Monday, November 29, 2010

தொடர்பற்ற நாட்கள்.

பதிவெழுதி பல நாட்களாகிவிட்டன. சரியாக ஒன்றரை மாதத்திற்கு முன்பு பதிவெழுதியது. அலுவலக வேலை, இந்தியப் பயணத்திற்கான ஏற்பாடுகள், இந்தியப் பயணம் என்று ஏகப்பட்ட காரணங்களால் பதிவுலகத்துடன் தொடர்பில்லாமல் இருந்தேன். இந்த நாட்களை நினைத்துப் பார்க்கையில் பல விதமான எண்ணங்கள் மனதில் தோன்றுகின்றன.

ஒரு மாத கால இந்தியப் பயணத்திற்கான திட்டமிடுதலில் ஈடுபட்டிருக்கும் பொழுது இணைய வசதி வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது. சென்ற ஆண்டு இந்தியா சென்ற பொழுது வீட்டில் இணைய வசதியிருந்தது. அது போன்ற சமயத்தில் குடும்பத்தினருடன் செலவிட்ட நேரம் போக மற்ற நேரத்தில் இணையத்துடன் செலவிடும்படியானது. அந்த அளவிற்கு இணையமும் பதிவுலகமும் என்னைக் கட்டிப்போட்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

"ஊருக்கு வந்தும் பெட்டியத் திறந்து உக்காந்துக்கணுமாப்பா.." என்ற கேள்வி என் பெற்றோரின் பார்வையில் பல நாட்கள் பார்த்திருக்கிறேன். ஆக, இந்த விடுமுறையின் பொழுது "நோ நெட்"

இணைய வசதி இல்லாமல் எப்படி சென்றன நாட்கள்? 

இணைய வசதி இல்லாமையை ஃபேஸ்புக்கும், அலைபேசியும் ஓரளவு ஈடுகட்டியது. நான் ஊருக்கு வந்துவிட்ட செய்தி, என் தொடர்பு எண் என்று பல தகவல்களையும் என் நண்பர்களுக்கு ஃபேஸ்புக் மூலமாகத் தெரிவித்துக்கொண்டேன். ஏர்டெல்லும், ஃபேஸ்புக்கும் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தந்தால் www.o.facebook.com என்ற முகவரியில் இணையவசதி பெரும்பொழுது கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அலுவலக மின்னஞ்சல்களை மட்டும் ஓரிரு நாட்கள் வெளியே சென்று பார்த்துக் கொண்டேன்.

காலையில் வீட்டிற்கு வரும் செய்தித்தாள் மூலம் பெரும்பாலான செய்திகளைத் தெரிந்துகொண்டதால் நாட்டுநடப்புகளுக்கு அப்பால் இருக்கவில்லை. என்ன, நாட்டுநடப்புகளைப் பற்றி, பதிவுலக நண்பர்களின் கருத்துகளைத் தான் தெரிந்துகொள்ள முடியவில்லை. அனைத்து பதிவுகளும் கூகுள் ரீடரில் இருப்பதால் மெதுவாகப் படித்துக் கொள்ளலாம். 

என் வீட்டருகில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு பதிவுலகம் பற்றி எல்லாம் சிறிதளவும் தெரியவில்லை. இணையத்தை வெகுவாகப் பயன்படுத்தி வருபவர்கள் கூட இதைப் பற்றி சட்டை செய்துகொள்வதாகத் தெரியவில்லை. சிலரது வீட்டில் ஆங்கிலம், தமிழ், வர்த்தகம் என்று மூன்று வகையான செய்தித்தாள் வருவதைப் பார்க்க முடிந்தது. நாம் பதிவுலகம் மூலம் பெறும் செய்திகளுக்கு இணையாக அவர்களும் செய்திகளை அறிந்து தான் வைத்திருக்கிறார்கள்.

உறவினர்கள், பள்ளிக்கால நண்பர்கள், கல்லூரிக்கால நண்பர்கள், சென்னையில் உடன் பணிபுரிந்த நண்பர்கள் என்று பலரையும் பார்க்க வேண்டியிருந்ததால் இணையம் நினைவிற்குக் கூட பல நாட்கள் வரவில்லை. இவர்கள் அனைவரையும் நேரில் சென்று பார்த்த பொழுது உணர்ந்தது நேரில் சந்திப்பதற்கு இணை எதுவும் இல்லை என்பது தான். நான் சந்தித்தவர்களுள் பலர் என் பதிவுகளைப் படித்திருந்தாலும், அதைப் பற்றிய பேச்சு பெரிதாக இடம்பெறவில்லை. அதைத் தவிர ஏகப்பட்ட விசயங்கள் பேசுவதற்கு இருந்தது தான் காரணம்.

ஆங்கிலத்தில் "Spending value time" என்று சொல்வார்கள். அப்படி நேரம் ஒதுக்க வேண்டும் என்றால் எந்த ஒரு இடையூறும், அலைபாய்தலும் இல்லாமல் இருந்தாலே முடியும் என்று உணர்கிறேன். அப்படி ஒரு நேரத்தை தொடர்பின்மை எனக்கு ஏற்படுத்தியிருந்தது. தொடர்பற்று இருந்தலிலும் ஒரு வகை நன்மை இருக்கத்தான் செய்கிறது. குடும்பத்துடன் திண்ணையில் அமர்ந்து மழையை ரசித்துக் கொண்டே போண்டா சாப்பிட்டது, மொட்டை மாடியில் குடும்பத்துடன் அரட்டை அடித்தது, நண்பர்களுடன் குளிர்காற்றில் உலாத்தியது, வீட்டிற்கு வெளியே நின்று வானத்தை ரசித்தது, வீட்டின் பின்புறமிருக்கும் தோப்பை ரசித்தது எல்லாம் தொடர்பற்ற நாட்களை மறவாமல் இருக்கச் செய்கிறது.

தொடர்பற்று இருந்தது ஏதோ ரீவைண்ட் பட்டனை அழுத்திய உணர்வை ஏற்படுத்தியது. தொடர்பற்று இருக்க நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் :)

5 comments:

Chitra said...

"ஊருக்கு வந்தும் பெட்டியத் திறந்து உக்காந்துக்கணுமாப்பா.." என்ற கேள்வி என் பெற்றோரின் பார்வையில் பல நாட்கள் பார்த்திருக்கிறேன். ஆக, இந்த விடுமுறையின் பொழுது "நோ நெட்"

..... சரிதானே!

vasu balaji said...

ஹி ஹி. நெட் மட்டுமா. குட்டிப்பயலும் ஆளாளுக்குத் தூக்கி கொஞ்சி ஃபேஸ்புக் பார்த்த டைம்தானே கைக்கு வந்திருப்பாரு:))

பிரபாகர் said...

தொடர்பற்றிருத்தல் பற்றி எழுதி ஒரு ஆர்வத்தை கிளப்பி விட்டிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மைதான், தொடர்பற்று இருந்தால்தான், தொடர்பற்ற சில விஷயங்களை திரும்ப பெற இயலும். முயற்சிக்கிறேன்... பகிர்வுக்கு நன்றி செந்தில்...

பிரபாகர்...

ஹுஸைனம்மா said...

மிக உண்மை செந்தில். நானும் இந்தியா செல்லும்போதெல்லாம் இணையத் தொடர்பு இருப்பதில்லை. என்றாலும் எதுவும் இழப்பில்லை, செய்தித் தாள்கள் இருப்பதால்.

இங்கும் தற்போது வீடு மாறியிருப்பதால், மூன்று வாரங்களாக இணையம் இல்லாமல்தான் இருக்கிறோம். வித்தியாசம் தெரியவில்லை.

அதைவிட, 9 மாதங்களாக டிவி சேனலகள் எதுவும் இல்லாமல் இருக்கிறோம். மிக நிம்மதி; நேரம் நிறைய கிடைக்கிறது. பிள்ளைகள் நேரம் போவதற்காக செய்தித்தாளையும், புத்தகங்களையும் நாடுவதால் மகிழ்ச்சியே.

தாராபுரத்தான் said...

மனம் மடத்துகுளத்தை விட்டு வரமாட்டேனங்கதா..நல்ல மழை..அமராவதியில் எல்லா கதவுகளும் திறந்து தண்ணீர் பாய்வது கண்கொள்ளா காட்சிங்க..

Related Posts with Thumbnails