Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Wednesday, June 9, 2010

தீதும் நன்றும் - 10-06-02*










டபுள் டிப்: மீண்டும் ஒரு பொருளாதாரப் பின்னடைவா?

Recession - வேலைக்குச் செல்லும் வயதில் இருப்பவர்கள் பயப்படும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.  GDP எனப்படும் ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி குறைந்தால் அதை பொருளாதாரப் பின்னடைவு (Recession) என்கின்றனர். நம் நாட்டின் மத்திய நிதியமைச்சர் இந்தியா இந்த ஆண்டு 7 முதல் 8 சதவிதம் வளர்ச்சியடையும் என்று கூறுவது நாட்டின் மொத்த உற்பத்தியைத் தான். ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி குறையும் பொழுது அதைப் பொருளாதாரப் பின்னடைவு என்கிறோம். 

2008ல் அமெரிக்காவில் சப்-பிரைம் என்ற சந்தையில் ஆரம்பித்த பொருளாதாரப் பின்னடைவு, லெஹ்மன் பிரதர்ஸ், ஏ.ஐ.ஜி என்று பல பிரபல வங்கிகளையும் விழுங்கி, பல நாடுகளுக்கும் பரவியது. ஒவ்வொரு நாட்டு மத்திய வங்கியும் பொருளாதாரப் பின்னடைவைச் சீராக்க பொருளாதார உதவி, பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் போன்றவற்றால் ஓரளவு நிலைமை சீராவது போல் தோன்றினாலும், மீண்டும் ஒரு பொருளாதாரப் பின்னடைவு வருவது போல் தோன்றுகிறது ஊடகங்களைப் பார்க்கும் பொழுது..

பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் மேல் மட்டத்தில் ஏற்படும் வேலையிழப்பை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர். ஆனால், பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் வேலையிழப்பையோ, பொருளாதாரப் பின்னடைவையோ வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில்லை.

2008ல் ஏற்பட்ட பின்னடைவால் இலட்சக் கணக்கானோர் வேலையிழந்து, வாழ்வாதாரத்தை இழந்ததே இன்னும் நினைவில் இருந்து அகலாத நிலையில், மேலும் ஒரு பின்னடைவை எப்படி சமாளிக்கப் போகிறோம்? 

சென்ற முறை அமெரிக்காவை மையமாகக் கொண்டு ஆரம்பித்த பின்னடைவு, இந்த முறை ஐரோப்பிய நாடுகளை மெதுவாக மையம் கொள்ள ஆரம்பிக்கிறது. ஐரோப்பாவில் ஏற்பட்டுவரும் பொருளாதார மாற்றத்தால் அவர்கள் நாணயமான "ஈரோ" வின் மதிப்பு பெருமளவு குறைய ஆரம்பித்துள்ளது. கிரீஸ் நாட்டில் ஆரம்பித்துள்ள கடன் (Debt Crisis) மற்றும் பற்றாக்குறை (Deficit) ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல், ஹங்கேரி, பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த என் நண்பரிடம், "ஹங்கேரி நாடு ஐரோப்பியக் கூட்டமைப்பின் கீழ் உள்ளது. ஏன் ஈரோ நாணயம் இன்னும் அங்கு பயனிற்கு வரவில்லை?" என்று கேட்டேன்.

"எங்கள் நாட்டின் பட்ஜட்டில் பற்றாக்குறை பல வருடங்களாக இருந்துகொண்டே இருக்கிறது. Deficit (பற்றாக்குறை) இருக்கும் வரை எங்களை ஈரோ ஆட்டத்திற்குச் சேர்க்க மாட்டார்கள். இதுவே தான் மற்ற நாடுகளுக்கும். ஐரோப்பியக் கூட்டமைப்பில் உள்ள முன்னேறிய நாடுகள் பல, பின் தங்கிய நாடுகளைச் சேர்ப்பதை விரும்பவில்லை. தங்கள் உழைப்பு, பணம் முழுக்க மற்ற நாடுகளிடம் பகிர்ந்தளிப்பதில் அவர்களுக்கு உடன்பாடில்லை" என்றார்.

ம்ம்... ஒருங்கிணைந்த நாணயம், பொருளாதாரம், ஒன்றான வளர்ச்சி எல்லாம் செயல் முறைக்குக் கொண்டுவருவதில் வளர்ந்த ஐரோப்பிய நாடுகளிலேயே கடினம் என்றால்... ம்ம்ம்ம் என்ன சொல்ல?

ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்... நீங்கள் சிரிக்கவில்லை என்றால் உங்கள் நரசிம்மராவின் ஒன்னுவிட்ட பெரியப்பா பேரன் என்று கூறிக்கொள்ளலாம்.













ஃபாக்ஸ்கான் மற்றும் சீனா தொழிலாளர்களின் சம்பள உயர்வு:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட்கள், மற்றும் இன்னபிற செல்போன் நிறுவனங்களின் பொருட்களைத் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் சீனா நிறுவனத்தில் ஏற்பட்டு வரும் தற்கொலைகள் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. தொடர்ச்சியாக இரண்டு ஷிப்ட்கள் வேலை, குறைந்த சம்பளம் மன அழுத்தம் போன்றவற்றால் தான் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற காரணம் மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா உட்பட பல நாடுகளில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

சீன அரசும் தொழிலாளர்களின் குறைந்த அளவு சம்பளத்தை உயர்த்த அறிவித்துள்ளது.இதனால் பல சாதக பாதகங்கள் விவாதத்திற்கு வந்துள்ளன. 

ஊழியர்கள் சம்பளம் அதிகரித்தால் அங்கே உற்பத்தியாகும் பொருட்களின் விலையையும் உயர்த்த வேண்டியதிருக்கும். இதனால் அந்நாட்டுப் பொருட்களுக்கு இருக்கும் (குறைந்த விலையால்) உள்ள சாதகமான நிலை மாற ஆரம்பிக்கும். ஆனால், ஊழியர்களின் சம்பளம் உயர்ந்தால் அந்நாட்டிலேயே செலவு செய்யும் போக்கு அதிகரிக்கும். சீனப் பொருட்களின் விலை உயர்வு, சீன தொழிற்சாலைகளில் உற்பத்திச் செலவு அதிகரிப்பு போன்றவை இந்தியா போன்ற மற்ற நாடுகளுக்கு மேலும் முதலீடு அதிகரிக்கும்.

முதலீடு அதிகரிப்பு எல்லாம் எந்த அளவிற்குச் சாமான்யரின் வாழ்வாதாரத்திற்கு உதவும் என்று பார்க்க வேண்டும்!!

* 10-06-02 - 2010 - 6வது மாதம் - 2வது வாரம்.

Friday, May 28, 2010

ஃபேஸ்புக் - நம் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை என்ன?


சில வருடங்களுக்கு முன்பு வரை நம் நண்பர்கள், உறவினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நேரில் சந்திக்கும் பொழுதோ, எப்பொழுதாவது தொலைபேசியில் பேசினாலோ மட்டும் தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று, நாம் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பதை தினமொரு முறை, பலர் மணிக்கொரு முறை பகிர்ந்துகொண்டிருக்கிறோம். உபயம் சமூக வலையமைப்புத்தளங்கள்!!

அதில் ஃபேஸ்புக்கின் பங்கு மிகவும் அதிகம்.

காலையில் பார்த்த விசயங்கள், மனதில் உதித்த விசயங்கள், விரும்பிய புகைப்படங்கள், வடித்த கவிதைகள், பார்த்த காணொளிகள், வாசித்த கட்டுரைகள் என்று பகிரப்படும் விசயங்களுக்கு அளவே கிடையாது. 

நாங்கள் எடுத்த புகைப்படம்...

எங்கள் குடும்ப நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம்..

நானும் இந்த பிரபலமும் சந்தித்த பொழுது எடுத்த புகைப்படம்..

என் அலைபேசி எண்ணை மாற்றியுள்ளேன். இதோ.. இது தான் என் எண்..
.
.
என்று தன்னைப் பற்றியும் தங்களது எண்ணங்களையும் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துகொண்டேயிருக்கிறோம். 

சில சமயங்களில் மெங்களுர் விமான விபத்து போன்ற சம்பவங்களையும், அஞ்சலிகளையும் பகிர்ந்தாலும், நம் எண்ணங்களே பிரதானமாக இடம் பிடிக்கின்றன பகிர்தலில். சில கேள்விகள் எழுகின்றன. நாம் பகிரும் விசயங்களை யார் யார் பார்க்கிறார்கள் என்பது நமக்குத் தெரியுமா? நாம் பகிரும் புகைப்படங்கள் யார் யாருக்கெல்லாம் அனுப்பப்படுகின்றதென தெரியுமா?

"என் புகைப்படங்களை வைத்து என்ன செய்யப்போகிறார்கள்? நான் என்ன பெரிய பிரபலமா?" என்ற எண்ணம் நமக்குள் எழத்தான் செய்யும். ஆனால், நாம் பகிரும் விசயங்களால் நமக்கு எந்த திசையில் இருந்தும் சங்கடங்கள் நேரலாம். நம் பகிர்தலை யார் யார் எல்லாம் பார்க்கலாம் என்பதை தேர்வு செய்யும் வரை!!

என் தோழி ஒருவர் தான் ஒரு பிரபலத்துடன் சில புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அந்த பிரபலமும் அவரது புகைப்படத்தொகுப்பில் அந்தப் படங்களைச் சேர்த்துள்ளார்.  தோழி அந்தத் தொகுப்பை தன் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்தார். நமக்குத் தான் பிரபலங்களின் படங்களைப் பார்ப்பதில் ஆர்வமாச்சே. அந்தத் தொகுப்பைப் பார்த்தால் அவரது குடும்ப உறுப்பினர்களின் படங்களெல்லாம் உள்ளன. அதில் பல இதுவரை ஊடகத்தில் வெளியாகாத படங்கள்!!

அந்தப் பிரபலம் இதை எதிர்பார்த்திருப்பாரா?

அவர் செய்யாததென்ன?

தன் பகிர்தலை யார் யார் பார்க்க முடியும்? யார் யார் பிறரிடம் பகிரமுடியும் என்ற Settingsஐச் சரியாகத் தேர்ந்தெடுக்காதது தான்.

*



ஃபேஸ்புக் நிறுவனத்தினர், தளத்தின் பயணர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துவருகிறது. ஃபேஸ்புக் தளத்தினர் இந்த குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புக் கட்டுப்பாடை (Privacy Settings) மேலும் பலப்படுத்தியுள்ளனர். இனி நம் பாதுகாப்பிற்கு நாமே முழுப்பொறுப்பு.

சரி.. ஃபேஸ்புக்கின் தளத்தில் கவனிக்கப்படவேண்டியவை எவை?

பகிர்தல்:

நாம் பகிரும் விசயங்களை யார் யார் பார்க்கலாம்? அனைவரும் பார்க்கலாம், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்கள் என்று நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். அனைவரும் என்று தேர்ந்தெடுக்கும் பொழுது இணையத்தில் உள்ள அனைவரும் நம் பகிர்தலைப் பார்க்க முடியும். இதைத் தேர்ந்தெடுக்கும் முன்பு கொஞ்சம் யோசிக்கவும்.  சில சமயங்களில் சிலர் மட்டுமே பார்க்கும் படியான தகவல்களையோ, கருத்துகளையோ பகிர்கிறோம் என்றால், யார் யார் பார்க்கவேண்டும் என்பதையும் தனித்தனியாகத் தேர்ந்தெடுக்கலாம்.

அடிப்படைத் தகவல்கள்:

நம்மைப் பற்றிய அடிப்படைத் தகவல்களான பெயர், பால், ஃபேஸ்புக் பிரதான புகைப்படம் முதலியவை அனைவருக்கும் தெரியும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கும். நம் நண்பர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள இது வசதியாக இருக்கும் என்பதால்..

சேவைகள், இணையதளங்கள்:

திடீரென்று நம் நண்பர்களிடம் இருந்து "எனது பக்கத்து பூமி காலியாக இருக்கிறது. வந்து விவசாயம் செய்யவும் என்று ஒரு அழைப்பு வரும். என்ன வென்று பார்த்தால் Farmville, Fishville என்று ஒரு விளையாட்டுச் சேவைகளாக இருக்கும்.  சிலவமயம் ஃபேஸ்புக்  பக்கத்தைப் பார்த்தால் நான் ஆடு வளத்தேன், பன்னிக்குட்டியைப் பார்த்தேன் என்று எங்கும் அவர்கள் இணையத்தில் விவசாயம் செய்வதாக இருக்கும்." இது போன்ற அழைப்புகள், பகிர்தல்களால் கடுப்பாகிறவராக நீங்கள் இருந்தால்.. இது போன்ற சேவைகளையே துண்டிக்கலாம் (Block).

அதற்கான வசதியையும் ஃபேஸ்புக் தளத்தினர் கொடுத்திருக்கிறார்கள்.




முக்கியமாக செய்யவேண்டிய விசயம்.. எந்த ஒரு அழைப்போ, கேள்வியோ வரும் பொழுது நன்றாகப் படித்துப்பார்த்து ஆம் இல்லை என்று தேர்வு செய்யவும்.  பல தளங்கள், சேவைகள் நாம் அச்சேவையைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் பொழுதே "உங்கள் நண்பர்களின் பட்டியலை எடுத்துக்கொள்ளவா?" என்று கேட்கின்றன. சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து "Most Sexiest Video Ever" என்று ஒரு பகிர்தல் நண்பர்களிடம் இருந்து வந்தது. அதைப் பார்க்கச் சென்றால் (சஞ்சலம் யார விட்டது?) உங்கள் நண்பர்களின் பட்டியலை எடுக்கவா? என்றது. ஆம் சொன்னால் தான் அந்தக் காணொளியைப் பார்க்க முடியும். நான் இல்லை என்று (ஏமாற்றத்துடன்) கூறிவிட்டேன். ஆனால், எனக்குத் தொடர்ச்சியாக இந்தச் சுட்டி வந்துகொண்டேயிருந்தது.


இங்கே நான் கூறியுள்ளவை யாவும் ஃபேஸ்புக் தளத்தில் கொடுக்கப்பட்டவையே. ஒரு பத்து நிமிடத்தை உங்கள் பாதுகாப்பிற்காக ஒதுக்குவது சரிதானே?

*

Wednesday, January 6, 2010

புத்தாண்டில் ஓர் உறுதிமொழி..


"செந்தில், இந்த வருசத்துக்கு என்ன ரெசல்யூசன் எடுத்திருக்க?" முனிர் கேட்டான் மதிய உணவு வேளையின் பொழுது..

"போன வருசம் எடுத்த ரெசல்யூசனை ஒழுங்கா கடைப்பிடிக்கனும்னு" என்றேன்.

"இது தான வேணாங்கறது"

"எடுக்கற உறுதிமொழியைக் கடைப்பிடிக்கணும். இல்லீன்னா எதுக்கு எடுத்துட்டு. ஆமா நீ என்ன உறுதிமொழி எடுத்திருக்க?" என்றேன்.

"உடம்பக் குறைக்கணும்னு உறுதிமொழி எடுத்திருக்கேன். பாரு.. மொத நாளே முடிய ஒட்ட வெட்டீட்டு வந்துட்டேன்" என்றான் சிரித்துக்கொண்டே..

"உனக்கொரு ரெசல்யூசன் நான் சொல்லட்டுமா" என்று இடைமறித்தார் நஸீம்.

"பார்டா.. நீ என்ன ஐடியா கொடுக்கப் போற"

"அதுக்கு முன்னாடி உன்னோட பர்ஸக் காட்டு"

"காசுக்கெல்லாம் உன் ஐடியா வேண்டாம்" என்றேன்.

" முஜிபர்க்கு (நஸீமின் கணவர்) நடந்த மாதிரி நடக்காம இருக்க ஒரு விசயம் சொல்லலாம்னு நினைச்சேன். உன் இஷ்டம்" என்றாள்.

"ஏன்? என்னாச்சு முஜிபர்க்கு" என்றேன்.

"அவரோட மணிப்பர்ஸ் தொலைஞ்சு போயிடுச்சு"

"ஓ.. நான் பர்ஸத் தொலைச்சா எத்தனை பணம் போகும்னு பாக்கறியா?" என்றேன்.

"உனக்கு..."

"சரி.. என்னாச்சு? எங்க தொலைச்சார்?"

"நாங்க டிசம்பர் 31ம் தேதி பார்ட்டிக்கு அவங்க நண்பர்களோட போயிருந்தோம். நுழைவுக் கட்டணத்தக் கூட முஜி தான் கிரெடிட் கார்டுல கட்டினார். அதுக்கப்புறம் அவரோட ஓவர் கோட்ல பர்ஸ வைச்சிருக்கார். பார்டில "ஓவரா" மூழ்கிட்டதால ஓவர் கோட்ட எங்கியோ தவற விட்டுட்டார். நானும் கவனிக்கல. காலைல எழுந்தப்போ தான் பார்த்தோம்" என்றார்.

"பர்ஸ்ல எவ்வளவு பணம் வச்சிருந்தார்?"

"பணம்னாலும் பரவாயில்லையே. நாலு கிரெடிட் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், எமிரேட்ஸ் ஐடி ( அமீரக அடையாள அட்டை), அவரோட கனடா நிரந்தர குடியுரிமை அட்டை ( Permanent Resident Card), இன்ஸ்யூரன்ஸ் அட்டை எல்லாம் வச்சிருந்தார்"என்ற பொழுது "பொளீர்"னு பிடறில அடித்தது போல இருந்தது. நானும் முஜிபரைப் போல எல்லா அட்டைகளையும் காசுப்பையில் தான் வைத்திருக்கிறேன்.

"கிரெடிட் கார்டை ப்ளாக் (Block) பண்ணியாச்சா?"

"கிரெடிட் கார்டை பேங்க்ல கூப்பிட்டு ப்ளாக் (செயலிழப்பு) பண்ணியாச்சு. போலிஸ்ல போய் புகார் கொடுக்கப் போனா, அலுவலகத்துல இருந்து லெட்டர் வாங்கி வரச் சொல்றாங்க. அலுவலகத்துல கேட்டா, உங்க கிரெடிட் கார்ட் தொலைச்சதுக்கு நாங்க எதுக்கு லெட்டர் கொடுக்கனும்ங்கறாங்க. ஒரு வழியா அலுவலகத்துல இருந்து லெட்டர் வாங்கிக் கொடுத்தா அரபில கொடுக்கச் சொல்றாங்க. புத்தாண்டு ஆரம்பிச்சதுல இருந்து மூணு நாளா இதுக்கே அலைச்சுட்டிருக்கார். எவ்வளவு டென்சன் தெரியுமா?" என்றவர்

"இதுக்கு மேல கனடா எம்பஸில (Embassy) போய் புகார் கொடுக்கனும். அவங்க கொடுக்கற ஒரு டாக்குமெண்ட வச்சிட்டுத் தான் கனடா போகனும். அங்க போய் தான் திரும்ப பி.ஆர் கார்டுக்கு அப்ளை பண்ணனும். இன்னும் எதெதுக்கெல்லாம் அலைய வேண்டியதிருக்குமோ தெரியல" என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்.

"ஹேய்.. சாரி நஸீம்" என்றேன்.


"உன்னோட சாரி எல்லாம் வேண்டாம். உன்னோட பர்ஸக் காட்டு" என்று கேட்ட நஸீமிடம் பர்ஸைக் கொடுத்த பொழுது பர்ஸில், "இந்திய ஓட்டுனர் உரிமம், அமீரக அடையாள அட்டை (Emirates ID), அமீரக பத்தாக்கா ( Work Permit Card), இரண்டு கடனட்டைகள் (Credit Card), இரண்டு காசளிப்பு அட்டைகள் (Debit Card), மெடிக்கிளைம் அட்டை என்று பத்து அட்டைகள் வைத்திருந்தேன்.

"எதுக்கு இத்தனை? நாங்க எல்லாம் சொன்னாக் கேட்க மாட்டீங்க. தொலைச்சாத்தான் தெரியும்" என்ற நஸீம் சொன்ன பொழுது "எப்படி என் மனைவி கூறும் அதே அறிவுரையை வார்த்தை பிசகாமல் சொல்கிறார்" என்று நினைத்துக் கொண்டேன்.

"முதல்ல ஒன்னோ ரெண்டோ தேவையான அட்டைகளை மட்டும் வைச்சுக்கறேன். இதையே இந்த வருச உறுதிமொழியாவும் எடுத்துக்கறேன். தாங்க்ஸ் நஸீம்" என்றேன்.

"இட்ஸ் ஓகே.. மீட்டிங் இருக்கு. சியா(CYA)!!" என்று கிளம்பினார் நஸீம்.

****

என்ன நண்பர்களே நஸிமின் கணவருக்கு நடந்தது போல நமக்கு நடந்தால் என்ன செய்வோம்?  கொஞ்சம் அட்டைகளைக் குறைப்பது அல்லது கையில் வைத்துக்கொள்வதைத் தவிர்ப்பது என்று ஒரு உறுதிமொழியை எடுத்தால் நன்றாகத் தானே இருக்கும்?

****


Friday, April 24, 2009

பள்ளிக்கூடங்களை மூடுவதால் வேலைவாய்ப்பா?

"ஜப்பானில், பல ஊர்களில் கல்வி கற்போர் எண்ணிக்கை குறைந்து வருவதால் பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன" என்ற செய்தியைப் படித்தேன்.

நமது நாட்டில், பள்ளிக்கூடங்களில் இடம் கிடைப்பதே பெரும்பாடாக உள்ள நிலையில், கல்வி கற்போர் எண்ணிக்கை குறைகிறது என்ற காரணத்தால் பள்ளிகள் மூடப்படுவது வியப்பளிக்கிறது.அதே சமயம் இந்த செய்தியை, நம் நாட்டு இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் பார்க்க முடிகிறது.

பள்ளிகள் மூடுவது எப்படி நமக்கு வாய்ப்பாகும்?

அதற்கு முன்பு நமக்கு வரும் கேள்வி, வளர்ந்த நாடான ஜப்பானில் படிப்போர் எண்ணிக்கை ஏன் குறையவேண்டும் என்பது தான்.

அங்கே படிக்கும் வயதில் உள்ளோர் குறைவதற்கு, பிறப்பு விகிதம் குறைந்து வருவது தான் காரணம். சராசரியாக அங்கே ஒவ்வொரு பெண்ணும் ஒரு (1.2) குழந்தையைத் தான் பெற்றெடுக்கிறார்களாம். முன்பெல்லாம் தோராயமாக இரண்டு என்று அளவில் இருந்த நிலை இப்போது குறைந்து வருகிறதாம். அதனாலேயே படிப்போர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

"பிறப்பு விகிதம் குறைவது நல்லது தானே, இருக்கும் வளங்களை குறைந்த அளவினர் பங்கிடுவது நாட்டுக்கு நல்லது தானே" என்பது நமது எண்ணமாக இருக்கும். ஒரு வகையில் பார்த்தால் பிறப்பு விகிதம் குறைவது நல்லதாகத் தெரிந்தாலும் வேலைக்கு செல்லும் வயதில் இருப்போர் எண்ணிக்கை குறைவது அந்த நாட்டுக்கு நல்லதல்ல.

எப்படி?

ஒரு உதாரணம்...

1975ம் வருடம், ஒரு குடியிருப்பில் 16 இளம் தம்பதியினர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அனைவருக்கும் சராசரியாக வயது 25. வேலைக்குச் செல்வோர் எண்ணிக்கை 32ஆக இருக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குழந்தை (8ஆண்,8 பெண்) என்று 16 குழந்தைகள் பிறக்கிறார்கள்.

அதுவே 2000ம் வருடம், அதே குடியிருப்புக்குள்ளேயே 16 பேரும் மணமுடிக்கிறார்கள் என்று வைத்தால், குடியிருப்பில் வாழ்வோர் எண்ணிக்கை 48 ஆக இருக்கும். வேலைக்கு செல்லும் வயதில் இருப்போரும் 48 ஆக இருக்கும். மணமுடித்த 8 தம்பதினருக்கும் தலா ஒரு குழந்தை என்று 8 குழந்தைகள் பிறக்கிறார்கள்.

அதுவே 2010ம் வருடம் பார்த்தால், குடியிருப்பில், 32 பேர் வேலையில் இருந்து ஓய்வடைந்து 16 பேர் மட்டும் தான் வேலைக்கு செல்வார்கள். ஆனால் குடியிருப்புப் பகுதியில் மொத்தம் 56 பேர் இருப்பார்கள்.

முன்பு 16 பேர் படித்த பள்ளியில் இன்று 8 பேர் தான் படிப்பார்கள். இதனால் தான் பள்ளிகள் மூடப்படுகின்றன.

மேலே குறிப்பிட்டுள்ள குடியிருப்புப்பகுதி உதாரணம் கொஞ்சம் மிகையாக தெரிந்தாலும், இது தான் ஜப்பான், மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் இன்றைய நிலை!!

ஜப்பான் மக்கள் தொகையின் சராசரி வயது 44 ஆக உள்ளது. இங்கிலாந்து, ஜெர்மனி என்று பெரும்பாலான ஐரோப்பிய நாட்டு மக்கள் தொகையின் சராசரி வயதும் 40க்கு அதிகமாகவே உள்ளது. இது போன்ற நாடுகளில் பிறப்பு விகிதம் 1.5 என்ற அளவில் இருப்பதைக் காண முடிகிறது. இதனால், வயதானோரின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே தான் செல்லும்.

இதனால் நம் இளைஞர்களுக்கு என்ன வாய்ப்பு?

வருடந்தோரும் ஓய்வடைவோரின் இடங்கள் காலியாவது நமக்கு வாய்ப்பு தானே!! காலியிடங்கள் மட்டும் இன்றி, அதிகமாக ஓய்வடைந்தொர் இருக்கும் நாட்டில் மருத்துவத் துறை, காப்பீட்டுத் துறை மற்றும் பெரும்பாலான சேவைத்துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கவுள்ளன.

இந்தியாவின் மக்கள் தொகையின் சராசரி வயது 25 தான் என்பதும் 30வயதுக்கு குறைவானோர் 60 கோடி பேர் இருக்கிறோம் என்பதும் தான் நமக்கு நல்ல வாய்ப்பாக அமைவது.


உலக நாடுகளில், மக்கள் தொகையின் போக்கு (Demographics) எவ்வாறு இருக்கிறது, சராசரி வயது, அந்நாட்டு மக்கள் எதற்கு செலவிடுகிறார்கள் போன்றவற்றுடன் அந்நாட்டு மொழி, கலாச்சாரம், எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் வரலாம் என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பது நமக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.


இப்போதிருக்கும் சூழ்நிலையில் நம் இளைஞர்களால் அரசியல் மூலம் நாட்டையும் பொருளாதாரத்தையும் முன்னேற்ற முடியவில்லையென்றாலும், இது போன்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மூலம் வீட்டின் பொருளாதாரத்தையும், அந்நிய செலாவனியின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும் முன்னேற்ற முடியுமே!!

ஆக, ஜப்பானில் பள்ளிக்கூடங்கள் மூடுவதாக வந்த செய்தி நமக்கு வாய்ப்பாகத் தானே தெரிகிறது?
இந்தப்பதிவை யூத்ஃபுல் விகனில் படிக்க கீழே சொடுக்கவும்.
.

Friday, April 17, 2009

தேர்தலும் பொருளாதாரமும்...

கடந்த ஆறேழு மாதங்களாக நாம் கேட்க, பார்க்க நேரிடும் செய்திகளில் "பொருளாதாரப் பின்னடைவு" பிரதானமாக இடம் பிடித்து வருகிறது. பின்னடைவை சரி செய்து பணப்புழக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் என ஒவ்வொரு நாடும் திட்டங்களை வகுத்துவருகிறது

பெரும்பாலான நாடுகளில் பொருளாதாரம் மந்தமடைந்துள்ள நிலையில், நம் நாட்டில் எப்படி உள்ளது?

இந்தியாவில் பெருமளவு பொருளாதாரத் தேக்கம் ஏற்படவில்லை என்றாலும் வேலையிழப்போர் எண்ணிக்கை பெருகிவருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நேரத்தில், மத்திய அரசு பொருளாதாரத்தை சீர்ப்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் ஏன் திட்டங்களை அறிவிக்கவில்லை?

நடந்து வரும் தேர்தல் ஒரு காரணமாக இருக்குமோ?

திட்டங்கள் அறிவிக்கப்படாததற்கு தேர்தல் ஒரு காரணமே!! தேர்தலின் போதும் சிறிதளவு வேலைவாய்ப்பும், தேர்தலிக்கு பிறகு நல்ல திட்டங்கள் வரும்பட்சத்தில் பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் மேம்பட வாய்ப்புள்ளது!!

தேர்தலால் சிறிதளவு பணப்புழக்கமும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கிறதா? அது எப்படி?

ஒவ்வொரு மாநிலத்திலுருந்தும் வரும் செய்திகளைப் பார்த்தாலே தெரிந்துவிடும் எப்படி என்று...

ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்தால், ஒவ்வொரு கட்சியும் தொகுதி தோறும் 4 அல்லது 5 கோடிகள் வரை செலவிடுவார்கள் என்றும் அப்படியே அனைத்து கட்சிகளையும் கணக்கில் கொண்டால் தொகை 20 கோடியை தாண்டும் எனவும் தெரிகிறது. அதுவே, நாடு முழுவதும் கணக்கில் கொண்டால் 10,000 கோடியைத் தாண்டிவிடும்....

இந்த பணத்தால், ஓரளவுக்கு வேலைவாய்ப்பு வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை..

சுவர் விளம்பரங்கள், கட் அவுட்கள் வைப்பவர்கள், ஒலிப்பெருக்கிகள்- விளக்குகள் வாடகைக்கு விடுவோர், மேடை அலங்காரம் செய்வோர், வாகன் வோட்டிகள், மதுபானக் கடைகளில் பணிபுரிவோர், மாமிசக்கடை உரிமையாளர்கள், உணவகங்கள் வைத்திருப்போர் போன்றோரை தேர்தலால் வேலை வாய்ப்படைபவர்கள் என்று சொல்லலாம்.

இவர்களைத் தவிர்த்துப் பார்த்தால், கோடிகள் செலவாவது கட்சிகாரர்களுக்கும், கட்சிக்காரர்கள் என்ற பெயரில் உலாவரும் ரவுடிகளுக்கும் அடிமட்டத் தொண்டர்களுக்கும் தான்.. இதற்கிடையே, தொகுதி மக்கள் தங்களுக்காக வாக்களிக்க(??) செலவிடும் தொகையையும் மறந்து விடக்கூடாது.

இப்படி தேர்தலின்போது சிறிதளவு அதிகரிக்கும் பணப்புழக்கமும் வேலைவாய்ப்பும், "நுனி நாக்கில் அமுதமும் அடி நாக்கிலே நஞ்சும்" வைத்திருப்பதைப் போன்றதே!!

இந்தமுறை தேர்தலுக்காக செலவிடும் 10000 கோடியை, சில திட்டங்களுக்காக 2008-09 பட்ஜட் ஒதுக்கீடுடன் ஒப்பிடுகையில் நாட்டுக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது புரியும். 2008-09 பட்ஜட்டில்

*தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி, 100 நாட்கள் கட்டாய வேலைவாய்ப்பு தருவதற்காக ஒதுக்கீடு செய்தது 16000 கோடி..
* தேசிய குடிநீர் வாரியத்திற்கு ஒதுக்கியது 7300 கோடி..
* சென்னையில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கு பட்ஜட் ஒதுக்கீடு 300 கோடி..
இதிலிருந்தே தெரிகிறதே நாம் என்னவெல்லாம் செய்யமுடியும் என்று..
உதாரணத்திற்கு, இந்த நிதியை வைத்து அனைத்து பெருநகரங்களின் குடிநீர் பிரச்சனையையும் தீர்த்து விடலாமே!!

5 வருடங்களுக்கு பாராளமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டிற்காக ஒதுக்கும் நிதியே 10 கோடியைத்தான் தொடும் என்கிற போது ஒவ்வொரு தொகுதிக்கும் 4-5 கோடியை எப்படி செலவு செய்ய முனைகிறார்கள்? இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது?

வரும் பணமெல்லாம், ஓட்டுப்போடாதோர் கட்டும் வரிபணத்திலிருந்தும், ஓட்டுப்போடும் ஏழைகளுக்காக வகுக்கும் திட்டங்களிலிருந்தும் தான்!!

இப்படியே போனால் பொருளாதாரத்தை எப்படி சீர்படுத்துவது? பொருளாதாரத்தை மேம்படுத்தவும் திட்டங்களை திறமையாக வகுத்து செயல்படுத்தவும் என்ன தான் வழி?
தேர்தல் தான் ஒரே வழி!!

அனைவரும், குறிப்பாக இதுவரை வாக்களிக்காதோரும் "நேர்மையானவர்களுக்கு" வாக்களிப்பதே ஒரே வழி!! அப்படி வாக்களிக்காமல், நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி அங்கலாய்த்துக்கொள்வது "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமமாகும்"!!


இந்தப்பதிவை யூத்ஃபுல் விகனில் படிக்க கீழே சொடுக்கவும்.

http://youthful.vikatan.com/youth/senthilstory17042009.asp

.

Friday, April 10, 2009

நானோவை நினைக்கையிலே!!

மத்திய வர்க்கத்தினர்களிடம், "உங்கள் வாழ் நாள் கனவுகளாக நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள் என்ன?" என்று கேள்வியை வைத்தால் வரும் பதில்களில், "சொந்தமாக வீடு கட்டுவது, கார் வாங்குவது" போன்றவை கட்டாயமாக இடம் பெறும்.

அந்த கனவுகளில் ஒன்றான "கார் வாங்குவதை" நனவாக்கும் வகையாக அமைந்ததே "டாடாவின் ஒரு லட்ச ரூபாய் காரான நேனோவின் அறிவிப்பு"

இன்று ஒருவர், இருசக்கர வாகனத்தை 50ஆயிரத்திற்கு வாங்குகிறார் என்றால், மேலும் 50 ஆயிரம் செலவு செய்தாலோ அல்லது தவனைக்கடன் வாங்கினாலோ இந்தக் காரை வாங்கிவிடலாம்!!

கிராமங்களை எடுத்துக்கொண்டால், சொந்தமாகக் கார் வைத்திருந்தால் "மணிக்கொரு முறை" வரும் பேருந்திற்கோ, ஆட்டோவிற்கோ காத்திருக்க வேண்டியதில்லை. மேலும், வீட்டில் கார் இருப்பது வசதிக்காக என்பதுடன் அது ஒரு கௌவரமான விஷயமும் கூட..

கிராமங்களுக்குப் பொருந்தும் இந்தக் கருத்து நகரங்களுக்கும் பொருந்துமா?

ஏனென்றால், நானோ சம்பந்தமான பேச்சு வரும் போது கூடவே வருவது, "கார் வாங்குவதெல்லாம் சரி.. அதை எங்கே ஓட்டுவது.. எங்கே நிறுத்துவது".. என்பதும் தான்.
சொந்த வீடு வைத்திருப்போர் என்றால் ஒரு கார் நிறுத்தும் அளவிற்கு இடம் இருக்கும் என்று நினைத்துக் கொள்ளலாம். அதுவே வாடகை வீட்டில் இருப்போர் என்றால் அவர்களது கையில் எதுவும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

சமீபத்தில், வாடகைக்கு வீடு தேடியவர்களுக்கு இந்த விஷயம் மேலும் புரியும். வீடு தேட ஆரம்பித்தால், நமக்கு வரும் கேள்வி, "வீட்டில் எத்தனை பேர் என்பதுடன் சேர்த்து, என்ன வாகனம் வைத்துள்ளீர்கள்" என்பது தான்."இரு சக்கர வாகனம் என்றால் உள்ளே நிறுத்தலாம், கார் என்றால் நிறுத்த இடமில்லை" என்பதே நமக்குக் கிடைக்கும் பதிலாக இருக்கும். அப்படியே, 4000 ரூபாய் என்ற அளவில் வாடகைக்குத் தேட ஆரம்பித்தால், கார் நிறுத்த இடத்துடன் வீடு கிடைப்பது இடத்திற்கேற்ப 9000 ரூபாயில் தான்.

மாசம் 4000 ரூபாய் தவனை தானே பரவாயில்லை என்று நினைத்து காரை வாங்கினால், அதை நிறுத்துவதற்கே மேலும் 4000 ரூபாய் செலவாகும் என்பதை என்னவென்று சொல்ல.. இத்துடன் பராமரிப்பு செலவு வேறு உள்ளது...

"சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்" என்னும் பழமொழி தான் இங்கே ஞாபகத்திற்கு வருகிறது...

நம்ம ஊர் போக்குவரத்து நெரிசலை நினைக்கும் போது, இருசக்கர வாகனத்தில் செல்வதற்குப் பதிலாக காரில் செல்வது கொஞ்சம் பரவாயில்லை எனலாம். ஆனால், ரெண்டு கார் இருக்கும் இடத்தில், நாலு கார் வரும் போது சாலை நெரிசலின் நிலைமை என்னவாகும்? இதற்கிடையில், பஸ்ஸில் தொங்கிக் கொண்டே செல்வோரின் நிலைமை பற்றியோ அல்லது காற்று மாசடைவதைப் பற்றியோ எவரும் கவலைப்பட போவதில்லை!!

அப்படி போகும் இடத்தில் காரை எங்கே நிறுத்துவது?

சென்னையின் தி.நகர், கோவையின் பெரியகடைவீதி போன்ற பகுதிகளில், இருசக்கர வாகனங்களை நிறுத்தவே இடமில்லை என்னும் போது கார்களை எங்கே நிறுத்துவது?
"தி.நகர் போன்ற இடங்களில் பல அடுக்குமாடி கார் நிறுத்துமிடம் (Multi level parking system) அமைக்கப்படும்" என்ற அரசின் அறிவிப்பு இன்னும் அறிவிப்பாகவே உள்ளது!!

ஒவ்வொரு புறமும் 6ல் இருந்து 8 லேன் வரை உள்ள அகல சாலைகளைக் கொண்ட துபாய், சிங்கப்பூர் போன்ற நகரங்களிலேயே அனைவரையும் பஸ், மெட்ரோ ரயில் போன்றவைகளை தான் உபயோகிக்கத் தூண்டுகிறார்கள். கார்கள் பெருகுவதைத் தடுக்க சிங்கப்பூரில் அதிக வரி விதிப்பதும், துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கே ஓரிரு வருடங்கள் செலவாகிறதென்பதும் தெரியவருகிறது.

நம் ஊரிலோ, எல்லாம் அப்படியே நேரெதிர்!!

இப்படி பல கேள்விகளுடன் நமக்கு வரும் இன்னோரு கேள்வி, மற்ற கார் நிறுவனங்கள் எல்லாம் 2- 3 லட்சத்திற்கு அதிகமாக கார்களின் விலையை நிர்ணயிக்கும் போது டாடா நிறுவனத்திற்கு மட்டும் இந்த விலை எப்படி சாத்தியமாகிறது என்பது தான். அதற்கு அரசு கொடுக்கும் வரிச்சலுகைகள், குறைந்த வாடகையில் நிலம், புதிய தொழில்நுட்பம் எல்லாம் இருந்தாலும், குறைந்த விலையில் கார்களை விற்பதில் கிடைக்கும் வாடிக்கையாளர்களின் நீண்டகால நம்பகத்தன்மையே பெரிய லாபமாகும்.

அது எப்படி?
சைக்கிள் வாங்கியவர் அடுத்து குறி வைப்பது மொபட் வாங்கவே, மொபட் வைத்திருப்பவர் ஆசைவைப்பதோ அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனத்தின் மீது தான். அது போல, இப்போது அறிமுகமாகும் ஒரு லட்ச ரூபாய் காரோ நுழைவோருக்கான கார் ( entry model ). இதனை வாங்கியவர் யாரும் அதோடு நிறுத்தப் போவதில்லை.. ஏசி பொருத்திய கார், சென்ரல் லாக்கிங் வசதி கொண்ட கார், அதிக திறன் கொண்ட கார் என்று செல்லும் போது, யாருக்கு லாபம்?

இந்தியாவில் அறிமுகப்படுத்தி இந்த நானோ திட்டம் வெற்றி அடைந்தால், அதை ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, லத்தின் அமெரிக்கா போன்ற பகுதிகளில் உள்ள வளரும் நாடுகளிலும் செயல்படுத்த முடியும். அதுவே டாடா நிறுவனத்தை கார் உலகில் ஒரு அசைக்க முடியாத சக்தியாகவும் உருவெடுக்க வைக்கும்.
இப்படி ஒரு திட்டம் தான் டாடா நிறுவனத்தின் நானோ கனவு!!

இந்தக் கனவுடன் சேர்த்து "அதிகமானோர் உட்கார்ந்து பயனிக்கும் படியாக அதிக பேருந்துகளை தயாரிப்பது" என்று ஒரு திட்டத்தையும் அறிமுகப்படுத்தினால், "பேருந்தில் கூட்டமில்லாமல் உட்கார்ந்து செல்வது எப்போது" என்று ஏங்கும் மக்களுடைய கனவும் நினைவாகும்..

இப்படி செய்தால், டாடாவும் அனைவருடைய நினைவிலும் நீங்காமல் நிற்கும். இல்லை என்றால், டாடாவையும் மற்றுமோர் வெளி நாட்டு "வியாபார" நிறுவனம் போலவே ஒப்பிட நேரிடும்!!

Tuesday, March 24, 2009

ஐபிஎல் - இந்திய பிரைம்டைம் லீக்!!

கடந்த சில வாரங்களாக, இந்திய உள்துறை அமைச்சகமும் ஐபிஎல் நிர்வாகமும் நடத்திய நீயா? நானா? ஆட்டத்தின் முடிவு, இந்திய ப்ரீமியர் லீக் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என்பது தான்!! இந்திய ப்ரீமியர் லீக் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுவதா? அது எப்படி?


ஐபிஎல் போட்டியானது ஐரோப்பாவில் நடைபெறும் கால்பந்து லீக் போட்டிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், பல்வேறு நாடுகளின் வீரர்களும் ஒருசேர இனைந்து விளையாடும் வாய்ப்பு மற்றும் உள் நாட்டு வீரர்களும் வெவ்வேறு அணிகளில் பங்கேற்று மோதுவதால் மிகவும் சுவாரசியமானதாக அமைகிறது. அது மட்டுமில்லாமல், இதில் கொடுக்கப்படும் பணம் அனைவரையும் ஈர்க்கும் விஷயமாக உள்ளது!!

ஐபிஎல் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுவதால் யார் பார்ப்பார்கள்? தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவழியினர் (PIO )மற்றும் வெளி நாடு வாழ் இந்தியர்கள் (NRI) மொத்தமாக 15 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கட் ரசிகர்கள் மைதானத்தில் 40 சதவிதம் பேர் பார்த்தாலே இந்தியாவில் மைதான அரங்கம் நிரம்பியதிற்கு ஈடாகிவிடும். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் அங்கு மிகவும் எதிர்பார்ப்பு இருக்கும்.

இதில் ஐபிஎல் நிர்வாகத்திற்கும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கட் வாரியத்திற்கும் வருமானத்தில் எவ்வளவு பங்கு (Revenue sharing) என்பது நமக்கு தெரியாத விஷயம்!! அது எவ்வளவாக இருந்தாலும், தொலைகாட்சி ஒளிபரப்பு உரிம விற்பனை வருமானத்தை ஒப்பிடும் போது மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்!! 10 வருடத்திற்கு இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமம் பெற சோனி நிறுவனம் செலுத்தியது 4000 கோடி!! மற்ற நாடுகளில் ஒளிபரப்பு உரிம விற்பனை வேறு உள்ளது!!
இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிம விற்பனை வருமானத்தை ஒப்பிடுகையில், இந்திய பொது தேர்தல் பட்ஜட் ஒதுக்கீடான 1100 கோடியே சிறியதாகத்தான் தெரிகிறது!!

இதனால் தான், இந்திய பொதுத் தேர்தல் நடக்கும் நேரத்தில் கூட, ஐபிஎல் கிரிக்கட் போட்டியை நடத்த அதிக ஆர்வம் காட்டுகிறது இந்திய கிரிக்கட் வாரியம்!! இதற்குக் கூறப்படும் காரணம், இந்திய கிரிக்கட் ரசிகர்களின் நலத்திற்காக என்பது தான்!! இந்திய ரசிகளுக்காக ப்ரைம்டைம் எனப்படும் 8மணியில் இருந்து 10 மணி வரை நடைபெறும் என்பது முக்கியமான விஷயம்!! அதிகமான மக்கள் தொலைக்காட்சி பார்ப்பது இந்த நேரத்தில் தான்!! இந்த ப்ரைம்டைமில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் நடுவே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களூக்குத் தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படும்!! "தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலிருக்க மாட்டான்" என்பது தான் இங்கே ஞாபகத்துக்கு வருகிறது!!

இப்படி நடக்கவிருக்கும் இந்திய பிரைம்டைம் லீக்கால் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்!!

இந்திய கிரிக்கட் வாரியம், கிரிக்கட் உலகில் மிகப்பெரிய சக்தி என்பது மீண்டும் நிரூபிக்கப்படும். இந்திய இளம் கிரிக்கட் வீரர்களூக்கு சீனியர் கிரிக்கட் வீரர்களுடன் விளையாட இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். பொருளாதார மந்த நிலையை சரி செய்து, தங்களது சேவை மற்றும் பொருட்களின் விற்பனையை பெருக்க அனைத்து பன்னாட்டு மற்றும் உள் நாட்டு நிறுவனங்களும் முயலும். விளம்பர தயாரிப்பு நிறுவனங்களூக்கு இது ஒரு பணம் கொட்டூம் காலமாக இருக்கும். அழுகை சீரியல்களில் இருந்து ஒரு மாத காலம் விடுபடலாம் என்பது பெரும்பாலானோர் நினைப்பாக இருக்கலாம்!!

இந்த அறிவிப்பால் அதிக பாதிப்பு, போட்டியை நேரில் கண்டு ரசிக்க முடியாமல் ஏமாந்த ரசிகர்களூக்குத்தான்!! சச்சினும் ஜெயசூர்யாவும் ஒன்றாக களமிறங்கும் காட்சியை நேரில் காண முடியாமல் போனது ஒரு ஏமாற்றமே!! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உற்சாகப்படுத்த சிவமணி ட்ரம்ஸை அடித்த அடியை மறக்க முடியுமா? "சூப்பர் கிங்ஸ் வீரரும் லட்சுமிகரமான நடிகையும் கிழக்குக்கடற்கரை சாலையில் பைக்கில் சென்றனர்", என்பது போன்ற கிசுகிசுக்கள் கிடைக்காமல் போனது பத்திரிக்கைகளூக்கு ஒரு இழப்பு. லோக்கல் தொலைக்காட்சிகளூக்கு விளம்பர வருமானம் கொஞ்சம் குறையலாம். இதற்கிடையே, கிரிக்கட் மைதானத்தில் பணிபுரியும் கடை நிலை ஊளியர்களின் பாதிப்பை யாரும் கண்டு கொள்ளப்போவதில்லை!!
இதெல்லாம் எதனால்? பிரைம்டைமில் வரும் பணத்தால்!!

வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் ஆடித் தள்ளுபடி போன்ற ஒரு விழாக்கோலத்திற்கு தயாராகலாம். செட் டாப் பாக்ஸ் போன்றவையின் விற்பனை பல மடங்கு பெருகலாம். செல்லுலார் நிறுவனங்கள் ஐபிஎல் போட்டியின் தகவல்களையும் ஸ்கோர்களையும் தெரிவத்தல், செல்போனிலேயே ஐபிஎல் போட்டி கண்டு கழித்தல் போன்ற புதிது புதிதாக திட்டங்களை வகுக்கலாம். ஐபிஎல் டி-ஷர்ட் போன்றவையின் விற்பனை அதிகரிக்கலாம். அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகளூம் காக்டெயில் பார்ட்டிகளூம் நடைபெறலாம். இந்த ஐபிஎல் போட்டிக்கு ஒவ்வொரு 10 நொடிகளூக்கு பல ஆயிரங்களை கொடுத்து அனுசரனை (sponsorship) வழங்கும் அனைத்து நிறுவனங்களூம், லாபம் ஈட்ட அனைத்து சலுகைகளையும், பிரச்சாரங்களையும் செய்யும் என்பது தெரிந்ததே. .

சோழியன் குடுமி சும்மாவா ஆடும்? இவ்வளவு செலவுகளையும் மக்களுக்காகவா இந்த வணிக நிறுவனங்கள் செய்கின்றன? நாம் அன்றாடம் வாங்கும் ஒவ்வொரு பொருள்களின் விலையிலும் 1 ருபாய் அல்லது 2 ருபாய் அதிகரித்தால் நமக்குத் தெரியவா போகிறது? நாட்டில் தேர்தல் நடந்தாலென்ன அல்லது வேறேதாவது நடந்தால் என்ன? நமக்குத்தான் தினமும் கிரிக்கட் வீரகளையும் நடிக நடிகைகளையும் தொலைக்காட்சியில் பார்த்தாலே பசி தீர்ந்து விடுமே!! அதுவும் பிரைம்டைமில்!! வரவேற்போம் இந்திய பிரைம்டைம் லீக்கை!!

http://youthful.vikatan.com/youth/senthilstory250309.asp

.

Related Posts with Thumbnails