Monday, December 21, 2009

ஈரோடு பதிவர்கள் சங்கமம் - நடந்தது என்ன?

பள்ளிநாட்களை நினைவுபடுத்தியது ஈரோடு பதிவர்கள் & வாசகர்கள் சங்கமம் பற்றி வெளியான அறிவிப்பு!!

பள்ளி நாட்களில், காலாண்டுத் தேர்வுகள் நெருங்கி வரும் வேளையில் பள்ளி விடுமுறை நாட்களைப் பற்றியும், விடுமுறை நாட்களில் உறவினர்களையும், நண்பர்களையும் எவ்வாறு சந்திப்பது, எங்கே செல்வது என்றெல்லாம் எண்ணங்கள் எழும். ஆனால் இப்பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் பணியாற்றி வருவதால் உறவினர்களையும், கூட்டாளிகளையும் சந்திப்பது கடினமாகி விட்டது.

எப்பொழுது அது போன்ற ஒரு சந்திப்பு நிகழும், மகிழ்ச்சியாக கூத்தடிப்பது என்று ஏக்கத்துடன் நினைத்துக் கொண்டிருக்கையில், "நாங்க இருக்கறமுல்ல கண்ணு" என்று வெளியானது ஈரோடு அன்பர்களின் அறிவிப்பு!! துபாயில் இருந்து கிளம்பியதிலிருந்தே பதிவர் சந்திப்பு பற்றிய எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. சனிக்கிழமை ஊரிற்கு வந்தவுடன் ஈரோடு-கதிரை அழைத்து சந்திப்பில் கலந்து கொள்வதை உறுதி செய்தேன்.

பிறகு ஞாயிறு மதியம் 12 மணியளவில் உடுமலை.காம் சிதம்பரம் மற்றும் நாகாவுடன் மகிழுந்தில் கிளம்பினோம். உடுமலையில் இருந்து மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் வழியாக பசுமை கொஞ்சும் சூழலில் கதையடித்துக்கொண்டே பயணித்து ஈரோடை 2:30 மணியளவில் சேர்ந்தோம். பழமைபேசி, கதிர் மற்றும் பாலாசி எங்களை வரவேற்றனர். பிறகு மதிய உணவை முடித்துக்கொண்டு சங்கமம் நடக்கவிருந்த அரங்கத்திற்குச் சென்றோம்.

அரங்கிற்குச் செல்லும் வழியில் மதுரை அன்பர்களான கார்த்திகைப்பாண்டியன், "வலைச்சரம்" சீனா, ஜெர்ரி ஈசானந்தா, ஸ்ரீதர், தேவராஜ் விடலன் மற்றும நாமக்கல் சிபி, நந்து ஆகியோரை சந்தித்தோம். அனைவரும் அரங்கை அடைந்த பொழுதே அரங்கம் நிரம்ப ஆரம்பித்திருந்தது. சங்கமம் விழாக்குழுவினர் சிறப்பாக ஒவ்வொரையும் வரவேற்று தேநீர் கொடுத்து உபசரித்தனர்.

சங்கமத்திற்கு வந்திருந்த அன்பர்கள் பலரிடமும் சுயமாக அறிமுகம் செய்து கொண்டு பேசிக்கொண்டிருக்கையில் நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். என்னையும் ஒரு தலைப்பில் பேச அழைத்திருந்ததால் நானும் மேடையில் அமர்ந்தேன். தோழி முருக. கவியின் தமிழ் வணக்கத்துடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. அரங்கில் இருந்த அனைவரும் சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்டனர்.




அன்பர் ஆரூரன் விசுவநாதன் தனது வரவேற்புரையில் பதிவு செய்வதன் தேவையை  அழகாக எடுத்துரைத்தார். அவரது உரையில் ஈரோடு அருகே ஓடும் "கலிங்க"ராயன் வாய்க்கால் எப்படி "காளி"ங்கராயன் வாய்க்கால் என பெயர் மாறியது என்று கூறினார்.

கதையெழுதி என்ற தலைப்பில் அன்பர் வசந்த்குமார் விரிவாக கதையெழுதுவதைப் பற்றி விளக்கினார். "ஒரு விசயத்தை ஒரு வரியிலும் சொல்லலாம், சில பத்திகளிலும் சொல்லலாம் ஆனால் காட்சிகளையும், சூழலையும் வர்ணிப்பதன் மூலம் வாசகர்களுக்கு நல்ல அனுபவத்தை தர இயலும்" என்று கூறியது சிறப்பு!!

எதிர்பார்ப்புகள் என்ற தலைப்பில் வலைச்சரம் சீனா அவர்கள் வாசகர்களின் எதிர்பார்ப்புகள், பதிவர்களின் எதிர்பார்ப்புகள் என்ற இரண்டாகப் பிரித்து நகைச்சுவையாகக் கூறினார். பதிவர்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றி "பிட்டு பிட்டு" வைத்த பொழுது அரங்கத்தில் சிரிப்பொலி கேட்டது.

தொழில்நுட்பத்தேவை என்ற தலைப்பில் பதிவர் சுமஜ்லா அவர்கள் பதிவுத்தளங்களில் உள்ள சூட்சமங்களைப் பற்றி விளக்கினார். "ஒன்றிற்கும் மேலான பதிவுத்தளங்களை வைத்திருப்பவர்கள் எப்படி தளங்களை இணைப்பது என்பதைப் பற்றி சுருக்கமாகக் கூறினார். "நான் ஒரு ஆங்கிலப் பட்டதாரி, கணினித்துறையைச் சார்ந்தவர் அல்ல" என்று கூறிய பொழுது சுமஜ்லாவின் உழைப்பு தெரிந்தது.

பதிவர்கள் கடமை என்ற தலைப்பில் பேச ஆரம்பித்த அன்பர் பழமைபேசி, "யூதர்களும், குஜராத்திகளும் எப்படி தங்கள் இனத்தவர்க்கு ஒரு குறை என்றால் உலகின் எந்த மூலையிலிருந்தும் உதவி செய்யத் துடிக்கின்றனர்" என்பதையும் "தமிழர்களுக்கு இந்த உணர்வு இல்லாததைப் பற்றியும் கூறினார். ஆனால் இணையமும், வலைப்பூக்களும் மொழி உணர்வை வளர்ப்பதில் உதவுவதைப் பற்றி தன் பாணியில் கூறி அசத்தினார்.

உலகத்திரைப்படங்கள் என்ற தலைப்பில் அன்பர் வண்ணத்துப்பூச்சியார் சூர்யா தன் கருத்துகளைக் கூறினார். உலகத்திரைப்படங்களைப் பார்க்கத் தூண்டியது நம் திரைப்படங்கள் தான் என்று கூறிய பொழுது எங்கும் கைத்தட்டல்கள்!! அமீரகத்தில் இருந்த பொழுது தான் உலகத் திரைப்படங்களைப் பார்க்கும் ஆர்வம் வளர்ந்தது என்பதைக் கூறினார்.

கணினிப் பட்டறை என்ற தலைப்பில் அடியேன் அமீரகத்தில் அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய கணினிப் பயிலரங்கம் பற்றிய செய்திகளையும், விக்கிப்பீடியாவில் தமிழில் கட்டுரைகளில் எண்ணிக்கை பற்றியும் எடுத்துரைத்தேன். தமிழில் பெருமளவில் கட்டுரைகள் வராமல் இருப்பதற்கு எழுத்துரு, நிரலிகள் பற்றிய ஐயங்கள் ஒரு முக்கிய காரணம். எழுத்துரு, தமிழில் தட்டச்சுவதற்குத் தேவையான நிரலிகள் பற்றிப் பல பயிலரங்கங்களை நடத்துவது இன்றைய தேவை!!

சமூகத்தில் நம் பங்கு என்ற தலைப்பில் தன் கருத்துகளைப் பதிவர் ரம்யா அழகாக எடுத்துரைத்தார்.

வலையிலிருந்து புத்தகம் என்ற தலைப்பில் அன்பர் அகநாழிகை பொன்.வாசுதேவன், "இன்று நாம் எழுதுகிற பல பதிவுகளை பதிவர்கள் அல்லாத வாசகர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும், அதற்குத் தகுதியுள்ள பதிவுகளைப் புத்தகங்களாக வெளியிடுவது மிகவும் தேவையான ஒன்று" என்று கூறினார்.




பிறகு ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமத்தை அன்பர்கள் தண்டோரா, வானம்பாடிகள், அப்துல்லா, பரிசல்காரன், ஜெர்ரி , கார்த்திகைப் பாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

வாழ்த்துரையை முதலில் வழங்க வந்த முனைவர் செ.இராசு அவர்கள் கொங்கு மண்டலத்தின் சரித்திரத்தைப் பற்றியும் கல்வெட்டுகள், தொல்லியல் துறை பற்றியும் விரிவாக விளக்கினார். இவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டு தொல்லியல் துறையின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மணம் காசி அவர்கள் வலைப்பதிவுகளின் இன்றைய நிலையைப் பற்றியும், வெகுவாக பல துறைகளைச் சார்ந்தவர்களின் பார்வையையும் ஈர்த்து வருவதைப் பற்றியும் தனது வாழ்த்துரையில் கூறினார். அன்பர் லதானந்த் மற்றும் சஞ்சய்காந்தியுடன் நாமக்கலில் தான் கலந்து கொண்ட பயிலரங்கத்தைப் பற்றிக் கூறிய பொழுது பதிவுலகின் வீச்சு மேலும் விளங்கியது. இதைப் பற்றி அன்பர் சஞ்சய் காந்தியின் பதிவில் காண்க!!

மேடையில் இருந்தவர்களின் உரை முடிந்தவுடன் கலகலப்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது.

இந்த இடுகையின் நீளம் காரணமாக கலந்துரையாடல் மற்றும் இதர நிகழ்வுகளைப் பற்றிய நினைவுகள் அடுத்த இடுகையில்...


..

29 comments:

Cable சங்கர் said...

பர்ஸ்ட் பார்ட் கவரேஜ் குட்...:) செந்தில்

செ.சரவணக்குமார் said...

விழா நிகழ்வுகளை அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.

துபாய் ராஜா said...

வரமுடியாத பதிவர் அனைவர் மனதிலும் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய சந்திப்பை சிறப்புற நடத்தி காட்டிய கொங்குநாட்டு தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

வரமுடியாத பதிவர் அனைவர் மனதிலும் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய சந்திப்பை சிறப்புற நடத்தி காட்டிய கொங்குநாட்டு தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.

Jackiesekar said...

கலந்து கொண்ட அனைத்து பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த ஜாக்கியின் வாழ்த்துக்கள்,..

ஆரூரன் விசுவநாதன் said...

உங்கள் வருகைக்கும், அது குறித்த இடுகைக்கும் நன்றி செந்தில்.......

பதிவர்கள் எதிர்பட வேண்டிய சட்ட பிரச்சனைகள் பயனுள்ளதாக இருந்தது....

வாழ்த்துக்கள்

முனைவர்.இரா.குணசீலன் said...

கூட்டத்தில் தங்கள் உரை மிகவும் நன்றாக இருந்தது நண்பரே..

குறிப்பாக விக்கிப்பீடியாவில் தமிழ்க்கட்டுரைகளின் நிலையை அனைவரும் உணரும் வண்ணம் அழகாகச் சொன்னீர்கள்.அதனை எனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன் நண்பரே..

அது ஒரு கனாக் காலம் said...

நன்றி செந்தில்....

geethappriyan said...

அருமை நண்பர் செந்தில்வேலன்,
வாவ்,
அருமையாக பகிர்ந்தளித்தீர்கள்.
படிக்கவே மகிழ்ச்சியாக உள்ளது

நாடோடி இலக்கியன் said...

ஒவ்வொரு பதிவரும் பேசியதன் சுருக்கத்தை தெளிவாக எழுதியிருப்பது மிக பிடித்திருக்கிறது நண்பரே.

அடுத்த பகுதிக்கு ஆவலுடன்...

கண்ணா.. said...

தல வெள்ளிகிழமை துபாய்ல இருந்தீங்க...ஞாயிற்றுகிழமை ஈரோட்ல இருக்கீங்க... உலகம் சுற்றும் வாலிபனா இருக்கீங்களே...

இப்போ எங்க இருக்கீங்க.?

குசும்பன் said...

சூப்பர் செந்தில்,அடுத்த பாகத்தை மெதுவா எழுதுங்க.

☀நான் ஆதவன்☀ said...

நல்ல கவரேஜ் செந்தில். நன்றி :)

க.பாலாசி said...

தங்களின் வருகையிலும் பெருமகிழ்ச்சியடைகிறேன்....இடுகைக்கும் நன்றி...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கேபிள் சங்கர், நன்றி.

நன்றி செ.சரவணக்குமார்.

நன்றி துபாய் ராஜா.

நன்றி ஜாக்கிசேகர்.

நன்றி ஆரூரன். தங்கள் விருந்தோம்பல் எங்களை பரவசமடைய வைத்தது.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க முனைவர் குணசீலன். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. என் உரையைப் பற்றி எழுதியுள்ளதை வாசித்தேன். நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நன்றி சுந்தர் சார்.

நன்றி கார்த்திகேயன்.

வாங்க கண்ணா, நன்றி. இப்போ உடுமலை தான் இருக்கிறேன்.

நன்றி குசும்பன்.

நன்றி ஆதவன்.

நன்றி பாலாஜி. தங்கள் விருத்தோம்பலிற்கு நன்றிகள் பல.

கலையரசன் said...

எப்டியா..? எப்புடி?
கிளம்பி போன மறுநாளே அட்டன்டன்ஸ் போட முடியுது? என்னே கடமை உணர்ச்சி!! ம்... கலந்து கொண்ட அனைத்து பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும் அமீரகம் பதிவர் குழு சார்பாக வாழ்த்துக்கள்,.

ஈரோடு கதிர் said...

செந்தில்...
மிக நேர்த்தியான உரை..

நீங்கள் பகிர்ந்து கொண்ட விசயங்களையொட்டி சில திட்டங்கள் செய்ய மனதில் நினைத்திருக்கிறேன்

நன்றி

அகநாழிகை said...

பதிவு அருமை. பகிர்வுக்கு நன்றி.

- பொன்.வாசுதேவன்

butterfly Surya said...

அருமையான கவரேஜ். அட.. என் புகைப்படமும் இருக்கு..

நன்றி நண்பா.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் - நல்லதொரு முயற்சி(சந்திப்பு)

நல்லா காட்ச்சி படுத்தியிருக்கீங்க

பிரபாகர் said...

எந்த ஒரு விஷயத்திலும் செந்திலின் பாணி தனி என்பது தெரிந்த ஒன்றுதான். அருமை செந்தில், தொகுத்த விதம். நிகழ்வுகளை சொல்லுதலில் எந்த ஒரு விஷயத்திலும் தனித் தன்மையோடு இருக்கிறீர்கள். நன்றி செந்தில்...

பிரபாகர்.

sathishsangkavi.blogspot.com said...

அழகான பதிவு.......

Jazeela said...

இன்னும் விரிவாக விளக்க முடியாதது விளங்குகிறது. அடுத்த அமீரகப் பதிவர்கள் அமர்வில் இதுக் குறித்து விரிவாக சொல்லுங்கள். பதிவை விட புகைப்படங்கள் நிறைய விஷயத்தை அடக்கிவிட்டது :-)

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

cheena (சீனா) said...

அன்பின் செந்தில்

அருமையான இடுகை

சங்கமத்தில் சந்தித்துப் பேச இயலவில்லை - நேரம் குறைவே. நல்வாழ்த்துக்ள் செந்தில்

Jerry Eshananda said...

முழுமையான பகிர்வு செந்தி, சந்தித்ததில் தித்திக்கிறேன்

ஊர்சுற்றி said...

கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பாக ஈரோட்டுக்காரர்களுக்கு வாழ்த்துகள்.

Related Posts with Thumbnails