Friday, February 18, 2011

கண்கள்!!

வன் கண்கள் எரிய ஆரம்பித்திருந்தன. கண்களின் எரிச்சலை லேசாக உடலும் உணரத் துவங்கியது. அலுவலகம் வந்ததில் இருந்து மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதில் போராடிக் கொண்டிருந்தான். அவன் கணினித் திரையைத் திறக்கையில், அனுப்பியவர்களுக்கு மதியமாகியிருக்கும். இன்னும் நான்கு மணி நேர வேலை நாளே அவர்களுக்கு மீதமிருந்ததால் உடனுக்குடன் பதிலளிக்க வேண்டும். கணினித் திரையும் மின்னஞ்சல்களும் தான் சோறு போடுகிற நிலை என்றான பிறகு மின்னஞ்சல்களுக்குப் பயந்தால் நன்றாகவா இருக்கும். பிறர் கண்கள் தன் பதிலை எதிர்பார்த்துக்கிடப்பதால் தன் கண்களின் எரிச்சல் அவனுக்குப் பழகிவிட்டது. ஏனோ இப்பொழுது அவனிடம் கண்கள் கெஞ்ச ஆரம்பித்தன. கண்களின் கெஞ்சல் காதுகளுக்குக் கேட்டதோ என்னவோ, அவனைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. அலுவலகம் எங்கும் ஏதோ பரபரப்பு படர்வதை காதுகள் உணர்த்துகின்றன. 

ணினித் திரையில் இருந்து தலையை நிமிர்த்திப் பார்த்தான். அனைத்து கண்களும் ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தன. இப்படி அனைவரும் பார்க்க வேண்டுமென்றால் அலுவலக மேலாளர் ஏதாவது உரையாற்ற வேண்டும். ஆனால், இங்கே வேறு திசையை நோக்கியல்லவா கண்கள் பார்க்கின்றன. அனைவருக்கும் ஒரு சேர சன்னலைப் பார்க்கும் ஆர்வம் எப்படி வந்தது. வேறொன்றுமில்லை. அவர்களை நோக்கி நாலு ஜோடிக்கண்கள் வெளியிலிருந்து புன்னகை செய்தன. இருபத்தி ஆறாவது மாடியில் இருக்கும் இவர்களைக் கட்டடத்திற்கு வெளியிலிருந்து பார்ப்பது, இவர்களுக்கு வியப்பூட்டும் விசயம். உயிரற்ற தூண்களும், கண்ணாடிச் சன்னல்களுமே தங்களைப் பார்த்த திசையில் கண்கள்.

ண்ணாடியில் உள்ள அழுக்கை அகற்றும் உன்னத வேலையை அந்த நால்வரும் செய்வதை அத்தனை கண்களும் வேடிக்கை பார்த்தன. அதற்கு பதிலாக இதமான புன்னகையை உதிர்த்தார்கள். கட்டடத்தின் விளிம்பில் உள்ள பலமான கொக்கிகளில் இரும்புக் கயிற்றைக் கட்டிவிட்டு தானியங்கிக் கருவிகளின் உதவியால் ஒவ்வொரு மாடியின் சன்னல் கண்ணாடிகளையும் சுத்தம் செய்கின்றனர் இந்த வீரர்கள். உயரமான இடத்தில் இருந்து தொங்கிய படியே பணியாற்றத் தனி வீரம் வேண்டும் தானே. இவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் வேறு எவர்க்கும் கிடைக்காது. கட்டடத்தின் உயரத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது பார்க்கும் காட்சிகள் கீழே இறங்குப் பொழுது மாறுவது ஒரு ஆச்சர்யமான விசயம். ராட்டனத்தில் ஏறிச் சுற்றுகையில், மேலெழும் பொழுது இதுவரை பார்த்திராத கூரைகள் எல்லாம் தெரிவதைப் போல. தொலைவில் தெரிந்த கடலை எள்ளலுடன் மறைக்கத் துவங்கும் சிறிய கட்டடங்கள், சிறு துளிகளாய்த் தெரிந்த மரங்கள் கிளைகளுடன் படர்ந்து நிற்பது என்று சொல்லிக் கொண்டே போகலாம். வெளிக்காட்சிகள் மாறுவது ஒரு வித அனுபவம் என்றால் கண்ணாடிகளுக்கு அப்பால் தெரிவதோ வேறு விதமான அனுபவம். மேலிருந்து கீழே வரவர ஒவ்வொரு அலுவலகத்தின் அமைப்புகளையும், நடவடிக்கைகளையும் பார்ப்பது மாறுபட்ட அனுபவம் தான். அடுத்த வீட்டு சன்னலை எட்டிப் பார்க்கும் ஆவல் அதிலிருப்பதாகத் தோன்றியது.

வன், இருக்கையில் இருந்து எழுந்து சன்னலை நோக்கிச் சென்றான். அழுக்குப் படிந்து, தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்த கண்ணாடிகள் இப்பொழுது வெளியுலகை மட்டுமே காட்டின. சன்னலின் அருகே சென்றவன், சுவற்றில் கைகளை ஊன்றி அடிவானத்தை வெறித்துப் பார்த்தான். கணினித்திரைகளின் முன்பு பணியாற்றுபவர்கள் சரியான இடைவெளிகளில் தொலைவில் உள்ள பொருளைப் பார்ப்பது நல்லதாம். இவனுக்கு கடலை அதுவும் அடிவானத்தைப் பார்ப்பது உவகையான விசயம். அடிவானத்தைப் பார்த்தே காற்றில் உள்ள தூசியின் அளவையும் காலநிலையையும் உணர்ந்து கொள்வான். கடலின் அழகை ரசிப்பது யாருக்குத் தான் பிடிக்காது. கணினித்திரைக்கு அடுத்தபடியாக அவன் பார்ப்பது கடலைத் தான். அதிகாலையில் சலனமில்லாமல்  காட்சியளிக்கும் கடல் நேரமாக நிறம் மாறிக்கொண்டே இருக்கும். பச்சை, நீலம், கருநீலம், மாலையில் இளஞ்சிவப்பு, இரவில் கட்டட மின்விளக்குகளின் எதிரொளிகள் என்று கடலின் மாயவித்தை ஒரு அபூர்வம் தான். 

ன்று கடல் அமைதியாகவே இருந்தது. கண்ணிற்குக் குளுமையான தெளிந்த நீல நிறம். பாம் ஜூமைராவின் கட்டடங்கள். ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பல்கள். இவற்றிற்கு மாலை நேரம் வரை வேலை வருவதில்லை. கடல் நீர்ப்பரப்பைக் கிழித்துக் கொண்டு செல்லும் கடல் பைக்குகள். அந்த பைக்குகளை இயக்குவதற்கு தனிப்பயிற்சி தேவை இருக்கும். பின்னே கடலையே கிழித்துக் கொண்டு செல்வதென்றால் சாதாரண விசயமா? இவன் அதிகபட்சம் ஆற்று நீரைக் குச்சிகளை வைத்து துழாவி விளையாடியிருக்கிறான். குச்சிகளை வைத்துத் துலாவும் பொழுது எழும் அலைகளைப் பார்க்க இவனுக்கு அலாதி இன்பம். தொலைவில் தெரிந்த கடலின் அலைகள் ஊர் நினைவு மீட்க ஆரம்பித்துவிட்டன. அப்படியே வலது திசையில் பார்க்க ஆரம்பித்தான். ரயில்ப்பூச்சியாக ஊறிச் சென்று கொண்டிருந்தது பிரதான நிலப்பரப்பையும் ஜூமைராவையும் இணைக்கும் மோனோரயில். இன்னும் சற்று தொலைவில் 'துபாய் உலகி'ற்காக கடலில் எழுப்பப்பட்ட மண் திட்டுகள். பணத்தைக் கடலில் கொட்டியிருக்கிறார்கள் என்று கிண்டல் செய்தாலும், கடலின் நடுவே நகரை உருவாக்குவது எவ்வளவு பெரிய கனவு. 

ருகாமையில் இருக்கும் சாலைகளைப் பார்க்க ஆரம்பித்தான். பகல் வேளையிலும் எத்தனை கார்கள். அனைவருக்கும் ஏதோ ஒரு அவசரம். தன் கட்டடத்திற்கு அருகில் இருக்கும் கார் நிறுத்துமிடத்தைப் பார்வையிடத் தொடங்கினான். குறைந்தது 200 கார்கள் நிறுத்துமளவு உள்ள பயன்பாடற்ற நிலப்பரப்பு அது. முதலில் அந்த இடமே அமைதியாக எதுவுமே நடக்காதது போலத் தோன்றும். பிறகு உற்று நோக்கினால் ஒன்றிரண்டு கார்களாவது நிறுத்துமிடம் தேடி எறும்புகளாக ஊறிக்கொண்டிருக்கும். இருபத்தி ஆறாவது மாடியில் இருந்து பார்க்கும் பொழுது இவனுக்குக் காலியிடங்கள் தெளிவாகத் தெரியும். சிலவமயம, அந்த வழியில் போகாதே என்று கத்தத் தோன்றும். இருந்தாலும் அவர்கள் சுற்றிச் சுற்றி வருவதையும் கார்களைச் சந்துகளில் இயக்குவதைப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி.

ன் பார்வையை சில நூறடிகள் நகர்த்தினான். கட்டடங்களுக்கிடையே அமைக்கப்பட்டிருக்கும் பூங்கா மற்றும் குளம். குளத்தைச் சுற்றியுள்ள கட்டடங்களில் பார்ப்பவர்களுக்காக 'எப்பொழுதாவது' நடக்கவிருக்கும் விழாக்களுக்காக எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கும் குளம். குளத்தின் கரையில் மனிதர்களைப் பார்ப்பதே அரிதான விசயம். படகோட்டியாக குளத்தினூடே பயனித்து குளத்தில் படிந்திருக்கும் பாசியை அகற்றும் வேலையாளைத் தவிர. நீர்த்தாரைகள் குளத்தின் நீரைப் பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தன. என்றாவது ஒரு நாள் சிறிது நேரத்தை ஒதுக்கி பூங்காவையும், குளத்தையும் அருகில் சென்று ரசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அங்கே நின்று புகைப்படம் எடுத்தால் தான், தான் வேலை பார்க்கும் கட்டடம் தெளிவாகத் தெரியும் என்பது அவன் யூகம். அப்படி ஒரு நாள் அவன் பணியில் இருந்து விடுபடும் நாளாகத் தான் இருக்கும். 

வன் காதுகளில் "யானி"யின் இசை ஒலிக்க ஆரம்பித்தது. அது அவனிற்கு மிகவும் பழக்கப்பட்ட இசை. அவன் செல்பேசியின் ஒலி. செல்பேசியில் மின்னஞ்சல் வருகையைத் தெரிவிக்க வைத்திருக்கும் இசை. மின்னஞ்சலின் வருகையை இதமான இசையால் வரவேற்பது இவனுக்குப் பிடித்த விசயம். அவன் கண்களுக்குத் தன் முன் நிற்கும் கண்ணாடி தெரிய ஆரம்பித்தது.  பத்து நிமிடங்களாகப் பராக்குப் பார்த்ததில் கண்களில் எரிச்சல் குறைந்திருந்தது. மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தான். காலையில் இருந்து இவன் அனுப்பிய பதில்களுக்குச் சில சிரிப்பான்களுடன் நன்றி தெரிவித்தது அவ்வஞ்சல். கண்கள் புன்னகைக்க உடம்பை முறித்துப் பெருமூச்சு விட்டான், அன்றைய பொழுதின் அடுத்த வேலையை யோசித்தவாறு!!
Related Posts with Thumbnails