Showing posts with label வடசொற்கள். Show all posts
Showing posts with label வடசொற்கள். Show all posts

Friday, June 26, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 3

இந்தி மற்றும் இதர இந்திய மொழிகளில் இருப்பது போல எழுத்துக்கள் தமிழ் மொழியில் இல்லையே என்று நமக்கு ஒரு ஐயம் (சந்தேகம் - வடசொல்) வருவதுண்டு.


எப்படி நீங்கள் pa,pha,ba,bha போன்ற உச்சரிப்புகளுக்கு ஒரே எழுத்து "ப"வை பயன்படுத்துகிறீங்கள்? என்ற கேள்வியை நம்மிடம் நண்பர்கள் கேட்பதுண்டு. நாமும் இந்தக் கேள்வியை ஏதாவது ஒரு பதிலைச் சொல்லி சமாளிப்பதுண்டு.


உண்மையில், தூய தமிழ் சொற்களுக்கு இந்த pa,pha,ba,bha என்ற வேறுபாடு தேவைப்படுவதாகத் தோன்றவில்லை.
**********
அபூர்வம், அவகாசம், அவசரம், அவசியம் - இதில் எது தூய தமிழ்ச்சொல்? எதுவுமே இல்லை.


அபூர்வம் - அருமை


அபூர்வம் என்ற வடசொல்லிற்கு நிகரான தமிழ்ச்சொல் அருமை. ஆனால், மிகவும் வியக்கத்தக்கதாக இருந்தால் "அபூர்வம்" என்றும், நன்றாக இருந்தால் அருமை என்ற சொல்லும் பயன்பாட்டில் உள்ளது.


அவசரம் - விரைவு...


ஆபத்து (துன்பம்) இருக்கும் சூழலிற்கு "அவசரம்" என்ற சொல்லும் (வேகம்) துரிதம் என்ற பயன்பாட்டிற்கு "விரைவு" என்ற சொல்லும் பயன்பாட்டில் உள்ளது. விரைவுப்பேருந்துகளில் "அவசர கால வழி" (Emergency Exit ) என்று எழுதியிருப்பதைக் காணலாம். இன்று, இதை மாற்றி எழுதினால் நமக்குப் புரியாது என்பதும் இருக்கிறது!


*************


சிகிச்சை - மருத்துவமுறை


"சிகிச்சை" என்ற வடசொல்லின் தமிழ்ச்சொல் தான் "மருத்துவ முறை" என்று தெரிந்த பிறகு "இந்த மருத்துவமணையில் சிறப்பாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்" என்ற விளம்பரத்தை நாம் எப்படி நோக்குவோம்?


*************


திருப்தி - உள நிறைவு, மன நிறைவு


"WORD POWER MADE EASY" என்ற ஆங்கில புத்தகத்தில் ஒவ்வொரு சொல்லும் எப்படி உருவானது என்று அழகாக விளக்கி இருப்பார் ஆசிரியர் நார்மன் லீவிஸ்.


எ.கா. : Calligraphy : Beautiful Writing - Calli - (beautiful), Graphy - (Writing) -
Telegraphy: Distance Writing - Tele - (distance), Graphy - (Writing )
Biography : Life writing - Bio - (Life), Graphy - ( Writing )


இது போல நமது பயன்பாட்டில் உள்ள சொற்களைப் பிரித்து உரைக்க சொன்னால் நம்மால் முடியுமா?


"திருப்தி" என்ற வடசொல்லை "உள நிறைவு" என்ற தமிழ்ச்சொல்லால் குறிப்பிடும் போது மிக எளிதாக (சாதாரண) விளக்கமுடியுமே!!


**************


நமது பயன்பாட்டில் உள்ள பிற வடசொற்களும் அதற்கான தமிழ்ச்சொற்களும் கீழே....


வடசொல் - தமிழ்ச்சொல்
அபூர்வம் - அருமை
அவகாசம் - ஓய்வு
அவசரம் - விரைவு
அவசியம் - தேவை
அவயவம் - உறுப்பு
ஆகாயம் - வானம்
ஆபத்து - துன்பம்
ஆன்மா - உயிர்
இராகம் - பண்
இரத்தம் - குருதி
இலக்கம் - எண்
உபத்திரவம் - வேதனை
ஐக்கியம் - ஒற்றுமை
கஷ்டம் - தொல்லை
கல்யாணம் - திருமணம்
கிரயம் - விலை
குதூகலம் - எக்களிப்பு
கோஷ்டி - குழாம்
சக்தி - ஆற்றல்
சகஜம் - வழக்கம்
சக்கரவர்த்தி - பேரரசன்
சந்தேகம் - ஐயம்
சபதம் - சூள்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சமீபம் - அண்மை
சச்சிதானந்தம் - மெய்யறிவின்பம்
சத்தியாக்கிரகம் - அறப்போராட்டம்
சந்ததி - வழித்தோன்றல்
சிகிச்சை - மருத்துவமுறை
சந்தர்ப்பம் - வாய்ப்பு
சம்பிரதாயம் - தொன்மரபு
சாபம் - கெடுமொழி
சாதாரண - எளிதான
சாட்சி - சான்று
சிங்காசனம் - அரியணை
சிநேகம் - நட்பு
சீதோஷ்ணம் - தட்பவெப்பம்
சுதந்திரம் - விடுதலை
சுயராஜ்யம் - தன்னாட்சி
சுபாவம் - இயல்பு
சேவை - தொண்டு
சேஷ்டை - குறும்பு
சௌகரியம் - வசதி
தற்காலிக வேலை - நிலையிலா வேலை
தாகம் - வேட்கை
தேதி - நாள்
திருப்தி - உள நிறைவு
நஷ்டம் - இழப்பு
நிபுணர் - வல்லுநர்
நியாயஸ்தலம் - வழக்கு மன்றம்
நீதி - நன்னெறி
பகிரங்கம் - வெளிப்படை
பரிகாசம் - நகையாடல்
பத்தினி - கற்பணங்கு
பத்திரிக்கை - இதழ்
பரீட்சை - தேர்வு
பந்துக்கள் - உறவினர்கள்
பாரம் - சுமை
பாஷை - மொழி
பிரசாரம் - பரப்புவேலை
பூர்வம் - முந்திய
மரணம் - சாவு, இறப்பு
மாமிசம் - இறைச்சி
மிருகம் - விலங்கு
முகூர்த்தம் - நல்வேளை
மோசம் - கேடு
யந்திரம் - பொறி
யாகம் - வேள்வி
யுத்தம் - போர்
ரகசியம் - மறைபொருள்
ருசி - சுவை
லாபம் - ஊதியம்
வருஷம் - ஆண்டு
வாகனம் - ஊர்தி
வாதம் - சொற்போர்
வாந்தி பேதி - கக்கல் கழிச்சல்
வாலிபர் - இளைஞர்
விஷயம் - பொருள், செய்தி
விபத்து - துன்ப நிகழ்ச்சி
விவாகம் - திருமணம்
வீரம் - மறம்
வேகம் - விரைவு
ஜனங்கள் - மக்கள்
ஜயம் - வெற்றி
ஜாக்கிரதையாக - விழிப்பாக
ஜென்மம் - பிறவி
ஸ்தாபனம் - நிலையம்


இந்த தமிழ்ச்சொற்களை முழுதாக பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்த முடியாவிட்டலும், சிறிது முயற்சி செய்தாலும் நல்லது தானே!


வீட்டில் கொண்டாடப்படுவது பண்டிகையா? விழாவா?
பசும் பால், பசுப் பால் - இதன் வேறுபாடு என்ன?
வடசொல் மட்டுமல்ல போர்த்துகீசிய, அரபிய சொற்களும் நமது பயன்பாட்டில் உள்ளது என்பது தெரியுமா?

அடுத்த பதிவில்....

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் தவறாமல் வாக்களிக்கவும்!

Wednesday, June 24, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 2

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! என்று நமது நினைவுக் குறிப்புகளை எழுதுவது இன்று நம் மத்தியில் அதிகமாகக் காணப்படுகிறது. அதற்கு நாம் (என்னையும் சேர்த்து) கொடுக்கும் பெயர் "அனுபவக் குறிப்புகள்".

சின்ன வயதில் நாம் ஏதாவது குறும்பு செய்தோம் என்றால், வீட்டில் நம்மிடம் கூறுவது, "அத எடுக்காதன்னு சொன்னா கேட்க மாட்டீங்கற.. உனக்கு பட்டாத்தான் தெரியும்!!". அதே போல, ஒருவர் வாழ்க்கையில் அடிபட்டு முன்னேறி இருந்தால், நாம் கூறுவது, "அவர்க்கு பட்டறிவு அதிகம்" என்பது தான்.

"பட்டறிவு" என்ற தமிழ்ச்சொல்லின் வடசொல்லே "அனுபவம்".

நல்லதோ கெட்டதோ "பட்டால்" தானே நமக்கு மறக்க முடியாத நினைவாகிறது? ஆனால் இன்றைய பயன்பாட்டில் "பட்டறிவு" என்ற சொல்லையும் "அனுபவம்" என்ற சொல்லையும் வெவ்வேறு பொருளிற்குப் பயன்படுத்துகிறோம்.

வட இந்தியப் பெயர்களில் "அனுபவ்" என்ற சொல் வரும் போது, "பரவாயில்லையே தமிழ்ச்சொல்லை அங்கேயும் பயன்படுத்துகிறார்கள்" என்று மகிழ்ச்சி அடைந்ததுண்டு. ஆனால், அது எனது அறியாமை என்பது புரிகிறது.

குறிப்பு: "ஞாபகம்" என்பதே "நினைவு" என்பதன் வடசொல்லே!

*********

வட மாநிலங்களில் "கார்யாலயி" என்ற வார்த்தை பெரும்பாலான அலுவகங்களில் பார்க்கமுடியும். அதையே நாம் "காரியம்" என்ற சொல்லால் பயன்படுத்துகிறோம்.

காரியம் - செயல்

காரியம் என்ற வடசொல்லிற்கு நிகரான தமிழ்ச்சொல் செயல்.
காரியாலயம் - செயலகம்.
காரியதரிசி - செயலர், செயலாளர்.

இங்கே, "காரியவாதி" என்ற சொல் "தனது செயலில் மட்டும் குறியாக இருப்பவரை" குறிக்கும்படி பயன்படுத்தும் வழக்கம் எப்படி வந்தது?

***********

இலட்சணம் - அழகு

உனக்கு எப்படி பெண் தேட வேண்டும் என்ற கேள்வி வரும் போது, "அழகா, கண்ணிற்கு இலட்சணமா இருக்க வேண்டும்" என்று நாம் கூறுவது வழக்கம். இதனை, "அழகா, கண்ணிற்கு "அழகா" இருக்க வேண்டும்" என்று கூறுவதாகவே பொருள் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், இலட்சணம் என்ற வடசொல்லின் தமிழ்ச்சொல் அழகு.
மேலும் "உத்தியோகம் புருஷ இலட்சணம்" என்ற வாக்கியத்தை தூய தமிழில், "நல்ல அலுவல் ஆண்மகனிற்கு அழகு!!" என்று எழுதலாம்.
***********
அர்ச்சணை - மலரிட்டு ஓதுதல்

இன்று, பெரும்பாலான கோயில்களில் "இங்கு தமிழில் அர்ச்சணை செய்யப்படும்" என்று எழுதி இருப்பதைக் காண்கிறோம்.

அர்ச்சணை என்பது மலரிட்டு ஓதுதல் என்பதன் வடசொல். இதே வரிசையில் கோயில்களில் பயன்படுத்தும் சில வடசொற்களுக்கான தமிழ்ச்சொல் கீழே..

வடசொல் - தமிழ்ச்சொல்
அனுக்கிரகம் - அருள் செய்தல்
ஆராதனை - வழிபாடு
உற்சவம் - விழா
கும்பாபிஷேகம் - குடமுழுக்கு
கோத்திரம் - குடி
சந்தியாவந்தனம் - வேளை வழிபாடு
சரணம் - அடைக்கலம்
சிவமதம் - சிவநெறி
பஜனை - கூட்டுப்பாடல் வழிபாடு
பிரசாதம் - திருப்பொருள்
பிரகாரம் - திருச்சுற்று
(அங்கப்)பிரதட்சனம் - வலம் வருதல்
பிரார்த்தனை - நேர்த்திக்கடன்
மந்திரம் - மறைமொழி
மார்க்கம் - நெறி, வழி
விக்கிரகம் - திருவுருவம்
யாத்திரை - திருச்செலவு.
க்ஷேத்திரங்கள் - திருப்பதிகள்
இந்த சொற்களை நாம் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, புதிதாக நமக்குத் தெரிந்தால் நல்லது தானே!

**********

பொறியியற் கல்லூரி மாணவர்கள், வெளிநாடுகளில் மேற்படிப்பிற்காகத் தயாராகும் போது, BARRON'S WORDLIST என்ற புத்தகத்தில் உள்ள சொற்களையும் அதன் அர்த்தங்களையும் மணப்பாடம் செய்வதைப் பார்க்க முடியும். அது போல நமது கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு தமிழிலும் ஒரு தேர்வு வைத்தால் எப்படி இருக்கும்?

அபூர்வம், அவசரம், அவகாசம்,அவசியம் - இதில் எது தூய தமிழ்ச்சொல்? அடுத்த பதிவில் http://senthilinpakkangal.blogspot.com/2009/06/3.html

உங்களுக்கு இந்தப்பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்!

Tuesday, June 23, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 1

அண்மையில் எனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.

மதிய உணவு வேளையின் போது உறவினரின் மகன், "அம்மா 'சோறு' போடுங்க!!" என்றான்..அதற்கு உறவினரோ "சோறுன்னு சொல்லாதே! சாதம்னு சொல்லு..!" என்றார்..

இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு வியப்பாக இருந்தது.

"சாதம்" என்பது தூய தமிழ்ச்சொல் கிடையாது என்பது தான் வியப்பிற்குக் காரணம்.

"சோறு" என்பதே தூய தமிழ்ச்சொல். "சாதம்" என்பது வடசொல் என்பது நமக்குத் தெரியுமா?

ஆனால் நமது பயன்பாட்டில் "சோறு" என்பது தரக்குறைவான சொல்..

******
சுத்தம் - துப்புரவு இந்த இரண்டு சொற்களில் எது தூய தமிழ்ச்சொல்?


துப்புரவு தான் தூய தமிழ்ச்சொல். ஆனால் நாம், "துப்புரவு" என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்துவது துப்புரவுத் தொழிலைக் குறிப்பிடுவதற்குத் தான். இப்படி, நமக்கு தெரியாமலேயே தூய தமிழ் சொற்களுக்கு நாம் இரண்டாம் இடத்தையே தருகிறோம் என்பது சிறிது யோசிக்க வேண்டிய ஒன்று.

******
ஆசிர்வாதம் - வாழ்த்து

வாழ்த்து என்பதன் வடசொல்லே ஆசிர்வாதம். ஆனால் நமது பயன்பாட்டில், "பெரியோரின் காலில் விழுந்து வாழ்த்து வாங்க வேண்டும்" என்று கூறுவது மிகவும் அரிதே!! அந்த இடத்தில் "ஆசிர்வாதம்" என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறோம்.
இது போல, நாம் பயன்படுத்தும் பல சொற்கள் வடசொற்களே.. கீழே சில எடுத்துக்காட்டுகள் (உதாரணம் என்பது வடசொல்)

வடசொல் - தமிழ்ச்சொல்
அகங்காரம் - செருக்கு
அகதி - ஆதரவற்றவர்
அகிம்சை - ஊறு செய்யாமை
அங்கத்தினர் - உறுப்பினர்
அங்கீகாரம் - ஒப்புதல்
அசுத்தம் - துப்புரவின்மை
அதிகாரி - உயர் அலுவலர்
அநீதி - முறையற்றது
அபயம் - அடைக்கலம்
அபிவிருத்தி - பெருவளர்ச்சி
அபிஷேகம் - திருமுழுக்கு
அபிப்பிராயம் - உட்கருத்து
.
.
.
திங்க் (Think) பண்ணி, யூஸ் (use) பண்ணி, டிரைவ்(drive) பண்ணி என்று தமிழ் பேசுபவர்களுக்கு இந்த பதிவு பிடிக்காமல் போகலாம். ஆனால், நல்ல தமிழில் பதிவுகளை எழுத விரும்புவோருக்கு இந்தத் தொடர் பயனளித்தால் மகிழ்ச்சியே...


இன்ன பிற "அனுபவ"ங்களைப் பற்றி நமது பயன்பாட்டில் தமிழ் - 2
என்ற பதிவில்

Related Posts with Thumbnails