
நானும் அவனும் பள்ளியில் நெருங்கிய நண்பர்கள். அவன் ஆந்திராவைச் சேர்ந்தவன். அவனது தந்தைக்கு ஆந்திராவில் பல லாரிகள் ஓடிக்கொண்டிருந்தன. என் ஊரான உடுமலையில், அவனது உறவினரின் வீட்டில் தங்கிப் படித்து வந்தான். பள்ளிக்கல்வியை முடித்த பின்னர் அவன் ஆந்திராவில் உள்ள சித்தூரிற்குச் சென்று விட்டான். நான் கல்லூரிப் படிப்பு, வேலை என்று சென்னை வந்துவிட்டேன்.
இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் தொடர்பிலேயே இருந்து வந்தோம். பள்ளி நாட்களைப் போல அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன்பு கிடைத்தது. அப்பொழுது நான் ராணிப்பேட்டையில் வேலை பார்த்து வந்தேன். சித்தூர் ராணிப்பேட்டையிலிருந்து ஒரு மணி தொலைவில் உள்ள நகரம்.
அன்பரசனுக்கு அப்பொழுது ஏழெட்டு லாரிகள் இருந்தன. அவன் அலுவலகத்தில் சந்தித்தால் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படுவான். அதுவும் மாதக்கடைசியாகிவிட்டால் சொல்லவே வேண்டாம். எனக்கு அவன் தொழிலைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம்.
ஒரு நாள் மெதுவாக அவனிடம்..
"உன் தொழில் எப்படி போகிறது" என்றேன்.
"நன்றாகத் தான் போகிறது" என்றான்
"அதென்ன 950ன்னு ஏதோ சொல்லீட்டு இருந்த?"
"ஒரு டன்னுக்கு 950 ரூபாய்னு லாரியை புக் பண்ணீட்டு இருந்தேன்" என்றான்.
"ஏண்டா உன் கிட்ட இருக்கறது 16 டன் லாரிக தான? ஒரு டன்னுக்கு 950 ரூபாய்ங்கறது கட்டுமா?" என்றேன்.
"கண்டிப்பா கட்டாது" என்றான்
"அப்போ?"
"இங்க வா.. இந்த லாரியப் பாரு. இது 16 டன் டபுள் ஆக்சில் லாரி. இதுல 16 டன் ஏத்தி ஓட்டனும்னா 1200 ரூபாய் இல்லாம கட்டாது. அதுக்கு நாங்க குறைஞ்சது 25 டன்னுக்கு மேல ஏத்துவோம்" என்றான்.
"டேய்.. செக் போஸ்ட் எல்லாம் இருக்குமே டா" என்றேன். நமக்கு இதெல்லாம் தெரிஞ்சாத்தானே..
"அட மாப்ள.. இதெல்லாம் அட்ஜஸ்மண்ட் தாண்டா.. நம்ம லாரி ரெகுலரா சித்தூர்ல இருந்து விசாகப்பட்டணம் வரைக்கும் போகுதுன்னா, மாசத்துக்கு ஒரு லாரிக்கு 15000 ரூபா கட்டீருவோம். இது செக்-போஸ்ட் கிளர்க்ல ஆரம்பிச்சு சின்ன மந்திரி பெரிய மந்திரி வரைக்கு பங்கு போயிடும். அதுக்கு ஈடு செய்யத்தான் நாமலும் ஓவர்லோட் பண்ணீருவோம்" என்று சிரித்தான்.
"சிஸ்டமேட்டிக்கா நடக்குதுனு சொல்லு"
"ஆமா.. ஒரு இடத்துல கட்டீட்டாப் போதும்"
"நீயி.. கட்டமாட்டேன்னு சொன்னீன்னா என்னாகும்" என்றேன்.
"என்னாகும்.. சரியா லோடு கொண்டு வந்தாலும் அந்த இன்வாய்ஸ்ல சொத்தை, பேப்பர்ல சொத்தை, ரோட் பெர்மிட்ல சொத்தைனு சொல்லி காக்க வைப்பானுக. மாசத்துக்கு 5 லோடு அடிக்கற எடத்துல நான் மூனு லோடு தான் அடிக்க முடியும்" என்றான்.
"சரி..16 டன் லாரில எப்படி 25 டன்னுக்கு மேல எத்த முடியுது?" என்றேன்.
"லாரி தயாரிக்கற கம்பெனிகளுக்கு என்ன வேணும்? அவங்க லாரிக நல்லா விற்பனை ஆகணும். அவங்க நல்லா லோடு தாங்கற மாதிரி லாரிகளத் தயார் பண்ணிடறாங்க. லாரிகளும் நல்லா விற்பனை ஆகுது. லாரிகள ஓவர்லோடு பண்றதுல நம்மள விட யாருக்கு லாபம்னு உனக்கே தெரியும்.." என்று கண்ணடித்தவன்
"இதோட நிக்கறது இல்ல.. நம்ம அரசாங்கம் தான ரோடு போடுது. நம்மள மாதிரி ஓவர்லோடு பண்ணினா ரோடெல்லாம் குண்டும் குழியும் ஆகிடும். அப்புறம்.. ஒட்டுப்போடறதுக்கு காண்டராக்ட் விடுவாங்க. அந்த காண்டாக்ட யார் எடுப்பாங்கனு உனக்கே தெரியும்.. ரோடு ரிப்பேர் பண்றது மாதிரி லாபமான பிசினஸ் எதுவுமே கிடையாது!!"என்றான்.
"இதோட முடிஞ்சுதா இல்ல..." என்று இழுத்ததற்கு
"நான் கடந்த பத்து வருசமா இதுல தான் இருக்கேன். எனக்குத் தெரிஞ்சு கண்டெயினர் பிசினஸ், டையர் கம்பெனிகனு எல்லாப் பக்கமும் இதே அட்ஜஸ்மண்ட் தான். நான் பிசினஸ் ஓட்டனுமனா இதை செஞ்சே தான் ஆகனும்" என்றான்.
அதற்குள்ளே அவனுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்துவிட்டது.
"சில வருசத்துக்கு முன்னாடி புதுசா ஒருத்தர் MP ஆனார். அவர் கட்சிக்கு நிறைய நிதியுதவி செஞ்சதால இந்த சீட் கிடைச்சுதாம். ஓரளவு நல்ல ஆள். அவர் வந்ததும் ஒவ்வொரு இடத்துக்கும் ஆளப் போட்டாங்க கட்சில. அவரு எந்த திட்டத்துக்கு எவ்வளவு வாங்கணும், எந்தக் கையெழுத்துக்கு எவ்வளவு பங்கு வரணும்னு எல்லா சொல்லிக் கொடுத்தாங்க. இப்ப பாரு.. அந்த ஆளும் நல்லா (?) தொழில் பண்ண ஆரம்பிச்சுட்டாரு" என்றான்.
"நேர்மையாத் தொழில் பண்றது நம்ம கையில இல்ல போல.. நீ சொல்றத பார்த்தா"என்றேன்.
"ஆமா.. மேல இருக்கவன் என்ன நினைக்கிறானோ அதப் பொறுத்துத் தான்.." என்றான்.
*******************
இது அன்பரசனுக்கு மட்டுமல்ல.. நம் அனைவருக்கும் தான். 50 ரூபாயில் முடிக்க வேண்டிய திருமணப்பதிவை 1000 ரூபாய் கொடுத்து முடிக்கிறோம். எதற்காக? நேர விரயத்தைத் தவிர்ப்பதற்காக!!
நம் நாட்டில் ஏற்படும் இந்தப் பழக்கம் வெளிநாடுகளுக்குச் சென்ற பொழுதும் வருவதுதான் வேடிக்கையானது.
துபாயில், நம் நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் ஓட்டுனர் உரிமம் கொடுக்கும் ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுத்ததாக அண்மையில் இங்குள்ள நாளிதழில் வெளிவந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அந்த நாட்டு ஓட்டுனர் உரிமம் செல்லும். ஆனால் நம் நாட்டில் எடுத்த ஓட்டுனர் உரிமத்திற்கு சிறிதளவும் மதிப்பு கிடையாது.
தொழில் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக நாம் "ஆயுத பூஜை"யைச் செய்கிறோம். ஆனால் நேர்மையாக நடக்க வேண்டும் என்று என்றாவது தோன்றியிருக்கிறதா?
உங்களுக்கு இந்தப் பதிவு பிடிச்சிருந்தா மறக்காம தமிழிஷ்லயும் தமிழ்மணத்திலயும் ஓட்டுப்போடுங்கள். உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள்.