான் இருப்பாங்க!!" என்று மாதவனிடம் பேசும் இடத்திலிருந்து..

தன் பெயர் ஏ.அரஸ் என்று கூறும் மாதவனிடம்.."அன்பு உங்களுக்குப் பிடிக்காதா?" 

"சோவியத் யூனியன் தான் உடைஞ்சிருச்சே.. இன்னும் ஏன் கம்யூனிசம்னு அலையறீங்க...?" என்று கேட்கும் மாதவனிடம்.."தாஜ்மஹால் இடிஞ்சு போச்சுன்னா.. காதலே இல்லைன்னு சொல்லீருவீங்களா?"

"எனக்குத் தெரிஞ்சு நீங்க தான் கடவுள்... ஒருத்தனைக் கொல்லனும்னு வந்துட்டு.. கொல்லாமப் போகனும்னா எவ்வளவு பெரிய மனசு வேணும். நீங்க தான் கடவுள்.."

என்று படம் முழுக்க வரும் வசனங்கள்... முத்துக்கள்

ரயில் எவ்வளவு நிமிடம் நிற்கும் என்பதற்கு "டு டு டு டு டு டு... " என்ற (1:58 - 2:02) வசனம். "யாரு சார் அது.. சும்மா.. சரஸ்.. சரஸ்.."என்று படம் முழுக்க வரும் வசனங்களில் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை!!

"எந்நாடுடைய சிவனே போற்றி"என்று பாடும் நாசர், கிரன், மாதவன், முகத்தில் உள்ள தழும்பையும் நடிக்க வைத்த கமல், உமா ரியாஸ், சந்தான பாரதி என அனைவரின் நடிப்பும் அருமை. 

இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது தன்னம்பிக்கை உணர்வு ஏற்படுவது இயல்பு!!

o

எனக்குப் பிடித்த படங்களை கொஞ்சம் பெரியதாகவே பட்டியலிட்டுள்ளேன். இதைத் தொடர நான் அழைப்பது...


நன்றி!!
o

Friday, April 9, 2010

கண்ணு!! வீட்டுல ஏதாவது விசேஷம் உண்டா?

"வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணம் பண்ணிப் பார்!!" என்னும் சொலவடை நம் ஊரில் மிகவும் பிரபலம். அதிலும் திருமணம் செய்வதில் சந்திக்கும் சிக்கல்கள், அனுபவங்கள் ஒரு நிறுவனத்தை நடத்துவதில் கூட கிடைக்காது. புதிதாக ஒரு குடும்பத்துடன் உறவு, உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் திருப்திப்படுத்துவது, நேரமின்மையால் சிலரை நேரில் அழைக்க முடியாமல் போவது, யாருக்கு முதன் மரியாதை செய்வது என்று எண்ணற்ற சிக்கல்கள்!! மேலும் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பழக்க வழக்கங்களால் வரும் குழப்பங்களும் சேர்ந்து கொள்ளும்! இங்கே பணத்தால் வரும் மன உளைச்சல் வேறு!!

இப்படி பல குழப்பங்கள், மன உளைச்சல்களைச் சந்தித்து திருமணம் முடிந்து "அப்பாடா.. !!" என்ற தம்பதியினர் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்த சில மாதங்களில் அடுத்த கேள்வி ஆரம்பித்துவிடும்

கண்ணு!! ஏதாவது விசேஷம் உண்டா?

"நம்ம இராமசாமி மவனுக்குப் போன வைகாசில தான் கல்யாணம் ஆச்சு! இந்த வருஷம் மாசில குழந்தை பிறந்திருச்சு"

"அந்தந்த நேரத்துல நடக்க வேண்டியது நடந்துறனுங் கண்ணு"

இன்னும் எத்தனையோ விதமான கேள்விகள், கோரிக்கைகள் திருமணமான சில மாதங்களிலேயே! முந்தைய தலைமுறையினர் தங்களது முதலாம் மண நாளில் குழந்தையுடன் இருந்தது தான் இந்தக் கேள்விகள், பேச்சுகளுக்குக் காரணம்!!

ஆனால், நம் தலைமுறையினரோ சில மாதங்கள், வருடங்கள் கழித்து குழந்தையைப் பற்றி யோசிக்கலாம் என்று இருந்துவிடுகி(றோம்)றார்கள்!! ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும், இப்பொதுதே எதற்கு? நமக்கு என்ன வயதாகிவிட்டது? மேற்கத்திய நாடுகளில் நாற்பது வயதிகளிலும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்களே, நம் இருவரின் வேலையிலும் முன்னேற்றம் அடைந்த பிறகு பார்த்துக் கொள்ளலம் போன்ற எண்ணங்கள் தான் குழந்தைப்பேறை தள்ளிப்போடுவதற்கான காரணங்கள்!!

இவர்களுள் பெரும்பாலானோர் DINK  டபுல் இங்கம் நோ கிட்ஸ் என்ற நிலையில் அடங்குவர்!!


தம்பதியினர் இருவருக்கும் நல்ல வேலை, நல்ல சம்பளம், நேரமின்மை, பொறுப்பை ஏற்க பயம் போன்றவை DINK வாழ்க்கைமுறையைக் கொண்டிருப்போரின் குணாதிசயங்கள். முந்தைய தலைமுறையினர்க்கு அளவான சம்பளம், போதிய ஓய்வு எல்லாம் இருந்ததால் குழந்தைகளைப் பராமரிக்க முடிந்தது. ஆனால இன்றோ, அலுவலகத்தில் 10 முதல் 16 மணி நேரம் வரை செலவழிக்க நேர்வதால் தகுந்த நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது!!

DINK நிலைக்கு, மேற்கத்திய கலாச்சாரத்தை நோக்கிய நம் வாழ்க்கை முறையும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை. 30களில் திருமணம் செய்துகொள்வதும், நாற்பதுகளில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதும் மிகவும் சாதாரணமான விசயம். குழந்தைகள் பதின்ம வயதைக் கடந்துவிட்டால், கண்டுக்க வேண்டியத் தேவையில்லாத சமூக நிலை மேற்கத்திய நாடுகளில்!! ஆனால் நமக்கோ, குழந்தைகளின் திருமணம் வரை பயணிக்க வேண்டியுள்ளது.

o

திருமணமாகி சில வருங்களுக்கு DINK வாழ்வியல் முறையில் இருப்பவர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கும் பொழுது தான் காத்திருக்கிறது அதிர்ச்சி!!

தம்பதியினருள் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமே குழந்தை பெற்றுக் கொள்வதில் குறைபாடுகள் இருப்பது இன்று பரவலாகப் பார்க்க முடிகிறது. அலுவலகத்தில் அதிக நேரம் செலவழிப்பது, மன அழுத்தம், போதிய தூக்கமின்மை, நல்ல ஆரோக்கியமான உணவுப்பழக்கம் இல்லாதது போன்ற காரணங்களால் பிரச்சனைகள் வருவது அதிகரிப்பதற்கு மகப்பேறு மருத்துவமனைகளில் காணப்படும் கூட்டமே சாட்சி!!

அந்த நேரம் பார்த்து தொலைக்காட்சியில் தோன்றி பயமுறுத்தும் போலி சித்த வைத்தியர்களும், பெற்றோர்கள், உறவினர்கள் கொடுத்த அறிவுரைகளும் நினைவிற்கு வருவது வேடிக்கையானது.

o

DINK வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது என்று முடிவெடுக்கும் முன்பு "தங்கள் உடல் நலம் நன்றாக இருக்கிறதா? குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதியுடன் இருக்கிறோமா?" என்பதை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் தேவையான ஒன்று!!



நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையில் ஒவ்வொரு விசயத்திற்கு ஒவ்வொரு அர்த்தம் இருந்திருக்கிறது. திருமண வாழ்வில் தம்பதியினர்க்குள் சில மனக்கசப்புகள், உறவில் விரிசல்கள் ஏற்பட்டாலும் அதை ஒட்டவைக்கும் பசையாக இருப்பது குழந்தைகளே என்பதை நம் முன்னோர் அறிந்து வைத்திருக்கின்றனர்.

இன்றைய வாழ்வியல் முறையில், முன்னோர் போல வாழ முடியாவிட்டாலும, அவர்களிடம் இருந்து சில படிப்பினைகளை எடுத்துக்கொள்வதில் தவறில்லையே!! எல்லாவற்றிற்கும் மேலாக..

"குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்"

என்பதை நம் முன்னோர்கள் அனுபவித்ததால் தான்.. நம்மிடம் கேட்கிறார்கள் "ஏதாவது விசேஷம் உண்டா?" என்று!!

ooo

Sunday, April 4, 2010

ஆப்பிள் "ஐ-பேட்"ம் - புலிகேசியும் மங்குனியும்!!




அமெரிக்காவில் உள்ள நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்த "ஐ-பேட்" அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க ஆரம்பித்துள்ளது. முன்பதிவு செய்திருந்த 5 லட்சம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கும் ஏப்ரல் இரண்டாம் தேதி கிடைத்துள்ளது - செய்தி!!

இதைப் படித்த யோக்கியர்கள் கட்சித் தலைவர் புலிகேசி தன் கட்சிச் செயலாளர் மங்குனியை அழைக்கிறார்...

புலிகேசி: எங்கே சென்றீரைய்யா நீர்? எவ்வளவு நேரம் உன்னைத் தேடுவது?

மங்குனி: என்ன ஆச்சு தலைவரே? நீங்கள் ஆட்சி அமைப்பது போல கனவு ஏதாவது கண்டீரா?

புலிகேசி: ம்ம்ம்... என்னை "மன்னர் மன்னா"வென்று கூப்பிடுமாறு எத்தனை முறை கூறியுள்ளேன்.. உன்னை..

மங்குனி: (இதுக்கு ஒன்றும் குறைச்சலில்லை) மன்னித்துவிடுங்கள் மன்னர் மன்னா?

புலிகேசி: இன்று செய்தித்தாளைப் பார்த்தாயா மங்குனி?

மங்குனி: என்ன மன்னா? நீங்கள் நடிகை சரசாவோடு ஜல்சா பண்ணியது வெளியாகிவிட்டதா?

புலிகேசி: சே.. சே... நல்ல விசயம் சொல்ல வந்தால் சரசா.. கிரசானுட்டு... இன்றைய செய்தித் தாளில் அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனம் ஐ-பேட் என்னும் கருவியை வெளியிட்டுள்ளது. அதைப் பார்த்ததால் தான் கூப்பிட்டேன்..

மங்குனி: ஐ-பேட் என்றால் கிண்டில்(KINDLE)ற்குப் போட்டியாக வந்துள்ளதே அதுவா?

புலிகேசி: என்னய்யா? என்னப் பார்த்துக் கிண்டல் நக்கல் என்றெல்லாம் பேசுகிறாய்?

மங்குனி: இல்லை மன்னா.. ஆப்பிள் நிறுவனத்திற்கு எப்படி "ஐ.பேட்"டோ, அமேசான்(AMAZON) நிறுவனத்திற்கு கிண்டில். சரி.. நமக்கும் ஐ-பேட்டிற்கும் என்ன சம்பந்தம்? அரசியல்வாதிக்கும் நேர்மைக்கும் உள்ள சம்பந்தம் போல...??

புலிகேசி: ம்ம்ம்... உன்னை தலைகீழாகக் கட்டிவிட்டால் தான் சரியாக வருவாய்... கேளும்..

மங்குனி: ??

புலிகேசி: இந்த 'ஐ.பேட்'ஐ செய்தித்தாளாகவோ, புத்தகமாகவோ பயன்படுத்திக்கொள்ளலாமாம்..

மங்குனி: ஆ மன்னா புரிந்துவிட்டது. இந்த 'ஐ-பேட்'ஐ வைத்துப் படித்து நீங்கள் "டாக்டர்" பட்டம் வாங்கிவிடலாம்!! அருமையான யோசனை!!

"பொளீர் பொளீர்"ரென மண்டையில் மங்குனியைக் குட்டிவிட்டு..புலிகேசி தொடர்ந்தார்..

புலிகேசி: சென்ற தேர்தலில் போது அ.ஆ.இ.ஈ.கட்சி... வீட்டுக்குவீடு செல்போன் கொடுக்கிறேன் என்று கூறி "ஆச்சி"யை.. சே.. "ஆட்சி"யைப் பிடித்தார்கள் அல்லவா? அது போல.. இந்த தேர்தலிற்கு நாம் ஒவ்வொரு மாணவருக்கும் "'ஐ-பேட்'ஐ வழங்கிறோம்" என்று அறிவிப்போம்!! எப்படி என் ராஜதந்திரம்?

மங்குனி: (இதுக்கொன்னும் குறைச்சலில்லை) உங்களுக்கு எப்படி இந்த யோசனை வந்தது?

புலிகேசி: கழிவறையில் அமர்ந்து கொண்டு தூங்கிய பொழுது.....

மங்குனி: (ஆரம்பிச்சிட்டார்யா..) அது சரி மன்னா.. இதனால் நமக்கென்ன பலன்?

புலிகேசி: சரியான மங்குனி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீரய்யா நீர்!! இப்பொழுதெல்லாம் மக்கள், என்ன இலவசமாகக் கொடுக்கிறோம்  எவ்வளவு பணம் கொடுக்கிறோம் என்பதைப் பார்த்துத் தான் ஓட்டே போடுகிறார்கள்!! அதற்காகத் தான் இந்த ஏற்பாடு!!

மங்குனி: அத்தனை "ஐ-பேட்"ஐ இலவசமாக எப்படி வழங்குவீர்கள்?

புலிகேசி: அதற்கும் யோசனை உள்ளது. மத்திய அரசு "பள்ளிக்கல்வியை அடிப்படை உரிமையாக்கும்" சட்டம் போட்டுள்ளது. இப்பொழுது எப்படி மாயாவதி பணம் இல்லை என்கிறாரோ, அதே போல நாமும் கூறி பணம் வாங்கிவிடுவோம். பிறகு ஆப்பிள் நிறுவனத் தலைவர் "ஸ்டீவ் ஜாப்ஸ்"ற்கு காஞ்சிபுரம் அருகில் தொழிற்சாலை அமைக்க 2000 ஏக்கர் இடத்தை 200 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டால் தீர்ந்தது. எப்படி என் திட்டம்?

மங்குனி: மன்னா? காஞ்சிபுரம் அருகே விவசாய நிலங்கள் உள்ளதே.. எப்படி?

புலிகேசி: இந்தப் புலிகேசிக்கு கொடுத்த வாக்கு தான் முக்கியம். விவசாயம்.. மத்ததெல்லாம்.. அப்புறம் தான். 

மங்குனி: மன்னா.. இராஜதந்திரத்தில்.. அ.ஆ.இ.ஈ. கட்சியையே வென்றுவிடுவீர் போல??

புலிகேசி: மங்குனி.. தேர்தலிற்கு முன்பாக நான் ஸ்டீவைச் சந்திக்க வேண்டும். ஏற்பாடு செய்!!

மங்குனி: ஸ்டீவ் எங்கே.. நாம் எங்கே? இன்னும் ஆட்சிக்கே வரவில்லை. எதற்காக ஸ்டீவ்?

புலிகேசி: விசயம் இருக்குதுய்யா!! அந்த ஆள். 5 லட்சம் பேருக்கும் 'ஐ-பேட்'ஐ.. வீட்டிற்கே சென்றடையும் படி செய்திருக்கிறார். அது எப்படின்னு தெரிஞ்சுகிட்டா..

மங்குனி: புரிஞ்சிடுச்சு! தேர்தல்ல தோத்துட்டா அவர் கம்பெனி பொருட்களுக்கு விநியோகஸ்தர் ஆயிடலாம் தானே? நல்ல யோசனை!!

திரும்பவும்.. "பொளீர் பொளீர்"ரென மங்குனியின் மண்டையில் அடித்துவிட்டு..

புலிகேசி: தேர்தலின் போது.. வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்யும் பணத்தில் பாதியை கட்சிச் செயலாளர்களே சுருட்டிவிடுகிறார்களாம். இவரிடம் தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொண்டால்.. ஒற்றைச் சாளர முறையில் (Centralised Distribution System ) பணத்தைப் பட்டுவாடா செய்துவிடலாம்.. எப்படி?

மங்குனி: (ம்ம்ம்ம்... நமக்கிருந்த ஒரு வாய்ப்பும் போய்விடும் போலிருக்கே...)

புலிகேசி: நீ என்ன யோசிக்கிறாய் என்று புரிகிறது மங்குனி!! முதலில் ஸ்டீவ் ஜாப்ஸை என்னிடம் பேசச்சொல்..

........


ஸ்டீவ் ஜாப்ஸிடம்.. தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற மங்குனிக்குக் கிடைத்த செய்தி.. திடுக்கிடச் செய்தது..

மங்குனி: மன்னா... தொலைக்காட்சியில் வரும் சூடான செய்தியைப் பார்த்தீர்களா?

புலிகேசி: நம்மிடம் ஸ்டீவ் பேசுப்போவது அதற்குள்ளே செய்தியாகிவிட்டதா?

"காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை அமைப்பதைப் பற்றி அ.ஆ.இ.ஈ கட்சித் தலைவர் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸுடன் ஆலோசனை"..

புலிகேசி:??????

o

Saturday, April 3, 2010

பையா கார் லிப்ட்டும் பூனா கேங்-ரேப்பும்!!

வியாழக்கிழமை மதியமானால் ஷார்ஜா - கன்கார்டு திரையரங்கிற்குப் போன் செய்து "ஏதாவது தமிழ்ப் படம் வெளியாகியுள்ளதா?" என்று கேட்பது வாடிக்கையாகியுள்ளது. அது போல இந்த வாரம் கேட்டபொழுது வியாழன் முதல் மதியம், இரவு என இரண்டு காட்சிகளாக "பையா" வெளியாகியுள்ளது என்றனர். நான் கடைசியாக திரையரங்கில் பார்த்த படம் "ஆயிரத்தில் ஒருவன்". கார்த்தியின் நடிப்பின் மேல் உள்ள எதிர்பார்ப்பால் இந்தப் படத்தையும் பார்ப்பதென்று முடிவெடுத்திருந்தேன்.

நேற்று மாலை திரையரங்கிற்கு சென்று நுழைவுச்சீட்டை வாங்கி உள்ளே சென்றேன். படம் போட சில நிமிடங்கள் இருந்ததால் வலையில் என்ன நடக்கிறதென்று அலைபேசி(??) மூலம என்.டி.டி.வி(NDTV)யின் செய்தித்தளத்தில் உலாவ ஆரம்பித்தேன். பளீரென்று தெரிந்தது அந்த செய்தி!! 

"பூனாவில் 25 வயது எம்.பி.ஏ பட்டதாரிப் பெண் நான்கு பேரால் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்" என்ற செய்தி தான் அது!!

ஒரு மாத காலமாக பூனாவில் வசித்து வரும் இந்தப் பெண், ஐ.டி. நிறுவனமொன்றில் நேர்முகத் தேர்விற்காகத் தயாராகியிருக்கிறார். 25 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் ஐ.டி.பூங்காவிற்குச் செல்ல வேண்டியவர். தான் இருக்குமிடத்தில் இருந்து மதிய நேரத்தில் போதிய பேருந்து வசதியில்லாததால், ஏதாவது டாக்ஸி, அல்லது "கார்-லிப்ட்" மூலம் செல்வதாகத் திட்டம். நீண்ட நேரம் நின்றிருந்தவர்க்கு நான்கு பேர் கொண்ட கும்பல் "லிஃப்ட்" கொடுத்திருக்கிறது.

பிறகு நடந்தது தான் கோர சம்பவம்!!


அந்தப் பெண்ணிற்கு நேர்ந்திருக்கும் துயரை வார்த்தைகளால் மருந்திட முடியாது!! ஆனால், சமூகத்தின் மீதும் கோபப்படாமலும் அந்தப் பெண்ணின் மீதும் வருத்தப்படாமலும் இருக்க முடியவில்லை!!

இந்தியத் தொழில்துறை நகரங்களில் பூனாவிற்கு என்று தனியிடம் இருக்கத்தான் செய்கிறது. மும்பைக்கு மிக அருகில் இருப்பது, கோடிக்கணக்கில் முதலீடுகளைக் கொட்டும் பன்னாட்டு நிறுவனங்கள் என்று பூனாவைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், போதிய வசதிகள் இல்லாமல் தொழில்துறையில் முன்னேறி என்ன பயன்? யாருக்குச் செல்கிறது இந்தப் பணம்? மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது போக்குவரத்து வசதிகளுள் தமிழகம் பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும். இரவு பத்து மணிவரை கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் என எங்கும் ஓரளவு பேருந்து வசதியிருக்கத்தான் செய்கிறது!! பூனா ஐ.பி.எல். அணியை விலை கொடுத்து சஹாரா நிறுவனம் வாங்கியிருக்கும் தொகையை நினைத்தால் ............ 

ஒரு நிறுவனத்தில் இன்ன நேரத்தில் நேர்முகத் தேர்வென்றால், முன்னரே எப்படிச் செல்லப் போகிறோம்? போக்குவரத்து வசதிகள் எப்படி? என்றெல்லாம் யோசித்து முன்னேற்பாடு செய்ய வேண்டாமா? புதிதாக ஒரு நகரத்திற்கு செல்கிறோம் என்றால் அந்நகரம் எப்படிப் பட்டது? அந்நகரின் பாதுகாப்பு வசதிகள் எப்படி இருக்கிறது என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? பிறகு படித்து என்ன பயன்?

இங்கே காட்டுமிராண்டிகளைப் பற்றிக் கூற ஒன்றுமில்லை!! சட்டம் தன் வேலையைச் செய்யும் :((

o

பையாவைப் பற்றி எழுத ஆரம்பித்து எங்கோ சென்றுவிட்டேன்!! பையா படம் போடும் வரை என் மனதில் ஓடிய எண்ணங்கள் தான் மேலே குறிப்பிட்டவை!!

பையா படம் ஆரம்பித்தது..


படத்தின் ஆரம்பித்திலேயே கார்த்தி தமன்னாவைப் பார்த்துவிட்டு காதல் வயப்படுகிறார். தன் நண்பன் ஒருவரை ரயில் நிலையத்தில் அழைக்கச் சென்ற கார்த்தியிடம் ரயிலைத் தவற விட்ட தமன்னா சென்னை வரை லிஃப்ட் தர முடியுமாவென்று கேட்கிறார். பிறகு தமன்னா, அவருடன் வந்த நபரை கழட்டிவிட்டு விட்டு மும்பைக்குக் காரை ஓட்டச் சொல்கிறார். கார்த்தியும் தமன்னாவை மும்பை அழைத்துச் செல்கிறார்!!

எனக்கு ராம்கோவால்வர்மா இயக்கிய ROAD படம் நினைவில் வர ஆரம்பித்தது. விவேக் ஓபராய் தன் காதலி அந்தரா மாலியுடன் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது, லிஃப்ட் கேட்கும் மனோஜ் பாஜ்பாய், விவேக் ஓபராயை காரிலிருந்து இறக்கிவிட்டு விட்டு அந்தரா மாலியை கடத்திச் செல்வது போல படம் செல்லும். நல்ல விறுவிறுப்பான படம்!! 

பையா படத்தில் தமன்னா கார்-லிஃப்ட் கேட்பது என்னவோ ஹீரோ கார்த்தியிடம்!! ஆகவே பூனாவில் நடந்தது போல (??) எல்லாம் நடக்காமல் படம் கார் ரேஸ், காதல், சண்டைகள், குளுகுளு ஒளிப்பதிவு, இனிமையான இசை என செல்கிறது! லாஜிக் பார்க்காதவர்கள் ஒரு முறை பார்க்கலாம்!!

o

ஆனால் தோழிகளே, தோழர்களே (இந்தக் காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்), தமன்னா கார்த்தியிடம் கார் லிஃப்ட் கேட்டுச் சென்றதைப் போலெல்லாம் செல்லும் முன்பு கொஞ்சம் யோசியுங்கள்!! உங்கள் தற்காப்பு நிலை என்னவென்று!! டீசண்டாக, நல்ல ஸ்மார்டாக இருக்கிறார் என்றெல்லாம் யாரையும் நம்பி விடவேண்டாம். அதெல்லாம் சினிமாவில் மட்டும் தான்!!

"தீவிரவாதிக எல்லாம் என்னை மாதிரி கோரமா இருக்க மாட்டங்க. (மாதவனை நோக்கி) உங்களை மாதிரி நல்ல ஸ்மார்ட்டாத் தான் இருப்பாங்க!!" என்று அன்பே சிவம் படத்தில் தலைவர் கூறும் வசனம் தான் நினைவிற்கு வருகிறது இன்னேரத்தில்!!

o

பையா விமர்சனம் என்று நினைத்து வந்தால் "ராவித் தள்ளறாண்டா" என்று நினைப்பவர்களுக்கு ஒரு சின்ன :((

o

Friday, April 2, 2010

நோக்கியா ஸ்போர்ட்ஸ் டிராக்கருடன் ஒரு காலைப்பொழுது..

நீங்கள் தினமும் நடைப் பயிற்சி மேற்கொள்பவரா? நீங்கள் எத்தனை தூரம் நடந்தீர்கள், எவ்வளவு சக்தியை எரித்தீர்கள் என்று தெரிய வேண்டுமா? எனது அனுபவத்தை மேலும் படியுங்கள்...



o
அமீரக மக்களுக்கு வெள்ளிக்கிழமை சற்று தாமதமாகத் தான் துவங்கும். வியாழக்கிழமை நள்ளிரவு வரையிலும் நண்பர்களுடன் உலாவுவது, துரித உணவுகளில் சாப்பிடுவது என வெளியில் சுற்றுவது அமீரக மக்களின் வாடிக்கை. அதனால், வெள்ளிக்கிழமை காலைப் பொழுதுகளில் சாலைகள், பூங்காக்கள், கடற்கரைகள் என எங்கும் ஆளில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும்!! அமைதியாக இருக்கும் காலைப்பொழுதுகளில் நடைப்பயிற்சியை மேற்கொள்வது எனக்கு வாடிக்கை!! வார நாட்களில் ஓரிரு நாட்கள் நடைப்பயிற்சி செய்ய முடியாமல் போனாலும், வெள்ளி சனிகளில் தவறுவதில்லை!!

அமைதியான காலையில் எத்தனை விதமான மக்கள்! எவ்வளவு அழகான காட்சிகள்!!

ஈச்ச மரங்களின் நடுவே யோகாசப் பயிற்சியை மேற்கொள்ளும் இந்திய அன்பர்கள், நடைப்பயிற்சி செய்யப் போனாலும் நெற்றியில் திருநீறு அல்லது பெண்களென்றால் குங்குமப் பொட்டு வைத்துச் செல்லும் நம்மவர்கள், நேற்றிரவு தூங்கவில்லையோ என்று நினைக்கும் அளவிற்கு சோர்வுடன் காணப்படும் ஃபிலிப்பினோ ஜோடி. அதிகாலை ஏழு மணிக்கே KFC வறுத்த கோழியை நொறுக்கிக் கொண்டிருக்கும் அன்பர்கள், நடந்து கொண்டிருக்கும் பொழுது என்னையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்களே என்று நினைக்கும் பொழுதே என் பின்னாலிருந்து கடந்து செல்லும் ஐரோப்பியப் பெண் என பல தரப்பட்ட மக்கள்!!

இப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வதைப் பற்றியும், நாம் செல்லும் வழியைப் பற்றியும், பார்த்த விசயங்களைப் பற்றியும் நண்பர்களுக்குப் பகிர்ந்தால் நன்றாகத் தானே இருக்கும்!!

நாம் தினமும் மேற்கொள்ளும் பயிற்சியையும், பயிற்சியால் நாம் எரிக்கும் சக்தியையும், நாம் நடந்து சென்ற பாதையையும் வரைபடத்தில் காணும் வாய்ப்பை வழங்குவதே நோக்கியா ஸ்போர்ஸ் டிராக்கர் (Nokia Sports Tracker ) செயலியின் வேலை!! 



நடை பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்பு நம் செல்போனில் உள்ள GPSயைத் துவக்க வேண்டும். GPS வசதி செயல்பட ஆரம்பித்தவுடன் நாம் இருக்கும் இடத்தில் வரைபடம் தெரிய ஆரம்பிக்கும். பிறகு நாம் நடைப்பயிற்சியை தேர்ந்தெடுத்து நடக்க ஆரம்பிக்க வேண்டியது தான். நாம் நடக்கும் அல்லது ஓடும் பாதையே தொடர்ந்து கொண்டே வரும் இந்த செயலி. இந்த வரைபடங்களில் உள்ள தூரத்தைக் கணக்கில் கொண்டு நாம் எவ்வளவு கிலோ மீட்டர் நடந்திருக்கிறோம், எவ்வளவு சக்தியை எரித்திருக்கிறோம் என்றெல்லாம் கணக்கை நமக்குத் தருகிறது.

அது மட்டும் தானா?

நீங்கள் நடக்கும் பொழுது எடுத்த புகைப்படங்களையும், கேட்ட பாடல்களையும் இந்த செயலி சேமித்து வைக்கிறது. நடைப் பயிற்சியை முடித்த பிறகு நோக்கியா ஸ்போர்ஸ் டிராக்கர் தளத்திற்கு தரவேற்றம் செய்யலாம்.

மேலும் வேறென்ன வசதியுள்ளது இந்த சேவையில்?

நடக்கும் பொழுதும், ஓடும் பொழுதும் தான் நம் இதயத் துடிப்பைக் கவனிக்கத் தகுந்த நேரம். நம் இதயத் துடிப்பையும் இந்த செயலியின் மூலம் அளவிட முடியும். இதயத் துடிப்பு கச்சை(Heart Beat Belt) ஒன்றை நம் நெஞ்சில் கட்டிக்கொண்டு, புளுடூத் (Bluetooth) மூலம் செல்போனில் இணைத்தால் போது, நம் இதயத் துடிப்பும் சோதனையிடப்படும்!!

இன்று காலை நான் மேற்கொண்ட நடைப் பயிற்சியின் சுட்டி இங்கே... ஷார்ஜ புஹைராவில் இருக்கும் என் வீட்டில் இருந்து கிளம்பி புஹைரா கார்னிஷில் நடந்தேன். ஒரு மணி நேரத்தில் ஆறு கிலோமீட்டர் நடந்துள்ளேன். நான் கொடுத்த சுட்டியில் உள்ள காமிராவை அழுத்தினால் நான் எடுத்த படங்கள் தெரியும். 



இந்த சேவையை ஜி.பி.எஸ் வசதி கொண்ட அனைத்து நோக்கிய செல்போனிலும் மேலே கொடுத்துள்ள தளத்தில் இலவசமாகப் தரவிறக்கிக் கொள்ளலாம்.

இத்தனை காலமாக நடக்கும் பொழுது இதையெல்லாம் பயன்படுத்தியா வந்தோம்? உண்மை தான். இலவசமாக கிடைக்கும் சேவையைப் பயன்படுத்துவதில் தவறில்லையே. நடக்கச் சோம்பேறித்தனப்படும் அன்பர்களை இப்படியாவது ஊக்கப்படுத்தினால் நல்லது தானே?

குறிப்பு: படங்களைத் தரவேற்றும் பொழுது ஆப்பரேட்டர் கட்டணம் கட்டவேண்டியதிருக்கும் என்பதை நினைவில் கொள்க!!

Related Posts with Thumbnails