"உங்க ஐ.பி.எல் ஆளுங்களுக்கு முன்னாடியே தெரியாதா?"என்ற ஜார்ஜ் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். என்னுடன் அலுவலகத்தில் பணிபுரிபவர். மேலும் தொடர்ந்தவர்,"உங்க கிரிக்கெட் மேல இருந்த 'நம்பிக்கை' யே போயிடுச்சு"
"எனக்கு 'அது' போய் ரொம்ப நாளாச்சு" என்று சொல்ல நினைத்த நான், "ம்ம்... என்னங்க செய்ய?" என்றேன்.
"எங்க ஊர்லயும் தான் ஃபுட்பால் லீக் எல்லாம் நடக்குது. அங்க நாங்க இப்படியா பண்றோம்?"
தேநீர் இடைவேளையின் பொழுது ஜார்ஜ் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதிலே இல்லை!!
*
மாலை, நான் பேருந்தில் ஏறி ஓட்டுனரிடம், "எப்படி இருக்கீங்க?"என்றேன்.
ஒரு பார்வை பார்த்துவிட்டு, "நாங்க எல்லாம் ஷாரூக்கான் படத்தைப் பார்க்காமல் தவிர்க்கிறோமா? ஏன் இப்படி செய்கிறார்கள்?"என்றார். "இந்த முறை ஐ.பி.எல் நடக்கும் பொழுது வண்டியில் எஃப்.எம். போடப் போறதில்லை"என்றார்.
தீவிர கிரிக்கெட் ரசிகரான எங்கள் வாகன ஓட்டுனர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். பாகிஸ்தான் விளையாடினாலும் சரி, இந்தியா விளையாடினாலும் சரி, எஃப்.எம்.ல் வர்ணனையைப் போடுவார்.
*
மேலே குறிப்பிட்ட இரண்டு விவாதங்களும் நான் கடந்த ஓரிரு நாட்களாகச் சந்தித்தவை.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய இந்தியத் துணைக்கண்ட நாட்டு மக்கள் மொழி, இனம், சாதி, பொருளாதாரம் என எத்தனையோ வேற்றுமையால் பிளவு பட்டிருந்தாலும் இணைப்பது "கிரிக்கெட்" மட்டுமே.
அரசியல் ரீதியாக நம் நாட்டிற்கும் பாகிஸ்தானிற்கும் சுமூகமான உறவில்லாமற் போனாலும், இங்கே அமீரக அலுவலகங்களில், வெளியிடங்களில் பாகிஸ்தானியர்களுடன் நட்புறவுடனேயே பழகி வருகிறோம். அதற்குப் அலுவலக தருமம் (Professional Ethics ) காரணம் என்றாலும், பாலிவுட் போன்ற பொழுதுபோக்குத் தொடர்புகளும், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளும் காரணம் என்றால் மிகையில்லை!!
இப்பொழுது, கிரிக்கெட்டே சில சங்கடமான கேள்விகளை எழுப்பக் காரணமாகிறதென்றால் வருத்தமாகவே இருக்கிறது!!
ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் மற்றும் இதர சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது மொழி, இனம், அரசியல் போன்ற விசயங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் ஒன்றுபட வேண்டும் என்பதற்காகவே. அதே போன்ற எண்ணத்துடனேயே கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. கால்பந்தாட்டத்தின் சிறந்த வீரர்கள் திறமையை வெளிக்காட்டத் தகுந்த களத்தை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்டதே ஐரோப்பிய கால்பந்தாட்ட லீக் போட்டிகள்.
வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த சிறந்த வீரர்கள் ஒரே அணியில் விளையாடுவது ரசிகர்களுக்கும், நல்ல வருமானம் கிடைப்பதால் வீரர்களுக்கும் சாதகமாக அமைந்தது. இதில் கொட்டப்படும் பணமும், கிடைக்கும் புகழும், போட்டிகளில் இருக்கும் விறுவிறுப்பும் இப்போட்டிகள் பிரபலமாக இருப்பதற்கான காரணம்.
ஐரோப்பிய கால்பந்தாட்ட லீக்கைப் போலவே இந்தியப் பிரீமியர் லீக் போட்டிகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன. இந்தப் போட்டிகளில் வீரர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளமும், பன்னாட்டு வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பும் ஐ.பி.எல் 20-20 போட்டிகளையும் பிரபலமாக்கியுள்ளன.
சிறந்த வீரர்கள் அனைவரது பெயர்களும் ஏலத்திற்கு வந்த பொழுது சென்ற ஆண்டு நடைபெற்ற 20-20 உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியினரது பெயர்களும் ஏலத்தில் இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப் பட்டது. எதிர்பார்ப்பும் பொய்க்கவில்லை. ஆனால் அவர்களது பெயர்களை ஏலமெடுக்க எந்த அணியினரும் முன் வராதது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியையே எழுப்பியுள்ளது.
பாகிஸ்தான் அணியினர் கலந்து கொண்டால் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டியதிருக்கும், வேறெதாவது பாதுகாப்புக் காரணங்களால் அவர்கள் கலந்து கொள்ளாமற் போகக் கூடும் என்றெல்லாம் காரணத்தைக் கூறுகிறார்கள்!!
ஐ.பி.எல் அணியின் முதலாளிகள் எடுத்துள்ள முடிவுகள் நிறைய கேள்விகளை எழுப்புகின்றன!!
ஐ.பி.எல் போட்டிகளுக்கே பாதுகாப்பு வழங்க முடியாமற்போனால் இந்த வருடம் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளை எப்படி நடத்தப் போகிறார்கள்?
இந்தியக் கிரிக்கெட் வாரியத்தினர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பாகிஸ்தானுடன் சேர்ந்து 2011 உலகக் கோப்பையை நடத்தப்போகிறார்கள்?
ஒரு நாட்டு வீரர்களை எடுக்கிறோமா இல்லையா என்பதை முன்பே முடிவெடுக்க முடியாதா?
"என்ன செய்கிறோம் என்பதை விட எப்படி செய்கிறோம்" என்பதே முக்கியமான விசயம். அது தனி நபரானாலும் சரி, நிர்வாகத்தினரானாலும் சரி!! இல்லையென்றால் அனைவரிடமும் அவமானமும் அவநம்பிக்கையுமே ஏற்படும்!!
ஐ.பி.எல் போட்டிகளை எப்படி நடத்தினால் நமக்கென்ன? நமக்குத்தான் தினமும் கிரிக்கட் வீரகளையும் நடிக நடிகைகளையும் தொலைக்காட்சியில் பார்த்தாலே பசி தீர்ந்து விடுமே!! அதுவும் பிரைம்டைமில்!! வரவேற்போம் இந்திய பிரைம்டைம் லீக் - சீசன் 3ஐ!!
..