Saturday, December 18, 2010

துபாய் சர்வதேச திரைப்பட விழா - இன்ஷால்லாஹ் ஃபுட்பால் (காஷ்மீரி) (2010)

காஷ்மீரின் கதையை ஒன்றரை மணி நேரத்தில் எப்படி சொல்வது? குண்டுவெடிப்பும், துப்பாக்கிச்சூடும், சமீப காலமாக கல்லெறிதலும் தான் காஷ்மீரின் அடையாளமாக உள்ள நிலையில், காஷ்மீரின் கதையை கால்பந்தின் வாயிலாகச் சொல்கிறது இன்ஷால்லாஹ் ஃபுட்பால். 


கால்பந்தாட்டில் மிகுந்த ஈடுபாடும் திறமையும் உள்ள இளைஞன் பாஷா என்றழைக்கப்படும் பஷாரத். சர்வதேச கால்பந்தாட்ட வாரியத்தின் அங்கிகாரம் பெற்ற பயிற்சியாளர் அர்ஜெண்டைனா நாட்டைச் சேர்ந்த மார்கஸ். இவர் காஷ்மீரில் இஸாட் (ISAT) என்ற கால்பந்தாட்டப் பயிற்சி அமைப்பை நடத்தி வருகிறார். இவரது மனைவி ப்ரிசிலா பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். மார்கஸின் பயிற்சியில் சிறந்து விளங்கிய இரண்டு வீரர்கள் ஸ்பெயின் நாட்டில் உள்ள சில அணிகளில் விளையாட வாய்ப்பைப் பெற்று ஸ்பெயின் சென்றிருந்தனர். பாஷாவின் திறமையைப் பார்த்த ப்ரிசிலா பிரேசிலில் உள்ள ஒரு அணியில் விளையாட வாய்ப்பைப் ஏற்படுத்திக்கொடுக்கிறார். பிரேசில் செல்ல விரும்பும் பாஷாவிற்குத் தடை வந்தது கடவுச்சீட்டு ரூபத்தில்.

பாஷாவின் தந்தை பஷிர் ஹிஷ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முன்னாள் பயங்கரவாதி என்பது தான் பாஷாவிற்குக் கடவுச்சீட்டு கிடைக்காததற்கான காரணம். தந்தை பயங்கரவாதியாக இருந்ததற்கு பாஷா என்ன செய்வார்? பஷிர் ஏன் பயங்கரவாதியானார், பயங்கரவாதத்தைக் கைவிட்டு வெகுசன வாழ்க்கையை நடத்தி வந்த போதிலும் பாஷாவிற்குக் கடவுச்சீட்டை ஏன் தர மறுக்கிறார்கள் என்பவற்றை சம்பந்தப்பட்டவகளைப் பேசவிட்டே ஆவணப்படமாக (Documentary film) இயக்கியிருக்கிறார் அஷ்வின் குமார்.

தான் ஏன் ஹிஷ்புல் பயங்கரவாதக் குழுவினருடன் சேர்ந்தேன். பிறகு சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகு நடந்த விசயங்கள் எல்லாம் பஷிரின் மூலமே பதிவு செய்யப்பட்டுருக்கிறது. "அதிகாலை நான்கு மணிக்கு என்னை இராணுவத்தினர் அழைத்துச் சென்ற பொழுது, நான் உயிருடன் இருக்கப் போவது ஓரிரு மணி நேரம் தான் என்று நினைத்தேன்" என்று பஷிர் கூறியது, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிய முன்னாள் பயங்கரவாதிகளின் மனோநிலையைப் பதிவுசெய்கிறது. "உன்னை வீட்டில் பிடிக்காமல் வெளியில் பிடித்திருந்தால், நீ என்னிடம் இப்பொழுது பேசிக்கொண்டிருப்பாய் என்று தோன்றவில்லை" என்று இராணுவ அதிகாரி தன்னிடம் கூறியதும் பஷிரின் பேச்சில் தெரியவருகிறது.

"நான் பிறக்காத பொழுது என் தந்தை பயங்கரவாதியாக இருந்ததற்கு நான் என்ன செய்வேன்?" என்ற பாஷாவின் கேள்வி, ஒரு தலைமுறையினரின் கேள்வியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாள் பாஷாவும் ரிப்போர்ட்டராக மாறி காஷ்மீரின் பல்வேறு தரப்பினரைப் பேட்டி எடுக்கிறார். அதில் ஒரு இளைஞர், "எனக்கு அப்பொழுது 3 வயதிருக்கும். என் தந்தையை அழைத்துச் சென்று வழியிலேயே கொன்று விட்டனர். இத்தனைக்கும் என் தந்தை பயங்கரவாதி அல்ல. அவரது தொழில் விரோதி இராணுவத்தினரின் உதவியுடன் கொன்றிருக்கிறார்கள். கொன்ற இராணுவ அதிகாரி ஒரு பயங்கரவாதியைக் கொன்றதாகப் பதவி உயர்வு வாங்கியிருப்பார்" என்று கூறும் பொழுது வேறொரு கோணம் தெரிய ஆரம்பிக்கிறது. இளைஞர்களிடம் ஒரு வித அவநம்பிக்கை குடிகொண்டிருப்பது பேட்டிகளில் தெரியவருகிறது. 1990களில் நடந்த கலவரங்களில் ஹிந்துப் பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து துரத்தபட்டதும், இன்னும் சிலர் பட்ட வேதனைகளையும் பதிவு செய்யத் தவறவில்லை. அதே சமயம், சில ஹிந்துப் பண்டிட்கள் இஸ்லாமியருடன் ஒற்றுமையாக வாழ்வதையும் பதிவு செய்திருக்கின்றனர். 


கால்பந்தாட்டத்தின் மூலம் காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று நம்பிக்கையை மார்கஸ் வெளிப்படுத்துகிறார். மார்கஸின் கால்பந்தாட்டப் பயிற்சிப் பள்ளியைப் பற்றியும், பாஷாவின் நிலையைப் பற்றியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் செய்தி வருகிறது. இச்செய்தியை வைத்துக்கொண்டு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாஹ்வையும் சந்தித்துப் பேட்டி எடுத்திருக்கின்றனர். ஒமர் அப்துல்லாஹ் "பாஷாவைப் போல நூறு பேர், ஏன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கலாம். இந்த நிலை தொடராமல் பார்த்துக் கொள்கிறேன்" என்று வாக்களிக்கிறார். அதன் பிறகு பாஷாவின் நிலை என்ன ஆனது?

காஷ்மீர் - ஐரோப்பிய நாடுகளுக்குப் போட்டி கொடுக்கக் கூடிய அளவிற்கு பனிபடர்ந்த மலைகளையும், அழகிய நில அமைப்பையும் கொண்ட மாநிலம். ஆனால், எங்கு திரும்பினாலும் இராணுவத்தினர். 20 பேருக்கு ஒரு இராணுவ வீரர் இருக்கும் நிலை என்றைக்கு மாறும் என்று எண்ணம் வருகிறது, காஷ்மீரைப் படத்தில் பார்க்கும் பொழுது. "RESPECT ALL SUSPECT ALL" என்று ஒரு இராணுவப் பலகையில் எழுதியிருக்கும் வார்த்தை தான் இன்றைய காஷ்மீரின் நிலையைப் பிரதிபலிக்கும் விசயம்.

இன்ஷால்லாஹ் ஃபுட்பால் காஷ்மீரைத் தொடர்ந்துவரும் அனைவரும் பார்க்க வேண்டிய படம்!!


*

துபாய் சர்வதேச திரைப்பட விழா கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. கொரியா, ஜப்பான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், போலாந்து, அரபு நாடுகள், பாலஸ்தீனம், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் இருந்தெல்லாம் திரைப்படங்களைத் திரையிட்டு வருகிறார்கள். நானும் 4  படங்களையும் 8 ஆவணப் படங்களையும் பார்த்தேன். அதில் பாலஸ்தீனம் பற்றிய படங்களும் அடங்கும். அவை அடுத்த பதிவில்..

*

3 comments:

vasu balaji said...

நல்ல விமரிசனம். பகிர்வுக்கு நன்றி செந்தில்.சமீபத்தில் ஒரு முதல் தர மாணவனின் தந்தை துபாயில் பணியிலிருக்கிறார் என்பதாலேயே அமெரிக்கன் விசா நிராகரிக்கப்பட்டது:(. படிப்புக்குத் தடை.

க.பாலாசி said...

நல்ல பகிர்வுங்க செந்தில்... இப்படி முன்தொன்றல்களால் பாதிக்கப்படும் மனிதர்கள் நம்மில் பலர். காஷ்மீரில் இதைப்போல் எத்தனை வரலாறுகள் புதைந்துகிடக்கின்றவோ.. நன்றி.

Prathap Kumar S. said...

Lamhaa...படத்தில் இதை இன்னும் விரிவாக சொல்லியிருப்பார்கள். பல திடுக்கிடும் தகவல்களை சொல்லியிருந்தார்கள். பகிர்வுக்கு நன்றி செந்தில்.

Related Posts with Thumbnails