Wednesday, June 23, 2010

செம்மொழியான தமிழ்மொழியாம்!!


கோவையில் செம்மொழி மாநாடு துவங்கியுள்ளது. 

ஊரெங்கும் தமிழைப் பற்றியே பேச்சு!! இப்படி ஒரு நிலை இதற்கு முன்பு வந்ததாகத் தெரியவில்லை. செம்மொழி மாநாட்டியொட்டி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் பலவற்றிலும் விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகக் கேள்விப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

நம் தாய்மொழியின் சிறப்பினை உலகிற்குப் பறை சாற்ற, தமிழ் மொழியில் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்திட, அறிவியல் தமிழ், இணையத் தமிழ், மருத்துவத் தமிழ் என்ற நிலைக்குக் கொண்டு செல்ல இப்படி ஒரு மாநாடு உதவ வேண்டும். மதுரை மற்றும் தஞ்சையில் தமிழ் மாநாடு நடத்திவிட்டு, மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளை கிடப்பில் போட்டது போல இந்த முறை கிடப்பில் போடாமல் இருந்தால் நல்லது.

செம்மொழி மாநாட்டையொட்டி வெளியாகி உள்ள சிறப்புக் கட்டுரைகளில் ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் அஸ்கா பார்ப்போலா எழுதியுள்ள கட்டுரை சிறப்பு மிக்கது. "சிந்துவெளிப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் சின்னங்கள் பல தமிழ் மொழியைக் குறிக்கிறது" என்ற அடிப்படையில் குறிப்பிடுகிறார். இவரது ஆராய்ச்சி உலக அறிஞர்களால் ஏற்கபட்டால் அது தமிழ் மொழியைத் தனி இடத்திற்குக் கொண்டு செல்லும். அந்தக் கட்டுரை இங்கே

செம்மொழி மாநாட்டு இணையதளம் சிறப்பான முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. செம்மொழி மாநாட்டைப் பற்றிய செய்திகளை உடனுக்குடன் வெளியிடுகின்றனர். ஆய்வரங்க நிகழ்ச்சிகள், எந்தெந்த அமர்வுகளில் என்னென்ன தலைப்புகள் விவாதிக்கப்படுகின்றன என்ற செய்திகளெல்லாம் தரவிறக்கம் செய்யும் வகையில் வடிவமைத்துள்ளது பாராட்டத்தக்கது. இது போல செம்மொழி மாநாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இணையத்தில் தரவிறக்கம் செய்யும் வசதியினைச் செய்தால் நன்றாக இருக்கும்.

செம்மொழியான தமிழ் மொழியாம்..

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளியாகியிருக்கும் பாடலைக் கேட்கக் கேட்க சிலிக்கிறது. இந்தப் பாடலைக் காட்சிப் படுத்தியிருக்கும் விதத்தைப் பார்க்கையில் எப்பொழுது தமிழகத்திற்குத் திரும்புவோம் என்ற ஏக்கம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.நம் மொழியில் உள்ள சிறந்த கருத்துகள் பலவற்றையும் உள்ளடக்கி வெளியாகியிருப்பது சிறப்பு.

இந்தப் பாடலைப் பார்க்கும் கேட்கும் எவர்க்கும் சிறிதளவேனும் மொழிப்பற்று, பெருமை வரவாய்ப்பிருக்கிறது. இதற்கு முன்பு இப்படி ஒரு பாடல் வந்ததென்றால் அது "தாய் மண்ணே வணக்கம்" என்ற பாடலாகத்தான் இருக்கும். அதுவும் ஊரே சேர்ந்து தேசியக்கொடியைத் தூக்கி நிறுத்தும் காட்சியிருக்கிறதே...

"அ" முதல் ஒவ்வொரு எழுத்தையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. "ஒ"வில் இருந்து யானையை வரைவதை என் தாத்தா எனக்கு சொல்லிக்கொடுத்த நினைவு வருகிறது இந்தக் காணொளியைப் பார்க்கையில். "ந"வில் இருந்து பறவைகளை வரைவது மற்றொன்று. கிரிக்கெட் ஸ்டம்பை வைத்து "ஈ"யை வரைவது, பாவாவை தாவணியணிந்த பெண்கள் டிராக்டர் ஓட்டிக்கொண்டே "ண"வை வரைவது அழகு. 



பல விசயங்களை அழகாகக் காட்சிப்படுத்தியவர்கள் மத்திய வர்க்கத்தினரை மட்டுமே காட்டியிருப்பதாகத் தோன்றுகிறது. ஏன் இவரைப் பாட வைக்கவில்லை, ஏன் இவரை நடமாட வைத்துள்ளனர் என்ற கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டுப் பாடலையும் பாடலின் பொருளையும் கேட்கும் பொழுது மகிழ்ச்சி வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.


"செம்மொழியான தமிழ் மொழியாம்" பாடல்.. 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.


தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!


ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!


அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி – அதுவே
செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

*

இந்தப் பாடலைப் பாடியவர்கள்...

டி.எம்.சௌந்தர்ராஜன்
ஏ.ஆர்.ரகுமான்
ஹரினி
சின்மயி
கார்த்திக்
ஹரிஹரன்
யுவன்சங்கர் ராஜா
பி.சுசீலா
விஜய் யேசுதாஸ்
ஜி.வி.பிரகாஷ்
டி.எல்.மகராஜன்
பாம்பே ஜெயஸ்ரீ
அருணா சாய்ராம்
நித்யஸ்ரீ மகாதேவன்
சௌம்யா
பிளாசி
காஷ்
அப்துல் கனி
காஜாமொய்தீன்
சாபுமொய்தீன்
டி.எம்.கிருஷ்ணா
நரேஷ் ஐயர்
ஸ்ரீனிவாஸ்
குனசேகரன்
ஷ்ருதிஹாசன்
சின்னப்பொன்னு
சுசீலாராமன்

*

Thursday, June 17, 2010

செல்லமே - 1



ன்,
உடல்நலம் வேண்டித் தடுப்பூசியிட
வலியில் நீ கதற
என் உள்ளமும் கதற
உணரத் துவங்கினேனடா
தந்தையானதை..


மேலும் உணர்கிறேனடா
உன்
தாத்தாவின் உணர்வுகளை!!

*

ன்னை,
என் தொடையில் நிற்க வைக்க
முதல் அடி வயிற்றில் வைத்து
அடுத்த அடியை நெஞ்சில் வைத்து
மறு அடியைத் தோளில் வைத்துச்
சிரிக்கும் சிரிப்பில்
என்னை மறந்தேனடா!!

*

ன்னைப் பார்த்த,

தாய்மாமன் சொன்னார்
உனக்கு
மாப்பிள்ளை போல தாடையென்று

அத்தை சொன்னார்
உனக்கு
அண்ணன் போல முகமென்று

அம்மையா சொன்னார்
உனக்கு
மருமகன் போல நெற்றியென்று

தாத்தா சொன்னார்
உனக்கு
மகனைப் போல கைகால்களென்று

உன்னைப் போல ஏதுமில்லையா
என்று கேட்ட தோழியிடம்..

அம்மா சொன்னார்
அவரையே நினைத்திருந்த எனக்கு
அவரைப் போலவே வந்திருக்கிறானென்று!!

*

Wednesday, June 9, 2010

தீதும் நன்றும் - 10-06-02*










டபுள் டிப்: மீண்டும் ஒரு பொருளாதாரப் பின்னடைவா?

Recession - வேலைக்குச் செல்லும் வயதில் இருப்பவர்கள் பயப்படும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.  GDP எனப்படும் ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி குறைந்தால் அதை பொருளாதாரப் பின்னடைவு (Recession) என்கின்றனர். நம் நாட்டின் மத்திய நிதியமைச்சர் இந்தியா இந்த ஆண்டு 7 முதல் 8 சதவிதம் வளர்ச்சியடையும் என்று கூறுவது நாட்டின் மொத்த உற்பத்தியைத் தான். ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி குறையும் பொழுது அதைப் பொருளாதாரப் பின்னடைவு என்கிறோம். 

2008ல் அமெரிக்காவில் சப்-பிரைம் என்ற சந்தையில் ஆரம்பித்த பொருளாதாரப் பின்னடைவு, லெஹ்மன் பிரதர்ஸ், ஏ.ஐ.ஜி என்று பல பிரபல வங்கிகளையும் விழுங்கி, பல நாடுகளுக்கும் பரவியது. ஒவ்வொரு நாட்டு மத்திய வங்கியும் பொருளாதாரப் பின்னடைவைச் சீராக்க பொருளாதார உதவி, பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் போன்றவற்றால் ஓரளவு நிலைமை சீராவது போல் தோன்றினாலும், மீண்டும் ஒரு பொருளாதாரப் பின்னடைவு வருவது போல் தோன்றுகிறது ஊடகங்களைப் பார்க்கும் பொழுது..

பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் மேல் மட்டத்தில் ஏற்படும் வேலையிழப்பை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர். ஆனால், பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் வேலையிழப்பையோ, பொருளாதாரப் பின்னடைவையோ வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில்லை.

2008ல் ஏற்பட்ட பின்னடைவால் இலட்சக் கணக்கானோர் வேலையிழந்து, வாழ்வாதாரத்தை இழந்ததே இன்னும் நினைவில் இருந்து அகலாத நிலையில், மேலும் ஒரு பின்னடைவை எப்படி சமாளிக்கப் போகிறோம்? 

சென்ற முறை அமெரிக்காவை மையமாகக் கொண்டு ஆரம்பித்த பின்னடைவு, இந்த முறை ஐரோப்பிய நாடுகளை மெதுவாக மையம் கொள்ள ஆரம்பிக்கிறது. ஐரோப்பாவில் ஏற்பட்டுவரும் பொருளாதார மாற்றத்தால் அவர்கள் நாணயமான "ஈரோ" வின் மதிப்பு பெருமளவு குறைய ஆரம்பித்துள்ளது. கிரீஸ் நாட்டில் ஆரம்பித்துள்ள கடன் (Debt Crisis) மற்றும் பற்றாக்குறை (Deficit) ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல், ஹங்கேரி, பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த என் நண்பரிடம், "ஹங்கேரி நாடு ஐரோப்பியக் கூட்டமைப்பின் கீழ் உள்ளது. ஏன் ஈரோ நாணயம் இன்னும் அங்கு பயனிற்கு வரவில்லை?" என்று கேட்டேன்.

"எங்கள் நாட்டின் பட்ஜட்டில் பற்றாக்குறை பல வருடங்களாக இருந்துகொண்டே இருக்கிறது. Deficit (பற்றாக்குறை) இருக்கும் வரை எங்களை ஈரோ ஆட்டத்திற்குச் சேர்க்க மாட்டார்கள். இதுவே தான் மற்ற நாடுகளுக்கும். ஐரோப்பியக் கூட்டமைப்பில் உள்ள முன்னேறிய நாடுகள் பல, பின் தங்கிய நாடுகளைச் சேர்ப்பதை விரும்பவில்லை. தங்கள் உழைப்பு, பணம் முழுக்க மற்ற நாடுகளிடம் பகிர்ந்தளிப்பதில் அவர்களுக்கு உடன்பாடில்லை" என்றார்.

ம்ம்... ஒருங்கிணைந்த நாணயம், பொருளாதாரம், ஒன்றான வளர்ச்சி எல்லாம் செயல் முறைக்குக் கொண்டுவருவதில் வளர்ந்த ஐரோப்பிய நாடுகளிலேயே கடினம் என்றால்... ம்ம்ம்ம் என்ன சொல்ல?

ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்... நீங்கள் சிரிக்கவில்லை என்றால் உங்கள் நரசிம்மராவின் ஒன்னுவிட்ட பெரியப்பா பேரன் என்று கூறிக்கொள்ளலாம்.













ஃபாக்ஸ்கான் மற்றும் சீனா தொழிலாளர்களின் சம்பள உயர்வு:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட்கள், மற்றும் இன்னபிற செல்போன் நிறுவனங்களின் பொருட்களைத் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் சீனா நிறுவனத்தில் ஏற்பட்டு வரும் தற்கொலைகள் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. தொடர்ச்சியாக இரண்டு ஷிப்ட்கள் வேலை, குறைந்த சம்பளம் மன அழுத்தம் போன்றவற்றால் தான் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற காரணம் மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா உட்பட பல நாடுகளில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

சீன அரசும் தொழிலாளர்களின் குறைந்த அளவு சம்பளத்தை உயர்த்த அறிவித்துள்ளது.இதனால் பல சாதக பாதகங்கள் விவாதத்திற்கு வந்துள்ளன. 

ஊழியர்கள் சம்பளம் அதிகரித்தால் அங்கே உற்பத்தியாகும் பொருட்களின் விலையையும் உயர்த்த வேண்டியதிருக்கும். இதனால் அந்நாட்டுப் பொருட்களுக்கு இருக்கும் (குறைந்த விலையால்) உள்ள சாதகமான நிலை மாற ஆரம்பிக்கும். ஆனால், ஊழியர்களின் சம்பளம் உயர்ந்தால் அந்நாட்டிலேயே செலவு செய்யும் போக்கு அதிகரிக்கும். சீனப் பொருட்களின் விலை உயர்வு, சீன தொழிற்சாலைகளில் உற்பத்திச் செலவு அதிகரிப்பு போன்றவை இந்தியா போன்ற மற்ற நாடுகளுக்கு மேலும் முதலீடு அதிகரிக்கும்.

முதலீடு அதிகரிப்பு எல்லாம் எந்த அளவிற்குச் சாமான்யரின் வாழ்வாதாரத்திற்கு உதவும் என்று பார்க்க வேண்டும்!!

* 10-06-02 - 2010 - 6வது மாதம் - 2வது வாரம்.

Saturday, June 5, 2010

எங்கே செல்கிறது (தமிழ்ப்) பதிவுலகம்?

தமிழில் பதிவுகளை நான் எழுத ஆரம்பித்தது கடந்த ஒன்றரை வருடங்களாகத் தான். தமிழில் பதிவுகள் எழுதுகிறேன் என்ற காரணத்தினாலேயே உலகெங்கும் எனக்குக் கிடைத்திருக்கும் நண்பர்கள் ஏராளம்.  அதிலும், எனக்கு அமீரகத்தில் கிடைத்த நண்பர்களுக்கும் தொடர்புகளுக்கும் காரணம் தமிழில் பதிவெழுதுவதே. பல தரப்பட்ட கருத்துகளையும் பார்வையிட ஒரு தளமாக தமிழ்ப் பதிவுலகம் மாறி வருவது கண்கூடு. சினிமா, பொழுதுபோக்கு மட்டுமல்லாது அறிவியல், தொழில்நுட்பம், சமூகம், வரலாறு, இலக்கியம், சுற்றுச்சூழல் என "தமிழில்" கட்டுரைகளும், கருத்துகளும் காணக்கிடைப்பது பதிவுலகில் தான்!! 

இப்படிப் பல துறைகளைப் பற்றியும் தமிழ்ப் பதிவுலகத்தின் வாசகர் வட்டம் எப்படி உள்ளது?

நண்பர்களிடம் விவாதித்ததில் 10000 பேர் படிப்பதே அதிகம் என்று தான் பலரும் கருதுகின்றனர். 7 கோடி மக்கள் பேசும் மொழியில் இயங்கும் ஒரு தளத்தை 10 ஆயிரம் பேர் தான் வாசிக்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரியதே. ஆங்கிலத்தில் பதிவெழுதி வரும் என் நண்பர்களைத் தமிழில் பதிவெழுதுமாறு கேட்டுக்கொண்டும், தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகளை அறிமுகப்படுத்தியும் வருகிறேன். அப்படி அறிமுகப்படுத்திய நண்பர்களுள் ஒருவர் இன்று என்னைத் தொடர்புகொண்டு, "என்ன தமிழ் மணம் பேஜைத் திறந்தா ஏதோ சண்டை நடக்கற மாதிரி தெரியுது?" என்றார்.

"ஆமா, ஒரு பிரச்சனை ஓடிட்டு இருக்கு" என்றேன்.

"ஏன்டா, திருந்தவே மாட்டமாடா நம்ம? அரசியல்ல தான் ஏதோ ரவுடிக, படிக்காதவங்க சண்டைப் போடறாங்கன்னா, இங்கேயுமா? இதுல நீ தமிழ்ல எழுத வேற சொல்ற!!..ம்ம்ம் " என்றார்.

அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் விழித்தேன். இது என்னை நோக்கி எழுந்த கேள்விகள். என்னைப் போலவே தமிழில் பதிவெழுதும் நண்பர்கள் அனைவரும் இது போன்ற கேள்வியை எதிர்கொண்டிருக்கக் கூடும். கடந்த ஒரு வருடமாகவே நான் சந்திக்கும் தமிழன்பர்கள் அனைவரையும் தமிழ்மணம் போன்ற திரட்டியைப் படிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அப்படி செவிவழிச் செய்திகளால் தமிழ்மணத்தைப் பார்வையிடும் வாசகர்களும், சில நாட்களாகத் தமிழ்மணத்தில் பிரபலமாகும் பதிவுகளைப் படிப்பவர்களுக்கும், தமிழில் பதிவு எழுத நினைக்கும் அன்பர்களுக்கும் என்ன மாதிரியான எண்ணங்கள் எழும்? தமிழில் பதிவெழுதும் அல்லது பதிவெழுத நினைக்கும் பெண்கள் என்ன மாதிரியான மன உளைச்சலிற்கு ஆளாகியிருப்பார்கள்?




பதிவுலகம் ஒரு பொதுவெளி என்பதை மீறி நட்பு பாராட்ட நினைக்கும் எவருக்கும் சில நாட்களாக நடக்கும் தாக்குதல்கள் ஒரு எச்சரிக்கை மணியாகத் தான் தோன்றியிருக்கும். பதிவுலக நண்பர்கள் சந்திக்கும் சூழ்நிலையில் தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் வெளியிடுவது கூட தவறோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அரசியலில் தான் நாகரிகமின்றி கொ.ப.செ.க்களை வைத்துத் தனிமனிதத் தாக்குதல்கள் நடக்கிறதென்றால், இங்கே படித்தவர்கள் (??) மத்தியிலும் நடப்பது வேதனையானது.

"இல்லீங்க.. ஆமாங்க" என்று மரியாதை நிமித்தமாக "ங்க" போட்டுப் பேசிப்பழகிய எனக்கு பொதுவெளியில் ஒருவரைக் கீழ்தரமான வசவுகளை வெளிப்படுத்திய பதிவைப் பார்த்த பிறகு, "இன்று இவரிற்கு நேர்ந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்" என்றே தோன்றுகிறது. இந்த வசவுகள் ஒரு பெண்ணை நோக்கித் தொடுக்கப்பட்டதைப் பார்த்த பிறகு, எத்தனை தோழிகளை நான் தமிழில் பதிவெழுதப் பரிந்துரைப்பேன்?

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

ஒரு முறை கொட்டிய வார்த்தைகளை எடுக்க முடியாதோ, வலையுலகில் ஏற்றிய விசயத்தையும் அழிக்க முடியாது எனபதை மீண்டுமொரு முறை நமக்கு உணர்த்துவதாக அமைகிறது இந்த சம்பவம். 

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்

என்ற வள்ளுவன் வாக்கை மனதில் நிறுத்தினாலே நாம் பிரச்சனைகளைத் 
தவிர்க்க வழி பிறக்கும்.

o

ஆங்கில பதிவுகளின் திரட்டி www.digg.com சென்று பாருங்கள். சில கட்டுரைகள் 5000 வாக்குகள் கூட பெற்றிருக்கும். 5000 வாக்குகள் வாங்கவேண்டுமென்றால் எத்தனை இலட்சம் பேர் படித்திருக்க வேண்டும்? பல்லாயிரக்கணக்கானோர் ஒரு மொழியைப் பயன்படுத்தும் பொழுது, அம்மொழியில் படைப்புகளைப் படைக்கும் பொழுது தான் அம்மொழி வளரும். ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளைப் போல தமிழிலும் படைப்புகள் வரவேண்டுமென்றால் பல்துறையைச் சேர்ந்தவர்களும் வரவேண்டும். இங்கே நடந்து வரும் விசயங்களைப் பார்த்த பிறகு எத்தனை பேர் தமிழில் படைப்புகளை எழுத வருவார்கள்?

o





இனி வரும் காலத்தை சமூக ஊடகங்களில் (Social Media) காலமாக பெரும்பாலான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பிளாக்கர், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகத் தளங்களில் தான் அடுத்த வளர்ச்சி இருக்கிறது என்கின்றனர்.

* சில காலம் முன்புவரை www.naukri.com ல் வேலைக்கு ஆட்களைத் தேடியவர்கள் இன்று சமூக ஊடகத் தளமான லிங்க்ட் இன்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 

* சில காலம் முன்பு வரை சந்தை ஆராய்ச்சி நிறுவனங்களை நம்பி வந்து பன்னாட்டு நிறுவனங்கள் இன்று ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களில் விவாதிக்கும் விசயங்களைப் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.

*கூகுள் வழியாகவும், இணையதள விளம்பரங்கள் மூலமாக வாடிக்கையாளர்களைச் சென்றடைய நினைத்த பன்னாட்டு நிறுவனங்கள் இன்று பிளாக்கர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் வாய்வார்த்தையை (Word or Mouth) நம்ப ஆரம்பித்துள்ளனர்.

இப்பொழுது ஆங்கில பதிவுத்தளங்களைப் பார்வையிட ஆரம்பித்துள்ள வணிக நிறுவனங்கள் சில ஆண்டுகளில் வட்டார மொழிகளையும் பார்வையிட ஆரம்பிப்பார்கள். அப்படி பார்வையிட ஆரம்பிக்கும் பொழுது நம் மொழியிலும் பல துறைகளிலும் சிறந்த ஆய்வுகள், விவாதங்கள் எல்லாம் வந்தால் தான் கணக்கில் எடுக்கும் நிலைவரும். அதைவிடுத்து... :((

சமூக ஊடகங்களுக்கு கோடிக்கணக்கான கண்கள் உண்டு. அவை நம்மைப் பார்வையிட்டுக்கொண்டேயிருக்கின்றன. அதை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம்?

அமீரகத்தில் கால்பந்தாட்ட உலகக்கோப்பை ஜூரம்!!




கடந்த சில மாதங்களாகவே அமீரகத்தில் உலகக்கோப்பைக்கான விளம்பரங்கள், தென் ஆப்பிரிக்கா சென்று வர பரிசுக்கூப்பன்கள் என்றெல்லாம் உலகக்கோப்பைக்கான ஏற்பாடுகள் துவங்கிவிட்டன. நகரங்களில் உள்ள வணிக அங்காடிகளில் உலகக்கோப்பைக்கான தள்ளுபடிகளும் ஆரம்பித்துவிட்டன.  கால்பந்தாட்டத்தின் முக்கிய ஸ்பான்சர்களின் விளம்பரப் பலகைகள் நகரின் பல இடங்களிலும் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

கடந்த சில வாரங்களாகவோ உலகக்கோப்பை ஜூரம் பெரும்பாலானோரைப் பற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. நகரங்களில் உள்ள உணவு விடுதிகள், நட்சத்திர விடுதிகள் உலகக்கோப்பையை பார்த்து ரசிக்க விஷேச ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். 20 பேர் கொண்ட குழு, 12 பேர் குழு என்றெல்லாம் முன்பதிவு செய்து கொண்டால் உணவு வேளையிலோ சீஷா புகைத்துக் கொண்டோ கால்பந்தாட்டங்களைப் பார்க்கலாம். ஐரோப்பிய மக்கள் அதிகமாக வசிக்கும் துபாய் மரினா போன்ற பகுதிகளில் உள்ள உணவு விடுதிகளில் விளையாடும் நாடுகளுக்கு ஏற்ப உணவுகளும் ஏற்பாடு செய்யப்படுமாம்.

குடியிருப்புப் பகுதிகளில் சிறுவர்கள் கால்பந்தை உதைத்துக் கொண்டிருப்பது அதிகமாகப் பார்க்க முடிகிறது. கல்லி கிரிக்கெட் போல கல்லி ஃபுட்பாலும் அங்கங்கே பார்க்க முடிகிறது. அமீரகத்தில் அதிகமாக இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் வசிப்பதால் கிரிக்கெட ஆர்வலர்கள் தான் அதிகம். ஆனால், அரபு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் எங்கும் கால்பந்தாட்டம் தான் பிரபலம். சென்ற ஆண்டு எகிப்து அணி ஆப்பிரிக்கக் கோப்பையை வென்றதையடுத்து இரவு முழுவதும் கார்களில் ஊர்வலம் சென்றும் ஒலியெழுப்பியும் கொண்டாடினர். கோவா, கேரளா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த நண்பர்கள் அலுவலகத்தில் கால்பந்தாட்டத்தைப் பற்றி விவாதிப்பதுண்டு.


ஆப்பிரிக்க நாடுகளில் முதன்முறையாக உலகக் கோப்பை நடப்பதும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆறு நாடுகள் பங்கேற்பதும் மத்திய கிழக்குப் பகுதிகளில் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, அல்ஜீரியா, கானா, கேமரூன், ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தின் சார்பில் விளையாடுகின்றன. பங்கேற்கும் 32 நாடுகளின் வெற்றி வாய்ப்புகளைப் பற்றியும் ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டன செய்தித்தாள்கள். அவை.. 

( Odds - 2-1 என்றால் அதிக வாய்ப்பு என்றும். 4000-1 என்றால் குறைந்து வாய்ப்பென்று கொள்க)

1. அமெரிக்க - 80 -1
2. நியூசிலாந்து - 2000-1
3. வட கொரியா- 125-1
4. உருகுவே - 80-1
5. கிரேக்கம் - 150-1
6. இத்தாலி - 14-1
7. போர்ச்சுகல் - 22-1
8. ஸ்பெயின் - 4-1
9. பிரேசில் 4.5-1
10. ஜெர்மனி - 12-1
11. இங்கிலாந்து - 6-1
12. பிரான்ஸ் - 16-1
13. அர்ஜெண்டைனா - 6-1
14. ஜப்பான் - 250-1
15. ஸ்லோவாக்கியா - 250-1
16. கேமரூன் - 100-1
17. ஹாலாந்து - 10-1
18. தென் கொரியா - 200-1
19. டென்மார்க் - 125-1
20. மெக்சிகோ - 80-1
21. நைஜீரியா - 100-1
22. கானா - 80-1
23. பாரகுவே - 80-1
24. சுவிஸ் - 200-1
25. சிலி - 66-1
26.செர்பியா - 50-1
27. ஸ்லோவனியா - 250-1
28. அல்ஜேரியா-400-1
29. ஆஸ்திரேலியா - 125-1
30. ஹொண்டுரஸ் -750-1
31. ஐவரி கோஸ்ட் - 33-1
32. தென்ஆப்பிரிக்கா - 125-1

முதல் கட்டமாக 32 நாடுகளை எட்டு குழுவாகப் பிரித்து லீக் போட்டிகள் ஜூன் மாதம் 11ம் தேதி முதல் நடக்கவிருக்கின்றன. பிரேசில், வட கொரியா, ஐவரி கோஸ்ட், போர்சுகல் அணிகள் உள்ள குழு-G யை Group of Death என்று கூறுமளவிற்கு பலம் வாய்ந்த மூன்று அணிகள் உள்ளன. என்ன தான் வெற்றிவாய்ப்புகளுக்கான ஆருடங்கள் கூறப்பட்டாலும் திடீரென்று எதிர்பாராத வகையில் பலம் வாய்ந்த அணிகள் தோற்பதையும் கடந்த உலகக்கோப்பைகளில் பார்த்துள்ளோம்.

அலுவலக நண்பர்களுக்குள் இப்பொழுதே எந்த அணி வெற்றிபெறும் என்ற விவாதங்கள் ஆரம்பித்துவிட்டன. என் ஃபேவரிட், அர்ஜெண்டைனா தான். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணியாகக் கூறப்பட்டாலும் 1986க்குப் பிறகு கோப்பையை வெற்றிபெறவில்லை. மெஸ்ஸி, மிலிடோ, மராடனா போன்ற சிறப்பான வீரர்கள் இந்த முறை என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்!!

1986ல் மராடனா (சீனியர்) போட்ட கோலின் காணொளி கீழே..



1986ல் மராடனாவின் புகழ் பெற்ற Hand of God கோலின் காணொளி கீழே..




இதெல்லாம் எழுதுகிறாயே உனக்கும் கால்பந்தாட்டத்திற்கும் என்ன தொடர்பு? என்று கேட்டால்..

அது வந்து பாருங்க.. எங்க ஸ்கூல்ல கேம்ஸ் அவர்ல கால்பந்தாட்டம் தான் விளையாடுவோம். எங்க மைதானம் கிழக்கு மேற்கு வாக்குல அமைஞ்சிருக்கும். எப்பவுமே காத்து நல்லா விசுவிசுனு வீசும். மேற்க இருந்து கோல் கீப்பர் ஒரு கிக் விட்டான்னா காத்து அடிக்கற வேகத்துக்கு அடுத்த கோல் போஸ்ட் வரைக்கும் போகும். நாங்க எல்லாம் பந்தத் துரத்தீட்டே போவோம். 

நாங்க மைதானத்துல கால்பந்து விளையாடினதுல பெரும்பங்கு காத்துக்குத் தான் போயிச் சேரும். கார்னர் கிக் வுட்டம்னா பந்து அப்படியே சுழன்று கோல் போஸ்டுக்குப் போகும். அப்படி ஒரு திறமை, அப்படி ஒரு காத்து!! அதெல்லாம் ஒரு காலம்.


சரி விடுங்க.. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. மெஸ்ஸியா, ரூனியா, க்ளோஸா, காகாவா, கிரிஸ்டியானோ ரொனால்டோவா! யார் கலக்குகிறார்கள் என்று பார்ப்போம்!!

Related Posts with Thumbnails