Sunday, April 12, 2009

சித்திரை முதல் நாளை...

உங்கள் 000000 தொலைக்காட்சியில் "சித்திரை முதல் நாளை முன்னிட்டு.... " காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் கண்டு மகிழுங்கள்!!

புதுசா இருக்கா அறிவிப்பு? அறிவிப்பு தான் புதுசு....


"பொங்கல் தினத்தையே தமிழ் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும்" என்ற தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து, "தொலைக்காட்சிகளுக்கு" வணிகத்தை ஊக்குவிக்க கிடைத்திருக்கும் விழாவே "சித்திரை முதல் நாள்".


சித்திரை முதல் நாளுக்கு அப்படி என்ன சிறப்பு?


சூரியன் பூமத்திய ரேகைக்கு நேராக வரும் மாதம் தான் சித்திரை. மேலும் இந்துக்களின் ஜோதிட முறைப்படி சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு வருவது சித்திரை முதல் நாளன்று!! சித்திரை முதல் நாளன்று பிறந்த ஒருவருடைய ஜாதகத்தைப் பார்த்தால் சூரியன் மேஷ ராசியில் இருக்கும்!! இப்படி, சூரியனின் ஒரு வருட சுழற்சியை முன்னிட்டும், பூமத்திய ரேகைக்கு வரும் நாளைக் கணக்கிட்டும் நம் முன்னோர்கள் சித்திரை முதல் நாளை கொண்டாடி வந்தார்கள்.


சரி, "தமிழக புத்தாண்டை மாற்றுவது" என்று சட்டம் நிறைவேற்றியாயிற்று. மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் எப்போது, எப்படி தங்களது புத்தாண்டைக் கணக்கிடுறார்கள்?



கேரளாவில் சித்திரை முதல் நாளிலும், கர்நாடகாவிலும் ஆந்திராவில் அவர்களது முறைப்படி சைத்ரா மாத முதல் நாளன்று யுகாதியைக் கொண்டாடுகிறார்கள்.சீனாவில் தங்களது ஜோதிட முறைப்படி தங்கள் முதல் மாதத்தின் அமாவாசை அன்றும், இஸ்லாமிய காலண்டரின் முறைப்படி "முகரம்" முதலாம் நாளன்றும் கொண்டாடுகிறார்கள்.


இப்படி, உலகின் பல நாடுகளிலும் புத்தாண்டை தங்களது ஜோதிடத்தின் முறைப்படியும், மதத்தின் முறைப்படியும் கொண்டாடி வரும் நிலையில், நாம் உழவர் திருநாளாம் பொங்கலன்று தமிழ் புத்தாண்டு நாளாகவும், திருவள்ளுவர் பிறந்த BC31ம் ஆண்டிலிருந்து தமிழர் ஆண்டு கணக்கிடப்படும் என்றும் அறிவித்திருப்பது புதுமையானதே!!


அதே புதுமை, பெருமையுடன் தமிழையும் வளர்க்கிறோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.


உதாரணத்திற்கு அரபு நாடுகளை எடுத்துக்கொள்வோம். அங்கே அரபி மொழியை கட்டாயமாக மாணவர்கள் அனைவரும் படித்தாக வேண்டும். இந்தியாவில் இருந்து ஒருவர் வேலே காரணமாக அரபு நாடுகளுக்கு மாற நேர்ந்தால், அவருடைய குழந்தைகளும் கட்டாயமாக அரபி மொழியை கற்றே தீர வேண்டும்.


ஆனால் இங்கே, 20 அல்லது 30 மதிப்பெண்கள் அதிகம் பெற பிரென்சு மொழியை எடுப்பது முறையாகி வருவதை என்னவென்று சொல்ல?


இன்று, உலகை ஆளும் மொழிகளாக உள்ள ஆங்கிலம், பிரன்சு, ஜெர்மன் போன்ற எந்த மொழிக்கும் தமிழைப் போல் 2000 ஆண்டு பழமையோ, திருக்குறள், தொல்காப்பியம் போன்ற இலக்கியங்களோ கிடையாது.



இன்று நாம் மேலாண்மே படிப்பில் படிக்கும் "ஸ்வாட் அனாலிஸஸை (SWOT Strength Weakness Opportunity Threat - Analysis )" திருவள்ளுவர் 2000 ஆண்டுகட்கு முன்பே கூறியாயிற்று...



வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்


துணைவலியும் தூக்கிச் செயல்


என்னும் குறள் "ஸ்வாட் அனாலிஸஸைத்" தான் குறிப்பிடுகிறது.



தமிழகத்தில் எத்தனை வீடுகளில் திருக்குறள் உள்ளது? ஒரு 10% சதவீதம் வீடுகளில் திருக்குறள் இருக்குமா என்பதே சந்தேகம் தான்!!



சில நூறு கோடிகள் செலவில் டிவியை இலவசமாக கொடுக்கும் போது, வீட்டுக்கு வீடு திருக்குறளை இலவசமாக கொடுக்க 50 கோடி ருபாய் செலவு ஆகுமா?



தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கும் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி நூலங்களுக்கும் தமிழ் இலக்கியங்களை இலவசமாக கொடுக்க மேலும் ஒரு 50 கோடி ருபாய் செலவு ஆகுமா? இப்படி தமிழ் இலக்கியங்கள் மீதான பற்றை மாணவப் பருவத்திலேயே வளர்த்துவிட்டால், தமிழும் வளருமே!!இந்தப் பணத்தை சித்திரை முதல் நாளன்று வரும் தொலைக்காட்சி விளம்பர வருமானத்திலேயே ஈட்டி விடலாமே!!



வணிகத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டால் தமிழை எப்படி வளர்ப்பது?



அப்படி வணிகத்தை மையமாக கொண்டு செயல்படும் புத்தக நிலையங்களில் தமிழ் புத்தகங்களாக நாம் பார்க்க நேர்வது திருக்குறள், பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் மட்டுமே. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெங்கீழ்க்கணக்கு, தமிழ்க்காப்பியங்கள் போன்றவைக்கெல்லாம் இடம் கிடையாது.



காப்பியங்கள் வீட்டில் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, குறைந்தது திருக்குறளாவது இருக்க வேண்டுமே!!!



இப்படி வீடு தோறும் திருக்குறள், மாணவர்கள் பார்வையில் தமிழ் இலக்கியங்கள் என்று குறைந்த அளவிலாவது தமிழை வளர்க்க திட்டம் வகுக்கவில்லை என்றால் தமிழ்ப்புத்தாண்டை மாற்றி அறிவித்ததே அர்த்தமற்றதாகி விடும்.


பல நூற்றாண்டுகளாக முன்னோர்களால் கொண்டாடப்பட்டு வரும் விழாவை இழந்த தமிழர்களுக்கு, "சித்திரை முதல் நாளை முன்னிட்டு.... " காட்டும் சிறப்பு (??) நிகழ்ச்சிகள் மட்டும் தான் மிச்சமாக நிற்கும்!!

3 comments:

Anonymous said...

Nalla Karuthu..

Uma Senthil

Unknown said...

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

R.Vignesh said...

sirappa sollura senthil

Related Posts with Thumbnails