Wednesday, October 13, 2010

அழகிய நாட்கள்..


பள்ளி நாட்களைப் போலாகிவிட்டன கடந்த சில மாதங்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எப்படி வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு எவ்வளவு தயங்குவார்களோ, அதே போல் தயங்குகின்றன என் கால்கள். தேர்வு இறுதி நாட்களில் தேர்வை முடித்துவிட்டு குழந்தைகள் வீடு நோக்கி ஓடி வருவதைப் போல வீடு நோக்கி விரைகிறேன். எல்லாம் எங்கள் செல்லத்திற்காக..

குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதார் 

என்பதன் பொருளை அனுபவிக்கும் பொழுது தான் மேலும் உணர்கிறேன். 

அலுவலகம் முடித்து வீட்டில் காலெடுத்து வைக்கும் பொழுதே, "ஹேய்ய்ய்ய்ய்ய்" என்ற 7 மாத மகனின் குரல் வரவேற்கின்றன. அந்தக் குரலை எழுப்புகையில் அவன் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி, பெருமிதம்? கை கால்களை ஆட்டிக் கொண்டு தூக்கச் சொல்லி கேட்டு, நான் தூக்கிய பிறகு "எப்பூடி" என்று அவன் தாயை நோக்கி விடும் பார்வையை எங்கே கற்றான்?

குழந்தையின் ஒவ்வொரு நாளைப் பார்க்கும் பொழுது இயற்கையைத் தான் வியக்கத் தோன்றுகிறது. யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே ஒவ்வொரு செய்கையையும் எப்படிக் கற்றுக் கொள்கிறார்கள்? 

"ஏங்க.. நம்ம தங்கம் குப்புற விழ முயற்சி பண்றாங்க.." என்று அலைபேசியில் அழைத்துக் கூறும் மனைவியின் குரலில் தான் எவ்வளவு ஆனந்தம்!!

ஒரு காலை எடுத்து மற்றொரு கால் மேல் போட்டு இடுப்பை ஒரு பக்கமாகத் திருப்பும் முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். முயற்சியில் வெற்றி பெற்று குப்புற படுத்த பிறகு, அந்த அதிர்ச்சியில் ஒரு சிணுங்கல். மீண்டும் நாம் நேராகப் படுக்க வைத்தால் மீண்டும் குப்புற விழும் முயற்சி. சில நாட்களில் குப்புற விழுவதில் தேறியவுடன் ஒரு வெற்றிச் சிரிப்பு வரும் பாருங்கள்!! 

மற்றொரு நாள். மீண்டும் ஒரு அலைபேசி அழைப்பு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது..

"என்னங்க.. நம்ம செல்லம் 'ம்மா'னு சொல்றாங்க" குரலில் பூரிப்புடன்..
"ம்ம்.. சூப்பர்மா....." என்கிறேன் கம்மிய குரலில்.. 
"என்னங்க.. வேலையா இருக்கீங்களா.. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சா.. அதான் கூப்பிட்டேன்.. நீங்க வேலை பாருங்க.. அப்புறம் கூப்பிடுங்க.."
என்று அழைப்பைத் துண்டிக்கும் பொழுது மனதில் வருத்தமும், நாமும் குழந்தை கூறும் முதல் வார்த்தையைப் பார்க்க வேண்டுமே என்ற ஆவலும் ஒரு சேர வருகிறது. 

"ம்மா" என்றும்.. சில சமயங்கள் துல்லியமாக "அம்மா" என்றும் உச்சரிக்கக் கேட்கையில் வரும் மகிழ்ச்சி ஈடிணையற்றது தான். தமிழ் மொழியின் உன்னதத்தை உணர்ந்த தருணங்களுள் இதுவும் ஒன்று.

தாய்மார்களின் அர்ப்பணிப்பைப் புரிந்து கொள்ள குழந்தைகளுக்குச் சோறூட்டுவதைப் பார்த்தாலே போதும். காலை நீட்டி குழந்தையைப் படுக்க வைத்து கதை சொல்லிக் கொண்டே ஊட்ட ஆரம்பித்தால், ஒரு கிண்ணம் அளவு உணவு செல்ல அரை மணி எடுத்துவிடும்.

"அந்த ஆடு சாமீய்ய், என்ன பண்ணுச்சாம்.. காட்டுக்குள்ள போயிக்கிட்டு இருந்துச்சாம்.. அது ரொம்பப் பெரிய காடு சாமி.. ரொம்ப தூரத்துக்கு வெளிச்சமே இல்லியாம்.. அப்போ என்ன ஆச்சு தெரியுமா? ஒரு யானை வந்துச்சாம் சாமி... வந்தூ.. இந்த வாய் வாங்கிக்கோ.. யானை தெரியும்ல.. நீ தான் தும்பிக்கையை உடச்சு விட்டீல்ல (தும்பிக்கை இல்லாத அவன் யானை பொம்மையைக் காட்டி) அந்த யானை ஆட்டப் பாத்து என்ன சொல்லுச்சாம்.. என்ன நீ தனியாக் காட்டுக்குள்ள போயிட்டிருக்க.. நான் உனக்குத் துணையா வரட்டுமான்னு கேட்டுச்சாம்.. அதுக்கு அந்த ஆடு என்ன சொல்லுச்சாம்.. ஆமா சாமீ.. இன்னொரு வாய் வாங்கிக்கோ.." என்று மடியில் படுத்திருக்கும் மகனை நோக்கி, என் மனைவி  கதை சொல்லி சோறூட்ட. அதை விழிகள் விரியக் கேட்கும் மகனைப் பார்ப்பதில் தான் எவ்வளவு சுவாரஸ்யம்.  உண்மையில் பார்க்கப் போனால் பெண்கள் பொதுவாகச் சிறந்த கதை சொல்லியாகத் தான் இருக்கிறார்கள். 

"ஏங்க நீங்க ஒரு நாள் கால்ல போட்டு ராகிக்கூலை ஊட்டுங்களேன்" என்று மனைவி கேட்டதற்கு, நானும் சரியெனத் தலையாட்டி விட்டு, முயற்சி செய்து ஊட்ட ஆரம்பித்தேன். ஓரிரு வாய் வாங்கிவிட்டு "புர்ர்ர்ர்ர்"ரென்று சிரித்துக் கொண்டே வாயை ஊதியதில் என் முகமெல்லாம் ராகிக்கூல் :)குழந்தையை வளர்ப்பதென்பது அன்னைமார்களுக்கு 24 மணி நேர வேலை என்றால் அது மிகையில்லை. துணைக்குப் பெரியவர்கள் யாரும் இல்லாத தனிக்குடித்தன சூழலில் என்றால் சொல்லவே வேண்டாம். 

"தவிழ முயற்சி செய்வது, பொம்மைகளைத் தொடப் பழகி எடுத்து விளையாட ஆரம்பிப்பது, பொம்மைகளுடன் பேச முயற்சி செய்வது, நாளடைவில் தாய் தந்தையிடம்.. "ஹே.... ஆ... " என்று பேச முயற்சிப்பது" என்று ஒவ்வொரு பொழுதும் புதிதாக மலர்கிறது. வேலை, தொழில் என்று வாழ்க்கை பரபரப்பாகச் சென்றாலும் ஒவ்வொரு நாளும் அழகாய் மலர்கின்றன. சில நாட்கள், அதிகாலையிலேயே துவங்கி விடுகின்றன. அதிகாலையிலேயே மகனிடம் விளையாட ஆரம்பிக்கும் நாட்களில் அலுவலகத்திற்கு கிளம்பும் பொழுது என் ஆரம்பகால பள்ளி நாட்கள் நினைவிற்கு வருகின்றன.

என்ன.. இப்பொழுது தந்தை நான், மகனைப் பார்த்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியே செல்கிறேன்.

**

அழகிய நாட்கள்.. தொடரும்..



23 comments:

sakthi said...

உண்மை தான் அன்னைக்கு 24 மணி நேரம் போதாது

அழகிய நாட்கள் தொடரட்டும் செந்தில்

இளங்கோ said...

உண்மையாகவே அழகிய நாட்கள்தான்.
சேர்த்து வையுங்கள். :)

ஈரோடு கதிர் said...

சகோதரி சொல்லிய கதையும், நீங்கள் அதை எழுதிய விதமும் நேரில் கேட்பது போன்றே மிக நேர்த்தி

ராகி கூழை மட்டும் துப்பியதைச் சொல்லிவிட்டு தூங்கும் போது உதைப்பதையும், ஒன்னு விட்டதையும் சொல்லாதையும்...._-------- :)))

கிளியனூர் இஸ்மத் said...

பிஞ்சுகளுடன் கொஞ்சி விளையாடும்போது பஞ்சாய் பறந்துவிடும் மறந்தும்விடும் எந்த கஸ்டமும்....அனுபவித்து எழுதியது அருமை....வாழ்த்துக்கள் செந்தில்.

NADESAN said...

இந்த மாதிரி மனைவி அலைபேசியில் அழைத்து கூறும் போது நம்மை அறியாமல் கண்களில் நீர்
நானும் இதே உணர்வு பெற்றேன்

அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
அமீரகம்

க.பாலாசி said...

கதைசொல்லி சோறு ஊட்டுகிறீர்கள் என்பதை கேட்கும்போது சந்தோஷமா இருக்குங்க... ரொம்ப வீட்டுல ரஜினி பாட்டோ, விஜய் பாட்டோ போட்டுத்தான் சோறு ஊட்டுறாங்க...

உண்மையில் அழகிய நாட்கள்... ஒவ்வொரு கணமும் ரசித்துப்பருகவேண்டிய நாட்கள்..

geethappriyan said...

குழந்தை கவின் பற்றி மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.காட்சிகள் கண்ணில் விரிகிறது.

மதுரை சரவணன் said...

//super. thanks for sharing. real facts r given/

நிலாமதி said...

மிகவும் அழகாய் ரசித்து எழுதியிருகிறீர்கள். இந்தப்பாக்கியம் எல்லோருக்கும் கிடைபதில்லை கொடுத்துவைத்தவர்.......உங்கள் குழந்தையும் தான் அம்மா அப்பா அன்பில் வளர்வது பெரும்பாக்கியம். அன்பு பகிரும்போது பெருகுகிறது

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

சகோதரி சொல்லிய கதையும், நீங்கள் அதை எழுதிய விதமும் நேரில் கேட்பது போன்றே மிக நேர்த்தி

ராகி கூழை மட்டும் துப்பியதைச் சொல்லிவிட்டு தூங்கும் போது உதைப்பதையும், ஒன்னு விட்டதையும் சொல்லாதையும்...._-------- :)))//

ம்கும். நாம எதுக்கு இருக்கோம்னு விட்டிருப்பாரு.

ஹா! இது இன்பம்தான் செந்தில். கல்லூரிப் பருவத்தில் மகனிடம் இதைச் சொல்லிப் பாருங்கள். மீண்டும் குழந்தையாகும் முகத்துடன் வெட்கத்துடன் அப்புறம் என்று கேட்கும் அழகிருக்கிறதே..பொன்னான தருணங்கள் இவை. பொக்கிஷமாய்ச் சேர்த்து வையுங்கள்.

Chitra said...

அழகிய பதிவு. :-)

☀நான் ஆதவன்☀ said...

அழகோ அழகு :)

Unknown said...

அர்ப்பணிப்பு உணர்வும் பொறுமையும் தாய்மார்களுக்கே உள்ள சிறப்பு. வாழ்க! வளமுடன் வாழ்க செந்தில்.

sultangulam@blogspot.com said...

குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதார்

thiyaa said...

அழகிய நாட்கள் அருமை

ஆரூரன் விசுவநாதன் said...

//பெண்கள் பொதுவாகச் சிறந்த கதை சொல்லியாகத் தான் இருக்கிறார்கள். //

அணியிலக்கணத்தில் இதைத்தான் வஞ்சப் புகழ்ச்சி என்கிறார்களோ???

ஹி...ஹி.....

ஹுஸைனம்மா said...

அனுபவி(ங்க) ராஜா அனுபவி!! வாழ்த்துகள்!!

அன்பென்று கொட்டு முரசே said...

செந்தில்,
பல தந்தைகளுக்குக் கிடைக்காத பேரனுபவம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது. அருகில் இருந்தே அனுபவிக்காதோர் அனேகம் பேர் இருக்கிறார்கள். தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் கிடைப்பது எத்தகைய பெரும் பேறு. நுண்மையான,அன்பும் கரிசனமும் கலந்த பதிவு.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ சக்தி,

நன்றிங்க

@ இளங்கோ,

நன்றிங்க

@ நடேசன்,

நன்றிங்க.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ கதிர்,

//ராகி கூழை மட்டும் துப்பியதைச் சொல்லிவிட்டு தூங்கும் போது உதைப்பதையும், ஒன்னு விட்டதையும் சொல்லாதையும்...._-------- :)))
//

இதையெல்லாம் வேறொரு இடுகைக்கு வச்சிருக்கேங்க ;)

@ இஸ்மத்,

நன்றிங்க இஸ்மத் அண்ணே

@ க.பாலாசி,

ஆமாங்க பாலாசி, முடிந்த வரை கதை சொல்லித்தான் சோறூட்டுகிறோம். சினிமாப் பாட்டுகள் அல்ல

@ கீதப்பிரியன்,

நன்றிங்க நண்பா.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ மதுரை சரவணன்,

நன்றிங்க

@ நிலாமதி,

நன்றிங்க.

@ வானம்பாடிகள்,

ஆமாங்க பாலாண்ணே.
நானும் என்ன சிறு வயதில் என்ன செய்தேன் என்று அப்பாவிடம் கேட்பதுண்டு.

அது போன்ற பொழுதுகள் அருமையானது

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ சித்ரா,

நன்றிங்க

@ஆதவன்,

நன்றிங்க

@ சுல்தான்,

நன்றிங்க.

குறளை திருத்திவிட்டேன். நன்றிங்க.

@ தியாவின் பேனா,

நன்றிங்க.

@ ஆரூரன் விஸ்வநாதன்,

ஹாஹா..

உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ ஹூசைனம்மா,

நன்றிங்க

@ அன்பென்று கொட்டு முரசே,

உண்மை தாங்க. பலருக்கும் இந்த அனுபவம் கிடைக்காமல் போவது வருத்தத்திற்குரியதே.

நன்றிங்க.

Related Posts with Thumbnails