Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, December 24, 2010

மன்மதன் அம்பு - ரைட் ஆன் புல்ஸ் ஐ!!

விடுமுறை சீசனின் இரண்டரை மணி நேரத்தை, எதைப் பற்றியும் கவலைப் படாமல், முகம் சுளிக்காமல், காதைப்பிளக்கும் சத்தமில்லாமல் செலவிட வேண்டுமா? மன்மதன் அம்பு தான் சரியான தேர்வு!! சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கலகலப்பான நகைச்சுவை கம் ரொமான்ஸ் படம் தான் மன்மதன் அம்பு.

நடிகை திரிஷாவைத் { நிஷா எ) அம்பு} தொழிலதிபர் மாதவன் (மதன்) காதலிக்கிறார். திரிஷாவின் சூட்டிங்கைப் பார்க்க நேரிடும் மாதவன் திரிஷாவைச் சந்தேகிக்கிறார். வெளிநாட்டிற்குச் செல்லும் திரிஷாவை வேவு பார்க்க கமலை {மேயர் மன்னாரை (மன்)} அனுப்புகிறார். கமல் வேவு பார்த்தாரா? மாதவனும் திரிஷாவும் இணைந்தனரா? என்பது தான் மன்-மதன்-அம்பு வின் கதை. 

அம்புவின் தோழியாக சங்கீதா நடித்திருக்கிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் ஊர்வசியும் ரமேஷ் அரவிந்தும் வருகிறார்கள். களவாணி ஓவியா, ஸ்ரீமன், உஷா உதுப், மஞ்சு பிள்ளை, குஞ்சன் எல்லாம் சிறு கதாப்பாத்திரத்தில் வருகிறார்கள்.

படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு மாதவனிற்குத் தான். ஸ்ரீமன் மற்றும் நண்பர்களுடன் பேசும் வசனங்கள் எல்லாம் சரவெடி. கிளைமாக்ஸில் மப்படித்துவிட்டு மாதவன் வாயைத் திறந்தாலே திரையரங்கம் அதிர்கிறது. கமல் திரிஷாவை வேவுபார்க்கும் ஆளாக வருகிறார். படம் முழுக்க அடக்கியே வாசித்திருந்தாலும் சில க்ளோசப் காட்சிகளும் வருகின்றன. தனக்கு ஏற்பட்ட சோகத்தை விளக்கும் வண்ணம் (வழக்கம் போல) கண்ணீர் சிந்துகிறார். இதே போல காட்சியைப் பல படங்களில் பார்த்தாயிற்று வாத்தியாரே!! ஒரு ஆறுதல் வயதிற்கேற்ற கதாபாத்திரத்தில் வருவது.

ஒரு நடிகையின் நிலையையும், மக்கள் பார்வையையும் நன்றாகவே பதிவு செய்திருக்கிறார்கள். "காரவேனில் ஏன் நடிகை மற்றும் நடிகரின் அறைக்கு இடையே கதவிருக்கிறது" என்று மாதவன் கேட்க "அது ஒரு கன்வீனியன்ஸ். ஜிப் இருக்கிறதென்றால் திறந்தே இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை" என்ற பதில் சுளீரென்கிறது. கிசுகிசுவிற்கும் நடுப்பக்க மசாலாவிற்கும் முக்கியத்துவம் குறையும் வரை நடிகைகள் மீதான எண்ணம் குறையாது.

படத்தின் வசனங்களில் அக்மார்க் கமல் + கிரேஸி மோகன் டச். படம் முழுக்க சரவெடியாக நகைச்சுவை வருவது வசனம் எழுதியிருப்பது கமலா கிரேஸி மோகனா? என்று எண்ணத் தோன்றியது. அதே சமயம் கமலின் கருத்து கந்தசாமி என்ற சிங்கமும் வெளிவராமல் இல்லை. அதிபட்சமான வீரத்தின் அடையாளம் தான் அஹிம்சை, பெண்ணியக் கருத்துகள், நாத்திகம் என்றெல்லாம் கருத்துகளைத் தூவிவிட்டிருக்கிறார். சர்ச்சைக்குட்படும் படியான கருத்துகள் எதுவும் (கமல் கவிதை தவிர) இல்லை என்று தான் நினைக்கிறேன். எப்படியும் துப்பறிவாளர்கள் கமலின் நுண்ணரசியலையும்,  (விமர்சகர்கள் கருத்துப்படி) நாத்திகப் போர்வையில் ஒளிந்திருக்கும் ஏதோ ஒரு வாதியையும் கண்டுபிடிக்காமல் இருக்கமாட்டார்கள். பார்ப்போம். 


கமலிற்கும் திரிஷாவிற்கும் புரிதல் ஏற்படுவதற்குக் காரணியாக அமைந்(த்)திருப்பது "கமல் கவிதை" தான். முதலில் திரிஷா, தான் "கிண்டில்" நோட்பேடில் ஏற்றியிருக்கும் கவிதையைப் படிக்கிறார். தன் மனத்திரையில் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்ற வரிகள் அழகு. அதற்கு கமல் மொழியும் வரிகளும் கைதட்ட வைக்கும் ரகம். வரலட்சுமி விரதத்தையும், அரங்கநாதரையும், தொப்பைக் காடைகளைச் சுட்ட தொந்திகணபதியை இழுக்க இக்கவிதைக்குத் தமிழகத்தில் தடா. அமீரகத்தில் இல்லை!! படத்தில் இக்கவிதை வரிகளுக்குப் பல இடங்களில் கரகோசங்கள் எழுந்தன.


"நீல வானம்" பாடலை மிகவும் அழகியலுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாடல் முழுவதுமே பின்னோக்கிச் செல்வது ரசிக்கத்தக்கது. அப்படிப் பின்னாடிப் போகும் பொழுது தாலியைப் பிரிப்பது, மோதிரத்தைக் கழட்டுவதாக வருவது எல்லாம் ரசனையான காட்சியமைப்பு. திருமண ஒப்பந்தத்தின் மீதான தன் நம்பிக்கையின்மையைக் கமல் காட்டுகிறாரா? (அப்பாடா நமக்கும் ஒரு விசயம் மாட்டியிருக்கு). 

கடந்த வாரம் முழுக்க துபாய் சர்வதேசத் திரைப்படவிழாவின் படங்களைப் பார்த்தேன். அந்த ஹெங்க் ஓவரோ தெரியவில்லை, படம் ஆரம்பிக்கும் பொழுதே "ஒய்யாலே ஒய்யாலே" என்று திரிஷாவும் சூர்யாவும் ஆட்டம் போட ஆரம்பித்த பொழுது சிரித்து விட்டேன். அதே போல கமலின் கண்களில் உலகம் வருவதாகக் காட்டி "ஒலக நாயகன்" என்று பெயர் போடும் பொழுது "இந்தக் கண்றாவிய எப்படா நிறுத்தப் போறீங்க" என்று தோன்றியது. 


இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். சில இடங்களில் இவர் படம் தானா என்பதைச் சந்தேகிக்கும் வகையில் இழுக்கிறது. கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் இன்னும் வேகம் கூடியிருக்கும். மற்றபடி க்ரூஸ் லைனரை அளவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு, எடிட்டிங், லைட்டிங் பற்றியெல்லாம் விமர்சனம் செய்யுமளவிற்கு அறிவில்லை எனக்கு. தயாரிப்பு உதயநிதி ஸ்டாலின். சத்தமே இல்லை. ஐ லைக் தட்.

படத்தின் இசை தேவிஸ்ரீபிரசாத். இசைத்தட்டு வெளியான பொழுது எனக்கு பாடல்கள் பெரிதாகப் பிடிக்கவில்லை. ஆன்டிரியா பாடியிருக்கும் "ஹூ இஸ் த ஹீரோ" தான் எனக்கு மிகவும் பாடலாக இருந்தது. ஏதோ ஆங்கிலப் பாடலைக் கேட்கும் உணர்வை ஏற்படுத்தியது இந்தப்பாடல். கமலின் அறிமுகப் பாடலாக அமைத்திருப்பது கலக்கல்!! "நீல வானம்" பாடல் படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் நினைவில் நிற்கும். தேவிஸ்ரீபிரசாத் பாடியிருக்கும் மன்மதன் அம்பு பாடல் படத்தில் பின்னனியில் தான் வருகிறது. படத்தின் தீம் மியூசிக்கும் நல்ல இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. "அலேக்ரா" ஸ்டைலில் ஒரு ஆட்டத்தைக் கப்பலில் போடுகிறார்கள். இவரது பாடல்களில் அப்படி ஒரு எனர்ஜி. கார் ஓட்டும் பொழுது இவர் பாடலைக் கேட்டு அதிகமாக மிதித்துவிடாமல் இருக்க வேண்டும். பின்னனி இசையைப் பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

இப்படம் எந்தப் படத்தின் காப்பி, இஞ்சிப்பிரேஜன் என்றெல்லாம் தெரியல. நன்றாக டைம்பாஸாகிறது. டைமிங் நகைச்சுவைக் காட்சிகள் புரியாதவர்களுக்கு கண்டிப்பாகப் படம் சலிப்பையும் வெறுப்பையும் ஏற்றும். என் அருகில் இருந்தவர் நான் சிரிப்பதைப் பார்த்து என்னை முறைத்துக் கொண்டே இருந்தார். இது பி.கே.எஸ்.ல இருந்து தொடருது.

மைக்கேல் மதன காமராஜன், சதிலீலாவதி, பிகேஎஸ், பஞ்சதந்திரம் போன்ற படங்களை ரசித்தவர்களுக்குக் கண்டிப்பாகப் படம் பிடிக்கும். இதமான ரொமான்ஸ் படங்களை ரசிப்பவர்களுக்கும் படம் பிடிக்கும்.

மன்மதன் அம்பு - ஆன் த மார்க்!!

Saturday, December 18, 2010

துபாய் சர்வதேச திரைப்பட விழா - இன்ஷால்லாஹ் ஃபுட்பால் (காஷ்மீரி) (2010)

காஷ்மீரின் கதையை ஒன்றரை மணி நேரத்தில் எப்படி சொல்வது? குண்டுவெடிப்பும், துப்பாக்கிச்சூடும், சமீப காலமாக கல்லெறிதலும் தான் காஷ்மீரின் அடையாளமாக உள்ள நிலையில், காஷ்மீரின் கதையை கால்பந்தின் வாயிலாகச் சொல்கிறது இன்ஷால்லாஹ் ஃபுட்பால். 


கால்பந்தாட்டில் மிகுந்த ஈடுபாடும் திறமையும் உள்ள இளைஞன் பாஷா என்றழைக்கப்படும் பஷாரத். சர்வதேச கால்பந்தாட்ட வாரியத்தின் அங்கிகாரம் பெற்ற பயிற்சியாளர் அர்ஜெண்டைனா நாட்டைச் சேர்ந்த மார்கஸ். இவர் காஷ்மீரில் இஸாட் (ISAT) என்ற கால்பந்தாட்டப் பயிற்சி அமைப்பை நடத்தி வருகிறார். இவரது மனைவி ப்ரிசிலா பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். மார்கஸின் பயிற்சியில் சிறந்து விளங்கிய இரண்டு வீரர்கள் ஸ்பெயின் நாட்டில் உள்ள சில அணிகளில் விளையாட வாய்ப்பைப் பெற்று ஸ்பெயின் சென்றிருந்தனர். பாஷாவின் திறமையைப் பார்த்த ப்ரிசிலா பிரேசிலில் உள்ள ஒரு அணியில் விளையாட வாய்ப்பைப் ஏற்படுத்திக்கொடுக்கிறார். பிரேசில் செல்ல விரும்பும் பாஷாவிற்குத் தடை வந்தது கடவுச்சீட்டு ரூபத்தில்.

பாஷாவின் தந்தை பஷிர் ஹிஷ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முன்னாள் பயங்கரவாதி என்பது தான் பாஷாவிற்குக் கடவுச்சீட்டு கிடைக்காததற்கான காரணம். தந்தை பயங்கரவாதியாக இருந்ததற்கு பாஷா என்ன செய்வார்? பஷிர் ஏன் பயங்கரவாதியானார், பயங்கரவாதத்தைக் கைவிட்டு வெகுசன வாழ்க்கையை நடத்தி வந்த போதிலும் பாஷாவிற்குக் கடவுச்சீட்டை ஏன் தர மறுக்கிறார்கள் என்பவற்றை சம்பந்தப்பட்டவகளைப் பேசவிட்டே ஆவணப்படமாக (Documentary film) இயக்கியிருக்கிறார் அஷ்வின் குமார்.

தான் ஏன் ஹிஷ்புல் பயங்கரவாதக் குழுவினருடன் சேர்ந்தேன். பிறகு சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகு நடந்த விசயங்கள் எல்லாம் பஷிரின் மூலமே பதிவு செய்யப்பட்டுருக்கிறது. "அதிகாலை நான்கு மணிக்கு என்னை இராணுவத்தினர் அழைத்துச் சென்ற பொழுது, நான் உயிருடன் இருக்கப் போவது ஓரிரு மணி நேரம் தான் என்று நினைத்தேன்" என்று பஷிர் கூறியது, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிய முன்னாள் பயங்கரவாதிகளின் மனோநிலையைப் பதிவுசெய்கிறது. "உன்னை வீட்டில் பிடிக்காமல் வெளியில் பிடித்திருந்தால், நீ என்னிடம் இப்பொழுது பேசிக்கொண்டிருப்பாய் என்று தோன்றவில்லை" என்று இராணுவ அதிகாரி தன்னிடம் கூறியதும் பஷிரின் பேச்சில் தெரியவருகிறது.

"நான் பிறக்காத பொழுது என் தந்தை பயங்கரவாதியாக இருந்ததற்கு நான் என்ன செய்வேன்?" என்ற பாஷாவின் கேள்வி, ஒரு தலைமுறையினரின் கேள்வியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாள் பாஷாவும் ரிப்போர்ட்டராக மாறி காஷ்மீரின் பல்வேறு தரப்பினரைப் பேட்டி எடுக்கிறார். அதில் ஒரு இளைஞர், "எனக்கு அப்பொழுது 3 வயதிருக்கும். என் தந்தையை அழைத்துச் சென்று வழியிலேயே கொன்று விட்டனர். இத்தனைக்கும் என் தந்தை பயங்கரவாதி அல்ல. அவரது தொழில் விரோதி இராணுவத்தினரின் உதவியுடன் கொன்றிருக்கிறார்கள். கொன்ற இராணுவ அதிகாரி ஒரு பயங்கரவாதியைக் கொன்றதாகப் பதவி உயர்வு வாங்கியிருப்பார்" என்று கூறும் பொழுது வேறொரு கோணம் தெரிய ஆரம்பிக்கிறது. இளைஞர்களிடம் ஒரு வித அவநம்பிக்கை குடிகொண்டிருப்பது பேட்டிகளில் தெரியவருகிறது. 1990களில் நடந்த கலவரங்களில் ஹிந்துப் பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து துரத்தபட்டதும், இன்னும் சிலர் பட்ட வேதனைகளையும் பதிவு செய்யத் தவறவில்லை. அதே சமயம், சில ஹிந்துப் பண்டிட்கள் இஸ்லாமியருடன் ஒற்றுமையாக வாழ்வதையும் பதிவு செய்திருக்கின்றனர். 


கால்பந்தாட்டத்தின் மூலம் காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று நம்பிக்கையை மார்கஸ் வெளிப்படுத்துகிறார். மார்கஸின் கால்பந்தாட்டப் பயிற்சிப் பள்ளியைப் பற்றியும், பாஷாவின் நிலையைப் பற்றியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் செய்தி வருகிறது. இச்செய்தியை வைத்துக்கொண்டு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாஹ்வையும் சந்தித்துப் பேட்டி எடுத்திருக்கின்றனர். ஒமர் அப்துல்லாஹ் "பாஷாவைப் போல நூறு பேர், ஏன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கலாம். இந்த நிலை தொடராமல் பார்த்துக் கொள்கிறேன்" என்று வாக்களிக்கிறார். அதன் பிறகு பாஷாவின் நிலை என்ன ஆனது?

காஷ்மீர் - ஐரோப்பிய நாடுகளுக்குப் போட்டி கொடுக்கக் கூடிய அளவிற்கு பனிபடர்ந்த மலைகளையும், அழகிய நில அமைப்பையும் கொண்ட மாநிலம். ஆனால், எங்கு திரும்பினாலும் இராணுவத்தினர். 20 பேருக்கு ஒரு இராணுவ வீரர் இருக்கும் நிலை என்றைக்கு மாறும் என்று எண்ணம் வருகிறது, காஷ்மீரைப் படத்தில் பார்க்கும் பொழுது. "RESPECT ALL SUSPECT ALL" என்று ஒரு இராணுவப் பலகையில் எழுதியிருக்கும் வார்த்தை தான் இன்றைய காஷ்மீரின் நிலையைப் பிரதிபலிக்கும் விசயம்.

இன்ஷால்லாஹ் ஃபுட்பால் காஷ்மீரைத் தொடர்ந்துவரும் அனைவரும் பார்க்க வேண்டிய படம்!!


*

துபாய் சர்வதேச திரைப்பட விழா கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. கொரியா, ஜப்பான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், போலாந்து, அரபு நாடுகள், பாலஸ்தீனம், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் இருந்தெல்லாம் திரைப்படங்களைத் திரையிட்டு வருகிறார்கள். நானும் 4  படங்களையும் 8 ஆவணப் படங்களையும் பார்த்தேன். அதில் பாலஸ்தீனம் பற்றிய படங்களும் அடங்கும். அவை அடுத்த பதிவில்..

*

Saturday, September 11, 2010

நான் ஏன் கமல் ரசிகனாக இருக்கிறேன்?

காய்த்த மரமே கல்லடி படும் என்பது நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் பொருந்தும். தமிழகத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட/ விமர்சிக்கப்படும் நடிகர் என்றால் அது இவராகத்தான் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஆரம்பித்து, சினிமா வாழ்க்கை, அவர் எடுக்கப்படும் சினிமா, அதில் வரும் கருத்துகள் என்று விமர்சனம் செய்யப்படாதவையே இல்லை எனலாம். ஒரு வேளை கமலை விமர்சிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு வித பெருமை வந்துவிடுகிறதோ? எவ்வளவு தான் கமல் விமர்சிக்கப்பட்டாலும், ஒரு நடிகர், திரைத்துறைக் கலைஞர் என்ற விதத்தில் அவரது ரசிகனாகவே இருக்கிறேன்.

ஏன்?

கமலின் நடிப்பை ரசிக்க ஆரம்பித்தது எந்த வயதில் என்று யோசிக்க ஆரம்பிக்கையில் அது அபூர்வ சகோதரர்கள் காலத்தில் இருந்து என்று தோன்றுகிறது. அபூர்வ சகோதரர்களில் குள்ளமாக நடித்ததைப் பார்த்த பொழுது "எப்படிக் குள்ளமாக நடிக்க முடியும்" என்றெல்லாம் யோசித்ததுண்டு. அப்படியே.. சானக்யன், வெற்றிவிழா, இந்திரன் சந்திரன், மைக்கேல் மதன காமராஜன், குணா என்று ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு விதமான மாற்றங்கள். ஒன்று ஒப்பனைகளில் மாற்றம், அல்லது கதையமைப்புகளில் மாற்றம் அல்லது வட்டார வழக்கில் மாற்றம் என்று ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம். கமலின் படங்கள் பிடிக்க ஆரம்பித்த பொழுது மற்ற நடிகர்களின், இயக்குனர்களின் நல்ல படங்கள் மீதான ரசிப்பும் அதிகரிக்க ஆரம்பித்தது. நான் வளர்ந்தது எல்லாம் உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கல்லூரிக் காலம் வரை ஆங்கிலப்படங்கள் என்றால் அது ஜாக்கிசான் நடித்த படங்கள். நல்ல படங்களின் மீதான் ரசனையை வளர்த்தது கமல், மற்றும் சில நல்ல இயக்குனர்களின் படங்கள் தான்!!

உடுமலைப்பேட்டையில் பிற நடிகர்களின் படங்களெல்லாம் 50 நாட்கள், 75 நாட்கள், 100 நாட்கள் என்றெல்லாம் ஓடும் பொழுது கமல் படங்கள் சில வாரங்கள் மட்டுமே ஓடியது, எத்தனையோ முறை சக நண்பர்களின் (கமல் ரசிகன் என்பதால்) எள்ளலிற்கு உள்ளாகியிருக்கிறேன். உடுமலை, பழநி போன்ற நகரங்களில் உள்ள திரையரங்கங்களில் உள்ள 100 நாள் ஓடிய படங்களின் கேடயங்களில் இடம்பெற்ற கமல் படங்கள் என்றால் காக்கிச்சட்டை, சகலகலாவல்லவன் போன்ற படங்கள் மட்டுமே. ஆக, நீண்ட நாட்கள் ஓட வேண்டும் என்றால் படங்களில் நிறைய பாட்டுகள், சண்டைகள், என்ற மசாலாவாக இருக்க வேண்டும் என்பதும் கமலின் பெரும்பாலான படங்கள் இத்தன்மை இல்லாததும் விளங்க ஆரம்பித்தது.ஏன் கமல் படங்களில் சண்டைகள் வருவதில்லை என்றேல்லாம் யோசித்ததுண்டு. அதை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது. 


கேபிள் டிவிகள், தனியார் சேனல்கள் எல்லாம் வர ஆரம்பிக்க கமலின் பழைய படங்களுக்கும் அறிமுகம் கிடைக்க ஆரம்பித்தது. சலங்கை ஒலி, சிகப்பு ரோஜாக்கள், 16 வயதினிலே, நாயகன், வறுமையின் நிறம் சிவப்பு, சிப்பிக்குள் முத்து, மூன்றாம் பிறை, பேசும்படம் என்றெல்லாம் படங்களைப் பார்த்த பொழுது தரமான படங்கள் பலவற்றுள் நடித்து வந்திருப்பதும் தரமான இயக்குனர்கள் தங்களின் தரமான படங்களில் கமலை நடிக்க வைத்திருப்பதும் கவனித்தேன். இதனால் கமல் படங்களின் மீதும் தரமான படங்களின் மீதும் ரசிப்பு மேலும் அதிகரித்தது. அந்த ரசனை கமல் படங்கள் மட்டுமல்லாமல் மற்ற நல்ல படங்களையும் பாராட்டும் பக்குவத்தை ஏற்படுத்தியது.

இப்படி கமல் ரசிகர்களும், தரமான படங்களின் ரசிகர்களும் கமல் படங்களையும், தமிழ்த் திரையுலகிற்கு கமலின் பங்கையும் புகழும் பொழுது, "கமல் நடித்த படங்கள் எல்லாம் உலக சினிமாக்களின் காப்பி தான். அவர் ஒரு காப்பி நடிகர் மட்டுமே. ரசிகர்கள் வியந்து போற்றுவதற்கெல்லாம் தகுதியானவர் இல்லை" என்ற கருத்தை வலைப்பூக்களின் பார்க்கும் பொழுது, அதற்குக் "கமல் ரசிகன்" என்ற முறையில் விடையளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கமலின் தரமான படங்கள் என்று சொல்லப்படும் நாயகன், தேவர்மகன், மகாநதி, குணா, சத்யா, ஹேராம், விருமாண்டி, அன்பே சிவம் போன்ற படங்களெல்லாம் ஆங்கிலப்படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. நகைச்சுவைக்குப் பெயர் போன சதிலீலாவதி, மகளிர் மட்டும், பஞ்சதந்திரம் போன்ற படங்களும் சுடப்பட்டவை என்று கூறப்படுகிறது. 

இதற்கு பதில் சொல்வதற்கு முன்பு Product Creation பற்றி சில கருத்துகள்..

ஒரு பொருளை (Product) உருவாக்குவதற்கு முன்பு அப்பொருள் எந்த சந்தையில்(Market) வெளியிடப் போகிறோம், அச்சந்தையின் மக்கள் எப்படிப்பட்டவர்கள் (Demographics), அந்த சந்தையில் என்ன மாதிரியான பொருட்கள் எல்லாம் உள்ளன (Market Survey), அச்சந்தையின் தேவை என்ன ( Market Needs), பொருளைச் சந்தைப்படுத்தும் பொழுது எப்படி மாறுபடுத்தப் போகிறோம் ( Product Differentiation) என்றெல்லாம் ஆராய்ந்து, பொருளைத் அம்மக்களிற்கு ஏற்ப வடிவமைத்து (Localisation / Customization) சந்தைப்படுத்த வேண்டும். சந்தையில் வெளியிடப்போகும் பொருள் தன் ஆராய்ச்சியின் மூலம் வந்த பொருளாகவோ, ஏற்கனவே வெளியான பொருளின் சில பல மாறுதல்களுக்கு உட்பட்ட பொருளாகவோ இருக்கலாம். இதை எல்லாவற்றிற்கும் மேலாகத் தேவைப்படுவது வாடிக்கையாளர்க்கு என்ன மாதிரியான அனுபவத்தைத் ( User Experience) தரப்போகிறோம் என்பதே!! கமலின் படங்கள் உலகப்படங்களில் இருந்து சுடப்பட்டவை என்றாலும் தமிழ்ச் சந்தைக்குத் தேவையான மாற்றங்களுடன் மண்வாசனையுடனேயே வந்துள்ளன.

தேவர்மகன், விருமாண்டி, மகாநதி போன்ற படங்களைப் பார்க்கும் பொழுது நமது மண்ணையும் மண்ணின் மைந்தர்களையும் தான் பார்க்க முடியும். சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் பங்காளிச் சண்டைகளையும், சாதிச் சண்டைகளையும் மண்வாசனையுடன் எடுக்கப்பட்ட படங்கள் மிகக்குறைவே. மகாநதியைப் பார்க்கும் ஒவ்வொரு தந்தைக்கும் உள்ளம் கொதிக்கச் செய்தது தான் படத்தின் வெற்றியே. எங்கோ ஆங்கிலேய நாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் இருந்து சுடப்பட்டது என்று கூறப்பட்டாலும், கும்பகோணத்தையும் கல்கத்தாவையும் முடிச்சுப் போட வைத்தது தான் மகாநதி குழுவின் வெற்றியே. விருமாண்டியை ரசித்த அளவிற்கு நம் மண்ணில் புதைந்திருக்கும் குரோத உணர்வை நினைத்து வெட்கப்பட்டது மனம். அது தான் படத்தின் வெற்றியே!! காப்பியடிக்கப் பட்டதாகக் கூறப்படும் படங்களை இன்று பார்த்தாலும் எனக்கு என் மண்ணில் நடக்கும் விசயமாகப்படுகிறதே ஒழிய அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ நடப்பதாகப் படவில்லை.

அன்பே சிவம், குருதிப்புனல் போன்ற படங்களில் வெளிப்படுத்திய கருத்துகளுள் முதிர்ச்சியின்மையும் தேர்ச்சியின்மையும் தெரிந்தாலும் இப்படியும் படங்களை எடுக்கலாம் என்று அடுத்த தலைமுறையினர்க்கு நம்பிக்கை கொடுத்தது. குருதிப்புனலை ஹிந்தியில் இருந்து காப்பியடித்திருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக மிரட்டியிருப்பார்கள். குருதிப்புனல் தான் தமிழில் வெளியான முதல் "டால்பி" ஒலியமைப்பில் வெளியான சினிமா. தமிழகத் திரைத்துறையினரை தொழில்நுட்ப ரீதியில் உயர்த்தியதில் பெரும்பங்கு கமல் படங்களுக்கு உண்டு. ஒவ்வொரு படத்திலும் ஒப்பனை, கதையமைப்பு மட்டுமல்லாமல் தொழில்நுட்ப ரீதியிலும் புதிய விசயங்களைக் கொண்டுவந்ததில் கமலிற்குப் பெரும் பங்குண்டு. இங்கும் ஒரு பன்மொழிப் படத்தை எடுக்க முடியும் என்று காட்டியதில் ஹேராமிற்குப் பெரும் பங்குண்டு. இப்படம் தோல்வியுற்றதற்கான காரணமும் இதுவே. 

கமலின் பரிட்சார்த்தமான படங்கள் பலவும் சொந்தத் தயாரிப்பில் வந்த படங்களே. மாற்றுப் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு தெரிந்திருந்தாலும் கமல் எடுத்ததற்கான காரணம், புதிய அனுபவத்தைத் தர வேண்டும் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? அதற்குக் காப்பி தான் அடிக்க வேண்டுமா? என்றால், இப்படி ஒரு கதைக்கருவில் தமிழ் ரசிகர்களுக்குப் படம் கொடுக்க விருப்பப்பட்டிருக்கலாம். "மண்வாசனையுடன்" எடுக்கப்பட்ட படங்களை ஈயடிச்சான், கொசுவடிச்சான் காப்பி என்பதெல்லாம் ஓவர். 

தினமும் ஒரு உலகப்படத்தைப் பார்க்கும் எவருக்கும் ஒவ்வொரு படத்திலும் சில காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. அதே அனுபவத்தை தமிழ் ரசிகர்களுக்கும் 30 ஆண்டுகளாகத் தரவேண்டும் என்று நினைத்ததில் தவறிருப்பதாகத் தோன்றவில்லை. கமல் செய்திருப்பது மக்களின் User Experienceஐ அதிகரித்திருப்பதே!!

கமல் தமிழ் ரசிகர்களின் ரசனையை எதற்காக அதிகரிக்க வேண்டும்? சகலகலா வல்லவன், காக்கிச்சட்டை போன்ற படங்களையே எடுத்துக்கொண்டிருந்திருக்கலாமே!! அப்படி செய்திருந்தால் என்னவாகியிருக்கும்? சூர்யா, விக்ரம் போன்று நடிப்பில் முயற்சிகளை மேற்கொள்ளும் நடிகர்களும் பருத்திவீரன், பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களும் வருவதற்கு நாளாகியிருக்கும்!! கமல் ஒன்றும் பெரிய சாதனை எல்லாம் செய்யவில்லை. அவர் செய்திருப்பது ஒரு Initiation ஆரம்பம்.

ரசிகர்களின் ரசனையை அதிகரிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார். "நாங்கள் தான் இணையத்தில் இருந்து தரவிறக்கி உலகசினிமா ரசனையை அதிகரித்துக்கொள்கிறோமே, கமல் தான் ரசிகர்களின் ரசனையை அதிகரிக்க வேண்டுமா?" ஐயா படங்களைத் தரவிறக்கம் செய்யுமளவிற்கு இணைய வசதியும் கிடைக்கப் பெற்றோர் ஒரு சதவிதத்தினர் தான். மற்றவர்களை அந்த தரத்திற்குக் கொண்டு வர வேண்டாமா? அதைத் தான் மகேந்திரன்,பாலுமகேந்திரா, பாலசந்தர்,பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் செய்துள்ளனரே. ஏன் கமல் மெனக்கெட வேண்டும்? அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது அதன் வீச்சு அதிகம் என்பதே என் கருத்து!! உலக சினிமாவை நோக்கி வந்திருக்கும் பலரும் சிறு வயதில் கமல் படங்களைச் சிலாகித்தவர்களாகவே இருப்பர்.

கமலிற்கு இவ்வளவு வக்காளத்து வாங்குகிறாயே.. கமல் இன்னும் நம் சமுதாயத்தில் உள்ள ஏகப்பட்ட விசயங்களைப் படமாக்கியிருக்கலாமே!! ஆம்.. எனக்கும் அந்த வருத்தம் உண்டு. கமல் எடுக்க வேண்டிய, ஏற்று நடிக்க வேண்டிய பாத்திரங்கள், பேச வேண்டிய சமுதாயக் கருத்துகளும் நிறைய உள்ளன. கமலிற்கு மனமும் பணமும் இல்லாத பட்சத்தில், அதை விக்ரம்களும், சூர்யாக்களும், சேரன்களும்,பாலாக்களும் செய்தால் நன்றாக இருக்கும். அப்படி மாற்று சினிமாவை எடுப்பதற்கு ஒரு தளம் அமைத்துக் கொடுத்ததில் கமலிற்குப் பெரும் பங்குண்டு!! 

அதனால், காப்பியடித்தார் என்ற சொல்லப்பட்டாலும் கமல் ரசிகன் என்பதில் எனக்கு சிறிதளவும் வருத்தமில்லை!!

Thursday, August 5, 2010

களவாணி - சிரித்து மகிழ அருமையான படம்!!


இப்படி ஒரு படத்தைப் பார்த்து எத்தனை வருடங்களாகின்றன!! என்ன தான் 'கருத்து கந்தசாமி'ப் படங்களையும் உலகப் படங்களையும் பார்த்துச் சிலாகித்தாலும், திரும்பத் திரும்பப் பார்க்கத் தோன்றுவது என்னவோ நல்ல நகைச்சுவைப் படங்களையும், எதார்த்தமான கதாப்பாத்திரங்களைக் கொண்ட படங்களையும் தான்.

அந்த வரிசையில் நான் அதிகமாகப் பார்த்த படங்களுள் ஆண்பாவம், இன்று போய் நாளை வா, தில்லு முல்லு, மைக்கேல் மதன காமராஜன், சதிலீலாவதி, பஞ்சதந்திரம், கரகாட்டக்காரன், உன்னாலே உன்னாலே, மைடியர் மார்த்தாண்டன், வின்னர், பம்மல் கே சம்பந்தம், காதலிக்க நேரமில்லை போன்றவை குறிப்பிடத்தக்கவை. இங்கே குறிப்பிட்ட பெரும்பாலான படங்களைப் பார்க்கும் இரண்டு மணி நேரம் எதைப் பற்றிய சிந்தனையையும் ஏற்படுத்தாமல் சிரிப்பு அல்லது பொழுதுபோக்கு என்று நகர்ந்துவிடும்.

அந்த வரிசையில் கண்டிப்பாக களவாணியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

கிராமங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் என்றால் வார்த்தைக்கு வார்த்தை  வலிந்து திணிக்கப்படும் 'ங்க' போட்டு பேசப்படும் கொங்குமண்டல வட்டார வழக்கு அல்லது 'ய்ய்ங்ஙே' போட்டுப் பேசப்படும் மதுரை வட்டார வழக்கிற்கு மாறாக, இப்படத்தின் வசனங்களில் தஞ்சை மண்ணின் வாசம் வீசுவது இதமாக இருக்கிறது.  பேச்சு வழக்கில் மட்டுமல்லாமல் படப்பிடிப்பும் தஞ்சை மண்ணிலே என்பது படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. எங்கும் பச்சைப் பசேல் புல்வெளிகள், வாய்க்கால் வரப்பு, அப்பகுதிகளில் பார்க்க முடியும் கிராம வீடுகள், குளங்கள் என்று பசுமையாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.

+12ம் வகுப்பை முடிக்காத கதாநாயகன் (விமல்), துபாயில் இருந்து தந்தை அனுப்பும் பணத்தைத் தாயிடம் (சரண்யா) மிரட்டி, ஏமாற்றிப் பிடிங்கிக் கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் களவாணித் தனம் தான் படத்தின் கதை. களவாணித் தனத்தின் இடையில் பள்ளிச் செல்லும் கதாநாயகியிடம் (ஓவியா) காதல், விமல் கும்பல் "பிள்ளையாரைத்" திருடியதால் ஏற்பட்ட ஊர்ப்பகை, ஒவ்வொரு காட்சியிலும் இழையோடும் நகைச்சுவை என்று சுவையாகப் படமெடுத்திருக்கிறார்கள்.

'காசு கொடுக்கிறியா.. இல்ல டிவிய உடைச்சிடும்மா' என்று ஆரம்பிக்கிறது அறிக்கியின் (விமல்) அறிமுகக் காட்சி. பிறகு பேருந்து நிறுத்தத்தில் நிற்கும்  பேருந்தில், கடைசி சீட்டில் இருக்கும் பெண்ணைக் கண்ணடித்துச் செய்கை காட்டி, முன் சீட்டில் இருக்கும் பெண்ணிற்கும் சிக்னல் கொடுக்கும் காட்சி என்று கலக்கலான ஓப்பனிங்!! இயல்பான கிராமத்து வெட்டிப்பயலாகக் கன கச்சிதமாகப் பொருந்துகிறார் விமல். யமஹா RX100ஐ ஓட்டும் வாகு, நண்பர்களுடன் செய்யும் அடாவடித்தனம் என்று பள்ளிக்கால நண்பர்கள் சிலரை நினைவூட்டுகிறார்.

*

'என்னடா வண்டிய நிறுத்திட்ட' என்று மொபட்டை ஓட்டி வந்தவரிடம் கஞ்சா கருப்பு கேட்க..
'நீ செத்துட்டேனு தான் மாமா கார்ல சொல்லீட்டுப் போறானுக. அதத்தான் பார்க்கிறேன்'

'அடப்பாவிகளா.. போன தடவை பாலிடாலக் குடிச்சேன்னு அட்டுழியம் பண்ணுனானுக.. இந்தத் தடவை இப்படியா..' என்று கஞ்சா கருப்பு வரும் இடமெல்லாம் கண்ணில் நீர் வரும்படி சிரிப்பு வருகிறது. கஞ்சாக் கருப்புவிற்கு இந்தப் படம் ஒரு 'மைல்கல்'

*

"நான், அவன் ஏதோ கம்ப்யூட்டர் படிக்கிறான்னு லேப்டாப்பெல்லாம் வாங்கீட்டு வர்றேன்.. நீ அவன் வயல்ல பொறுப்பா மாடு மேய்க்கப் போறான்னு பெருமைப் படற?" என்று விமலின் தந்தை (இளவரசு) கேட்க..

'நீங்க வேணா பாருங்க.. இந்த ஆனி போய் ஆடி போய் ஆவணி வரட்டிம்,.. அவன் டாப்பா' வந்திருவான்னு ஜோசியர் சொல்லியிருக்கார் என கூறும் சரண்யா.. அப்படியே அப்பாவி அம்மா..

கதாநாயகி ஓவியா, வில்லனாக வருபவர், விமலின் நண்பர்கள் அன அனைவரும் அவரவர் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

*

'சின்னச் சின்னத் தூரல் வந்து' என்று தொடங்கும் பாடல்.. ஹிட் வரிசையில்!! திரும்பத் திரும்ப ஒலி/ஒளிபரப்பினால் இந்தப் பாடலில் வரும் 'டம்ம டும்ம டமடம டும்மா டம்ம டும்ம டமடம டும்மா' என்று வரும் வரிகளைக் குழந்தைகள் திரும்பத் திரும்பப் பாடினால் வியப்பில்லை!! மற்ற பாடல்கள் பெரிதாகச் சொல்லும் படியாக இல்லாவிட்டாலும் கிராமத்து வாசமடிப்பது இதமாக இருக்கிறது.

*

பெரிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பெரிய பட்ஜட், கத்தி குத்து, இரத்தம், பறந்து பறந்து போடும் சண்டை  எல்லாம் இல்லாமல்  இதமான கிராமத்துப் படத்தைக் கொடுத்ததற்காகவே இயக்குனர் சற்குணத்தைப் பாராட்டலாம்.

*

பள்ளிக்குச் செல்லும் பெண்ணை வெட்டிப் பயல் காதலிப்பதாக வரும் படத்தை ஆகா ஓஹோ வென்று விமர்சிப்பது சரியா? என்ற கேள்வி எழலாம். 'நம்ம ஊர்ல சினிமாவப் பார்த்துத் தான் எல்லாம் நடக்கனும்னா இந்நேரம் ஒரு ஊழல் அரசியல்வாதியும் சாலைல நடமாட முடியாது'. சினிமாவைச் சினிமாவாகப் பார்க்கச் சொல்லிக்கொடுத்தாலே யாரும் இது போன்ற படங்களால் கெட்டுப் போக மாட்டார்கள்.


ஆகவே.. இரண்டு மணி நேரம் சிரித்து மகிழ அருமையான படம் களவாணி. நகைச்சுவைப் படங்களைக் கலேக்ஷனில் சேர்க்க வேண்டும் என்பவர்கள் களவாணியைத் தவிர விடக்கூடாது.

 களவாணி - டம்ம டும்ம டமடம டும்மா!!

Saturday, April 17, 2010

ஃபேஸன் (FASHION) - திரைக்குப் பின்னால் ஒரு பார்வை!!


சொனாலி! பிரபலமான சூப்பர் மாடல்! ஒரு ஃபேஸன் ஷோவில் ஒய்யாரமாக (பூனை நடை) நடந்து வரும் பொழுது மேலாடை நழுவி விடுகிறது. ஃபேஸன் உலகின் ராணியின் ஆடை நழுவிய காட்சியைப் புகைப்படக்காரர்கள் குதூகலமாகப் படம் பிடிக்கின்றனர். தன் உடை நழுவியதைச் சிறிதும் முகத்தில் காட்டாமல் தன் வேலையை (நடந்து) முடிக்கிறார் சொனாலி. சொனாலியுடன் நடப்பவர்கள் அனைவரும் முகத்தில் சிறிதும் உணர்ச்சியற்று நிற்கிறார்கள் தங்கள் (நடை) முறைக்காக!!

எப்படி நடந்தது? ஏன் நடந்தது? "சொனாலியின் மேலாடை நழுவிவிட்டது" என்று எங்கும் பரபரப்பு!!

"ஐயோ.. என் ஷோ இப்படிப் பாழாகிவிட்டதே! இனி யார் என் நிறுவனத்திடம் ஃபேஸன் ஷோவை ஒப்பந்தம் செய்வார்கள்?" என்று கதறுகிறார் நிறுவனத் தலைவர். ஊடகங்களுக்கு செமத்தியான தீனி கிடைத்துவிடுகிறது. பெண்களின் உடலை மூலதனமாகக் கொண்டு காட்டப்படும் எந்த நிகழ்ச்சிகளுக்கும், செய்திகளுக்கும் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் தானே அவர்கள்!! சொனாலி என்ன ஆனாள் என்பது முக்கியமல்ல.

கிரீன் ரூம் என்று அழைக்கப்படுகிற மேக்-அப் ரூம் வரும் வரை உறைந்து போனவர், "உனக்கு ஒன்னுமில்லை சொனாலி" என்று சொல்லி பிறகு, "ஓ"வென அழ ஆரம்பிக்கிறார்.

o

சொனாலியின் இடத்தில் மேக்னாவை நியமிக்கிறது "பனாச்" என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம். 

சண்டிகரைச் சார்ந்த மேக்னாவிற்கு சூப்பர் மாடல் ஆக வேண்டும் என்ற ஆசை. தன் ஆசையைப் பெற்றோரிடம் கூறத் தந்தை மறுக்கிறார். வீட்டை விட்டு வெளியேறும் மேக்னா, மும்பைக்கு வந்து ஆரம்பத்தில் துன்பங்களை அனுபவித்து ஃபேஸன் ஷோவில் கலந்து கொள்ள ஆரம்பிக்கிறார். தான் சேரும் நிறுவனத்தில் சொனாலி சூப்பர் மாடலாக இருக்கிறார்.புகழ், புகை, மது மற்றும் போதைப்பழக்கம் தந்த மயக்கமும் சேர்ந்து கொள்ள திமிரின் உச்சத்தில் திளைக்கிறார் சொனாலி!! அவரது திமிரே அவரிற்கு எதிரியாக மாற, சொனாலியின் இடத்தைப் பிடிக்க வேண்டுமென்ற கனவு நனவாகிறது, மேக்னாவிற்கு!!


அதற்காக மேக்னா கொடுக்கும் விலை அதிர வைக்கிறது. தன்னுடன் சேர்ந்து வாழும் (Living Together) ராகுலை விட்டுப் பிரிய நேர்கிறது. "பனாச்" நிறுவனத் தலைவர் அபிஜித்துடன் ஒத்துழைத்ததால் கற்பமாகிறார் மேக்னா. ஆனால், பனாச் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தில் மூன்று வருடத்திற்குக் கற்பமாகவோ, திருமணமோ செய்து கொள்ளக்கூடாது என்றிருக்கிறது. ஒப்பந்தத்தைப் படிக்காமல் கையெழுத்துப்போட்டதை நினைத்துத் தன்னையே வெறுக்கிறார் மேக்னா.

ஒரு கட்டத்தில், சொனாலியைப் போலவே மேக்னாவும் குடிபோதைக்கு அடிமையாகிறார். குடி போதையில் காரை ஓட்டிச் சென்று காவல்துறையினருடன் மாட்டிக்கொள்கிறார். இந்த விசயம், ஊடகங்களில் பரபரப்புச் செய்தியானதில்  இருந்து மேக்னாவின் சரிவு ஆரம்பமாகிறது.விரக்தியின் உச்சியில் தன்னையே மறக்குமளவிற்கு போதையேற்றிவிட்டு டிஸ்கோவிற்குச் செல்கிறார். அங்கே, தனக்கு அறிமுகம் ஆகாத கறுப்பினத்தவர் ஒருவருடன் நடனமாடுகிறார்.

காலையில் போதை தெளிகிறது. ஏதோ ஒரு மூன்றாம் தர ஓட்டலில் இருப்பது புரிகிறது. உடலில் ஆடைகள் இல்லை. அருகில் திரும்பிப்பார்த்தால் தனக்கு அறிமுகமே இல்லாத அந்த மனிதர்!! மேக்னாவுடன் ஆரம்பித்தில் இருந்து பயனிக்கும் நம்மை உறைய வைக்கும் காட்சியிது.

"ஆரம்பத்தில் எல்லாமே நன்றாகத் தான் இருக்கும். போகப் போக எல்லாமே மாறிவிடும்"(Shuru Mein Sab acchaa laga.. dheere dheere sab padhal saktha hey) என்று தன் இடத்திற்கு மேக்னாவை நியமனம் செய்த பொழுது சொனாலி கூறிய வார்த்தைகள் ஒலிக்கிறது.

பனாச் நிறுவனத்தின் ஒப்பந்தத்தைத் ரத்து செய்துவிட்டு ஊருக்குத் திரும்ப, தங்கள் மகளை அரவணைக்கின்றனர் பெற்றோர். பெற்றோரின் கவனிப்பில் மனதில் ஏற்பட்ட காயங்கள் மறைகிறது. இந்த முறை தன் தந்தையின் ஆசிர்வாதத்துடன்.. மும்பை திரும்புகிறார்.

o

"பிரபல மாடல் சொனாலி ரோட்டில் கிடக்கிறார்" என்று சொனாலியைத் தூக்கி வைத்துக் கொண்டாடிய ஊடகங்களில் வந்த செய்தியைப் பார்த்து சொனாலியைக் காப்பாற்றுகிறார் மேக்னா. இருவரும் நல்ல தோழிகளாகின்றனர். பாரிஸ் நகரின் முக்கிய நிறுவனமொன்றின் ஃபேஸன் ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது மேக்னாவிற்கு. ஃபேஸன் ஷோ நடப்பதற்கு முந்தைய நாள் மேக்னா காணாமல் போகிறார். என்ன ஆனார் சொனாலி? மேக்னா சூப்பர் மாடல் ஆனாரா?

o

சொனாலியாக கங்கனா ரவுத். (தாம் தூமில் துக்கடாவென வந்து செல்வார்). புகழின் உச்சியில் இருக்கும் பொழுது இருக்கும் திமிர், அடாவடித்தனம், துயரம், இயலாமை என எல்லா உணர்ச்சிகளையும் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார். மேக்னாவாக பிரியங்கா சோப்ரா. "இதை விட ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்குமா? நடிப்பதற்கு?" அசத்தியிருக்கிறார். இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது சரியானதே!!

o

கல்லூரிக்காலங்களில் தான் "ஃபேஸன் ஷோ"க்கள் அறிமுகமானது எனக்கு. வெவ்வேறு கல்லூரிகளின் பெண்கள் விதவிடமான உடைகளை அணிந்து ஒய்யார நடை நடப்பார்கள். அது போன்ற நிகழ்ச்சிகளில் ஆடைகளை (என்னையும் சேர்த்து) எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்பது சந்தேகமே!! அதே கல்லூரிக் காலத்தில் எஃப்.டி.வி. வர ஆரம்பித்தது. யார் வருகிறார்கள், என்ன உடையணிந்திருக்கிறார்கள் என்றெல்லாம் கவலையே இல்லாமல் எங்கள் டி.வி.ஹாலில் ஓடிக்கொண்டிருக்கும் எஃப்.டி.வி!! அப்பொழுதெல்லாம்.. ஃபேஸன் உலகிற்குப் பின்னால் இப்படி ஒரு கோரமான முகம் இருப்பது தெரியாது. 

ஐஸ்வர்யா ராய் உலக அழகி ஆனதில் இருந்து மாநிலம் வாரியாக, மாவட்டம் வாரியாக, நகரம், தெரு என எங்கும் அழகிகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகள் வர ஆரம்பித்துவிட்டன. இது போன்ற நிகழ்ச்சிகளில் கிடைக்கும் புகழ் சிலரை ஃபேஸன் உலகிற்குச் செல்ல ஊக்குவிக்கலாம். அது போன்றவர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பது நல்லது!! பளபளப்பிற்குப் பின்னால் உள்ள ஒரு உலகம் நம் கண் முன்னே "ஃபேஸன்" திரைப்படத்தில்!!

போட்டி, பொறாமை, கயமை, கற்பைப் பறிக்கக் காத்திருக்கும் பருந்துகள், மன உளைச்சல் என்று எதையும் விட்டுவைக்காமல்.. சிறப்பான படத்தை எடுத்திருக்கிறார் மதுர் பண்டார்கர்!! இவரது படங்கள் உண்மைக்கு மிக அருகில் பயணிப்பவை!!


எந்த ஒரு இடத்திற்கு வருவதற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டியுள்ளது அனைவரும் அறிந்ததே. அதுவே ஃபேஸன், சினிமா போன்ற உலகமென்றால் கொடுக்க வேண்டியிருக்கும் விலை கொஞ்சம் அதிகம் என்பதே சுடும் உண்மை!! ஃபேஸன் உலகைக் கவர்ச்சி என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்த்து வருபவர்கள்... இந்தப் படத்தைப் பார்த்தால் மாற்ற வேண்டியதிருக்கும்!!
o

Friday, April 16, 2010

ஹெலன் கெல்லர் மற்றும் ப்ளாக் - இருளில் ஒளி!!



ஹெலன் கெல்லரைப் பற்றிய பாடத்தை பள்ளி நாட்களில் படித்ததுண்டு.  பிறந்த சில மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கண் பார்வை, கேட்கும் சக்தி, பேசும் சக்தி ஆகியவற்றை இழந்தார் ஹெலன் கெல்லர். தனது உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் இருளில் மூழ்கியிருந்த ஹெலர் கெல்லரிற்கு ஒளி கிடைத்தது ஆன் சல்லிவன் என்ற ஆசிரியரின் உதவியால்!!

பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர் பேசுவதை புரிந்துகொள்ளும் கலையை கெல்லருக்கு சல்லிவன் கற்பித்தார். மேலும், கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பழக்கினார். ஹெலன் கெல்லர், கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்று, பிறகு பட்டமும் பெற்றது வரலாறு. 

o

ஹெலன் கெல்லரின் வாழ்க்கையின் சில பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்ட படம் தான் ப்ளாக் (BLACK).


சஞ்சை லீலா பன்சாலியின் இயக்கத்தில் கண்பார்வை தெரியாத பெண் 'மிச்செல்'லாக ராணி முகர்ஜி, ஆசிரியர் தேப்ராஜ் சஹாயாக அமிதாப் பச்சனும் அருமையாக நடிக்க, ரவி.கே.சந்திரன் வரைந்த ஒளி ஓவியம்!!

மிச்செல், கண் பார்வை, காது கேட்கும் - வாய் பேசும் திறன் இல்லாததை அறியும் தந்தையால் உதாசீனப்படுத்தப்படுகிறார். ஒலி, ஒளி எதையுமே உணரவோ, உணர்ச்சிகளை வெளிப்படுத்தவோ முடியாத மிச்செல் முரட்டுத்தனமாக நடக்கிறார், ஆசிரியர் சஹாயைச் சந்திக்கும் வரை!! அதன் பிறகு சஹாயின் பயிற்சியில் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், படிக்கவும் கற்கிறார் என்பது தான் ப்ளாக் படத்தின் சுருக்கம்!!

மிச்செல் போல மாற்றுத்திறன் கொண்டவர்கள் எப்படி படிப்பார்கள்? அவர்கள் என்னென்ன பிரச்சனைகளைச் சந்திப்பார்கள்? என்றெல்லாம் சில ஆசிரமங்களுக்குச் சென்ற போது யோசித்ததுண்டு. ஆனால், மிச்செல் போன்ற மாற்றுத்திறன் கொண்டவர்களின் பிரச்சனைகளைத் துல்லியமாக ஆய்கிறது இந்தப் படம்!!

"இவ்வளவு சிரமங்கள் எதற்கு? கண்தெரியாத, காதுகேட்காத குழந்தைகளுக்கான ஆசிரமத்தில் சேர்த்துவிடலாம்" என்று பேசப்படும் ஒரு இடத்தில் சஹாய் கேட்கிறார், "அங்கு எதற்கு? கூடையும் பாயும் முடையக் கற்றுக் கொள்ளவா? அங்கு பட்டதாரியாகும் அவளின் கனவை நனவாக்க முடியுமா"?என்று. சஹாயின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை. ப்ளாக் படத்தில் மிச்செலின் பெற்றோர் வசதி படைத்தவர்கள். ஆனால், நம் சமூகத்தில் இது போன்ற திறன் உள்ளவர்களின் பெற்றோர்??

இந்தப் படத்தில் மிச்செலின் கல்லூரியில் பி.ஏ. படிப்பிற்குத் தேவையான பாடங்களை பிரெயில் முறையில் தயார் செய்து தருவார் ஆசிரியர். மிச்செலும் தன் பாடங்களைப் பேசவும் படக்கவும் தெரிந்த மாணவர்களுடன் படிப்பார். கல்லூரியில் விரைவுரையாளர் பாடம் எடுக்கும் பொழுது சஹாய் அருகில் அமர்ந்து மிச்செலிற்கு விளக்குவார். நம் சமூகத்தில்??

பல வருடங்கள் அதே கல்லூரியில் படித்துவிட்டுப் பட்டம் வாங்குமிடத்தில், மிச்செலுடன் நமக்கும் பெரிமிதம் வந்துவிடுகிறது படம் பார்க்கையில். பல வருடங்களாக மிச்செலுடனேயே பயணிக்கும் சஹாய்க்கு அல்ஜெய்மெர் நோய் தாக்குகிறது. ஆரம்பத்தில் தன்னைக் கட்டியது போல சங்கிலியால் சஹாயையும் கட்டியிருப்பதை உணரும் மிச்செல் கதறும் இடத்தில் நம் மனமும் கசிகிறது. தள்ளாத வயதில் நோய்வாய்ப்பட்டிருக்கும் சஹாயிடம் "தான் பட்டம் பெற்றதைத்" தன் மொழியிலேயே காட்டுவது அழகு!!


கடைசியில் சஹாயை அறையில் இருந்து வெளியே அழைத்துச் சென்று மழையில் நனையவிடும் இடத்தில் புல்லரிப்பை உணர முடியும்!!

o

அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் - ப்ளாக் (BLACK),  மாற்றுத் திறன் உள்ளவர்களைப் புரிந்துகொள்ளவும், எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டும் விடக்கூடாது என்பதை உணரவும்!!. இதோ ஹெலன் கெல்லரின் வார்த்தைகள்..


They took away what should have been my eyes
But I remembered Milton's Paradise

They took away what should have been my ears,
Beethoven came and wiped away my tears

They took away what should have been my tongue,
But I had talked with God when I was young

He would not let them take away my soul -
Possessing that, I still possess the whole.

-Helen Keller

o

Sunday, April 11, 2010

சபாபதி முதல் நல்லசிவம் வரை! - பத்துக்குப் பத்து!!

பதிவுலகின் சுவாரஸ்யங்களில் தொடர்பதிவுகளும் ஒன்று. இந்த விசயத்தைப் பற்றி எழுதினால் என்ன என்று யோசித்துக் கொண்டிப்போம். அதே சமயம் "இதையெல்லாம் ஒரு பதிவாக எழுத வேண்டுமா?" என்றும் உள்ளுக்குள் தோன்றும். அந்த நேரத்தில் தொடர் பதிவெழுத அழைப்பு வரும் பொழுது "அழைத்தவரிற்காக" என்று சொல்லிக்கொண்டு (காரணம் வேணும்ல??) எழுத ஆரம்பித்துவிடுவோம். அப்படி இந்த முறை "எனக்குப் பிடித்த பத்து படங்களை" எழுதுமாறு நண்பர் பிரபாகர் அழைத்திருக்கிறார்.

விதிகள்: 

1. தமிழ்ப் படங்கள் மட்டுமே பட்டியலில் வரவேண்டும்.

2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.

3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை.

சிறுவயதில் இருந்து பார்த்திருக்கும் நூற்றுக்கணக்கான படங்களில் ஒரு பத்தை மட்டும் பட்டியலிடுவது கடினமான விசயம்!!

படங்களை எப்படிப் பட்டியலிடுவது? 

மிகத் திறமையாக இயக்கப்பட்ட படங்களா? சிறப்பான கதை, திரைக்கதையுள்ள படங்களா?, அதிகமான விருதுகள் வாங்கியவையா?, சமூகத்திற்குத் தேவையான கருத்துகள் கொண்ட படங்களா? அல்லது ஒரு நிகழ்வைப் பற்றி எடுக்கப்பட்ட படங்களா?

இப்படித் தேர்ந்தெடுக்கும் பட்டியலில் வீரபாண்டிய கட்டபொம்மன், அதே கண்கள், எதிர் நீச்சல், ராஜராஜ சோழன், கர்ணன், கந்தன் கருணை, ஆறு முதல் அறுபது வரை, உதிரிப்பூக்கள், 16 வயதினிலே, சேது, கன்னத்தில் முத்தமிட்டால், குணா, மூன்றாம் பிறை, முள்ளும் மலரும், பருத்திவீரன், சேது, பிதாமகன், மகாநதி, தேவர் மகன், சுப்பிரமணியபுரம்,  ஹே ராம், அஞ்சலி, ஹவுஸ்புல், புதிய பாதை, வெற்றிக்கொடிகட்டு, ஆட்டோகிராப், ஒன்பது ரூபாய் நோட்டு, பெரியார், நான் கடவுள் போன்ற படங்கள் கட்டாயம் இடம்பெறும். 

இது போன்ற ப்டங்களைப் பார்க்கும் பொழுது நல்ல படங்கள் என்ற நிறைவும், தமிழ் சினிமா மீதும் பெருமிதமும் ஏற்படுகிறது!! மேலே குறிப்பிட்ட படங்கள் யாவும் என் கலெக்சனிலும் உள்ளன. ஆனால் இது போன்ற படங்களை மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறேனா என்று யோசித்தால் "இல்லை" என்று தான் கூற வேண்டும். 

அப்படி நான் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்த/ரசிக்கும் படங்களைப் பட்டியலிடுகிறேன், பல அக்மார்க் மசாலாப் படங்கள் என்றாலும்!! 

1. சபாபதி - 1941:

ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் தயாரித்து இயக்கியிருக்கும் படம். 1941ல் வெளியாகியிருக்கும் படத்தில் சபாபதி என்ற பெயரிலேயே இரண்டு கதாபாத்திரங்கள். எஜமான் சபாபதியாக டி.ஆர்.ராமசந்திரன் (கதாநாயகர்) வேலையாள் சபாபதியாக சாராங்கபாணி!! இருவரும் சேர்ந்து அடிக்கும் கொட்டம் தாங்க முடியாது. தூர்தர்ஷன் காலத்தில் முதன் முதலில் பார்த்தது. என் இளம் வயதில் அவ்வளவு சிரித்து மகிழ்ந்தது இந்தப் படமாகத் தான் இருக்கும்.
பள்ளிகளில்/ கல்லூரிகளில் ஆசிரியரை கிண்டலடிக்கும் வழக்கம் இந்தப் படத்திலிருந்தே ஆரம்பித்திருக்கிறது. இன்று வரை நாம் பார்க்கும் கிண்டல் காட்சிகள் யாவும் இந்தப் படத்தின் பிரதியே!!

கிளப், சீட்டாட்டம் என்று திரியும் செல்வந்த முதலாளி, படிப்பில் கவனம் இல்லாத மகன், செல்லம் கொடுக்கும் தாயார், முட்டாள் வேலையாள், சபாபதிக்குப் பார்க்கப்படும் பெண், வேலைக்காரி என்று குறைந்த கதாப்பாத்திரங்களைக் கொண்டு அருமையான படத்தைத் தந்திருப்பார் ஏ.வி.எம். செல்வந்தர்களிடம் இருந்த( ஏன் இன்னும் இருக்கும்) ஆங்கில மோகம், சமூகத்தில் இருந்த இன்னல்கள் என்று ஆங்காங்கே சுட்டிக் காட்டியிருந்தாலும் படம் முழுக்க நகைச்சுவை நிரவியிருக்கும். 

படத்தின் அதிகபட்ச நகைச்சுவை சபாபதியின் தேர்வுத்தாள். தெற்கு ரயில்வேயைப் பற்றி எழுதச் சொன்னால்..

"இருப்புப் பாதை என்றால் இருப்புப்பாதை என்று அர்த்தம். தெற்கு ரயில்வே மெட்ராஸில் இருக்கிறது. மெட்ராஸில் இருந்து கிளம்பிய ரயில் குப்..சிப்..
குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப்..குப்..சிப். குப்..சிப்..குப்..சிப்.." என்று எழுதியதை "சபாபதி" படிக்கும் காட்சியைப் பார்ப்பவர்கள் கண்ணில் நீர் வர நான் உத்திரவாதம்.

தேன் நிலவு:(1961)

வழக்கமாக வரலாற்றுப் படங்கள் அல்லது சோகப் படங்களைப் போடும் தூர்தர்ஷனில் பார்த்த பொழுது ஸ்ரீதரின் தேன் நிலவு ஒரு மாறுதல். 

இளமையான ஜெமினி கனேசன், அழகான நம்பியார், காமெடியில் கலக்கும் தங்கவேலு, ஓவியம் போல வைஜெயந்திமாலா என அருமையான கூட்டனியுடன் சிறிது சோகம் இருந்தாலும் மென்மையான படம். "ஓஹோ எந்தன் பேபி.. நீ வாராய் எந்தன் டார்லிங்" என்று ஜெமினியும், வைஜெயிந்திமாலாவும் காஷ்மீர் ஏரியில் டூயட் பாடும் காட்சி போல தமிழ் படங்களில் காட்சி வந்ததில்லை. இப்பொழது, தேன் கின்னம் நிகழ்ச்சியில் இந்தப் பாடலைப் பார்க்கும் பொழுது வைஜெயிந்தி மாலாவைப் பார்த்து ஜொள் விடாமல் இருக்கமுடிவதில்லை :)

பாட்டுப் பாடவா, காலையும் நீயே மாலையும் நீயே, ஊரெங்கும் தேடியே ஒருவரைக் கண்டேன், நிலவும் மலரும் பாடுது என்று படத்தில் உள்ள அத்தனை பாடல்களும் கிளாசிக்கல் ரகம். இசை ஏ.எம்.ராஜா. 

3. காதலிக்க நேரமில்லை (1964)

தமிழ் சினிமாவின் Trend Setterஆக அமைந்த படங்கள் இரண்டு. ஒன்று காதலிக்க நேரமில்லை. இரண்டாவது 16 வயதினிலே. இரண்டாவது செட்டில் இருந்து வெளியே கிராமத்திற்கு கூட்டிச் சென்றதற்கு. முதலாவது முழுக்க முழுக்க நகைச்சுவையாக அமைந்ததற்கு.

ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், காஞ்சனா, ராஜ்ஸ்ரீ, பாலய்யா கூட்டனியில் ஸ்ரீதர் இயக்கிய படம். இந்தப் படத்தில் நாகேஷ் இயக்குனர் ஆகும் எண்ணத்தில் பாலய்யாவிற்குக் கதை சொல்லும் காட்சி இப்பொழுது பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியாது.

எங்க ஊரிற்கு அருகே இருக்கும் ஆளியார் அணையில் தான் படத்தின் பல காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும். 

"அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்" பாடல் என்னுடைய All time Favourite!!

4. தில்லுமுல்லு (1981):

அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் என்ற பாத்திரத்தில் ரஜினி கலக்கியிருக்கும் படம். மீசையை வைத்து நகைச்சுவை செய்ய முடியும் என்பதைக் காட்டியிருக்கும் படம். 

ரஜினி, தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி கூட்டனி அடிக்கும் கூத்திற்கு அளவே கிடையாது. படத்தின் ஹை-லைட் நகைச்சுவை காட்சி தேங்காய் சீனிவாசன் நடத்தும் நேர்முகத்தேர்வு தான்!!

சுப்பிரமணிய பாரதி என்ற பெயரில் ஒருவர் வருவார்..

அவரிடம் தே.சீ., "வணக்கம் மிஸ்டர் சுப்பிரமணிய பாரதி, உங்க பேரக் கேட்டாலே குழந்தைகளுக்கும் சுதந்திர தாகம் எடுக்கும். உங்களுக்கும் கவிதைகள் எழுதத் தெரியுமா?" என்பார்.

அதற்கு அவர், "பல(ழ)க்கம் இல்லீங்க..." என்பார்.

"பலக்கம் இல்லியா? உங்களுக்கு இந்த "ழ"ன்னா வராதா?"
"வரும், ஆனா கொஞ்சம் கஸ்(ஷ்)டப்படும்"
அதற்கு தே.சீ.,"கஸ்டப்படும். அப்ப உங்களுக்கு இந்த "ஷ"னாவும் வராது. சரி, இப்ப நான் சொல்றத திரும்ப சொல்றீங்களா? 'ஒரு கட்டு சுள்ளில ஒரு சுள்ளி கோண சுள்ளி'.. எங்க இத சொல்லுங்க.."
"வேண்டாங்க ரிஸ்க்கு.." என்பார் பாரதி..
" 'ழ'னாவும் வராது, 'ஷ'னாவும் வராது, 'த'னாவும் வராது. பேரு மட்டும் சுப்பிரமணிய பாரதி. இது நாட்டுக்கும் அவருக்கும் பண்ற பெரிய துரோகம்யா.. முதல்ல உங்க பேர மாத்துங்க.." என்பார் தே.சீ.. 
"மாத்தீட்டேன் சார்.. ஷார்டா சுப்பி.."
"பேரப்பாரு சுப்பி கப்பினு.. GET OUT........" :)

5. இன்று போய் நாளை வா (1981)

தமிழ் தொலைக்காட்சிகளைப் பார்த்துவரும் அனைவருக்கும் இந்தப் படத்தைத் தெரியாமல் இருக்காது. 80களில் கோவை நகரின் வீதிகளை கண் முன்னே நிறுத்தியிருப்பார் பாக்கியராஜ். 

"ஏக் காவ் மேன் ஏக் கிஷான் ரஹ தாத்தா" காமெடி இன்றளவும், தமிழக இளைஞர்கள் ஹிந்தி கற்றுக் கொண்ட அனுபவத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தும் வசனம்.

நான் அதிகமாகப் பார்த்திருக்கும் படம் இதுவாகத்தான் இருக்கும்.

6. முதல்மரியாதை (1985)

50 வயது மதிக்கத்தக்க ஊர்ப் பெரியவருக்கும் 20 வயது மதிக்கத்தக்க பரிசல் ஓட்டும் பெண்ணிற்கும் பூக்கும் காதலை மண் வாசனையுடன் கொடுத்திருப்பார் பாரதிராஜா.

சிவாஜி!! 

"உன்னோட தங்கச்சி மவன் முக்கியமா, சாதி முக்கியமாய்யா? உன் வீட்டுல கூடு கட்டியிருக்கே குருவி, அதெல்லாம் சாதியாய்யா பாக்குது? நல்லவேளை தேவர் கொக்கு, நாடார் குருவி, செட்டியார் மைனான்னு அதுக சொல்றதில்லை. உனக்கு உன் சாதி தான் முக்கியம்னா வெட்டுயா பாக்கலாம்" என்று ராதா பேசும் வசனம் இன்றும் நினைவில் நிறுகிறது.

இளையராஜா... ஒரு ராஜாங்கமே நடத்தியிருப்பார். இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது எங்கள் ஊரிற்குப் பக்கத்தில் இருக்கும் கிராம நினைவுகள் வந்துவிடும். ரஞ்சனி இறக்கும் முன்பு ஒரு புல்லாங்குழலில் ஒரு BGM வரும் பாருங்கள்! ராஜா ராஜா தான்!!

7. மைக்கேல் மதன காமராஜன் (1992)

கமல் - கிரேசி மோகன் கூட்டனியில் வந்த நகைச்சுவைப் படங்களில் இந்தப் படத்திற்கு தனி இடம்!!

நான்கு பாத்திரத்தையும் எந்த வித ஒப்பனையும் இல்லாமல், Body Languageயையும், வாட்டார மொழியையும் மட்டுமே வைத்துக்கொண்டு செய்ய முடியும் என்று காட்டியது சிறப்பு!! இந்தப் படத்தில் ஒன்று முடிந்த அளவிற்கு ஏனோ தசாவதாரத்தில் 10 பாத்திரங்களில் வரும் பொழுது ஒன்ற முடியவில்லை.

பாலக்காட்டு ஐயர்-ஊர்வசி கூட்டனியில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சிகள் கலக்கல்!!

"நீங்களும் குக்கா.. உங்க ஊரும் குக்கு...", "ஐ.மீன்.. வாட் யூ மீன்.." என்று படம் முழுக்க நகைச்சுவை வசங்கள் பரவிக்கிடக்கும். 

8. அக்னி நட்சத்திரம் (1988) :

சுத்தமான மசாலாப் படமானாலும் சிறந்த பொழுது போக்குப் படம். ஆண்மையான கார்த்திக், அளவான உடம்புடன் பிரபு, அழகான அமலா, இளமையான நிரோஷா என்று சூப்பர் கூட்டனி.மணிரத்னம் படங்களில் அந்தக் காலகட்ட இளைஞர்கள் பேச்சு வழக்கு இடம்பெறும்.ஆய்த எழுத்து படத்தில் சித்தார்த் வசனங்கள், அலைபாயுதேவில் மாதவன், அக்னி நட்சத்திரத்தில் அமலா, நிரோஷா பேசும் வசனங்கள் "ஆ"வெனப் பார்க்க வைத்தது.

இந்தப் படம் வந்த பிறகு "என் பொண்டாட்டி ஊருக்குப் போயிடுச்சேய்... தங்கமணி ஊருக்குப் போயிடுச்சேய்..." என்ற வசனத்தை பயன்படுத்தான் கணவன்மார்கள் இருப்பார்களா? வி.கே.ராமசாமி, ஜனகராஜ் அடிக்கும் கொட்டம் கலகலப்பு.

இளையராஜ டிஸ்கோ சாந்தி வரும் காட்சிக்குப் போட்டிருக்கும் BGM கலக்கல். பல நாட்கள் என் ரிங்டோன் அது தான்!!

9. பாட்சா (1995)

ஒரு படத்தின் சண்டைக்காட்சிகளைப் பார்க்கும் பொழுது புல்லரிப்பது இந்தப் படத்திற்குத் தான். பல முறை ரஜினியைக் கிண்டல் செய்தாலும் ரஜினியைத் தவிர இது போன்ற பாத்திரத்தை யாரும் செய்ய முடியாது.

தீவிர கமல் ரசிகனாக எனக்கு, "உள்ளே போ..." என்று ரஜினி பேசும் பொழுது விசிலடிக்கத் தோணும்.



10. அன்பே சிவம் (2003):

"யார் யார் சிவம்.. அன்பே சிவம்.. ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும், நாத்திகம் பேசும் நல்லவருக்கு அன்பே சிவமாகும்" என்று வரும் பாடலில் தான் எத்தனை அர்த்தம்?

"தீவிரவாதிக எல்லாம் என்னை மாதிரி கோரமா இருக்க மாட்டங்க. (மாதவனை நோக்கி) உங்களை மாதிரி நல்ல ஸ்மார்ட்டாத் தான் இருப்பாங்க!!" என்று மாதவனிடம் பேசும் இடத்திலிருந்து..

தன் பெயர் ஏ.அரஸ் என்று கூறும் மாதவனிடம்.."அன்பு உங்களுக்குப் பிடிக்காதா?" 

"சோவியத் யூனியன் தான் உடைஞ்சிருச்சே.. இன்னும் ஏன் கம்யூனிசம்னு அலையறீங்க...?" என்று கேட்கும் மாதவனிடம்.."தாஜ்மஹால் இடிஞ்சு போச்சுன்னா.. காதலே இல்லைன்னு சொல்லீருவீங்களா?"

"எனக்குத் தெரிஞ்சு நீங்க தான் கடவுள்... ஒருத்தனைக் கொல்லனும்னு வந்துட்டு.. கொல்லாமப் போகனும்னா எவ்வளவு பெரிய மனசு வேணும். நீங்க தான் கடவுள்.."

என்று படம் முழுக்க வரும் வசனங்கள்... முத்துக்கள்

ரயில் எவ்வளவு நிமிடம் நிற்கும் என்பதற்கு "டு டு டு டு டு டு... " என்ற (1:58 - 2:02) வசனம். "யாரு சார் அது.. சும்மா.. சரஸ்.. சரஸ்.."என்று படம் முழுக்க வரும் வசனங்களில் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை!!

"எந்நாடுடைய சிவனே போற்றி"என்று பாடும் நாசர், கிரன், மாதவன், முகத்தில் உள்ள தழும்பையும் நடிக்க வைத்த கமல், உமா ரியாஸ், சந்தான பாரதி என அனைவரின் நடிப்பும் அருமை. 

இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது தன்னம்பிக்கை உணர்வு ஏற்படுவது இயல்பு!!

o

எனக்குப் பிடித்த படங்களை கொஞ்சம் பெரியதாகவே பட்டியலிட்டுள்ளேன். இதைத் தொடர நான் அழைப்பது...


நன்றி!!
o

Friday, September 11, 2009

கமல் ரசிகன் என்பதில்..

டேய், உன் ஆளு யாருடா? கமலா ரஜினியா?

இந்தக் கேள்வி நம் அனைவருக்குமே பழக்கமானது தான்.
இப்படித்தாங்க விடுமுறை முடிந்து பள்ளிக்கு போன உடனே ஆரம்பித்தது அரட்டை.

"டேய் லீவுல என்னடா பண்ணுன"னு சதீஸ் கேட்க
"நான் கோயமுத்தூர் போனன்டா"
"நான் இங்க லதாங்கில ராஜாதிராஜா பாத்தேன்.. சூப்பரா இருந்துச்சு தெரியுமா?"
"டேய், நான் கோயமுத்தூர்ல அர்ச்சனா தேட்டர்ல அனுபவ சகோதரர் படம் பாத்தேன்டா. பக்கத்துத் தர்ச்சனா தேட்டர்ல ராஜாதிராஜாக்கு கூட்டமே இல்லை தெரியுமா"ன்னு நான் சிரிக்க.
"உங்க ஆளு படத்துல எத்தன ஃபைட் டா? எங்க ஆளோட "சிவா" படத்துல 8 ஃபைட்டு தெரியுமா"ன்னு சுரேஷ் சொல்ல..
"போடா டேய்.. அனுபவ (அபூர்வ) சகோதரர்ல எங்காளு குட்டையா நடிச்சிருக்கார் தெரியுமா"ன்னு நான் சொல்ல
"அய்யே! உங்க ஆளு மோசமாம், அதனால உங்காளு படத்தப் பாக்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லீருச்சு"ன்னு சுரேஷ் சொல்ல
"போடா.. உங்க ஆளப் பத்தி எனக்குத் தெரியாதா"னு நான் சொல்ல ஆரம்பிச்சுது பாருங்க சண்டை!!
இந்தப் பக்கம் நாலஞ்சு பேரு அந்தப் பக்கம் நாலஞ்சு பேரு. வகுப்பே களேபரம் ஆயிடுச்சு. அப்புறம் என்ன ஆசிரியை வந்து வகுப்புக்கு வெளியே முட்டி போட வெச்சாங்க.

அந்த வயசுல நான் எப்படி கமல் ரசிகன் ஆனேன்னு நினைச்சுப் பார்த்தா சிரிப்பாத்தாங்க வருது.

எங்க அத்தை பசங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் ரஜினி ரசிகர் இன்னொருத்தர் கமல் ரசிகர். ரெண்டாவது அத்தை பையன் நம்ம கூட்டாளிங்கறதால அவரு சொல்றதக் கேட்டு எனக்கும் பிடிக்க ஆரம்பிச்சிருக்கனும்.
பத்து வயசுல நமக்கு நல்ல படம் கெட்ட படம் எல்லாம் தெரியுமா என்ன?

"அபூர்வ சகோதரர்கள்"ல ஆரம்பிச்சது அப்படியே வெற்றி விழா, மைக்கேல் மதன காம ராஜன், குணானு ஒரு படம் விடாமல் பார்ப்பது என்று கமலின் ரசிகனானேன். [ எதனாலனே புரியாமா ;) ]
தளபதியுடன் வெளியான குணா சரியாக ஓடவில்லை!! "படத்துல சண்டை இல்லாததால தான் படம் ஓடல"னு நினைத்திருந்த எனக்கு பக்கத்து வீட்டு குட்டியண்ணன் குணா நல்ல படம்னு சொன்னது வியப்பாக இருந்தது.

அப்போ தான் வீடு, பசி போன்ற படங்களை எல்லாம் தூர்தர்ஷனில் திரையிடுவார்கள். "என்னடா இப்படி போரா இருக்குதே, இதுக்கு எப்படி நேஷனல் அவார்டு கொடுத்தாங்க"ன்னு தோணும். அப்போ அவார்டு வாங்கற படங்க ஓடாதோனு தோணும் :) [ இப்ப வரைக்கும் இது ஓரளவு உண்மை தான் ]

அடுத்த வருஷம் வந்த "தேவர் மகன்" எங்கூரு உடுமலை லதாங்கில சக்கைப்போடு போட்டுச்சு. அந்த வருட மாநில விருது ஒரு சில தேசிய விருதெல்லாம் அந்தப்படம் வாங்க நல்ல படமும் ஓடலாம் விருதுகளும் வாங்கலாம்ங்கற எண்ணம் வளர ஆரம்பிச்சுது.

கமல் படங்களின் வருகை குறைய ஆரம்பித்திருந்தாலும் வெளியாகும் படங்களை உடனுக்குடன் பார்த்துவிடவேண்டுமென்ற ஆவல் மட்டும் குறைந்தேயில்லை. உடுமலையில் படம் வெளியாகவில்லை என்றால் பொள்ளாச்சியிலோ பழநியிலோ படங்களைப் பார்த்தாக வேண்டும்.

படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தால்,
"என்னடா உங்காளு படம் எப்படி இருக்குது"ம்பார் எங்கப்பா.
"சூப்பரா இருக்குப்பா"ம்பேன்.
"நீ படம் சூப்பருனு சொல்லுவ. ஆனா ஓடத்தான் மாட்டேங்குது"னு என்னைக் கிண்டல் செய்வார்.
"உங்க சிவாஜி படமெல்லாம் ஓடாமா இருந்ததில்லையா"னு திரும்பக் கேட்டத்தான் நமக்குத் திருப்தி.

எனக்கு விவரம் தெரிந்து உடுமலையில் ஐம்பது நாட்களைக் கடந்த கமலஹாசன் படங்களென்றால் தேவர்மகன், சதிலீலாவதி, இந்தியன், அவ்வை சண்முகி, தெனாலி, வசூல்ராஜா, வேட்டையாடு விளையாடு மட்டும் தான்.

கமல் படங்களின் ரசிகன் என்ற முத்திரை நண்பர்கள் வட்டம் மட்டுமல்லாது என் உறவினர்கள் மத்தியிலும் தெரிய ஆரம்பித்ததற்கு கமலின் நகைச்சுவைப் படங்களின் மீது எனக்கிருந்த விருப்பம் தான் காரணம். எந்த இடத்தில் என்ன காமெடி வரும் என்று மனதில் பதிந்துள்ளது எனக்கே வியப்பு தான்!
[இந்த அளவுக்கு பாடம் கூட மண்டையில ஏறியிருக்காது ;) ]
பேசும்படம், மைக்கேல் மதன காம ராஜன், சிங்காரவேலன், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா என நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களானாலும் மகாநதி, தேவர்மகன், குணா, குருதிப்புனல், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம் போன்ற முயற்சிகளானாலும் கமலின் படங்களின் மீதிருக்கும் ஈடுபாடு மட்டும் குறையவதே இல்லை.

நான் தரமான படங்கள் என்று நினைத்திருந்த பலதையும் ஆங்கிலப் பிரதி என்றோ தவறான கருத்துகளைக் கொண்டவை என்று கூறினாலும் கமலஹாசனின் முயற்சிகளுக்காகப் அவர் படங்களைப் பாராட்டியே தீர வேண்டும் என்ற கருத்து எனக்கு இருக்கத்தான் செய்கிறது.

இதோ இன்னொரு படம் வெளியாகத் தயாராகி வருகிறது. ஹிந்தியில் வெட்னஸ்டே என்ற பெயரில் வெளியாகிய படத்தின் ரீமேக் தான் விரைவில் வெளியாகவிருக்கும் "உன்னைப் போல் ஒருவன்".

இன்று என் வீட்டில் அதிகமாக ஒலித்திருக்கும் பாடல் "நிலை வருமா".
நல்ல சினிமா பற்றிய தெளிவு ஓரளவு வந்திருந்தாலும், உலக சினிமா பற்றிய அறிமுகங்கள் கிடைத்திருந்தாலும் கமலஹாசனின் ரசிகன் என்று அறியப்படுவதில் எனக்கு மகிழ்ச்சியே!!

..

Friday, May 1, 2009

பசங்களுக்காக...

நம் ஞாபகசக்திக்கு ஒரு சவால்...


கடந்த
20 வருடங்களில் குழந்தைகளை மையமாக வைத்து எடுத்த படங்கள் எத்தனை ஞாபகத்திற்கு வருகிறது?

எனக்கு ஞாபகத்திற்கு வருவது, அஞ்சலி, மைடியர் குட்டிசாத்தான், கன்னத்தில் முத்தமிட்டால், குட்டி, கேளடி கண்மனி, நிலவே மலரே போன்றவை தான்.

சரி, குழந்தை நட்சித்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என்றால் ஞாபகத்திற்கு வருவது எவை?

ராஜா சின்ன ரோஜா, மகாநதி, பூவிழி வாசலிலே, ரிதம், அழகன், துர்கா போன்ற ராமநாரயணன் படங்கள், சங்கர்குரு போன்ற ஷாலினி நடித்த படங்கள் தான்..

ஏன் இந்த கேள்வி இப்போது..
காரணம்... மே மாதம் வந்தாயிற்று..

ஏப்ரல் மே என்றால் கூடவே நமக்கு ஞாபகத்துக்கு வரும் விஷயங்களில் முக்கியமானவை பள்ளி விடுமுறை நாட்களும், கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்களும் தான். தீபாவளி, பொங்கல் போன்ற சமயங்களில் வெளியாகும் திரைப்படங்களைக் காட்டிலும் அதிக நாட்கள் ஓடுவது ஏப்ரல், மே மாதத்தில் வெளியாகும் திரைப்படங்கள் தான்.

திரைப்படங்கள் ஓரளவு ஓடுவதற்குக் காரணம் குடும்பமாக திரையரங்கிற்கு வருவது தான். வருடம் முழுவதும், தேர்வு, படிப்பு போன்ற காரணங்களுக்காக திரையரங்குகளுக்கு குழந்தைகளை அழைத்து வராமல் இருப்பவர்களுக்கு இது தான் தகுந்த தருணம்.

அப்படி பள்ளி விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் படங்களில் எத்தனை சிறுவர்களுக்கானது?
பதில் அனைவருக்கும் தெரிந்ததே...
20 வருடங்களில் 2000 திரைப்படங்கள் வெளியானது என்று வைத்துக் கொண்டாலும், அதில் 6 படங்கள் தான் குழந்தைகளை மையமாகக் கொண்டவை என்பதை என்னவென்று சொல்ல...

நம் மக்கள் தொகையில் 15 வயதிற்கு குறைவானோர் 30 சதவிகிதம் உள்ளனர். அவர்களுக்கான திரைப்படங்களோ ஒரு சதவிகிதம் கூட இல்லை என்பது சோகமான விஷயம்.

தமிழில் மொழிபெயர்ப்பு செய்த ஹாலிவுட் படங்கள் ஏன் அதிகமாக வெற்றியடைகின்றன என்பதைப் பார்த்தால் அதற்குக் காரணம் சிறுவர்கள் தான் என்பது புரியும். ஹாலிவுட் போல அனிமேஷன் படங்கள் வரவில்லை என்றாலும் அஞ்சலி, தாரே ஜமீன் பர் போன்ற படங்களையாவது எடுக்க முயற்சி செய்யலாமே!!

சிறுவர்களை திரையரங்குகளுக்கு இழுக்க தனித்துவமான விஷயங்களாக (Unique Selling Point) நம் கலையுலக சிற்பிகள் வைப்பது, ஐட்டம் நம்பர் எனப்படும் குத்துப் பாடல்களையும், சலித்து போன (அடி வாங்கும்) நகைச்சுவைக் காட்சிகளையும், நம்ப முடியாத சண்டைக் காட்சிகளையும் தான்.

குழந்தைகள் உள்ள வீடுகளுக்குச் சென்றால், பெற்றோர் பெருமையுடன் நமக்குக் காட்டுவது, தங்கள் குழந்தைகள் பாடும் குத்துப்பாடல்களைத்தான்.

"அப்பா அம்மா விளையாட்டுன்னா" என்ன
என்று உங்கள் குழந்தையோ அல்லது உங்கள் உறவினரின் குழந்தையோ கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?

பெரிய நிறுவனங்கள் (Corporate) திரைப்படத்துறைக்கு அடியெடுத்து வரும் இன்றைய சூழ்நிலையில் கொஞ்சம் சமுதாய பொறுப்பைப் (Social Responsibility ) பற்றியும் சிந்திப்பது நல்லது.

காதலைப் பற்றியும், நடிகைகளின் அங்கங்களைப் பற்றியும் கடந்த 60 வருடங்களாக தீர அலசியாயிற்றே!! இனியாவது கொஞ்சம் நம்ம பசங்களுக்காகவும் யோசிக்கலாமே!!

குழந்தைகளுக்கான உணவுகள், விளையாட்டுகள், தொலைக்காட்சிகள், ஆடைகள் என்று ஒவ்வொரு துறையிலும் சிறுவர்களுக்கான சந்தைகளை ஏற்படுத்தி பெரும் லாபம் பார்த்து வரும் பன்னாட்டு நிறுவனங்களே ஒரு எடுத்துக்காட்டு தான். இப்படி, பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் பசங்களை மையப்படுத்தி பொருட்களைத் தயாரிக்கும் போது திரைத்துறையினர் எப்போது திரைப்படங்களை பசங்களுக்காக தயாரிக்கப் போகிறார்கள்?


இந்தப்பதிவை யூத்ஃபுல் விகனில் படிக்க கீழே சொடுக்கவும்.
.
Related Posts with Thumbnails