Wednesday, September 29, 2010

ஊடகங்கள் + காமன்வெல்த் போட்டிகள்!!

இன்று உங்கள் மனத்திரையை ஆக்கிரமித்துள்ள விசயங்கள் எவையவை? அவற்றுள் எத்தனை சதவிகிதம் ஊடகத் திணிப்பால் மனதினுள்ளே புகுந்துள்ளன? 


இன்றைய ஊடகங்கள் நம் மனத்திரையைக் ( Mind share) கைப்பற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இல்லாதவற்றை இருப்பதாகக் காட்டுவது, இருப்பதன் தன்மையை வேறுமாதிரியாக மனதில் பதிய வைப்பது, செய்திகளில் சிலவற்றை மட்டுமே வெளிச்சம் போட்டுக்காட்டுவது என்று ஊடக நுகர்வோரை எப்படியெல்லாம் வேப்பிலை அடிக்க வேண்டுமோ.. அதைக் கச்சிதமாகச் செய்து வருகின்றன.

ஊடகங்கள் எந்த அளவிற்கு நம் கருத்தைத் தீர்மானிக்கின்றன?

பெருமளவு நம் கருத்தை ஊடகங்களே தீர்மானிக்கும் நிலை தான் இன்று நிலவுகின்றன. எந்த அமைப்பு, கட்சி சார்புடைய ஊடகங்களை நாம் பார்க்கிறோமோ படிக்கிறோமோ, அதில் வரும் கருத்துகளே நம் மனதிலும் நிற்கின்றன. சிலர் மாற்றுக் கருத்தைக் கூறும் ஊடகங்களைப் படிப்பதையும் விரும்புவதில்லை என்பது தான் உண்மை. உதாரணத்திற்கு பிபிசியையோ, சி.என்.என்னை மட்டுமோ பார்த்து வருபவர்களுக்கு அமெரிக்கப் படைகள் ஆப்கனில் சேவையாற்றி வருவதாகத் தோன்றும். ஒரு முறை அல் ஜசீராவைப் பாருங்கள். மறுபக்கத்தையும் காட்டுகிறார்கள். 

இந்திய ஊடகங்களைப் பொருத்த வரை காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கம். மேற்கத்திய ஊடகங்களைப் பொருத்த வரை இந்தியாவால் நிர்மானிக்கப்படும் காஷ்மீர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இதுவே வளைகுடா ஊடகங்கள் என்றால்.. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்தியக் காஷ்மீர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். இம்மூன்று ஊடகங்களைப் பார்த்து வருபவர்களுக்கு ஒவ்வொருவருடைய நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள முடிகிறது. வரலாற்று அறிவோ, அரசியல் புரிதலோ இல்லாதவர் ஏதாவது ஒரு ஊடகத்தை மட்டும் படித்து வந்தால் என்ன மாதிரியான கருத்துகள் மனதில் பதியும்?

நடுநிலை அல்லது சார்பற்ற ஊடகங்களை இன்று எங்கு தேடினாலும் காணமுடிவில்லை. ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு விசயத்திலும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு மாற்றுக் கருத்தை இருட்டடிப்பு செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன. நடுநிலையாகச் செய்திகளைத் தருவதாகப் புரிந்துகொள்ளப் பட்ட ஆங்கிலச் சேனல்களும் 'பரபரப்பை ஏற்படுத்தும்' விசயங்களை பரபரப்பு எற்படுத்தும் விதத்திலேயே தருவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன.

காமன்வெல்த் போட்டிகள் பற்றிய செய்திகளைப் பார்த்தால் சர்வதேசப் போட்டிகளை நடைபெறுவதற்கே ஒவ்வொரு இந்தியரும் தலைகுனிய வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கத் தவறவில்லை. இங்கே இடிந்துவிட்டது, அங்கே வழுக்கிவிட்டது என்ற தோரணையிலேயே செய்திகளைத் தரும் வேளையில் நிறைகளைப் பற்றிய செய்திகளை எங்கேயும் காணவில்லை. உண்மை தான். பெருத்த ஊழல் நடைபெற்றிருப்பதற்கான அறிகுறிகள் பலவும் தெரிகின்றன. ஆனால், குறைகளை மட்டுமே காட்டும் வேளையில் சர்வதேசப் போட்டிகளை பார்த்துரசிக்க எண்ணும் ரசிகர்களை விளையாட்டு மைதானத்திற்கு வெளியிலேயே நிற்க வைக்க விருப்புகின்றனவோ ஊடகங்கள்!!
இந்தியாவில் கடைசியாக சர்வதேச அளவில் தடகளப்போட்டிகள் நடைபெற்றது 1982 ஆசியப் போட்டிகளில். கடந்த 30 ஆண்டுகளாக இத்தகைய அளவில் போட்டிகள் நடைபெறாத பொழுது, இப்பொழுது நடைபெறுவது குறைந்தது தில்லியைச் சுற்றியுள்ள மக்களுக்கு நல்ல அனுபவமாகத் தானே இருக்கும்.
இந்திய மக்களில் 40% சதவிதத்தினர் வறுமைக்கோட்டிற்குக் கீழே இருக்கும் பொழுது இப்படி ஒரு போட்டிகள் தேவையா? என்ற கேள்வி வராமல் இல்லை. ஆனால் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டியது ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு.
மீண்டும் மீண்டும் இந்தியாவைப் பற்றியும் தடகளப் போட்டிகளைப் பற்றியும் இந்திய ஊடகங்கள் குறை கூறும் பொழுது எப்படி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருவார்கள்? கடந்த சில வாரங்களாக அமீரகத்தில் உள்ள செய்தித்தளங்கள் அனைத்தும், இந்திய ஊடகங்களை மேற்கோள் காட்டி, போட்டிகளையும் இந்தியாவையும் கிண்டல் செய்து வருகின்றன.
இன்னும் சில நாட்களே இருக்கின்றன போட்டிகள் ஆரம்பிக்க. இதற்கு மேல் தூற்றி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஊழல் செய்தவர்களைக் கட்டாயம் (??) சட்டம் (வேடிக்கை) பார்த்துக் கொள்ளும்.
ஆகவே போட்டிகள் தொடர்பான நல்ல விசயங்கள் என்னவென்று பார்ப்போம். போட்டிகள் வெற்றியடைய நம் ஆதரவை நல்குவோம்!!
நேரம் இருந்தால் இந்த முகநூல் (Facebook) பக்கத்தில் உள்ள படங்களைப் பாருங்கள்!!  

Sunday, September 12, 2010

போறாளே பொன்னுத்தாயி... - சுவர்ணலதா நினைவஞ்சலி !!

போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்

என்று ஆரம்பித்த சுவர்ணலதாவின் திரையிசை வாழ்க்கை இவ்வளவு சீக்கிரமாக முடிவிற்கு வருமென்று யாரும் நினைத்திருக்க மாட்டோம். என்னுடைய இசைத்தொகுப்பில் சுவர்ணலதாவின் பாடல்களுக்கு என்றுமே தனி இடம் தான். எத்தனை விதமான பாடல்கள்? பாடல்களில் உணர்ச்சிகளை, வேறுபாடுகளை வெளிப்படுத்தியதில் எஸ்.ஜானகிக்கு அடுத்த படியான இடத்தில் இவரை வைப்பேன். 

மாலையில் யாரோ மனதோடு பேச..
மார்கழி வாடை மெதுவாக வீச..

என்ற வரிகளைக் கண்ணை மூடிக் கேட்கும் பொழுது அப்படியே மனதை மயிலிறகால் வருடியதைப் போன்ற உணர்வு வருவதை மறுக்கவே முடியாது. பாடல் வரிகளில் உள்ள தனிமையை அவ்வளவு அழகாக வெளிப்படுத்திய பாடலிது. தூக்கம் வராத பொழுதுகளில் இப்பாடல் தாலாட்டாக இருந்திருக்கிறது.

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்

என்று "வள்ளி" படத்தில் வரும் பாடலில் வெளிப்படுத்திய உணர்வுகளை வேறெந்த பாடலிலும் பெற முடியாது. 

"மாசிமாசம் ஆளான பொன்னு
மாமன் உனக்குத் தானே"

என்ற லேட் நைட் ரகப் பாடலை வெகுநேர்த்தியாகப் பாடியிருப்பார். பாடலிற்குத் தேவையான உணர்வைக் கொண்டுவருவதில் ஜானகிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்று கூறியதும் இது போன்ற பாடல்களை நேர்த்தியாகப் பாடியதால் தான்!!

இளையராஜாவின் இசையில் அறிமுகம் ஆனாலும் அவர் அளவிற்கு ரகுமானாலும் பயன்படுத்தப்பட்ட "ராஜா காலத்துப் பாடகி"யென்றால் சுவர்ணலதாவாகத்தான் இருப்பார். ரகுமானின் ஆரம்பகாலப் படங்களில் இருந்தே ஒவ்வொரு படத்திலும் ஒன்றோ இரண்டோ பாடல்களைப் பாடிவந்தவர்.

இன்றைய இளம்தலைமுறைப் பாடகிகள் மெல்லிசை, உற்சாகமான பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், வேகமான பாடல்கள் என்று ஏதாவதொரு வகையான பாடல்களை மட்டுமே பாடுவதைக் கேட்க முடியும். (சின்மயி இதில் விதிவிலக்கு). ஆனால் குத்துப்பாடல்கள், வேகமான பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், வெஸ்டர்ன், கிளாசிக்கல், ஃபாஸ்ட் நம்பர்ஸ் என எல்லா வகையான பாடல்களிலும் பிரகாசித்தவரென்றால் ஜானகிக்கு அடுத்தபடியாக இவரைத் தான் எண்ண முடிகிறது. இவரை ஆல்ரவுண்டர் என்றால் மிகையில்லை.

"முக்காலா முக்காபுலா " - காதலன்
"உசிலம்பட்டி பெண்குட்டி" - ஜெண்டில்மேன்
"அக்கடான்னு நாங்க எடை போட்டா" - இந்தியன்
"குச்சி குச்சி ராக்கம்மா.. " - பம்பாய்
"மெல்லிசையே.. என் இதயத்தில் மெல்லிசையே" - Mr. ரோமியோ
"உளுந்து விதைக்கையிலே" - முதல்வன்
" ஒரு பொய்யாவது சொல் கண்ணே" - ஜோடி
"பூங்காற்றிலே " - உயிரே.
"குளிருது குளிருது" - தாஜ்மஹால்
"எவனோ ஒருவன்" -அலைபாயுதே

என்று ஒவ்வொரு வருடத்திலும் ஹிட் பாடல்களுக்கு உயிர் கொடுத்து முனுமுனுக்க வைத்தவர்.

"காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்" பாடலில் சுவர்ணலதாவின் வரிகள் வரும் இடங்களில் எல்லாம் உச்சத்திற்குச் சென்று வருவது அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.

ரகுமான், ஒரே படத்தில் வெவ்வேறு விதமான பாடல்களைப் பாட வைத்ததும் இவரை மட்டும் தான் என்று நினைக்கிறேன். ரட்சகன் படத்தில் "மெர்க்குரிப்பூக்கள்" என்ற பெப்பி பாடலைப் பாட வைத்து, "லக்கி லக்கி" என்ற மாறுபட்ட பாடலையும் பாட வைத்தார். இன்று ஓரிரு பாடல்கள் ஹிட் கொடுத்த பாடகிகள் எல்லாம் "ஆஹா ஓஹோ.." என்று பரபரப்பாக வலம்வரும் பொழுது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட வெற்றிப்பாடல்களைப் பாடிய "சுவர்ணலதா"வை உரிய இடத்தில் வைத்திருக்கத் தவறிவிட்டார்களோ(டோமோ)? என்று தோன்றுகிறது. இவரது புகைப்படத்தை கூகுளில் தேடினாலும் ஓரிரு படங்களே கிடைத்தன.

இவரைப் பற்றிய கட்டுரை எழுதலாம் (இவர் இல்லை என்ற பிறகு) என்று பார்த்தால், நான் கவனிக்கத் தவறிய எத்தனையோ பிரபலமான பாடல்களை இவர் பாடியுள்ளது தெரிகிறது.

"ஒரு நாள் ஒரு பொழுது 
உன் மூஞ்சி காண்காம
உசுரே அல்லாடுதே

மறுநா வரும்வரைக்கும்
பசித்தூக்கம் கொள்ளாமல்
மனசு அல்லாடுதே"

என்று "அந்திமந்தாரை"யில் வரும் பாடலைக் கேட்டுப் பாருங்கள்!! பாடலிற்கு இசையே தேவையில்லை என்னும் அளவிற்கு இவரது ஆளுமை இப்பாடலில் தெரியும்.

இளையராஜா, ரகுமான் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல வெற்றிப் பாடல்களைப் பாடியவருக்கு மகுடம் சூட்டியது கருத்தம்மாவில் வந்த போறாளே பொன்னுத்தாயி என்ற பாடலில். இந்தப் பாடலிற்காக தேசியவிருது வாங்கியது அனைவரும் அறிந்ததே. சுவர்ணலதாவைப் பற்றி கட்டுரை எழுத நினைப்பவர்கள் "போறாளே பொன்னுத்தாயி" என்ற வரிகளைக் குறிப்பிடாமல் இருக்கப்போவதில்லை. கருத்தம்மாவில் இப்பாடல் மகிழ்ச்சி, சோகம் என்று இரண்டு முறை வரும். அதில் சோகமான பின்னனியில் வரும் வரைகளைத் தான் இந்தக் கட்டுரையில் குறிப்பிடத் தோன்றுகிறது. 

"போறாளே பொன்னுத்தாயி 
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு"

இன்று சுவர்ணலதா மறைந்துவிட்டாலும், "மாலையில் யாரோ மனதோடு பேச"வும் "மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபமும்" என் அலைபேசியிலும் இசைக்கோப்பிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதனுடன் சுவர்ணலதாவின் நினைவும்!! 

RIP Swarnalatha!!

Saturday, September 11, 2010

நான் ஏன் கமல் ரசிகனாக இருக்கிறேன்?

காய்த்த மரமே கல்லடி படும் என்பது நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் பொருந்தும். தமிழகத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட/ விமர்சிக்கப்படும் நடிகர் என்றால் அது இவராகத்தான் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஆரம்பித்து, சினிமா வாழ்க்கை, அவர் எடுக்கப்படும் சினிமா, அதில் வரும் கருத்துகள் என்று விமர்சனம் செய்யப்படாதவையே இல்லை எனலாம். ஒரு வேளை கமலை விமர்சிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு வித பெருமை வந்துவிடுகிறதோ? எவ்வளவு தான் கமல் விமர்சிக்கப்பட்டாலும், ஒரு நடிகர், திரைத்துறைக் கலைஞர் என்ற விதத்தில் அவரது ரசிகனாகவே இருக்கிறேன்.

ஏன்?

கமலின் நடிப்பை ரசிக்க ஆரம்பித்தது எந்த வயதில் என்று யோசிக்க ஆரம்பிக்கையில் அது அபூர்வ சகோதரர்கள் காலத்தில் இருந்து என்று தோன்றுகிறது. அபூர்வ சகோதரர்களில் குள்ளமாக நடித்ததைப் பார்த்த பொழுது "எப்படிக் குள்ளமாக நடிக்க முடியும்" என்றெல்லாம் யோசித்ததுண்டு. அப்படியே.. சானக்யன், வெற்றிவிழா, இந்திரன் சந்திரன், மைக்கேல் மதன காமராஜன், குணா என்று ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு விதமான மாற்றங்கள். ஒன்று ஒப்பனைகளில் மாற்றம், அல்லது கதையமைப்புகளில் மாற்றம் அல்லது வட்டார வழக்கில் மாற்றம் என்று ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம். கமலின் படங்கள் பிடிக்க ஆரம்பித்த பொழுது மற்ற நடிகர்களின், இயக்குனர்களின் நல்ல படங்கள் மீதான ரசிப்பும் அதிகரிக்க ஆரம்பித்தது. நான் வளர்ந்தது எல்லாம் உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கல்லூரிக் காலம் வரை ஆங்கிலப்படங்கள் என்றால் அது ஜாக்கிசான் நடித்த படங்கள். நல்ல படங்களின் மீதான் ரசனையை வளர்த்தது கமல், மற்றும் சில நல்ல இயக்குனர்களின் படங்கள் தான்!!

உடுமலைப்பேட்டையில் பிற நடிகர்களின் படங்களெல்லாம் 50 நாட்கள், 75 நாட்கள், 100 நாட்கள் என்றெல்லாம் ஓடும் பொழுது கமல் படங்கள் சில வாரங்கள் மட்டுமே ஓடியது, எத்தனையோ முறை சக நண்பர்களின் (கமல் ரசிகன் என்பதால்) எள்ளலிற்கு உள்ளாகியிருக்கிறேன். உடுமலை, பழநி போன்ற நகரங்களில் உள்ள திரையரங்கங்களில் உள்ள 100 நாள் ஓடிய படங்களின் கேடயங்களில் இடம்பெற்ற கமல் படங்கள் என்றால் காக்கிச்சட்டை, சகலகலாவல்லவன் போன்ற படங்கள் மட்டுமே. ஆக, நீண்ட நாட்கள் ஓட வேண்டும் என்றால் படங்களில் நிறைய பாட்டுகள், சண்டைகள், என்ற மசாலாவாக இருக்க வேண்டும் என்பதும் கமலின் பெரும்பாலான படங்கள் இத்தன்மை இல்லாததும் விளங்க ஆரம்பித்தது.ஏன் கமல் படங்களில் சண்டைகள் வருவதில்லை என்றேல்லாம் யோசித்ததுண்டு. அதை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது. 


கேபிள் டிவிகள், தனியார் சேனல்கள் எல்லாம் வர ஆரம்பிக்க கமலின் பழைய படங்களுக்கும் அறிமுகம் கிடைக்க ஆரம்பித்தது. சலங்கை ஒலி, சிகப்பு ரோஜாக்கள், 16 வயதினிலே, நாயகன், வறுமையின் நிறம் சிவப்பு, சிப்பிக்குள் முத்து, மூன்றாம் பிறை, பேசும்படம் என்றெல்லாம் படங்களைப் பார்த்த பொழுது தரமான படங்கள் பலவற்றுள் நடித்து வந்திருப்பதும் தரமான இயக்குனர்கள் தங்களின் தரமான படங்களில் கமலை நடிக்க வைத்திருப்பதும் கவனித்தேன். இதனால் கமல் படங்களின் மீதும் தரமான படங்களின் மீதும் ரசிப்பு மேலும் அதிகரித்தது. அந்த ரசனை கமல் படங்கள் மட்டுமல்லாமல் மற்ற நல்ல படங்களையும் பாராட்டும் பக்குவத்தை ஏற்படுத்தியது.

இப்படி கமல் ரசிகர்களும், தரமான படங்களின் ரசிகர்களும் கமல் படங்களையும், தமிழ்த் திரையுலகிற்கு கமலின் பங்கையும் புகழும் பொழுது, "கமல் நடித்த படங்கள் எல்லாம் உலக சினிமாக்களின் காப்பி தான். அவர் ஒரு காப்பி நடிகர் மட்டுமே. ரசிகர்கள் வியந்து போற்றுவதற்கெல்லாம் தகுதியானவர் இல்லை" என்ற கருத்தை வலைப்பூக்களின் பார்க்கும் பொழுது, அதற்குக் "கமல் ரசிகன்" என்ற முறையில் விடையளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கமலின் தரமான படங்கள் என்று சொல்லப்படும் நாயகன், தேவர்மகன், மகாநதி, குணா, சத்யா, ஹேராம், விருமாண்டி, அன்பே சிவம் போன்ற படங்களெல்லாம் ஆங்கிலப்படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. நகைச்சுவைக்குப் பெயர் போன சதிலீலாவதி, மகளிர் மட்டும், பஞ்சதந்திரம் போன்ற படங்களும் சுடப்பட்டவை என்று கூறப்படுகிறது. 

இதற்கு பதில் சொல்வதற்கு முன்பு Product Creation பற்றி சில கருத்துகள்..

ஒரு பொருளை (Product) உருவாக்குவதற்கு முன்பு அப்பொருள் எந்த சந்தையில்(Market) வெளியிடப் போகிறோம், அச்சந்தையின் மக்கள் எப்படிப்பட்டவர்கள் (Demographics), அந்த சந்தையில் என்ன மாதிரியான பொருட்கள் எல்லாம் உள்ளன (Market Survey), அச்சந்தையின் தேவை என்ன ( Market Needs), பொருளைச் சந்தைப்படுத்தும் பொழுது எப்படி மாறுபடுத்தப் போகிறோம் ( Product Differentiation) என்றெல்லாம் ஆராய்ந்து, பொருளைத் அம்மக்களிற்கு ஏற்ப வடிவமைத்து (Localisation / Customization) சந்தைப்படுத்த வேண்டும். சந்தையில் வெளியிடப்போகும் பொருள் தன் ஆராய்ச்சியின் மூலம் வந்த பொருளாகவோ, ஏற்கனவே வெளியான பொருளின் சில பல மாறுதல்களுக்கு உட்பட்ட பொருளாகவோ இருக்கலாம். இதை எல்லாவற்றிற்கும் மேலாகத் தேவைப்படுவது வாடிக்கையாளர்க்கு என்ன மாதிரியான அனுபவத்தைத் ( User Experience) தரப்போகிறோம் என்பதே!! கமலின் படங்கள் உலகப்படங்களில் இருந்து சுடப்பட்டவை என்றாலும் தமிழ்ச் சந்தைக்குத் தேவையான மாற்றங்களுடன் மண்வாசனையுடனேயே வந்துள்ளன.

தேவர்மகன், விருமாண்டி, மகாநதி போன்ற படங்களைப் பார்க்கும் பொழுது நமது மண்ணையும் மண்ணின் மைந்தர்களையும் தான் பார்க்க முடியும். சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் பங்காளிச் சண்டைகளையும், சாதிச் சண்டைகளையும் மண்வாசனையுடன் எடுக்கப்பட்ட படங்கள் மிகக்குறைவே. மகாநதியைப் பார்க்கும் ஒவ்வொரு தந்தைக்கும் உள்ளம் கொதிக்கச் செய்தது தான் படத்தின் வெற்றியே. எங்கோ ஆங்கிலேய நாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் இருந்து சுடப்பட்டது என்று கூறப்பட்டாலும், கும்பகோணத்தையும் கல்கத்தாவையும் முடிச்சுப் போட வைத்தது தான் மகாநதி குழுவின் வெற்றியே. விருமாண்டியை ரசித்த அளவிற்கு நம் மண்ணில் புதைந்திருக்கும் குரோத உணர்வை நினைத்து வெட்கப்பட்டது மனம். அது தான் படத்தின் வெற்றியே!! காப்பியடிக்கப் பட்டதாகக் கூறப்படும் படங்களை இன்று பார்த்தாலும் எனக்கு என் மண்ணில் நடக்கும் விசயமாகப்படுகிறதே ஒழிய அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ நடப்பதாகப் படவில்லை.

அன்பே சிவம், குருதிப்புனல் போன்ற படங்களில் வெளிப்படுத்திய கருத்துகளுள் முதிர்ச்சியின்மையும் தேர்ச்சியின்மையும் தெரிந்தாலும் இப்படியும் படங்களை எடுக்கலாம் என்று அடுத்த தலைமுறையினர்க்கு நம்பிக்கை கொடுத்தது. குருதிப்புனலை ஹிந்தியில் இருந்து காப்பியடித்திருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக மிரட்டியிருப்பார்கள். குருதிப்புனல் தான் தமிழில் வெளியான முதல் "டால்பி" ஒலியமைப்பில் வெளியான சினிமா. தமிழகத் திரைத்துறையினரை தொழில்நுட்ப ரீதியில் உயர்த்தியதில் பெரும்பங்கு கமல் படங்களுக்கு உண்டு. ஒவ்வொரு படத்திலும் ஒப்பனை, கதையமைப்பு மட்டுமல்லாமல் தொழில்நுட்ப ரீதியிலும் புதிய விசயங்களைக் கொண்டுவந்ததில் கமலிற்குப் பெரும் பங்குண்டு. இங்கும் ஒரு பன்மொழிப் படத்தை எடுக்க முடியும் என்று காட்டியதில் ஹேராமிற்குப் பெரும் பங்குண்டு. இப்படம் தோல்வியுற்றதற்கான காரணமும் இதுவே. 

கமலின் பரிட்சார்த்தமான படங்கள் பலவும் சொந்தத் தயாரிப்பில் வந்த படங்களே. மாற்றுப் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு தெரிந்திருந்தாலும் கமல் எடுத்ததற்கான காரணம், புதிய அனுபவத்தைத் தர வேண்டும் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? அதற்குக் காப்பி தான் அடிக்க வேண்டுமா? என்றால், இப்படி ஒரு கதைக்கருவில் தமிழ் ரசிகர்களுக்குப் படம் கொடுக்க விருப்பப்பட்டிருக்கலாம். "மண்வாசனையுடன்" எடுக்கப்பட்ட படங்களை ஈயடிச்சான், கொசுவடிச்சான் காப்பி என்பதெல்லாம் ஓவர். 

தினமும் ஒரு உலகப்படத்தைப் பார்க்கும் எவருக்கும் ஒவ்வொரு படத்திலும் சில காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. அதே அனுபவத்தை தமிழ் ரசிகர்களுக்கும் 30 ஆண்டுகளாகத் தரவேண்டும் என்று நினைத்ததில் தவறிருப்பதாகத் தோன்றவில்லை. கமல் செய்திருப்பது மக்களின் User Experienceஐ அதிகரித்திருப்பதே!!

கமல் தமிழ் ரசிகர்களின் ரசனையை எதற்காக அதிகரிக்க வேண்டும்? சகலகலா வல்லவன், காக்கிச்சட்டை போன்ற படங்களையே எடுத்துக்கொண்டிருந்திருக்கலாமே!! அப்படி செய்திருந்தால் என்னவாகியிருக்கும்? சூர்யா, விக்ரம் போன்று நடிப்பில் முயற்சிகளை மேற்கொள்ளும் நடிகர்களும் பருத்திவீரன், பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களும் வருவதற்கு நாளாகியிருக்கும்!! கமல் ஒன்றும் பெரிய சாதனை எல்லாம் செய்யவில்லை. அவர் செய்திருப்பது ஒரு Initiation ஆரம்பம்.

ரசிகர்களின் ரசனையை அதிகரிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார். "நாங்கள் தான் இணையத்தில் இருந்து தரவிறக்கி உலகசினிமா ரசனையை அதிகரித்துக்கொள்கிறோமே, கமல் தான் ரசிகர்களின் ரசனையை அதிகரிக்க வேண்டுமா?" ஐயா படங்களைத் தரவிறக்கம் செய்யுமளவிற்கு இணைய வசதியும் கிடைக்கப் பெற்றோர் ஒரு சதவிதத்தினர் தான். மற்றவர்களை அந்த தரத்திற்குக் கொண்டு வர வேண்டாமா? அதைத் தான் மகேந்திரன்,பாலுமகேந்திரா, பாலசந்தர்,பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் செய்துள்ளனரே. ஏன் கமல் மெனக்கெட வேண்டும்? அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது அதன் வீச்சு அதிகம் என்பதே என் கருத்து!! உலக சினிமாவை நோக்கி வந்திருக்கும் பலரும் சிறு வயதில் கமல் படங்களைச் சிலாகித்தவர்களாகவே இருப்பர்.

கமலிற்கு இவ்வளவு வக்காளத்து வாங்குகிறாயே.. கமல் இன்னும் நம் சமுதாயத்தில் உள்ள ஏகப்பட்ட விசயங்களைப் படமாக்கியிருக்கலாமே!! ஆம்.. எனக்கும் அந்த வருத்தம் உண்டு. கமல் எடுக்க வேண்டிய, ஏற்று நடிக்க வேண்டிய பாத்திரங்கள், பேச வேண்டிய சமுதாயக் கருத்துகளும் நிறைய உள்ளன. கமலிற்கு மனமும் பணமும் இல்லாத பட்சத்தில், அதை விக்ரம்களும், சூர்யாக்களும், சேரன்களும்,பாலாக்களும் செய்தால் நன்றாக இருக்கும். அப்படி மாற்று சினிமாவை எடுப்பதற்கு ஒரு தளம் அமைத்துக் கொடுத்ததில் கமலிற்குப் பெரும் பங்குண்டு!! 

அதனால், காப்பியடித்தார் என்ற சொல்லப்பட்டாலும் கமல் ரசிகன் என்பதில் எனக்கு சிறிதளவும் வருத்தமில்லை!!

Thursday, September 9, 2010

வாடகை வீடு - அமீரகம், சென்னை - நடைமுறைகள் பற்றிய அலசல்!!

சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்திருக்கிறீர்களா? குடியிருக்கிறீர்களா? 

இது உங்களுக்கான பதிவு. சென்னையில் வாடகை வீட்டில் எனக்கு ஏற்பட்ட அனுபவமும், அமீரகத்தில் கிடைத்திருக்கும் மாறுபட்ட அனுபவமும், அமீரகத்தில் இருப்பது போன்ற முறை நம் ஊர்களில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கத்தின் விளைவே இந்தப் பதிவை எழுதத் தோன்றியது.

சென்னையைப் பற்றி எழுதுவதற்கு என்ன தகுதியிருக்கிறது எனக்கு?

உடுமலையைச் சேர்ந்த நான் படித்தது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில். படித்து முடித்த பிறகு சில வருடங்கள் பல ஊர்களில் இருந்துவிட்டு மீண்டும் சென்னைக்கு வந்து மூன்று வருடம் வாடகை வீட்டில் வசித்தவன், குடித்தனம் நடத்தியவன். கல்லூரி விடுதியில் இருந்த பொழுது வாடகை வீட்டில் குடியிருக்காவிட்டாலும், அருகே இருந்து அவதானிக்கும் வாய்ப்பு பெற்றவன். பிறகு அனைவருக்கும் ஏற்பட்ட எல்லா விதமான அனுபவங்களையும் பெற்று வாடகை வீட்டில் குடியிருந்தவன் என்ற முறையில் வாடகை வீடுகளில் நடக்கும் விசயங்களை நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்.

வாடகைக்கு வீடுகள் தேடுவதென்பது ஒரு தனி கலை என்றே கூறலாம். சுலேகா, ப்ரீ ஆட்ஸ் அல்லது ஹிந்து கிஸாசிபைட்ஸ் போன்ற ஊடகங்களில் தேடுவது தான் முதல் படி. ஞாயிற்றுக்கிழமை நாளிதழைப் பார்த்து நமக்கு தோதான வீடு உள்ளது என்று அறிந்தவுடன் தொடர்பு எண்ணிற்கு அழைத்தால் "நீங்கள் அழைத்த எண் பிஸியாக உள்ளது" என்று கேட்கும். விடாமுயற்சியாக எண்ணைத் தொடர்பு கொண்டால் "ஏற்கனவே நான்கைந்து பேர் பேசிவிட்டார்கள்" என்று கூறி தலை கிர்ரேன்று சுற்றுவது போன்ற வாடகையைக் கூறுவார்கள். சரி நேரில் சென்று பார்ப்போம் என்று பார்த்தால், ஒரு 10அடிக்கு 8அடி அளவுள்ள கூடம், 7அடிக்கு 8அடி படுக்கையறை, 6அடிக்கு 5அடி சமையலறை என்று ஒரு வீட்டைக்காட்டுவார்கள். அல்லது காட்டும் வீடு சாலையின் கீழே இருக்கும். கொஞ்சம் நிதானமாக யோசித்தால் மழைக்காலத்தில் வீட்டின் பாதி மூழ்கியிருக்கும் என்பது புரியும். நாளிதழில் வரும் பெரும்பாலான வீடுகள் இப்படியே என்பது நான்கைந்து நாட்கள் வீடுகளைப் பார்த்த பிறகு விளங்கும்.

கொஞ்சம் சுதாரித்து, நாளிதழ்களைத் தேடுவது பயனற்றது என்று புரிந்து ஏதாவது ஒரு தரகரையோ, தரகு நிறுவனத்தையோ அனுகுவது அடுத்த நிலை. "நீங்க எதிர்பார்க்கற வாடகையில், ஏரியாவில் வீடு கிடைப்பது கஷ்டம் தான். உங்களுக்காகப் பார்க்கிறோம்" என்ற தரகரின் பொன்மொழியைக் கேட்டுவிட்டு அவரது அழைப்பிற்குக் காத்திருக்க வேண்டும். ஓரிரு நாட்கள் கழித்து ஏதாவதொரு வீட்டைக் காட்டுகிறேன் என்று சொல்லி வேறொரு தரகரிடம் கூட்டிச் செல்வார். பிறகு நாம் எதிர்பார்த்ததை விட 20% அதிக வாடகைக்கு ஒரு வீட்டைக் காட்டுவார். நமக்கு வீடு தருவதற்கான விதிகளில் 10 மாத முன்பணம், ஒரு மாதம் தரகுக் கட்டணம் என்றெல்லாம் ஒத்துக்கொண்டு வீட்டை வாடகைக்கு எடுத்தால் அப்பாடா என்று இருக்கும்.

இங்கே தான் எனக்கு பல ஐயங்களையும் அமீரக அனுபவங்களையும் பகிர்வது முக்கியமாகப்படுகிறது.

வீட்டை ஒரு வாடகைக்கு எடுக்கிறோம். அந்த வாடகையை எப்படி உடன்பாட்டிற்குள் கொண்டு வருகிறோம்?

ஓரளவு நம்பிக்கையானவராகப் படும் வீட்டு உரிமையாளர் 20ரூ பத்திரத்தில் வீட்டு வாடகையில் ஆரம்பித்து எத்தனை பேர் குடியிருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்றெல்லாம் எழுதி இருவரும் கையெழுத்திட்டுக்கொள்கிறோம். இந்தப் பத்திரத்தை எந்த பதிவாளர் அலுவலகத்திலோ நகராட்சி அலுவலகத்திலோ பதிவு செய்வது கிடையாது. நாம் முன்பணம் செலுத்தியது, வாடகைக்கு ஒப்பந்தமிட்டது எல்லாமே இருவருக்கும் ஏதாவது ஒரு மூன்றாமவர்க்கு மட்டுமே தெரிய வாய்ப்புள்ளது. 

இப்படி இருக்க, வீட்டைக் காலி செய்யும் பொழுது நாம் செலுத்திய முன்பணத்தை இயல்பாகப் பெற முடிகிறதா? ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டு வாடகையை உயர்த்தினால் எங்கே உரிமைக்கென புகார் செய்வது? வாடகைக்குக் குடியிருப்போர்க்கான உரிமைகளை எப்படிப் பெறுவது?

நுகர்வோர் தொடர்பான இந்தக் கேள்விகளுக்கு விடையிருந்தால் அன்பர்கள் பின்னூட்டமிடுங்கள்!!


உள்நாட்டில் வாழ்பவர்களுக்கே வாடகைக்கு வீடு எடுப்பதில் இவ்வளவு சிக்கல்கள் / தலைவலிகள் இருக்கும் பொழுது இந்தியர்கள் அதிகமாக வாழும் அமீரகத்தில் வீடு எடுப்பது எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறது?  என்னென்ன வழிமுறைகள் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கின்றன?

அமீரகத்தில் வீடு தேடுவதென்பது பெரும்பாலும் இணையத்திலோ, நாளிதழ்களில் காணப்படும் வாடகைக்குள்ள வீடுகளைப் பற்றி தெரிந்து கொண்டும், அக்கம்பக்கத்திலும், வீட்டு காவலர்களிடம் கேட்டும் தெரிந்துகொள்ளப்படுகின்றன. பிறகு காலியாக உள்ள வீட்டைப்பார்த்துவிட்டு வீட்டை வாடகைக்கு எடுப்பது என்று முடிவெடுக்கும் வரை இந்தியாவில் உள்ள வழிமுறை தான். பிறகு தான் உள்ளன வீட்டை வாடகைக்கு எடுப்பதில் உள்ள மாறுபாடுகள்.

வீட்டை வாடகைக்கு எடுக்கும் வருடாந்தரத் தொகையை நான்காகவோ ஆறாகவோ பிரித்து காசோலைகளைத் தரவேண்டும். வருடத்திற்கு நான்கு காசோலைகள் என்றால் 1,4,7,10ம் மாதத்தில் காசோலைகளில் பணமெடுக்கப்படும். ஆகவே அமீரகத்தில் முன்பணம் என்பது கிடையாது என்றோ.. மூன்று மாதத்திற்கு ஒரு முறை வாடகைப் பணம் செலுத்தப்படுகிறது என்றோ எடுத்துக்கொள்ளலாம். நாம் கொடுத்த காசோலைகளின் எண்களைக் குறிப்பிட்டு வருடத்திற்கென ஒரு ரசீதைக் கொடுப்பது வழக்கம்.

இத்துடன் நாம் வீட்டை வாடகைக்கு எடுத்துவிட முடியாது.

நாம் பணம் செலுத்திய விவரத்திய எடுத்துக்கொண்டு வீட்டு வாடகை ஒப்பந்தந்தை (Rental Contract) எடுத்துச் சென்று நகராட்சி அலுவலகத்தில் உள்ள நுகர்வோர் உரிமைத் ( Consumer Rights Cell) துறையில் ஒரு கட்டணத்தைக் கட்டி பதிவு செய்ய வேண்டும். இப்படிப் பதிவு செய்வதன் மூலம் வீட்டை ஒரு வருடத்திற்கு முன்பே காலி செய்ய வேண்டிய சூழல் வந்தாலும் எளிதாக காசோலையைப் பெற இயலும். நாம் பதிவு செய்த பின் வீட்டின் உரிமையாளர் பெயர் வாடகைக்கு எடுப்பவர் பெயர் இரண்டும் குறிப்பிடப்பட்டு ஒரு படிவம் தரப்படும்.

நகராட்சியில் பதிவு செய்ததன் படிவத்தை எடுத்துச் சென்று தண்ணிர், மின்சாரம், எரிபொருள் வழங்கும் துறையில் சமர்ப்பித்தால் தான் நாம் எடுக்கும் வீட்டிற்கு மேலே குறிப்பிட்ட மின்சாரம், தண்ணிர், எரிபொருள் எல்லாம் விநியோகம் செய்யப்படும். நமக்கு வரும் மாதாந்தர ரசீதிலும் நம் பெயரும் வீட்டில் உரிமையாளரின் பெயரும் இடம் பெறும். நாம் வீட்டைக் காலி செய்யும் பொழுதும் முதலில் நகராட்சியில் விண்ணப்பித்து, பிறகு மின்சாரம், தண்ணிர் போன்ற சேவைகளைத் துண்டிக்க முடியும்.

அமீரகத்தில் எந்தத் தேவையாக இருந்தாலும் வீட்டு வாடகை ஒப்பந்தந்தைக் காட்டினால் தான் பெற முடியும். தனியாக வாழ்பவர் தங்கள் குடும்பத்தை அழைப்பதாக இருந்தாலும், பெற்றோரை அழைப்பதாக இருந்தாலும், வீட்டு வேலை செய்ய ஆளைப் பணியமர்த்துவதற்கும் வீட்டு வாடகை ஒப்பந்தந்தைக் காட்டியாக வேண்டும். வீட்டு உரிமையாளர் நம்மைக் காலி செய்ய நினைத்தாலும் போதிய கால அவகாசம் கொடுத்தாக வேண்டும். இது தான் நடைமுறை!!

*

அமீரகத்தில் உள்ள நடைமுறைகளை நம் ஊரில் உள்ள நடைமுறைகளோடு ஒப்பிடுவது சரியாகாது தான். ஆனால் வாடகைக்கு வீடு எடுப்பவர்களுக்கு நம் ஊரில் எந்த விதமான உரிமையும் இருப்பதாகத் தெரியவில்லை. வீட்டிற்கு வரும் மின்னட்டைகள், தண்ணிர் கட்டணம் முதலியவையில் எல்லாம் வீட்டு உரிமையாளரின் பெயரே இடம்பெறும். நாம் அந்த வீட்டில் தான் குடியிருக்கிறோம், இத்தனை முன்பணம் கொடுத்தோம் என்பதற்கு எல்லாம் எந்த விதமான ஆதரமோ, சான்றிதழோ இருப்பதாகத் தெரியவில்லை.

சொந்த ஊரில் இருந்து பெருநகரங்களுக்கு இடம்பெயர்வது வாடிக்கையாகிவிட்ட இன்றைய சூழலில் வாடகைக்கு வீடு எடுப்பவர்களின் நலனிற்கு ஏதாவது வழிமுறை செய்தால் நன்றாக இருக்குமே!! குறைந்தது நாம் ஒப்பந்தமிடும் வாடகை, முன்பணத்தையெல்லாம் குறிப்பிட்டு நகராட்சி அலுவலகங்கள் சான்றிதழ்களை வழங்கினால் இருவருக்கும் நல்ல ஆதாரமாக இருக்குமே!! அதை வைத்துக்கொண்டு எரிவாயு சிலிண்டர், தொலைபேசிச் சேவை இணைப்பு போன்றவற்றைப் பெற வசதியாக இருக்குமே!! 

"இருக்கற வேலையை ஒழுங்காகச் செய்வதற்கே முடிவதில்லை. இதையும் எங்கே சேர்ப்பது" என்ற குரல் கேட்காமல் இல்லை. காலத்திற்கேற்ப மாறுதல்களைக் கொண்டு வந்தால் தானே நல்லது. சென்னை நகரம் தொழில்துறையில் முன்னேறுகிறது என்றெல்லாம் கூப்பாடு போடும் வேளையில், வெளியூர்களில் இருந்தெல்லாம் தொழில்துறையில் பணியாற்றவருபவர்களையும் கருத்தில் கொண்டால் தானே அனைவருக்கும் பலனளிக்கும்?

Sunday, September 5, 2010

கேபிள் - சில எண்ணங்கள்!!

"Problem of plenty" என்ற ஆங்கிலச் சொலவடை நம் தொலைக்காட்சிச் சேனல்களுக்கு மிகவும் பொருந்தும். நான் சென்ற முறை ஊரிற்குச் சென்ற பொழுது வீட்டில் காணக்கிடைத்த தமிழ்ச்சேனல்களின் எண்ணிக்கை 25 முதல் 30ஐத் தொடலாம். முப்பது சேனல்கள் கிடைப்பதாலேயே ஒரு வித பரபரப்பு மனதில் படற ஆரம்பித்துவிடுகிறது. ஒரு சேனலில் வரும் நிகழ்ச்சி அல்லது பாடல் சரியில்லை என்றால் அடுத்த சேனலில் என்ன உள்ளது, அடுத்த சேனலில் என்ன உள்ளது, அடுத்ததில் என்ன.. என்ன என்ன.. என்ற தேடிக்கொண்டே சென்று ஏதாவது ஒன்றில் சில நிமிடம் நின்றுவிட்டு மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தேட ஆரம்பித்துவிடுகிறோம்.

இப்பொழுது ரிமோட் இல்லாமல் தொலைக்காட்சிப்பெட்டிகள் வருவதேயில்லை. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை பார்க்க முடிந்த ரிமோட் இல்லாத தொலைக்காட்சிப் பெட்டிகளும், கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டிகளும் இன்று, ஒன்று, வீட்டு அட்டாலியில் இருக்கலாம் அல்லது மண்ணை மாசாக்கியிருக்கலாம். அப்படி ரிமோட் இல்லாத தொலைக்காட்சிப் பெட்டியை வீட்டில் வைத்திருந்த பொழுது இப்பொழுது மாற்றிய அளவிற்கு மாற்ற முடியாது. தொலைக்காட்சிப் பெட்டியின் அருகே சென்று "படக் படக்"கென மாற்ற வேண்டியதிருக்கும். சாலிடெர் போன்ற தொலைக்காட்சிப்பெட்டிகளின் இருந்தது போல "பட்டன்' இல்லாததால், வட்ட வடிவில் திருப்ப வேண்டியதிருக்கும். நான் திருப்பியதில் எத்தனையோ முறை திருப்புலியை மாற்றியும் இருக்கிறோம். ரிமோட் இல்லாத காலத்தில் ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்தது போல இப்பொழுது இல்லை. 

கல்லூரிக் காலத்தில், விடுதியில் உள்ள தொலைக்காட்சி அறையில் வைக்கப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டிக்கு ரிமோட் இருந்தாலும் நண்பர்களின் தொடர் பயன்பாட்டிற்குப் பிறகு பொத்தான்கள் அனைத்தும் தேய்ந்து போய் விடும். பிறகு பூட்டு போடப்பட்டிருக்கும் தொலைக்காட்சியின் கதவை நீக்க கம்பியை வளைத்து சேனல்களை மாற்றிய காலமெல்லாம் உண்டு. அது போன்ற நேரத்தில் சுற்று முறையில் யாராவது ஒருவர் தொலைக்காட்சி ஆப்பரேட்டராக அமர்த்தப்படுவதும் உண்டு. ரிமோட் இல்லாத நாட்களில் வீட்டில் நான் தொலைக்காட்சி ஆப்பரேட்டராக இருந்ததுண்டு. எத்தனை முறை தான் எழுந்து சென்று சேனல்களை மாற்றுவது என்று ஏங்கிய காலமெல்லாம் உண்டு. ஆனால், அப்பொழுதும் அதிகபட்சமாக ஆறேழு தமிழ்த் தொலைக்காட்சிகள், சில விளையாட்டுச் சேனல்கள் இருந்ததுண்டு. இப்பொழுது அளவிற்கு இருந்ததில்லை. 

சேனல்கள் அதிகரிக்க அதிகரிக்க பொறுமை குறைய ஆரம்பித்துவிட்டது தான் உண்மை. சேனல்களை வசதிகள் அல்லது வாய்ப்புகள் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் இன்றைய வாய்ப்புகள், வசதிகள் எல்லாமே நம் பொறுமையைச் சோதிப்பவையாகவே இருக்கின்றன. +95 போட்டு தொலைதூர அழைப்புகள் பேசியதில் இருந்த சுவாரஸ்யம் இன்று ஏனோ அலேபேசிகளில் பேசும் பொழுது இருப்பதாகத் தெரிவதில்லை. அலைபேசிகள் நமக்கு வேண்டாம் என்றாலும் கையில் திணிக்கப்பட்டு 24 மணி நேரமும் வாலாட்டும் நாயைப் போல வைக்க வேண்டிய பணிச்சூழல்!! விடுமுறை நாட்களின் பொழுதும் "அவசரம் என்றால் என் எண்ணில் குறுந்தகவல்கள் அனுப்புங்கள்" என்று போட வேண்டிய கட்டாயம். அலைபேசிகளைத் தான் நம்மால் எதுவும் செய்ய முடிவில்லை, இந்த தொலைக்காட்சிச் சேனல்களின் எண்ணிக்கையையாவது ஏதாவது செய்ய முடியுமா? 

தொலைக்காட்சிச் சேனல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வாய்ப்பு அமீரகத்தின் எடிசலாத் நிறுவனத்தின் E-Life - Triple Play என்ற சேவைக்கு விண்ணப்பித்துள்ளதன் மூலம் பெற ஆரம்பித்துள்ளேன். அதனால் நான் பெற்ற பயனைக் கூறும் முன்பு E-Life - Triple Play பற்றி சில பத்திகள்.

o

முந்தைய பத்தியில் "எடிசலாத் நிறுவனத்தின் E-Life - Triple Play" என்று குறிப்பிட்டிருந்தேன். அதென்ன Triple Play?


வீட்டில் தொலைப்பேசி, இணைய அகண்ட அலைவரிசை( ப்ராட்பேண்ட் ) வசதி மற்றும் கேபிள் வசதியை இணைக்கும் சேவை தான் Triple Play சேவை. வீட்டில் ஒரு ரிசீவரை வைத்துவிட்டால் போதுமானது. தொலைத்தொடர்பு தொடர்பான அனைத்து சேவைகளும் நம் வசதிக்கேற்ப!! இது போன்று இணையம், தொலைபேசி, கேபிள் மூன்றையும் ஒரே நிறுவனமே வழங்கும் சேவை இந்தியாவில் வருவதற்கு நீண்ட நாட்களாகாது என்றே தோன்றுகிறது. அப்படி வரும் பட்சத்தில் இன்று இருப்பது போல இணையத்திற்கு ஏர்டெல், கேபிளிற்கு சுமங்கலி, தொலைப்பேசிக்கு பி.எஸ்.என்.எல் என்ற நிலையெல்லாம் மாறி ஏதாவது ஒரு நிறுவனமே மூன்று சேவையையுமே வழங்கும் நிலை வந்துவிடும். 

இப்படி ஒரு சேவை வந்தால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன்?

கேபிள், இணைய வசதி, தொலைப்பேசி என்று ஒவ்வொரு நிறுவனத்திடமும் மாதச் சந்தா கட்டவேண்டிய தேவையில்லை. அனைத்தும் ஒரு குடையின் கீழ்!! மூன்றையும் ஒரு நிறுவனமே வழங்கும் பொழுது வாடிக்கையாளர்களுக்குத் தங்களுக்கு எந்த சேவை அதிகபட்சமாகத் தேவைப்படுகிறதோ அதைத் தெரிவு செய்து பயன்பெறலாம். உதாரணம்.. ஒருவருக்கு இணையவசதியே முக்கியமாக இருக்கலாம். சிலருக்கு கேபிள் சேனல்களின் எண்ணிக்கை அதிகமாகத் தேவைப்படலாம். இப்படி ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப சேவைகளைப் பெறலாம். 

எப்பொழுது இது போன்ற சேவைகள் வரும்?
o

மேலே குறிப்பிட்ட E-Life - Triple Play திட்டத்தின் மூலம் நான் தேர்வு செய்து கொண்டது குறைந்த எண்ணிக்கையில் சேனல்கள், 8MBPS என்ற அளவிற்கு அதிவேக இணைய வசதி மற்றும் தொலைப்பேசிச் சேவை. தொலைக்காட்சிச் சேனல்களைத் தேர்வு செய்ததில் தமிழில் சன் டிவி, ஆங்கிலத்தில் சர்வதேச செய்திச்சேனல்கள், ஃபாக்ஸ், எம்.பி.சி போன்ற திரைப்படங்கள் சேனல்கள், கார்ட்டூன் நெட்வொர்க், என்.ஜி.சி என்று  சில சேனல்கள் மட்டும் என் கணக்கிற்கு வரும்படி தேர்ந்தெடுத்துள்ளேன். சேனல்கள் குறைந்தவுடன் ரிமோட்டில் விளையாடுவதும் குறைய ஆரம்பித்துள்ளது.

உங்களுக்கு ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் தொலைக்காட்சி எண்ணிக்கையைக் குறைத்துப் பாருங்களேன். குறைந்தது சில சேனல்களைப் "பேரண்டல் லாக்" மூலம் முடக்கி வைத்துப்பாருங்களேன்!!

தொலைக்காட்சியை பார்க்கும் நேரமும் குறைய ஆரம்பித்துள்ளதால் நான் என்ன இழந்துள்ளேன்? 

ஒன்றுமில்லை!! வீட்டில் யானியும், ராஜாங்கமும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. "அப்பாடா" என்ற பெருமூச்சை ரிமோட்டிடம் இருந்து கேட்கமுடிகிறது.

Related Posts with Thumbnails