Saturday, May 30, 2009

பாட்டு பஸ்

இந்த தலைப்ப பார்த்தவுடனே உங்களுக்கு என்ன ஞாபகமுங்க வருது?
எனக்கு என்னோட சின்ன வயசு ஞாபகம் தாங்க வருது...

ஆல் இந்தியா ரேடியோ, சீலோன் ரேடியோல மட்டும் தான் பாட்டு கேட்க முடியும்ங்கற காலத்துல தாங்க இந்த "பாட்டு பஸ்" பிரபலம் ஆக ஆரம்பிச்சுது.

வீட்டுல "டபுள் ஸ்பீக்கர் டேப் ரெக்காடர்" இருந்தாலும் "கம்பனி கேசட்டு" வாங்கறதுக்கு காசு கிடைக்காது.நம்ம மாதிரி ஆட்களுக்கு புது பாட்டு கேட்கனும்னா ஊர்ல ஏதாவது கோவில் விஷேசம் வரனும். அப்போ தான் "மைக் செட்" போட்டு பாட்டு போடுவாங்க, நம்ம "மைக்செட்" அண்ணனுங்க!!

இந்த சீஸன்ல, தனியார் பஸ்காரங்க பாட்டு போடறது (Unique Selling Proposition) செம ஹிட் ஆக ஆரம்பிச்சுது. எங்கப்பாவுக்கு "சேரன் ட்ரான்ஸ்போர்ட்"ல போறது தான் பிடிக்கும். ஏன்னா, பாட்டு போடாம இருந்தா தான தூங்க முடியும் :) நமக்கு அப்படியே நேரெதிர்!!

பாட்டு பஸ்ல ஏறி ஜன்னல் சீட்டுல உட்கார்ந்துட்டு பாட்டு கேக்கற சுகம் இருக்கே!! ஒரு பக்கம் பாட்டு, ஜன்னல் வழியா மேற்கு மலைத்தொடர் அழகு, சிலு சிலு காத்துனு பஸ்ல போற அனுபவம் இருக்கே, அதுக்கு ஈடு வேற எதுவுமே கிடையாதுங்க!! நமக்கு "இளையராஜா" அறிமுகம் ஆனதே அப்படித்தாங்க!!

பாட்டு பஸ் இன்னோரு விஷயத்துக்கும் ரொம்ப பிரபலம். காதலர்களும், இளம்பெண்களும் அதிகமா சந்திக்கற இடமே பாட்டு பஸ்ஸா தாங்க இருக்கும். அங்கங்க சீட்ல காதலர்களோட பேர பதிக்கறதும், தன்னோட ஆளுக்கு சீட் பிடிச்சு வைக்கறதும் சாதாரணமாப் பார்க்க முடியுமுங்க!!

கொஞ்சம் குறும்பான ஆளுக "புகை பிடிக்காதீர்"ல "பு"வ சொரண்டி, "கை பிடிக்காதீர்" ஆக்கி இருப்பாங்க!! "சிரம் கரம் புறம் நீட்டாதே"யும் "ரம் ரம் புறம் நீட்டாதே" ஆகியிருக்கும்!! "பூவையர்"ங்கற போர்டு "பூவையார்?" ஆனதும் உண்டு!!

நம்ம பாட்டு பஸ்ல ஹீரோ யாருன்னு சொல்லுங்க?

டிரைவர் தாங்க ஹீரோ!! எங்க ஊருப்பக்கம்( கோவை) "பூவையர்"கள் சீட்னா டிரைவர் பக்கம் தான்!! நம்ம டிரைவர்க ஒரு கர்சீப்ப காலர்ல கட்டீட்டு, கையில HMT வாட்ச் கட்டீட்டு, கீர் மாத்தற ஸ்டைல் இருக்கே!! அதுவும் ஒரு ஸ்டைலா ஆரன் அடிச்சுட்டே NHல ஒரு கட் அடிப்பார் பாருங்க, பஸ்ல இருக்கற பசங்களுக்கு "நம்ம பிகர இவுரு தள்ளீட்டு போயிடுவாரோன்னு பயமே இருக்குமுங்க".

சென்னை மாதிரி பீச் எல்லாம் இல்லாத ஊருன்னா மத்த ஸ்கூல், காலேஜ் பொண்ணுகள பாக்கற வாய்ப்பே இந்த பாட்டு பஸ்ல மட்டும் தாங்க!! தன்னோட ஆளுக்கு பிடிச்ச கேஸட்ட கொண்டு வந்து போடறதும், "இந்தப்பாட்டு உனக்கு தான்"னு கண்ணுலயே ஜாடை பண்றதும் அடடா!! பாட்டு பஸ்ங்கற பேருக்கு ஏத்த மாதிரி சவுண்ட் சிஸ்டம் எல்லாம் லேடஸ்டா இருக்கும். பஸ்ல "DTS Surround"னு எழுதி இருக்கறதையும் பார்க்க முடியும்.

"காலங்காத்தாலயே பஸ் ஸ்டாண்டுக்கு போயிடறான்.. எத்தன பஸ் வந்தாலும் ஏற மாட்டேங்கறான்.. எட்டரை மணி "கமலம்" வந்தா மட்டும் தான் போறான்"னு வீட்ல பேசறது கேட்க முடியும். "கமலம்" எங்க ஊரு பிரபலமான பாட்டு பஸ் பேரு. அந்த பஸ்ல போய் ஸ்கூல்ல இறங்கும் போது ஒரு பெருமை வரும் பாருங்க!! நம்ம "ஓனிடா" விளம்பரத்துல சொல்ற மாதிரி "அண்டை வீட்டாரின் பொறாமை, நமக்கோ பெருமை"!!

பாட்டு பஸ்களோட இன்னோரு அன்றாட விஷயம் பஸ் ஸ்டாண்டுல அரசுப்பேருந்து டிரைவர்களோட நடக்கற சண்டை!! பின்னே, அவங்க பஸ்ல கூட்டமே வரலைன்னா?

அப்படியே மெதுவா சேரன் பஸ்கள்லயும் பாட்டு போட ஆரம்பிச்சாங்க பாருங்க போட்டிய சமாளிக்க!! ( இதுக்கு தான் தனியார்கள உள்ள விடனும்னு சொல்றாங்களோ?)
நம்ம இப்போ செல்போன்ல பார்க்கற Convergence, (அதாங்க வெவ்வெற சேவைய ஒருங்கிணைக்கறது) அப்பவே நம்ம பஸ்கள்ல வந்திருச்சு.

இப்ப நம்ம ஊருக்குப் போய் பார்த்தா, பாட்டு பஸ் எல்லாம் "வீடியோ பஸ்"ஸா ஆயிடுச்சுங்க!! பின்ன காலத்துக்க ஏத்த மாதிரி மாற வேண்டாமா? அது தான் திரும்பற பக்கம் எல்லாம் FM சேனல் வந்திருச்சே!!

சும்மா சொல்ல கூடாதுங்க "வீடியோ பஸ்"ல பாத்தம்னா, நாலு டிவி, DTS சவுண்ட்னு ஒரே அதகளப்படுத்தறாங்க!! முன்னாடியாவது வீடியோ, சிடி போடுவாங்க. இப்பல்லாம் USB தான். செல்போன் சார்ஜ் பண்ற சாக்கட்னு அசத்தறாங்க!! நம்ம கண்டக்டர் "டிக்கட்" வாங்க சொல்ற சத்தத்தோட நமக்குக் கேட்கற இன்னோரு சத்தம் "டிவிய மறைக்காதப்பா"ங்கறது தான்!!

உங்களுக்கும் "பாட்டு பஸ்" அனுபவங்கள் இருந்தா கீழே பதிவு செய்யுங்க!!
..

Friday, May 29, 2009

அது ஒரு "பிக் ஃபன்" காலம்!!

நம்ம சின்ன வயசுல எதுக்கெல்லாம் அம்மா அப்பா கிட்ட திட்டு வாங்கி இருப்போம்?

படிக்கறதுக்கு, சாப்பிடறதுக்கு, குறும்பு-சண்டை போடறதுக்கு,..... இது கூட அதிகமா "பப்புல் கம்" சாப்பிடறதுக்கும் திட்டு வாங்கி இருப்போம்!!

"பப்புல் கம் முழுங்கீட்டீன்னா குடல்ல சிக்கிக்கும்"னு வீட்ல சொல்றதயும் கேட்காம, அந்த பப்புல் கம் மேல அப்படி ஒரு மோகம்!!
மோகத்துக்கு காரணம் கிரிக்கட் தாங்க!!


"பிக் ஃபன்" பப்புல் கம் கவர பிரிச்சா அதுல நம்ம கிரிக்கட் வீரர்களோட படத்தோட "score 6 runs" அல்லது "Score 4 runs"னு ஒரு பேப்பர் இருக்கும் பாருங்க அதுக்குத்தாங்க இத்தன அடிதடி!!

அதுலயும் கபில்தேவ், விவ் ரிச்சர்ஸ் காகிதம் வராதானு ஒவ்வொருத்தருக்கும் போட்டியா இருக்கும். ஏன்னா அதுல தான "score 6 runs" வரும். அந்தக் ஸ்டிக்கர் கிடைக்கறதுல ஒரு பெருமை வரும் பாருங்க. ஸ்கூலுக்கு போனாலும் நம்ம பாக்கட்ல அந்த ஸ்டிக்கர் கலெக்ஷன் இருக்கும்...

இத சேர்த்து என்ன பண்ண?


இந்த காகிதங்கள எல்லாம் சேர்த்து எடுத்துட்டு போய் கடைல கொடுத்தம்னா, கடைக்காரரு அடுத்த மாசம் ஆரம்பிக்கப் போற போட்டியோட அட்டவனையோ அல்லது கிரிக்கட் வீரர்களோட போட்டாவையோ கொடுப்பாரு....

100 ரன் சேர்த்தோம்னா - ஒரு கிரிக்கட் வீரரோட கையெழுத்துப் போட்ட படம் அல்லது அட்டவனை...
200 ரன் சேர்த்தோம்னா - கிரிக்கட் வீரர்கள் வெவ்வெற ஷாட் அடிக்கிற மாதிரி படங்கள்.

எனக்கு ஹூக் (hook), கட்(cut), புல்(pull), டிரைவ்(drive) எல்லாத்துக்கும் அறிமுகமே இந்த பிக்ஃபன் படங்கள் தான்.. அதுக்கு முன்னாடி நமக்கு தெரிஞ்சதெல்லாம் டொக்கு வைக்கறது, கூட்டறது, வழிக்கறது போல ஷாட் தான :)

இந்த "பிக்ஃபன்" மார்க்கெட்டிங் உத்தி ரொம்ப பாரட்டப் பட வேண்டியது தான். சும்மா ஒரு 25 பைசா "பப்புல் கம்"ம அருமையா கிரிக்கட்டோ இணைச்ச விஷயம் ஆச்சர்யம் தாங்க!! இந்த அளவுக்கு வேற எந்த ஒரு பிராண்டையும் கிரிக்கட்டோட இணைச்சுப் பார்க்க முடியல!!

இப்ப தான் எந்த சேனல போட்டாலும், எந்த விளம்பரத்த பாத்தாலும் கிரிக்கட் வீரர்கள் ஆச்சே!! அதனால தான் இந்த மாதிரி உத்தி எதுவும் வரலேன்னு நினைக்கறேன்...

இப்போ "பிக்ஃபன்" கம்பெனி இருந்த இடம் தெரியாம போயிட்டாலும், நம்ம சின்ன வயசு கிரிக்கட் ஞாபகத்துல இந்த "பிக் ஃபன்" பப்புல் கம்முக்கும் ஒரு இடம் இருக்கும்...

என்ன சொல்றீங்க?

உங்க நினைவுகளையும் கீழே பதிவு செய்யுங்க!!
.............

பாட்டு பஸ் பத்தின மலரும் நினைவகளையும் படிச்சுப் பாருங்க :)

.......

Monday, May 25, 2009

தேடலுக்கு கூகுள்.. பாடல்களுக்கு? ஸ்பாட்டிஃபை(SPOTIFY)

நமக்கு நோட்டிஃபைங்கற ஆங்கில வார்த்தை தெரியும்..ஸ்பாட்டிஃபை (SPOTIFY) தெரியுமா?

ஏதோ கடினமான ஆங்கில வார்த்தைனு நினைச்சு அகராதி எல்லாம் தேடாதீங்க!!

தகவல்களுக்கு எப்படி விக்கிபீடியாவோ, தேடலுக்கு எப்படி கூகுளோ அந்த வரிசைல "பாடல்கள்னா ஸ்பாட்டிஃபை"ங்கற இலக்கு நோக்கி ஆரம்பித்த நிறுவனம் தான் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த SPOTIFY நிறுவனம்.

நமக்கு தெரியாத பாடலா? நாம தான் எல்லாத்தையும் வலையதளத்துல இருந்து (ஓசில) தரவிரக்கம் செய்யறோமே இது எதுக்கு புதுசான்னு நீங்க நினைக்கறது புரியுது.

ஸ்பாட்டிஃபை சேவையும் ஆர்குட், ஃபேஸ்புக் போல சமூக வலைத்தள அமைப்பு உடையது தான். இதில் கணக்கு வைத்துக்கொள்ள ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர் நம்மை அழைக்க வேண்டும்.

இதில் சேர்வதால் என்ன பயன்?

லட்சக்கணக்கான பாடல்களை இலவசமாக வலைத்தளத்திலேயே கேட்க முடியும். இது வரை பத்து லட்சத்திற்கும் மேலானா பாடல்கள் உள்ளதாம் இந்த தளத்தில். நம்ம ராகா.காம் (Raaga.com) ஏற்கனவே இது போல சேவை வைத்திருந்தாலும் இந்த அளவிற்கு சர்வதேச பாடகர்களின் பாடல்கள் இருக்குமா என்பது சந்தேகமே!!

ஃபேஸ்புக்கில் எப்படி நாம் நமக்கு பிடித்த விஷயங்களை நண்பர்களுக்கு பகிர்கிறோமோ, அதே போல பாடல்களையும் பகிர முடியும். ஒவ்வொரு நாளும் தோராயமாக 40ஆயிரம் பேர் கணக்கு ஆரம்பிக்கிறார்களாம், ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கில் பாடல்கள் சேர்க்கபடுகிறதாம். ஆப்பிள் நிறுவனம் ஸ்பாட்டிஃபையை தங்கள் செல்போனிலேயே உபயோகிக்கும் படி தொழில்நுட்பத்தை தயாரித்து வருகிறார்கள் என்பது இங்கே கொசுறு செய்தி!!

பெரிய இசை வெளியீட்டு நிறுவனங்கள் அனைத்தும் ஸ்பாட்டிஃபையுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஸ்பாட்டிஃபையில் கணக்கு வைத்திருப்போர் பாடல்களை தரவிரக்கம் செய்யவேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும். இது தான் ஸ்பாட்டிஃபையில் வர்த்தக முறை (Business Model)

இப்படி நமக்கு நல்ல "அசல்" இசையை அனுபவிக்கும் வாய்ப்பு, இசை வெளியீட்டு நிறுவனங்களுக்கு விற்பனையில் வர்த்தகம், ஸ்பாட்டிஃபைக்கு விளம்பரத்தில் வருமானம்னு இது ஒரு வெற்றி-வெற்றி-வெற்றிக் கூட்டணி!!

உங்கள் நண்பர் யாரும் ஸ்பாட்டிஃபையில் கணக்கு வைக்கவில்லை என்றால் www.spotify.com என்ற முகவரிக்கு உங்கள் ஈமெயில் முகவரியைக் கொடுத்து பதிவு செய்யுங்கள்.

ஆர்குட், ஃபேஸ்புக், ப்ளாக்கர் என தமிழர்கள் புகுந்து கலக்கும் போது ஸ்பாட்டிஃபைய மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும்?
நான் பதிவு செய்து விட்டேன், நீங்க ஸ்பாட்டிஃபைக்க தயாரா? Are you ready to spotify?

.........................................


நோக்கியா பற்றிய இந்தப் பதிவையும் படிச்சு பாருங்க...

"ஓவி"யை வரவேற்கத் தயாரா?

Sunday, May 24, 2009

கூகுளுக்கு ஒரு சவால்.... வந்திருச்சு வொல்ஃப்ரம் ஆல்பா!!

நமக்கு ஏதாவது ஒரு பொருளைப்பற்றியோ அல்லது துறையைப் பற்றியோ உடனடியாகத் தெரிந்து கொள்ள என்ன செய்கிறோம்?

விக்கிபீடியா, கூகுள் போன்ற வலைத்தளங்களில் தேடுகிறோம். கூகுள் என்றால் தேடிய விஷயம் சார்ந்த வலைத்தளத்தையும், விக்கிபீடியா என்றால் அந்த தளத்திலேயே நொடிப்பொழுதில் தேடித்தருகின்றன..

இவை இரண்டும் நமக்கு அருமையான சேவை தருகிறது என்பதில் வேறு கருத்தில்லை...

ஆனால், நமக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கணித்தும், சம்பந்தப்படுத்தியும் பார்க்க வேண்டுமென்றால் இந்த சேவைகளால் முடிகிறதா?

உதாரணத்திற்கு "இன்று காலை நான் உண்ட வாழைப்பழத்தில் எத்தனை காலோரி சக்தி உள்ளது, நமக்கு அது எந்த அளவிற்குப் போதுமானது" என்று பார்க்க, கூகுளில் தேடினால் வேறோரு தளத்தில் மீண்டும் தேட வேண்டும்.

இன்னொரு தேடல், "நம்ம ஊர் உடுமலைப்பேட்டையில் இருந்து நியூயார்க் எவ்வளவு தூரம்?" என்று தேடினால், பதில் கிடைக்க குறைந்தது 10 நிமிடம் ஆகும்..

இது போன்ற கேள்விகளுக்கு உடனடியாக பதில் வேண்டுமா? கவலை வேண்டாம்.. புதிதாக வந்திருக்கிறது "வொல்ஃப்ரம் ஆல்பா" ஓரிரு உதாரணங்களைப் பார்க்கலாமா?

முதலில் உடுமலைப்பேட்டை டு நியூயார்க் - உடுமலையில் இருந்து நியூயார்க் எவ்வளவு தூரம், இரண்டு ஊர்லயும் மக்கள் தொகை எவ்வளவு, இரண்டு ஊர்களைப் பற்றியும் மேலும் சில தகவல்கள் அங்கேயே!! http://www40.wolframalpha.com/input/?i=udumalpet+to+Newyork



இன்னொரு உதாரணம்.. ஆப்பிள் நிறுவனத்தையும், கூகுள் நிறுவனத்தையும் நொடியில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமா?
http://www40.wolframalpha.com/input/?i=Apple+Google





உங்கள் தங்கைக்கு அல்லது மகளுக்கு ஒரு புள்ளியியல் கணக்குப் போடனுமா? இதோ... http://www40.wolframalpha.com/input/?i=SD+of+55%2C35%2C78%2C50%2C68%2C70%2C48




நம்ம நாட்டோட தனி நபர் வருமானத்தை வேற ஏதாவது ஒரு நாட்டோட ஒப்பிடனுமா கவலை வேண்டாம் http://www40.wolframalpha.com/input/?i=India+China+per+capita+income


இது மட்டும் இல்லை.. கணிதம், புள்ளியியல், புவியியல், சமூக பொருளாதார தகவல்கள், வானிலை, மொழிகள், பொறியியல் கணக்குகள், பொருட்கள், பொருளாதாரம், புத்தகங்கள், மருத்துவத் தகவல்கள் என அனைத்து துறைகள் சார்ந்த ஒப்பீடுகளையும் கணிப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமா இதோ இருக்கிறதே வொல்ஃப்ரம் ஆல்பா..
http://www40.wolframalpha.com/examples/


வொல்ஃப்ரம் ஆல்பா.. - மே 18ம் தேதியன்று வெளியிடப்பட்ட ஒரு தேடல் சேவை நிறுவனம். எந்த வகையான கேள்வியையும், கணிப்புகளையும் தர "வொல்ஃப்ரம்" எனபவர் ஆரம்பித்த நிறுவனம் தான் வொல்ஃப்ரம் ஆல்பா. என்ன? நீங்களும் உபயோகிச்சுப் பாருங்க... பிறகு சொல்லுங்க வொல்ஃப்ரம் ஆல்பா.. கூகுளுக்கு சவால் தானே?
..........


நோக்கியா பற்றிய இந்தப் பதிவையும் படிச்சு பாருங்க...

"ஓவி"யை வரவேற்கத் தயாரா?

Friday, May 22, 2009

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலே குறிப்பிட்ட குறளின் படி நாம் நடக்கிறோமா?

நாம் அன்றாடம் படித்து, பார்த்து, கேட்டு வரும் செய்திகள் தான் இந்தக் கேள்வியை எழுப்புகிறது. பத்திரிக்கைகளைப் படிப்பதை விட, செய்திச்சேனல்களையும், அவர்களது வலைத்தளங்களைப் படிப்பதில் ஆர்வம் அதிகரித்து வருவது தான் இந்த கேள்விக்குக் காரணம்.

பத்திரிக்கைகளிலும், தமிழ் தொலைக்காட்சிகளிலும் எவை கட்சிச்சார்புடையவை, மதச்சார்புடையவை என்று ஓரளவு நமக்குத் தெரியும். அதுவே ஆங்கில சேனல்கள் என்றால், ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்வது சாத்தியமே இல்லை என்று தான் தோன்றுகிறது.

கடந்த ஓரிரு மாதங்களாக செய்திச் சேனல்களைப் பார்த்து வருபவராக இருந்தால் இது நன்றாகப் புரியும்.

"அரசியலையும் தேர்தலையும் தவிர வேற செய்திகளே கிடையாதா?" என்று நினைக்கும் அளவிற்கு திரும்ப திரும்ப ஒரே செய்தி! நாள் முழுவதும் காட்டும் செய்தியை பிரபல நாளிதழ்கள் என்றால் ஒரே பக்கத்தில் முடித்துவிடுவார்கள்.

பரபரப்பான செய்திகள் எப்போது கிடைக்கும் என்று அலையும் போக்கும், தாங்கள் தான் முதலில் இந்த செய்தியைக் கொடுத்தோம் என்றும் தம்பட்டம் அடிக்கும் போக்கும் அதிகரிப்பது தான் இதற்குக் காரணம். இன்றைய பரபரப்பு செய்தி, நாளை தடம் தெரியாமல் போய்விடுகிறது.

ஓரிரு வாரங்களாக தலைப்புச்செய்திகளில் இடம்பிடித்த, சிங்கூர் டாடா பிரச்சனையைப் பற்றியோ, அனு ஆயுத ஒப்பந்தந்தத்தின் இன்றைய நிலை பற்றியோ இவர்களுக்கு கவலை இல்லை. மேலும், மும்பையில், பிகாரிகளுக்கு எதிராக நடந்த கலவரம் பற்றிய பரபரப்பு, அடுத்து வந்த மும்பை குண்டு வெடிப்பால் மறைந்து விட்டது.

பரபரப்புடன் காட்டிய ஆருஷி கொலை வழக்கின் இன்றைய நிலை என்ன? இந்த செய்திச்சேனல்கள் ஆருஷியையும், அவரது பெற்றோரையும் இழிவுபடுத்தியது தான் மிச்சம்.

தேர்தல் முடிவிற்கு முன்பு வரை, இந்தக் கட்சி தான் வெற்றி பெரும் என்று கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுவிட்டு, தேர்தலின் முடிவு வேறு மாதிரி மாறிய பிறகு, தாங்கள் தான் முதலே இதைக் வெளியிட்டோம் என்று கூறுவதை என்னவென்று சொல்ல? இது போன்ற சமயங்களில் நமக்கு எழும் கேள்வி, "இவர்களுக்கு நன்னெறியைப் (ethics) பற்றித் தெரியுமா?" என்பது தான்.

ஒவ்வொரு செய்தியையும் தீர அலசுகிறார்களா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. பல தரப்பினர்களையும் ஒன்றாக அழைத்து மோத விடுவதும், அவர்கள் கருத்துகளைக் கூற வரும் போது தடுத்து நிறுத்துவதும் ஏதோ சண்டைக் காட்சியைப் பார்க்கும் உணர்வே நமக்கு வருகிறது. இதன் மூலம் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போருக்கு என்ன பலன் கிடைக்கும்?

இது போன்ற செய்திச்சேனல்கள் அளிக்கும் செய்திகள் அனைத்தும் நடிக நடிகைகளைப் பற்றிய வதந்தியைப் போன்றது தான்! டி.ஆர்.பி ரேட்டிங்கிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் இவர்கள் மாறுவார்களா என்பது சந்தேகமே!!

இதற்கிடையில், "இத்தன நியூஸ் சேனல் இருக்கும் போது நியூஸ் பேப்பர் எதுக்கு?" என்று நண்பர்கள் கூறுவது கவலையளிக்கிறது.

இதைப் பார்க்கும் போது, பிரபல நாளிதழ்களின் தலையங்கங்களைப் (Editorial Column) படித்து, எந்த வகையான தலைப்பாக இருந்தாலும் விவாதிக்கும் பழக்கம் நமது முந்தய தலைமுறையினரோடு முடிந்து விட்டதோ என்றே தோன்றுகிறது.

நமது ஊரில் நடக்கும் நிகழ்வுகளின் நிலையையே சரியாக புரிந்து கொள்ளாமல் இருந்தால், உலகளவில் நடக்கும் நிகழ்வுகளை எப்படி நம்மால் புரிந்து கொள்ள முடியும்?

உதாரணத்திற்கு, பங்குச்சந்தை உயர்வது சம்பந்தமான செய்திகளைப் பார்த்தால் இந்தியப் பொருளாதாரமே உயர்வது போல தோற்றமளிக்கும். பங்குச்சந்தையில் கணக்கு வைத்திருப்பதோ ஒரு சதவிதத்தினர் தான்!!

அதேபோல இன்றைய தேதியில் முக்கியமான பிரச்சனையாக இருக்கும் இலங்கைத் தமிழர் பிரச்சனையை, ஆங்கில சேனல்களை மட்டும் பார்ப்பவர்களுக்கு, ஏதோ விடுதலைப் புலிகளின் பிரச்சனை என்றோ, தமிழ்நாட்டின் தேர்தல் பிரச்சனை என்றோ தான் காட்சி அளிக்கிறது.

இது போன்ற "முழுமையாக அலசப்படாத" செய்திகளைப் பார்த்து விட்டு, இணையதளங்களில், "தமிழர்கள் எங்கு இருந்தாலும் பிரச்சனை தான். மலேசியாவிலும் பிரச்சனை, இலங்கையிலும் பிரச்சனை..." என்ற ரீதியில் பயனர்கள் விவாதிப்பதை என்னவென்று சொல்ல?

ஒவ்வொரு விஷயத்திலும் தீர ஆராய்ந்து புரிந்து வைத்திருப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

அதை விடுத்து "பரபரப்பிற்கு மட்டும் மதிப்பளித்தோம் என்றால் நாம் மயக்கத்தில் இருக்கிறோம்" என்றே அர்த்தம்!!

Saturday, May 9, 2009

வெள்ளியங்கிரி மலைக்குப் போலாமா?

"மாப்ளே, சித்ரா பௌர்னமி வந்தாச்சு.. இந்த வருஷம் வெள்ளியங்கிரி மலைக்குப் போலாமா?"


நம்ம கோயம்புத்தூர் பக்கம் இருக்கற இளந்தாரிப் பசங்களுக்கு சித்திரை மாசம் பௌர்னமி வந்திருச்சுன்னா, வெள்ளியங்கிரி மலைக்கு போறத பத்தித்தான் பேச்சு!!

ஏப்பா, இளந்தாரிப்பசங்க ஊட்டி, கொடைக்கானல் போறத தான் பாக்க முடியும். இது என்ன புதுசா இருக்கேனு நினைச்சீங்கன்னா, வெள்ளியங்கிரி மலை பற்றி ஒரு அறிமுகம்!!

கோவை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து மலை உச்சிக்குச் சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் இருப்பதும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தான்!!


நாம் வழக்கமாக செல்லும் திருப்பதி, பழநி போன்ற மலைகளுக்கு இருக்கற மாதிரி பேருந்துகளோ, வின்ச் சர்வீஸோ வெள்ளியங்கிரி மலைக்கு கிடையாது. இங்கே இருப்பதெல்லாம், "நடைராஜா சர்வீஸ்" தான்!! மேலும், மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு எல்லா நாட்களும் போக முடியும். ஆனால், வெள்ளியங்கிரி மலைக்கு, சித்திரா பௌர்னமிக்கு பிறகு வரும் 10 நாட்கள் மட்டும் தான் செல்ல முடியும். அதுவும் இரவில் தான். பகலில் என்றால் வெயில் சுட்டெரித்துவிடும். கரடு முரடான பாதையைக் கொண்ட இந்த மலைக்கு மின்சார வெளிச்சம் கிடையாது. நடந்து செல்பவர்களுக்கு இருக்கும் ஒரே ஒளி நிலவொளிதான்!! இதனால தான் தேய்பிறை காலத்துல மலை ஏறுவதும்!!

சித்திரை மாதத்தில் மட்டும் மலை ஏறுவதற்கும் ஒரு காரணம் காட்டில் உள்ள யானை, மான் போன்ற மிருகங்கள் எல்லாம் தண்ணீரைத் தேடி மலைக்குக் கீழே சென்றிருக்குமாம். சித்திரை மாத்திற்கு பிறகு என்றால், தென்மேற்குப் பருவ மழை பெய்ய ஆரம்பித்து விடும். கடும்குளிர் காரணமாக குளிர்காலத்திலும் மக்கள் இங்கே போவது கிடையாது.

நிலவொளியில், நண்பர்களுடன் மலை ஏற்றம், கரடு முரடான மலைப்பாதை என கேட்க சுவாரஸ்யமா இருக்கா?

இத விட சுவாரஸ்யம் மலைப்பாதை தான். ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு விதம். இப்படி மலை ஏர்றதுக்கு முன்னாடி 4 அடி உயரம் உள்ள ஒரு மூங்கில் குச்சியை வாங்கறது மிகவும் அவசியம்!!

பத்து மணி வாக்கில் முதல் மலையை ஏற ஆரம்பித்தால், லேசாக வியர்க்க ஆரம்பிக்கும். முதல் மலை முழுவதும், கற்களால் ஆனா படிக்கட்டுகள் கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு படியும் அரை அடி முதல் ஒரு அடி வரை உயரம் இருக்கும். ஒரு அரை மணி கழிந்த பிறகு நாம் அணிந்திருக்கும் பணியன், சட்டை எல்லாம் கசக்கிப் பிழியும் அளவிற்கு வியர்த்து விடும். முதல் மலை மட்டும் ஒரு நாலு பழநி மலை அளவிற்கு உயரம் இருக்கும். அப்படியே, ஏறி வரும் போது நம்முடன் வரும் நண்பர்கள் புலம்ப ஆரம்பிப்பது...

"மாப்ளே, இன்னும் முதல் மலையே முடியல.. என்னால இதுக்கு மேல ஏற முடியல.. நீங்க வேணா போயிட்டு வாங்க!!" என்பது தான்.

ரெண்டாவது மலைக்கு வந்துட்டோம்கறது, படிகள் குறைய ஆரம்பிக்கறதுல இருந்து தெரிஞ்சுக்கலாம். ரெண்டாவது மற்றும் மூனாவது மலை முழுவதும் வழுக்குப் பாறைகளை செதுக்கி படிகள் கட்டி விட்டுருப்பாங்க. இது மாதிரி வழுக்கப் பாதைகளில் விழுந்திராமல் இருக்கத்தான் மூங்கில் குச்சிய வாங்க சொல்றது!!

இது வரை வியர்த்தது லேசா, குளிர ஆரம்பிச்சதுன்னா நாம நாலாவது மலைக்கு வந்துட்டோம்னு அர்த்தம். இந்த மலை முழுவதும் மரங்களின் வேர்களுக்கு நடுவே தான் பாதை அமைந்திருக்கும். நிலவொளியில், குளிர்காற்றை சுவாசித்துக் கொண்டு, மரங்களின் நடுவே செல்வது ஒரு அருமையான அனுபவம்.

அடர்ந்த மரங்களின் நடுவே சென்ற பயணம், மரங்களின் அடர்த்தி குறைய ஆரம்பித்து "சோலா" எனப்படும் சிறிய தாவரங்களைப் பார்க்க நேர்ந்தால், நாம் கடப்பது ஐந்தாவது மலையை என்று அர்த்தம்!! ஐந்தாவது மலை முழுவதும் சேறு போன்ற வழுவழுப்பான மண்ணப் பார்க்கலாம். இங்கே நன்றாக குளிரவும் ஆரம்பிக்கும். ஐந்தாவது மலையின் உச்சியில் செல்லும் போது, மலைவாசிகளின் கடையில் அஞ்சு ரூபாக்கு ஒரு சுக்கு காப்பி கிடைக்கும் பாருங்க.. அந்தக் குளிர்ல, சுக்குக் காப்பிக்கு நிகர் வேறெதுவும் கிடையாது.

அதிகாலை மூன்று மணி, உங்க நண்பர்களுடன் நிலவொளியில் மலையேற்றம் , குளிந்த மூலிகைக்காற்று, குளிர்க்கு இதமா சுக்குக்காப்பினு யோசிச்சுப் பாருங்க?

ஐந்தாவது மலையில் இருந்து ஆறாவது மலைக்கு உட்கார்ந்தும் டேக்கியும் தான் போகனும். ஏன்னா, ஆறாவது மலைக்குச் செல்ல செங்குத்தாக கீழே போக வேண்டும். கீழ இறங்கும் போது, அப்படியே அன்னாந்து மேலே பார்த்தா, கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் "மின்மினி பூச்சி" மாதிரி வெளிச்சம் தெரியும். ஏழாவது மலைல நமக்கு முன்னாடி ஏறீட்டு இறக்கறவங்க அடிக்கற "டார்ச் லைட்" வெளிச்சம் தான் அது.

ஆறாவது மலையை அடைந்தால் "ஆண்டி சுனை"னு ஒரு சின்ன நீர்த்தேக்கம் இருக்கும். இங்கே, வியர்வை எல்லாம் போகற மாதிரி ஒரு காக்கா குளியல போட வேண்டியது தான். உறையற அளவு குளிர்ல எங்க நிதானமா குளிக்கறது?

அடுத்து ஏழாவது மலை. நம்ம வீட்டுல எல்லாம், கோயிலுக்கு பய பக்தியோட போகனும்னு சொல்லுவாங்க. இந்த பயபக்திய ஏழாவது மலை ஏறும்போது தான் உணர முடியும். ஏன்னா, மிகவும் செங்குத்தான மலை. ஊர்ந்தும் தவழ்ந்தும் தான் போகனும். தவறி விழுந்தா பள்ளத்தாக்கு. அப்படியே அரைமணி நேரம், குறிஞ்சி மலர்களுக்கு நடுவே சென்றால் நாம் அடைவது வெள்ளியங்கிரி ஆண்டவரின் சன்னதியை!!

வெள்ளியங்கிரி ஆண்டவரின் சன்னதி, இரண்டு கற்களுக்கு நடுவே அமைந்திருக்கும். அங்கே ஒரு சின்ன சிவலிங்கம், ஒரு பெரியவர் தீப ஆராதனை காட்டி திருநீறு தருவார். இறைவன் சன்னதியில் இருந்து வெளியே வரும்போது, நமது உடலும் உள்ளமும் சுத்தமாக இருப்பதை உணர முடியும்.

மலைச்சரிவில் அமர்ந்து ஓய்வெடுக்கும் போது, சின்ன தாக சூரிய ஒளி பரவ ஆரம்பிக்கும். ஒரு பக்கம் சூரிய உதயம், மென்மேகங்கள், இன்னொரு பக்கம் தூரத்தில் தெரியும் சிறுவானி நீர்த்தேக்கம், வாளையார் மலைத்தொடர், கேரள மலைத்தொடர் என காணும் காட்சி இருக்கே!!

அப்படியே மலையில் இருந்து கீழே இறங்க ஆரம்பித்தால், இரவில் தடவிக்கொண்டே வந்ததெல்லாம் பச்சைப்பசேல்!!

காலை எட்டு மணிக்குள் அடிவாரத்திற்கு சேர்ந்து விட்டால் முதல் மலையில் படிக்கட்டுச் சூட்டில் இருந்து தப்பிக்கலாம். மீண்டும் செல்போன் சத்தம், இறைச்சல்!!

வெள்ளியங்கிரி மலைப் பயணம், ஆத்திகர்களுக்கு இறைவனை இயற்கையுடன் தரிசிக்கும் ஒரு அருமையான வாய்ப்பாக இருக்கும். நாத்திகர்களுக்கு, மலையேற்றப் பயிற்சியாகவும், இயற்கையின் அருமையை உணரவும் நல்ல வாய்ப்பாக இருக்கும்!! எதுவாக இருந்தாலும் நல்லது தானே!!

வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று வந்தால் ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளலாம்!! " நீங்க ஆரோக்கியமானவரா?"

*****************************************************************************
வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல - கோவை காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து சித்திரா பௌர்னமிக்குப் பிறகு இரண்டு வாரத்திற்கு, இரவு 8 மணி முதல் சிறப்புப் பேருந்துகள் கிடைக்கும். வெள்ளியங்கிரி மலையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கோவையில் உள்ள நண்பர்களையோ, நண்பர்களின் தந்தையையோ தாத்தாவையோ கேளுங்கள்!!

....

Saturday, May 2, 2009

முதியோர்களால் ஆளப்படும் நாட்டில் முதியோர்கள் நிலை?

ஒரு ஏழையின் வேதனை ஏழைக்குத்தான் தெரியும் என்பதைப் போல ஒவ்வொரு சமூகத்தின் வலியும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களால் தான் நன்றாகப் புரிந்து கொள்ள இயலும். இந்த காரணத்தினால் தான், நாம் அனைத்து சமூகத்தில் இருந்தும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறோம்.


நாம் இத்தனை வருடங்களாக தேர்ந்தெடுத்த உறுப்பினர்களுக்குள் இருக்கும் ஒரு ஒற்றுமை என்ன?


பெரும்பாலானோர் முதியோர் என்பது தான் ஒற்றுமை!


நடந்து முடியும் பாராளமன்றத்தின் உறுப்பினர்களை எடுத்துக்கொண்டால் 55 வயதிற்கு அதிமானோர் எண்ணிக்கை 239. அதாவது, நாம் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களில் 40 சதவிதத்தினர் முதியோர் தான். மக்களவை உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், நமது பிரதமர்களில் பெரும்பாலானோர் ஓய்வடையும் வயதைக் கடந்தவர்கள் தான். இந்தத் தேர்தலிலும் , இரண்டு அணியின் பிரதமராக நிறுத்தப்படுபவர்கள் கூட 75 வயதைக் கடந்தவர்கள் தான்.


இப்படி பெரும்பாலும் முதியோர்கள் உறுப்பினர்களாக இருக்கும் நாட்டில் முதியோர்களின் நிலை எப்படி உள்ளது?

அவர்களுடைய தேவைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்?



உதாரணத்திற்கு, நெடுந்தூரம் பேரூந்தில் செல்வதற்கோ ரயிலில் செல்வதற்கோ முன்பதிவு செய்வதை எடுத்துக்கொள்வோம். முன்பதிவு ஆரம்பித்த அரை மணி நேரத்தில் பயணச்சீட்டுகள் அனைத்தும் தீர்ந்துவிடும் நிலையில், முதியோர்கள் எப்படி முன்பதிவு செய்யமுடியும்?


நாடெங்கும் சாலைகளை அகலப்படுத்துவது நன்மையே.. அதே சமயம், சாலையின் எதிர்புறம் இருக்கும் தன் வயலிற்கோ அல்லது கடைக்கோ செல்ல 4 கிலோ மீட்டர் சுற்றித்தான் வரவேண்டும் என்றால் எப்படி இயல்பாக இருக்கமுடியும் வயதானவர்களால்?


மேலும், எந்த சேவை நிறுவனங்கள் ஆனாலும், தொடர்பு கொள்ள ஒரு எண்ணை கொடுக்கிறார்கள். அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால், எந்தெந்த சேவைகள் உள்ளது என்று கூறி 1ல் இருந்து 9 வரை ஏதாவது ஒரு எண்ணை அழுத்த சொல்கிறார்கள். அப்படியே நாம் புரிந்தும் புரியாமலும் ஒரு எண்ணை அழுத்தினால், ஒரு சேவை அதிகாரி போனை எடுத்து, வேறு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கூறுகிறார். இளைஞர்களுக்கே இது போன்ற சேவைகளை உபயோகிப்பதில் திணறல் வரும் போது, முதியவர்களின் நிலை என்னவாக இருக்கும்?

முதியோர்கள் தனியார்துறை வங்கிகளில் கணக்குத் துவங்காமல் இருப்பதற்கும் ஏடிஎம் அட்டைகளை அதிகம் உபயோகிக்காமல் இருப்பதற்கும் கூட மேலே குறிப்பிட்ட விஷயம் ஒரு முக்கிய காரணம்.


இப்படி அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே திணறும் முதியோர்களுக்காக, நம் நாட்டை ஆளும் முதியோர்கள் என்னென்ன திட்டங்களை வகுத்துள்ளனர், என்பதைத் இணையதளத்தில் தேடினால் கிடைத்தவைகளில் சில்...

* 65 வயதிற்கு அதிமானோர்க்கு ஓய்வூதியமாக மாததிற்கு ரூ 75/- ம், 10 கிலோ உணவு தாணியங்களும் கொடுக்க வேண்டும் ( மாதத்திற்கு ரூ 75/-ஐ வைத்து என்ன செய்ய முடியும்? )
* வருமான வரியில் மேலும் ரூ15000/- விலக்கு அளிக்கப்படும்.
* முதியோர் என்றால் வங்கிகளில், 0.5% வட்டி அதிகம் கொடுக்கப்படும்.
* பேருந்துகளில் இரண்டு இருக்கைகள் முதியோர்களுக்கு ஒதுக்க வேண்டும்.
* ரயில், விமானம் போன்றவற்றுள் பயணச்சீட்டில் தள்ளுபடி கொடுக்க வேண்டும்.. போன்றவை தான்...


வருமான வரியில் மேலும் விலக்கு, பயனச்சீட்டில் தள்ளுபடி போன்றவற்றால் முதியோர்களுக்கு நன்மையே!! ஆனால், பயனச்சீட்டே கிடைக்கவில்லை என்றால் தள்ளுபடியால் என்ன பயன்? நம் நாடு தொழில்நுட்பத்தில் முன்னேறி உள்ளது, தொலைத்தொடர்பில் வளர்ச்சி அடைகிறது என்று பெருமைபட்டுக் கொள்ளும் அதே நேரம், அது அனைவருக்கும் சென்றடைகிறதா என்பதை யோசிப்பது நல்லது.


பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் பார்த்தால், முதியோர்களின் தேவைகளைப் பற்றி யோசித்தார்களா என்பதே ஐயமாகத்தான் உள்ளது. தங்களைப்போன்ற சக முதியோர்களின் தேவைகளையே புரிந்து கொள்ள முடியாத முதிய அரசியல்வாதிகளால் நாட்டின் தேவைகளை எப்படி புரிந்து கொள்ள முடியும்?


எத்தனையோ இலவசங்களையும், இட ஒதுக்கீடுகளையும் மறக்காமல் அறிவிக்கும் போது சக முதியோர்களை மட்டும் மறப்பதை என்னவென்று சொல்ல...

தயாராவோம்.... முதியோர்களை வரவேற்க....

.

Friday, May 1, 2009

பசங்களுக்காக...

நம் ஞாபகசக்திக்கு ஒரு சவால்...


கடந்த
20 வருடங்களில் குழந்தைகளை மையமாக வைத்து எடுத்த படங்கள் எத்தனை ஞாபகத்திற்கு வருகிறது?

எனக்கு ஞாபகத்திற்கு வருவது, அஞ்சலி, மைடியர் குட்டிசாத்தான், கன்னத்தில் முத்தமிட்டால், குட்டி, கேளடி கண்மனி, நிலவே மலரே போன்றவை தான்.

சரி, குழந்தை நட்சித்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என்றால் ஞாபகத்திற்கு வருவது எவை?

ராஜா சின்ன ரோஜா, மகாநதி, பூவிழி வாசலிலே, ரிதம், அழகன், துர்கா போன்ற ராமநாரயணன் படங்கள், சங்கர்குரு போன்ற ஷாலினி நடித்த படங்கள் தான்..

ஏன் இந்த கேள்வி இப்போது..
காரணம்... மே மாதம் வந்தாயிற்று..

ஏப்ரல் மே என்றால் கூடவே நமக்கு ஞாபகத்துக்கு வரும் விஷயங்களில் முக்கியமானவை பள்ளி விடுமுறை நாட்களும், கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்களும் தான். தீபாவளி, பொங்கல் போன்ற சமயங்களில் வெளியாகும் திரைப்படங்களைக் காட்டிலும் அதிக நாட்கள் ஓடுவது ஏப்ரல், மே மாதத்தில் வெளியாகும் திரைப்படங்கள் தான்.

திரைப்படங்கள் ஓரளவு ஓடுவதற்குக் காரணம் குடும்பமாக திரையரங்கிற்கு வருவது தான். வருடம் முழுவதும், தேர்வு, படிப்பு போன்ற காரணங்களுக்காக திரையரங்குகளுக்கு குழந்தைகளை அழைத்து வராமல் இருப்பவர்களுக்கு இது தான் தகுந்த தருணம்.

அப்படி பள்ளி விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் படங்களில் எத்தனை சிறுவர்களுக்கானது?
பதில் அனைவருக்கும் தெரிந்ததே...
20 வருடங்களில் 2000 திரைப்படங்கள் வெளியானது என்று வைத்துக் கொண்டாலும், அதில் 6 படங்கள் தான் குழந்தைகளை மையமாகக் கொண்டவை என்பதை என்னவென்று சொல்ல...

நம் மக்கள் தொகையில் 15 வயதிற்கு குறைவானோர் 30 சதவிகிதம் உள்ளனர். அவர்களுக்கான திரைப்படங்களோ ஒரு சதவிகிதம் கூட இல்லை என்பது சோகமான விஷயம்.

தமிழில் மொழிபெயர்ப்பு செய்த ஹாலிவுட் படங்கள் ஏன் அதிகமாக வெற்றியடைகின்றன என்பதைப் பார்த்தால் அதற்குக் காரணம் சிறுவர்கள் தான் என்பது புரியும். ஹாலிவுட் போல அனிமேஷன் படங்கள் வரவில்லை என்றாலும் அஞ்சலி, தாரே ஜமீன் பர் போன்ற படங்களையாவது எடுக்க முயற்சி செய்யலாமே!!

சிறுவர்களை திரையரங்குகளுக்கு இழுக்க தனித்துவமான விஷயங்களாக (Unique Selling Point) நம் கலையுலக சிற்பிகள் வைப்பது, ஐட்டம் நம்பர் எனப்படும் குத்துப் பாடல்களையும், சலித்து போன (அடி வாங்கும்) நகைச்சுவைக் காட்சிகளையும், நம்ப முடியாத சண்டைக் காட்சிகளையும் தான்.

குழந்தைகள் உள்ள வீடுகளுக்குச் சென்றால், பெற்றோர் பெருமையுடன் நமக்குக் காட்டுவது, தங்கள் குழந்தைகள் பாடும் குத்துப்பாடல்களைத்தான்.

"அப்பா அம்மா விளையாட்டுன்னா" என்ன
என்று உங்கள் குழந்தையோ அல்லது உங்கள் உறவினரின் குழந்தையோ கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?

பெரிய நிறுவனங்கள் (Corporate) திரைப்படத்துறைக்கு அடியெடுத்து வரும் இன்றைய சூழ்நிலையில் கொஞ்சம் சமுதாய பொறுப்பைப் (Social Responsibility ) பற்றியும் சிந்திப்பது நல்லது.

காதலைப் பற்றியும், நடிகைகளின் அங்கங்களைப் பற்றியும் கடந்த 60 வருடங்களாக தீர அலசியாயிற்றே!! இனியாவது கொஞ்சம் நம்ம பசங்களுக்காகவும் யோசிக்கலாமே!!

குழந்தைகளுக்கான உணவுகள், விளையாட்டுகள், தொலைக்காட்சிகள், ஆடைகள் என்று ஒவ்வொரு துறையிலும் சிறுவர்களுக்கான சந்தைகளை ஏற்படுத்தி பெரும் லாபம் பார்த்து வரும் பன்னாட்டு நிறுவனங்களே ஒரு எடுத்துக்காட்டு தான். இப்படி, பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் பசங்களை மையப்படுத்தி பொருட்களைத் தயாரிக்கும் போது திரைத்துறையினர் எப்போது திரைப்படங்களை பசங்களுக்காக தயாரிக்கப் போகிறார்கள்?


இந்தப்பதிவை யூத்ஃபுல் விகனில் படிக்க கீழே சொடுக்கவும்.
.
Related Posts with Thumbnails