"வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணம் பண்ணிப் பார்!!" என்னும் சொலவடை நம் ஊரில் மிகவும் பிரபலம். அதிலும் திருமணம் செய்வதில் சந்திக்கும் சிக்கல்கள், அனுபவங்கள் ஒரு நிறுவனத்தை நடத்துவதில் கூட கிடைக்காது. புதிதாக ஒரு குடும்பத்துடன் உறவு, உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் திருப்திப்படுத்துவது, நேரமின்மையால் சிலரை நேரில் அழைக்க முடியாமல் போவது, யாருக்கு முதன் மரியாதை செய்வது என்று எண்ணற்ற சிக்கல்கள்!! மேலும் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பழக்க வழக்கங்களால் வரும் குழப்பங்களும் சேர்ந்து கொள்ளும்! இங்கே பணத்தால் வரும் மன உளைச்சல் வேறு!!
இப்படி பல குழப்பங்கள், மன உளைச்சல்களைச் சந்தித்து திருமணம் முடிந்து "அப்பாடா.. !!" என்ற தம்பதியினர் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்த சில மாதங்களில் அடுத்த கேள்வி ஆரம்பித்துவிடும்
கண்ணு!! ஏதாவது விசேஷம் உண்டா?
"நம்ம இராமசாமி மவனுக்குப் போன வைகாசில தான் கல்யாணம் ஆச்சு! இந்த வருஷம் மாசில குழந்தை பிறந்திருச்சு"
"அந்தந்த நேரத்துல நடக்க வேண்டியது நடந்துறனுங் கண்ணு"
இன்னும் எத்தனையோ விதமான கேள்விகள், கோரிக்கைகள் திருமணமான சில மாதங்களிலேயே! முந்தைய தலைமுறையினர் தங்களது முதலாம் மண நாளில் குழந்தையுடன் இருந்தது தான் இந்தக் கேள்விகள், பேச்சுகளுக்குக் காரணம்!!
ஆனால், நம் தலைமுறையினரோ சில மாதங்கள், வருடங்கள் கழித்து குழந்தையைப் பற்றி யோசிக்கலாம் என்று இருந்துவிடுகி(றோம்)றார்கள்!! ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும், இப்பொதுதே எதற்கு? நமக்கு என்ன வயதாகிவிட்டது? மேற்கத்திய நாடுகளில் நாற்பது வயதிகளிலும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்களே, நம் இருவரின் வேலையிலும் முன்னேற்றம் அடைந்த பிறகு பார்த்துக் கொள்ளலம் போன்ற எண்ணங்கள் தான் குழந்தைப்பேறை தள்ளிப்போடுவதற்கான காரணங்கள்!!
இவர்களுள் பெரும்பாலானோர் DINK டபுல் இங்கம் நோ கிட்ஸ் என்ற நிலையில் அடங்குவர்!!
தம்பதியினர் இருவருக்கும் நல்ல வேலை, நல்ல சம்பளம், நேரமின்மை, பொறுப்பை ஏற்க பயம் போன்றவை DINK வாழ்க்கைமுறையைக் கொண்டிருப்போரின் குணாதிசயங்கள். முந்தைய தலைமுறையினர்க்கு அளவான சம்பளம், போதிய ஓய்வு எல்லாம் இருந்ததால் குழந்தைகளைப் பராமரிக்க முடிந்தது. ஆனால இன்றோ, அலுவலகத்தில் 10 முதல் 16 மணி நேரம் வரை செலவழிக்க நேர்வதால் தகுந்த நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது!!
DINK நிலைக்கு, மேற்கத்திய கலாச்சாரத்தை நோக்கிய நம் வாழ்க்கை முறையும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை. 30களில் திருமணம் செய்துகொள்வதும், நாற்பதுகளில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதும் மிகவும் சாதாரணமான விசயம். குழந்தைகள் பதின்ம வயதைக் கடந்துவிட்டால், கண்டுக்க வேண்டியத் தேவையில்லாத சமூக நிலை மேற்கத்திய நாடுகளில்!! ஆனால் நமக்கோ, குழந்தைகளின் திருமணம் வரை பயணிக்க வேண்டியுள்ளது.
o
திருமணமாகி சில வருங்களுக்கு DINK வாழ்வியல் முறையில் இருப்பவர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கும் பொழுது தான் காத்திருக்கிறது அதிர்ச்சி!!
தம்பதியினருள் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமே குழந்தை பெற்றுக் கொள்வதில் குறைபாடுகள் இருப்பது இன்று பரவலாகப் பார்க்க முடிகிறது. அலுவலகத்தில் அதிக நேரம் செலவழிப்பது, மன அழுத்தம், போதிய தூக்கமின்மை, நல்ல ஆரோக்கியமான உணவுப்பழக்கம் இல்லாதது போன்ற காரணங்களால் பிரச்சனைகள் வருவது அதிகரிப்பதற்கு மகப்பேறு மருத்துவமனைகளில் காணப்படும் கூட்டமே சாட்சி!!
அந்த நேரம் பார்த்து தொலைக்காட்சியில் தோன்றி பயமுறுத்தும் போலி சித்த வைத்தியர்களும், பெற்றோர்கள், உறவினர்கள் கொடுத்த அறிவுரைகளும் நினைவிற்கு வருவது வேடிக்கையானது.
o
DINK வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது என்று முடிவெடுக்கும் முன்பு "தங்கள் உடல் நலம் நன்றாக இருக்கிறதா? குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதியுடன் இருக்கிறோமா?" என்பதை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் தேவையான ஒன்று!!
நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையில் ஒவ்வொரு விசயத்திற்கு ஒவ்வொரு அர்த்தம் இருந்திருக்கிறது. திருமண வாழ்வில் தம்பதியினர்க்குள் சில மனக்கசப்புகள், உறவில் விரிசல்கள் ஏற்பட்டாலும் அதை ஒட்டவைக்கும் பசையாக இருப்பது குழந்தைகளே என்பதை நம் முன்னோர் அறிந்து வைத்திருக்கின்றனர்.
இன்றைய வாழ்வியல் முறையில், முன்னோர் போல வாழ முடியாவிட்டாலும, அவர்களிடம் இருந்து சில படிப்பினைகளை எடுத்துக்கொள்வதில் தவறில்லையே!! எல்லாவற்றிற்கும் மேலாக..
"குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்"
என்பதை நம் முன்னோர்கள் அனுபவித்ததால் தான்.. நம்மிடம் கேட்கிறார்கள் "ஏதாவது விசேஷம் உண்டா?" என்று!!
ooo